இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1054



இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

(அதிகாரம்:இரவு குறள் எண்:1054)

பொழிப்பு (மு வரதராசன்): உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது.

மணக்குடவர் உரை: கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும்.
ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை: கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும்.
(உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.)

இரா சாரங்கபாணி உரை: உள்ள பொருளை மறைத்துக் கூறுதலைக் கனவிலும் அறியாதவரிடம் சென்று ஒரு பொருளை இரத்தலும் ஈதல் போல இன்பம் தரும் செயலாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு இரத்தலும் ஈதலே போலும்.

பதவுரை: இரத்தலும்-ஏற்றலும், கேட்டலும்; ஈதலே-கொடுத்தலே; போலும்-போன்றது, ஒத்திருக்கும்; கரத்தல்-மறைத்தல்; கனவிலும்-கனவின் கண்ணும்; தேற்றாதார்-தெளிந்து அறியாதவரிடத்து; மாட்டு-இடத்தில்.


இரத்தலும் ஈதலே போலும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும்; [இரந்து சேறலும்- கேட்கச் செல்லுதலும்]
ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள்: இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈதலேபோலும் என்றது இரந்தேம் என்று சிறுமை உறுதலின்றி உயர்ந்தாரைப் போலப் பெருமிதத்தர் ஆவர் என்றது. மேல் இகழாது ஈவார் மாட்டு இரக்கல் ஆம் என்றார்; அவர் மூவகையர் ஆதலின் முற்பட உதவுவர்மாட்டு இரக்கல் ஆம் என்று கூறப்பட்டது. [இரக்கல் - இரத்தல்]
பரிதி: தேகி என்பது நல்லதே;
காலிங்கர்: இரத்தலும் ஈதலே போலும் இனிமையை உடைத்து;
பரிமேலழகர்: ஒன்றனை இரத்தலும் வறியார்க்கு ஈதலே போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை. [உம்மை இரத்தலின் இழிவை விளக்கி நின்றது]

'ஒன்றனை இரத்தலும் வறியார்க்கு ஈதலே போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சென்று கேட்பது கொடுப்பதை ஒக்கும்', 'தானம் கேட்பதையும் (அவர்கள் அவன் தமக்கு தானம்) கொடுப்பதைப் போலவே (வரவேற்பார்கள்)', 'பிச்சை கேட்பதும் பிச்சை கொடுப்பதை யொக்கும்', 'ஒன்றனை வேண்டுதலும் பிறர்க்குக் கொடுத்தல் போன்றதாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேட்பதும் கொடுத்தல் போன்றதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு.
மணக்குடவர் குறிப்புரை: ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள்: கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: கரத்தல் கனவிலுந் தேறாதார் என்றமையால் உதவுவார் என்று கொள்ளப்படும்.
பரிதி: அது எதனால் என்னில் பொல்லாரிடத்தில் கேளாது இருப்பாராகில் என்றவாறு.
காலிங்கர்: அஃது எவ்விடத்து எனில், இல்லை என்னும் சொல்லினைக் கனவிலும் அறியாதவரிடத்து; எனவே இரவு பகல் என்னும் பொழுது வரைவின்றி எப்பொழுதும் பிறர்மாட்டு இரக்கமுடைய இயல்பினரிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று.

'கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒளிப்பதைக் கனவிலும் அறியாதாரிடம்', '(வைத்துக் கொண்டு) கேட்பவர்களுக்கு இல்லையென்னும் தன்மையைக் கனவிலும் அறியாதவர்களிடத்தில் (ஒருவன் சென்று)', 'உள்ளதை ஒளிக்கக் கனவிலும் அறியாதார்பால்', 'உள்ளது ஒளித்தலைக் கனவின் கண்ணும் அறியாதாரிடம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மறைப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மறைப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் இரத்தலும் ஈதலே போலும் என்பது பாடலின் பொருள்.
இரத்தல் எவ்விதம் ஈதலாகும்?

கொடுப்பவர் ஏற்பவரானால் இரப்பவர் ஈவார் தானே!

இரந்தார்க்குத் தம்மிடம் உள்ள பொருளைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் ஒருவன் சென்று ஒரு பொருளைக் கேட்பதுவும் ஈதல் போன்றதேயாம்.
அந்த ஈகையாளர் மிக வெளிப்படையானவர்; எந்தநேரமும் பிறர்மாட்டு இரக்கமுடைய இயல்பினர்; தன் கனவிலும் தம்மிடம் உள்ள பொருளை தம்மிடம் உதவி கேட்க வந்தவரிடமிருந்து மறைக்கமாட்டார். தம்மிடம் பொருள் இருந்தால் இரப்பவர்க்கு உடனே கொடுத்துவிடுவார். அப்படிப்பட்டவரிடம் சென்று இரத்தல் கொடுப்பது போன்ற சிறப்புடையதே ஆகும் என்று இக்குறள் கூறுகிறது. வேறு வழியே இல்லை என்ற நிலையில் ஒருவரிடம் சென்று இரந்து கேட்க எண்ணுபவரிடமுள்ள தாழ்வுணர்ச்சியை நீக்கும் வகையில் அமைந்தது இது.
கரப்பிலாரிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்பது இழிவாகாது எனக் கூறும் இவ்வதிகாரத்து மற்றொரு பாடலாகும்.

