இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0761 குறள் திறன்-0762 குறள் திறன்-0763 குறள் திறன்-0764 குறள் திறன்-0765
குறள் திறன்-0766 குறள் திறன்-0767 குறள் திறன்-0768 குறள் திறன்-0769 குறள் திறன்-0770

பலருக்கு இன்னல் இழைக்கும் கூட்டம் ஒன்று உலகத்தில் இருக்கின்றவரையில், அதை அடக்குவதற்காகப் படை என்று ஒன்று இருந்தே தீரும். அந்தப் படையைப் போற்றிப் பயன்படுத்துவது தலைவனுடைய கடமையாக இருக்கும்.
- மு வரதராசன்

உள்நாட்டு அமைதிக்கு ஊறு நேராதவாறு தடுப்பதற்கும் வெளிநாட்டுக்கு அடிமைப்படாமல் உரிமையுடன் வாழ்வதற்கும் மிகுந்த ஆற்றல் உள்ள படை ஒர் நாட்டிற்கு இன்றியமையாததாகிறது. ஒரு நாட்டின் செல்வ வளம் சிதைவுபடாமல் இருக்க வேண்டுமானாலும், அந்நாட்டிலே போதுமான படைபலம் இருக்க வேண்டும். இவ்வாறு அமைதியையும் வளத்தையும் படை பாதுகாக்கின்றது. அப்படையின் பண்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை இத்தொகுதியில் விளக்கமாக உரைக்கின்றார் வள்ளுவர். உயர்ந்த நாட்டுப்பற்றுடன் கூடிய வீரம் காட்டி நாட்டின் இறையாண்மையைப் படைதான் காப்பாற்றுகிறது. எனவே படை அரசின் தலைமைச் செல்வமாம். படைமாட்சி என்பது படைவீரர்களின் மாட்சியையும் குறித்தது.

படைமாட்சி

அரசின் உறுப்புக்கள் ஆறனுள் (படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்) முதற்கண் கூறப்படுவது படை. ஓர் நாட்டின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஆற்றல் மிகு உறுப்புப் படையேயாகும். படையும் அரணும் நாட்டை மாற்றாரிடமிருந்து காக்க வல்லன. ஏனைய நான்கு உறுப்புக்களும் படைக்கும் அரணுக்கும் இடையே நின்று பாதுகாப்பு பெறும் தன்மையன.
நமது பழம் இலக்கியங்கள் மாந்தர் வாழ்க்கையை அகம்-புறம் என்று இரண்டாகப் பகுத்து, 'புறத்'தில் வீரத்தின் உயர்வைப் புகழ்கின்றன. ஒரு நாடு செல்வத்தில் திளைத்தாலும், கல்வியில் சிறந்ததாக விளங்கினாலும், அதன் மக்களையும் வளங்களையும் காக்க வீரம் தேவை. வீரத்தைப் போற்ற குறளின் பொருட்பாலில் படைமாட்சி, படைச்செருக்கு என்ற இரு அதிகாரங்களை எழுதி இருக்கிறார் வள்ளுவர். இவற்றுள் படையின் சிறப்புக் கூறுவது 'படைமாட்சி'.
படை என்ற சொல்லுக்குக் கருவி என்று ஓர் பொருள் உண்டு. படைக்கலமாகிய ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி காணும் வீரர்களைக் கொண்டது படையாம். படுத்தல்-கொல்லுதல்; கொல்லுதலையுடையது படை. ஐ வினைமுதற் பொருளில் வந்த விகுதி. ஆதலால் கொல்லும் வீரர்களையும் கருவியையும் உணர்த்தும் பொதுப்பெயர் எனவும் விளக்குவர்.
முன்பு யானை, தேர், குதிரை, காலாட்படை என நான்காகப் படைப்பிரிவுகள் இருந்தன. இப்பொழுது படைவகைகளை, தரைப்படை, கடற்படை, வான்படை (army, navy, airforce) என்னும் பிரிவுகளில் அடக்கலாம். ஒவ்வொன்றும் பல உட்பிரிவுகளையும் கொண்டிருக்கிறது. படைகள் எத்துணைப் பிரிவுடையதாய் இருப்பினும் அவற்றையியக்கும் வீரர்களைப் பொறுத்ததே படையின் சிறப்பு.
'படைகளில் யானையுங் குதிரையும் மாட்சியைப் பகுத்தறிவோடு விரும்பி மேற்கொள்வன அல்ல. ஏவ இயங்குவன. தேர் இயக்கப்படுவன; ஆகவே ஊறு அஞ்சா மாட்சியை இயல்பாக உடையதும், அதனை இடுக்கட்படினும் விட்டுக் கொடுக்காததும் காலாட்படை ஒன்றே. ஆதலால் இவ்வதிகாரம் காலாட்படையின் மாட்சியைக் கூறவந்ததேயாம்' என்பார் தண்டபாணி தேசிகர். இவரது விளக்கத்தில் உள்ள காலாட்படை என்ற சொல்லுக்குப் பதில் படைவீரர்ஆற்றல் எனக் கொண்டால் இன்றைய படையில் உள்ள நவீன கருவிகளையும் இயக்கவல்ல படைவீரர் மாட்சியையும் சேர்த்துக் குறித்துப் பொருந்த அமையும்.

