இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1051 குறள் திறன்-1052 குறள் திறன்-1053 குறள் திறன்-1054 குறள் திறன்-1055
குறள் திறன்-1056 குறள் திறன்-1057 குறள் திறன்-1058 குறள் திறன்-1059 குறள் திறன்-1060

பிறரிடம்‌ சென்று ஒருபொருளை இரந்து பெறுதலாம்‌. இது நல்கூர்ந்தாருடைய செயலாகும்‌ ஆதலால்‌ அதன்பின்‌ வைக்கப்‌பட்டுள்ளது. மானம்‌ தீரா இரவும்‌ இரவாமையோடு ஒக்கும்‌ என்று இதில்‌ கூறப்படுகிறது. தம்மிடம்‌ உள்ளது மறுத்தலைக்‌ கனவிலும் எண்ணாதாரிடத்து ஒன்று இரப்பது முறையாம்‌ என்கிறார்‌. அது கொடுப்பதனை ஒக்கும்‌ என்றும்‌ கூறுகிறார் (வள்ளுவர்).
- மு சண்முகம்பிள்ளை

இரவு என்பது இன்மைநிலையில் பிறரிடம் ஒன்றினை வேண்டுதலைக் குறிப்பது. மற்றவரிடம் ஏற்று வாழ்வது ஏற்புடையது அல்ல. ஆனாலும் என்ன முயன்றும் நுகரப்படுவன எதுவுமே இல்லை என்ற வேளை வரும்போது வறியவன் என் செய்வான்? அப்பொழுது, அவன் உயிர் நீப்பதைத் தவிர்க்க, கரப்பில்லாரிடம் அதாவது தம்மிடம் உள்ளதை மறைக்காமல் கொடுப்பவரிடம் இரக்கலாம் என்கிறார் வள்ளுவர். மானத்திற்குக் கேடு வராத ஏற்பு இரவாகாது என்ற வகையிலே இவ்வதிகாரத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இந்த அதிகாரம் 'இரவு' என்று, தலைப்புக் கொண்டிருந்தாலும் இது கரப்பின்றி ஈவார் பற்றியே பெரிதும் பேசுகின்றது. தம்மிடம் இருப்பதை மறைத்தல்‌ பெரும்பழி என்பது‌ மிகுதியும்‌ வலியுறுத்தப்படுகிறது. இரப்பாரும் உலகத்துக்கு வேண்டும் என்று சொல்லும் பாடல்களும் இதனுள்ளே உள.