கேட்பவரும் கொடுப்பவரும் ஒருவரை ஒருவர் இரந்து நிற்பது போன்ற காட்சி தரப்படுகிறது. இங்கே இரப்பது, இரப்பானுக்கும் கொடுப்பவனுக்கும் இன்பம் தருவதாக உள்ளது. அதனால் இரத்தலும் ஈதலும்போலும் எனச் சொல்லப்பட்டது. முந்தைய இரண்டு பாடல்களில் (1052, 1053) இன்பம் ஒருவர்க்கு இரத்தல், இரப்பும் ஓர் அழகு என்று சொன்னபின், இங்கு இரத்தல் ஈதல் போல்வது எனக் கூறப்படுகிறது. இம்மூன்று குறள்களும் துன்பம் தராமல், மறைக்காமல் கொடுப்பவரிடம் இரத்தல் இழிவன்று என இரவுக்கு அமைதி கூறுவதாக உள்ளன. ஈகைக் குணம் படைத்தவரைக் கண்டறிந்து இரக்கலாம். வைத்துக்கொண்டே மறைத்து ஈயாதாரிடம் இரப்பதுதான் பழியும் துன்பமும் தருவன என்பதைச் சொல்லவந்தன இவை.
உள்ளதை ஒளிக்காது தருவாரிடமிருந்து ஒன்றைப் பெறுதலும் ஈவதே போன்ற பெருமை உடையதென்ற வள்ளுவரின் இவ்வரிய எண்ணம் அவர் இரவை ஊக்குவிப்பதாகப் பொருள்படாது. அவர் 'இரவின் இளிவந்தது இல்' என்பதில் உறுதியானவர். ஆனாலும் இரப்பார்க்குச் சார்பாக, கரவாது கொடுப்பாரைக் கண்டறிந்து கேள் என அருள் நெஞ்சுடன் வழிகாட்டவும் செய்யக்கூடியவர் என்பதாம்.
இக்குறள் ஈபவனின் பெருமையையும் இரப்பது இழிவாகாத வேளைகளும் உண்டு என்பதையும் சொல்வது.

இரத்தல் எவ்விதம் ஈதலாகும்?

தன்னிடம் இருப்பதை இரப்போர்க்கு ஈயாமல் ஒளித்துக் கொள்ளுவதைப்பற்றிக் கனவில் கூட நினைக்காதவர்களும் உலகில் உண்டு; அவர்களிடம் சென்று ஒன்றை இரத்தல் இரத்தலாகாது; அது ஈவதைப் போலவே இன்பந்தரும் என்கிறது பாடல். இக்குறளுக்கான பரிப்பெருமாள் உரை 'ஈதலேபோலும் என்றது இரந்தேம் என்று சிறுமை உறுதலின்றி உயர்ந்தாரைப் போலப் பெருமிதத்தர் ஆவர்' என்று ஈதலே போலும் என்பதை விளக்குகிறது. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து (படைச்செருக்கு 776 பொருள்: தான் வாழ்ந்த நாள்களுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் பயன்படாத நாளுள்ளே எண்ணி வைக்கும்) என்னும் குறட்பொருளைக் கருத்தில் கொண்டு தண்டபாணி தேசிகர் 'கரத்தல் கனவினும் தேற்றாதார் இரப்பர் இரத்தல் இல்லாத நாளை இன்ப நாளாக எண்ணார்; இரப்பார் இரந்து, ஈவார்க்கு இன்பம் உண்டாக்கும் ஈகையையே செய்கின்றார்கள். ஆதலின் இரத்தலும் ஈதலே போலும் என்றார் எனலும் ஏற்புடையதாம். இவ்வுரைக்கண் இரப்பார்க்கே ஈவார் எய்தும் இன்பம் விளைதலைக் காணலாம்' என்று இப்பாடலுக்குக் கருத்துரைப்பார்.

கள்ளமற்ற மனமுள்ளவர்க்கு ஈத்துவக்கும் இன்பம் பெற வாய்ப்புத் தருவதால் இரத்தலும் கொடுத்தலாம்.

மறைப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் கேட்பதும் கொடுத்தல் போன்றதாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்லையென்று கனவிலும்கூடக் கூறமாட்டாத நல்லவரிடம் ஏற்கும் இரவு கொடுத்தல் போன்றது.

பொழிப்பு

தம்மிடம் உள்ள பொருளை மறைத்துக் கூறுதலைக் கனவிலும் அறியாதவரிடம் சென்று கேட்பதும் ஈதல் போல இன்பம் தருவதே.