உயிர்கள் கொல்லப்படாமல் எந்தப் போரும் இல்லை. அறவாணரான வள்ளுவர் உயிர்நீக்கும் போரை ஏற்கிறாரா? குறளின் கொல்லாமை அதிகாரம் தனிமனித அறத்தைச் சொல்கிறது. இது தன்னுயிரை விட நேரிட்டாலும் தான் வேறு ஒன்றின் இனிய உயிரைப் போக்குவதைச் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துவது. அரசியலில், சமுதாய அறம் காக்க கொலைத்தண்டனையில் கொல்லப்படலாம் எனக் கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் (செங்கோன்மை, 550) என்ற குறளில் கூறப்பட்டது. படைமாட்சி, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்கள் படைத்துப் படையையும் படைவீரர்களையும் புகழ்ந்தமையால் பகைவரிடமிருந்து நாட்டைக் காக்க உயிர்கள் கொல்லப்படலாம் என்பது வள்ளுவர்க்கு உடன்பாடுதான் எனத் தெரிகிறது.
படை என்பது தாக்குவது தாங்குவது என்ற இரண்டு போர்ச்செயல்களைச் செய்யவல்லதாயிருப்பது. தாக்குவது என்பது பொதுவாக பகைவர் நாட்டிற்குப் படையுடன் சென்று தாக்குதல் நடத்துவது. படைமாட்சி அதிகாரக் குறள்கள் தாங்கும் ஆற்றல் அதாவது படையெடுத்துவரும் பகையை எதிர்நிற்றல் பற்றியே பெரிதும் பேசுகின்றன. எனவே பிறர் நாட்டின்மேல் படையெடுத்துச் செல்வதைக் குறள் ஒப்பவில்லை எனலாம்.

படைமாட்சி அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 761ஆம் குறள் படைக்குரிய எல்லா உறுப்புகளும் பொருந்தி, போர்த் துன்பங்களுக்கு அஞ்சாத வெற்றிப் படை, அரசின் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மையானதாம் என்கிறது.
  • 762ஆம் குறள் படைசிதைந்து அழிவு வந்த இடத்தும் இடையூறுகளுக்கு அஞ்சாத வீரம் தொல்படைக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு அரிது எனக் கூறுகிறது.
  • 763ஆம் குறள் எலியாகிய பகை திரண்டு கடல்போல் ஒலி எழுப்பினாலும் என்ன ஆகப்போகிறது? நாகப்பாம்பு மூச்சுவிட்ட அளவிலே அது கெட்டொழியும் எனச் சொல்கிறது.
  • 764ஆம் குறள் போரின்கண் மனம் உடையாது பகைவரின் வஞ்சகச் சூழ்ச்சிக்கு ஆளாகாதும் தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் வீரம் கொண்டதே படை என்கிறது.
  • 765ஆம் குறள் கூற்றுவனே சினந்து எதிர்த்து வரினும் சிதறுதல் இன்றி எதிர்த்துத் தாங்கும் வலிமையையுடையதே படை எனச் சொல்கிறது.
  • 766ஆம் குறள் வீரம், மானம், சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவல் ஆகும் என்கிறது.
  • 767ஆம் குறள் தன்மேல் வந்த போரைத் தடுத்துநிறுத்தும் முறையறிந்து பகைவரின் முன்னணிப் படையை விலக்கி மேற்செல்வது படையாம் எனச் சொல்கிறது.
  • 768ஆம் குறள் தாக்கும் வீரமும் தாக்குதலைத் தாங்கும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும் ஒழுக்கக்கட்டுப்பாட்டால் பெருமை அடையும் என்கிறது.
  • 769ஆம் குறள் இழிவும் நீங்காத மனக்குறையும் வறுமையும் இல்லையானால் படை வெல்லும் எனக் கூறுகிறது.
  • 770ஆவது குறள் படையில் நிலையுடைய வீரர் மிகுதியாக இருந்தாலும் தலைவர் இல்லையெனின் அது உறுதியிழந்து போகும் என்கிறது.