இரவு

வறுமையே இரவுக்குப் பெரிதும் காரணமாக உள்ளது. அறஞ்சார்ந்த வாழ்க்கையுடையவன் போகூழால் வறுமையுற்றுத் துன்பப்படும்போது பிறரிடம் போய்க்கேட்டுப் பொருள் பெறுவதைவிட உயிரை விட்டுவிடவே எண்ணுவான். அறவாழ்க்கை வாழ்பவன் அவ்வாறு தன்னுயிரை நீக்கிக் கொள்வதை வள்ளுவர் விரும்பவில்லை. அவனுக்கு உதவ முன்வருகிறார். தன் வறுமைநிலையிலிருந்துவிடுபட அவன் பொருளுள்ளவரிடம் சென்று இரந்து பெற்றுக் கொள்வது குற்றமில்லை என்றும், மானம் தீரா நிலையில் அது நிகழவேண்டும் என்றும் 'இரவு' என்ற தலைப்பில் விளக்குகிறார் அவர்.
'இரவு என்பது இரத்தல், இரப்பு என்ற சொற்களால் இப்பாடல் தொகுப்பில் பயின்று வருகின்றன. இரத்தல்‌ தொழில்‌ செய்‌வார் இரப்பவர், இரப்பார், இரப்பான், இரந்துகோள்‌ மேவார் எனக் குறிக்கப் பெறுகிறார்‌. இரவு என்பது பிச்சைஎடுத்தல் என்ற மிகவும் தளர்த்தப்பட்ட சொல்லாட்சி மூலம் இன்று அறியப்படுகிறது. இரவு என்பது பலவேறுவகையான உதவிகள் பெறுவது, கடன்வாங்குவது போன்றவற்றையும் உள்ளடக்கியது என்றாலும் இல்லாமையின் காரணமாக பிறரிடம் சென்று பொருள் வேண்டுவதே இரவு என இங்கு சொல்லப்படுகிறது.
'இரவின் இளிவந்தது இல்' என்பதே இரவு பற்றிய வள்ளுவரின் உறுதியான கருத்து. ஆனால் வாழ்தலுக்குரிய தேவைகளை நெறிமுறைகளுடன் அடைய முடியாதவர்கள் இரந்து உயிர்வாழ்வதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில் இரக்கத் தக்காரிடம் இரப்பதற்கான வழிகாட்டுகிறார் அவர். 'இரவு' அதிகாரம் வள்ளுவரால் அறஞ்சார்ந்த வறுமைக்குத் தரப்பட்ட விதிவிலக்காக உள்ளது. இரப்பவரின் மானம் நீங்காதவாறு இரத்தலைச் செய்வதற்கு வள்ளுவர், ஒருவகையில் உடன்படுகிறார்.
இரக்கத்தக்கார் என்பவர் யாவர்? இச்சொல் இரத்தற்குத் தகுதி உடையார் எனப்பொருள்படும். வள்ளுவர் மொழியில் சுருக்கமாகச் சொல்வதானால் இவர் 'கனவிலும் கரவு அறியாதார்' ஆவர். மேலும் இரந்து பெறத்தக்கவராக, கரப்பில்லா நெஞ்சினராய்க் கடமை அறிவார், துன்பம் உறா வகையில் தருவார்; இகழ்ந்து எள்ளாது ஈவார், கரப்பிடும்பை இல்லார், ஆகியோரையும் குறிப்பிட்டு அவர்களிடம் இரந்துகொள்ளலாம் என்கிறார். வறுமையாளனாக இருந்தாலும், அவனது தன்மானமும், மனித மதிப்பும் காக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் இப்பண்புகள் உள்ளோரைச் சுட்டினார்.

.....பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு (அருளுடைமை 247) என்பதால் பொருள் வலி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்றியமையாததாகிறது. பிறரிடம் இரந்து வாழவேண்டிய இன்மைநிலை பலவேறு காரணங்களால் உண்டாகும்; வெள்ளம், வறட்சி, போர், நிலநடுக்கம் போன்ற இயற்கையின் கொடுமைகளால் பொருட்குறை ஏற்படலாம். தன் மக்களின் கல்விச்செலவுகள், மணவினை முதலிய குடும்பத் தேவைகளுக்காகவும் இரக்க வேண்டிய நிலை உண்டாகலாம். சிலர் வணிகம் தொடங்குதற்குரிய முதற்பொருளுக்காகவும் இரக்கச் செல்வர். தொழில் இல்லா மனிதனுக்கு வாங்கும் ஆற்றல் இருக்காது; அவன் தன் பசி தீர்த்துக் கொள்ள இயலாதவனாகிறான்.
இரப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவரது குறை தீர்க்க 'இரக்க' என்றார் வள்ளுவர். ஈவாரை நோக்கி 'ஈக' (477) என்றவர், வறுமைப்பட்டவரிடம், இகழ்வற்ற நடையில், 'இரக்க' இரத்தக்கார்க் காணின் என்கிறார். வறியார்க்கு ஈவதே ஈகை என, யார்க்கு கொடுப்பது என்பதை முன்பு சுட்டியவர் தம்மிடம் உள்ளதை மறைக்காதவர்பால் இரக்க என, யாரிடம் பெறுவது என்பதை இவ்வதிகாரத்தில் சொல்கிறார். யாரிடமாவது சென்று இரக்க என்னாமல் இரத்தக்கார்க் காணின் இரக்க என ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார். உதவியின் சிறப்பு உதவியின் தரத்தையும் தகுதியையும் பொறுத்தல்ல; உதவியைப் பெறுவோரின் தகுதியைப் பொறுத்தது, உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து (செய்ந்நன்றியறிதல் 105) என முன்னர் சொல்லப்பட்டது. இங்கு உதவுவானின் தகுதி கண்டு உதவிநாடுக எனக் கூறப்படுகிறது.