படைமாட்சி அதிகாரச் சிறப்பியல்புகள்

அக்காலத்தில் காலாட்படை குதிரைப்படை யானைப்படை தேர்ப்படை என்பன படையினது உறுப்புகளாக இருந்தன. வள்ளுவர் உறுப்பமைந்து.......................................தலை எனக் குறள் 761-இல் குறிப்பிடுகிறார். உறுப்புகள் நிறைந்து... வெல்லும் படை என்றாரே தவிர, என்னென்ன உறுப்பு என்று இப்பாடலிலோ அல்லது அதிகாரத்தின் மற்ற எந்தக் குறளிலுமோ அவர் சொல்லவில்லை. அவற்றைக் குறிப்பிட்டிருந்தால் இன்று அவ்வரி பயனற்றதாகி இருக்கும். அதற்கு வெளிப்படையாகவே இடம் வைத்திருக்கிறார். காலப்போக்கால் மாறிவிடக்கூடிய ஊர்திகளையும் கருவிகளையும் அறவே நீக்கிவிட்டு ஒரு படைக்கு என்றென்றும் இருக்க வேண்டிய படைத்தன்மையை மட்டும் தான் சொல்லுகிறார்.

படைத்தலைவன் மிடுக்குடன் படைக்களத்தில் தோன்றினாலே, போர்க்கூச்சலிட்டு வரும் பகையை, அவிழ்த்து விடப்பட்ட எலிக்கூட்டம்போல் ஓடச் செய்வான் என்னும் சிறந்த உவமை கையாளப்பட்ட குறள் ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் (763) என்கிறது.

உயிர்கள் அஞ்சும் கூற்று சீற்றம் கொண்டு உயிர்களை எடுப்பதில்லை; ஆனால் கூற்று என்று உச்சரிக்கப்பட்டாலே பயம் உண்டாக்கக்கூடியது. அதுவே சினம்கொண்டு வந்தால் எப்படி இருக்கும்? அதையும் எதிர்க்கவல்லதாக இருக்க வேண்டும் படை என்று கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை (765) என்ற பாடல் கூறுகிறது.

ஒரு படைக்கு எது அழகு? தறுகண்மையும் தாங்கும் ஆற்றலும் வேண்டும்தாம். ஆயினும் படை ஒழுங்கமைவோடு இருந்தாலே வெற்றியைத் தேடித்தரும் எனச் சொல்வது அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் (768) என்ற பாடல்.

தலையில்லாமல் உடல் மட்டும் இருந்து என்ன பயன்? தலைவனில்லாப் படை என்ன செய்யமுடியும்? அப்படை இருந்தும் இல்லாதது போல்தான்; ஒன்றும் செய்ய இயலாது என்று நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் (770) என்ற பாடல்வழி சொல்கிறது.




குறள் திறன்-0761 குறள் திறன்-0762 குறள் திறன்-0763 குறள் திறன்-0764 குறள் திறன்-0765
குறள் திறன்-0766 குறள் திறன்-0767 குறள் திறன்-0768 குறள் திறன்-0769 குறள் திறன்-0770