இரக்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரந்து பொருள் பெறுக. அவர் இல்லையென்று மறைத்தால் பழி இரக்கப்படுவோனையே சாரும்; அது இரந்தவர் தம் குற்றமன்று. தான் இரந்து கேட்ட பொருள், தன் மனம் துன்புறாதபடி எளிதிலே கிடைக்குமானால் ஒருவனுக்கு இரத்தலும் மகிழ்ச்சி தருவதுதான். ஒளித்தல் இல்லா நெஞ்சுடன் தங்கள் கடமை தெரிந்தவர்களின் முன்னால் நின்று இரத்தலும் எடுப்பாகவே இருக்கும். தன்னிடம் இருப்பதை இரப்போர்க்கு ஈயாமல் ஒளித்துக் கொள்ளுவதைப்பற்றிக் கனவில் கூட நினைக்காதவர்களிடம் சென்று ஒன்றை இரத்தல் இரத்தலாகாது; அது, தான் ஈவதைப் போன்ற இன்பம் தரக்கூடியது. தம்மிடம் உள்ளதை மறைக்காமல் ஈபவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்; அதனால்தான் அவர்கள் கண்ணெதிரே நின்று இரக்கச் செல்கிறார்கள். உள்ளதை மறைத்துவைக்கும் நோய் இல்லாத கொடையாளிகளைக் காணும்போது இரவலனது வறுமைத்துன்பம் முற்றிலும் அகலும். இரவலரைக் கண்டவுடன் இகழ்ந்து எள்ளாத ஈவாரைக்காணின் இரப்பவர் மகிழ்ந்து ஆழ்மனத்துள் உவகை அடைவர். பிறரிடம் உதவி பெறுபவர்கள் இல்லாதபோது உலகம் பொம்மலாட்ட மேடையாகிவிடும்; உணர்வுகளையும் மனித மதிப்புகளையும் எங்கே வெளிப்படுத்துவது? வறுமையால் இரந்து பொருளைப் பெற்றுக் கொள்ளாதவர் இல்லாவிட்டால் கொடுக்கின்றவர்களிடத்தில் எப்படிப் புகழ் உண்டாகும்? இரவலர்க்குச் சினம் வரக்கூடாது; தன் வறுமைத்துன்பமே அதற்குச் சான்று.
இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

இரவு அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1051ஆம் குறள் உதவி கேட்பதற்கு ஏற்புடையாரைக் கண்டால் அவரிடம் இரந்து கொள்க; அவர் ஈயாது மறைப்பாராயின் அவர்க்குத்தான் பாவமாகுமே யன்றி அப்பழி உன்னைச் சேர்ந்ததாகாது என்கிறது.
  • 1052ஆம் குறள் இரந்த பொருள்கள் கடினமின்றிக் கிடைக்குமானால் இரத்தலும் ஒருவர்க்கு மகிழ்ச்சியைத் தரும் என்று சொல்கிறது.
  • 1053ஆம் குறள் ஒளிக்காத உள்ளமுடைய ஒப்புரவறிவார் முன்னால்நின்று இரத்தலும் ஓர் எழுச்சி தருவதுவே என்கிறது.
  • 1054ஆம் குறள் மறைப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் கேட்பதும் கொடுத்தல் போன்றதாகும் எனச் சொல்கிறது.
  • 1055ஆம் குறள் ஒருவர் முன்னால் நின்று இரக்க முற்படுவது தம்மிடம் உள்ளதை மறைக்காது அளிப்பவர்கள் உலகத்தில் இருப்பதனால்தான் எனச் சொல்கிறது.
  • 1056ஆம் குறள் உள்ளதை மறைத்தலாகிய நோய் இல்லாதவரைக் கண்டால் பசித் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக்கெடும் என்கிறது.
  • 1057ஆம் குறள் தம்மை இகழாமலும் ஏளனம் செய்யாமலும் கொடுப்பாரைக் கண்டால் மனம் மகிழ்ச்சியடைந்து உள்ளுக்குள்ளே உவக்கும் தன்மையுடையது என்கிறது.
  • 1058ஆம் குறள் வறுமையால் உதவிகேட்பவர் இல்லையானால் குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் மரப்பாவை சென்று வந்தாற் போல் உணர்ச்சியற்றதாய் இருக்கும் எனச் சொல்கிறது.
  • 1059ஆம் குறள் இரந்து கொள்ளுதலைப் பொருந்துவார் இல்லாத இடத்திலே கொடுப்போர்க்கு என்ன புகழ் உண்டாகும்? எனக் கேட்கிறது.
  • 1060ஆம் குறள் இரப்பவன் சினம் கொள்ளாது இருத்தல்வேண்டும்; தனது வறுமைத் துன்பமே அதற்குச் சான்றாக அமையும் என்கிறது.

இரவு அதிகாரச் சிறப்பியல்புகள்

எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தியிருக்கும் சமுதாயத்தில்தான் ஈவோர் இரப்போர் என்ற பிரிவினர் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சமூகம் எங்குமே இல்லை. இல்லாதவர் உள்ளவர் என்ற வேற்றுமையுள்ள உலகில் ஈவோரும், இரப்போரும் இருந்துதான் தீர்வர்.
இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படாது என்ற வகையில் இவ்வதிகாரத்துப் பாடல்கள் அமைந்துள்ளன.
வள்ளுவர் சொல்லும் இரவு, மானநாணவொழுக்கங்களைப் போக்கா நிலையில் நின்று உயிரோம்புதல் ஆகும்.
ஒருவரையொருவர் நாடிவாழ்வது இரவாகாது; கூட்டுறவு வாழ்க்கையின் விளக்கமாக அது கருதப்படவேண்டும். இரப்போர் சமுதாயத்திற்கு மிகப் பெரிய ஊறு விளைவிப்பவர்கள் அல்லர். அவர்களால் நன்மைகள் கூட விளைவது உண்டு என்று வள்ளுவர் கருதுகிறார். மாந்தரிடம் இருக்கின்ற நல்ல குணங்கள் வளர, மனிதப்பண்பு அல்லது இரக்கம் என்ற குணம் வெளிப்பட இரப்போர் ஒரு வகையில் உதவுகிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். இரப்பவர் உலகில் இல்லையென்றால் அது உணர்ச்சியற்றுப்போய் வாழத் தகுந்த நல்ல இடமாக இருக்காது; மாந்தப்பண்பை வளர்க்க, உயர்த்த இவர்கள் உதவுகிறார்கள் என்றெல்லாங்கூட அவர் எண்ணுகிறார்.

இரக்கத்தக்காரை நாடி இரக்கலாம்; அது இழிவல்ல. ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் தம்பொருளை மறைத்துக்கொண்டால் அப்பழி அவரைத்தான் சென்றடையும். அது உன் குற்றம் அல்ல என இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று (1051) என்ற குறளில் இரப்பார்க்கு மன ஊக்கம் தந்து இரக்கச் சொல்லி. இரப்புமுயற்சி தோல்வியடைந்தாலும் அதற்காக் வருந்தத் தேவையில்லை என ஆறுதல்மொழியும் கூறுகிறார்.

வைத்துக்கொண்டே மறைத்தலைக் கனவிலும் கருதாதவரிடம் சென்று ஏற்பது ஈதல்போல் இன்பம் தருவதுதான் எனஇரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு (1054) என்ற பாடலில் கூறப்படுகிறது. இங்கே இரத்தல் ஈதலாகிறது!

இரப்பாரே இல்லாத உலகம் உயிர்ப்பில்லாமல் பொம்மைகள் நிறைந்ததாகக் காட்சியளிக்கும்; அங்கு மனித மாண்புகள் வெளிப்பட வாய்ப்பில்லை. உணர்வில்லா அவ்விடத்தை இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று (1058) என்ற குறள் இழித்துப் பேசுகிறது. இரப்பவரும் நாட்டிற்குத் தேவை என்கிறது இப்பாடல்.




குறள் திறன்-1051 குறள் திறன்-1052 குறள் திறன்-1053 குறள் திறன்-1054 குறள் திறன்-1055
குறள் திறன்-1056 குறள் திறன்-1057 குறள் திறன்-1058 குறள் திறன்-1059 குறள் திறன்-1060