இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1041 குறள் திறன்-1042 குறள் திறன்-1043 குறள் திறன்-1044 குறள் திறன்-1045
குறள் திறன்-1046 குறள் திறன்-1047 குறள் திறன்-1048 குறள் திறன்-1049 குறள் திறன்-1050

வள்ளுவர் வறுமைச் சுவையை தம் வாழ்க்கையில் துய்த்தவரோ, அறிகிலம். ஆயின் வறியோர் துன்பத் துடிப்பினை- ஈர நெஞ்சினர் ஆதலின் - நன்கு அறிந்தவர்....புலமை யுள்ளங்கொண்டு சுவை பொதுள நல்குரவைப் பாடாது, 'இன்மையின் இன்மையே இன்னாதது', 'இன்மை என ஒருபாவி', 'அறம்சாரா நல்குரவு' எனத் துடிப்புள்ளம் கொண்டு வருத்தம் மீதூர வைத்துப் பாடுவார்.
- வ சுப மாணிக்கம்

நுகரப்படுவன எவையும் இல்லாத நிலை நல்குரவு எனப்படும். இது வறுமை என்று அறியப்படுவதுமாம். இதனை நல்குரவு, இன்மை, நிரப்பு என்னும் சொற்களாலும் இவ்வதிகாரப்பாடல்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். வறுமையைப்பற்றியும் பசிக்கொடுமையால் வாடுவோர் பற்றியும் படிப்போர் நெஞ்சம் பதறும் மொழியில் சொல்லோவியங்களாக இங்கு அவர் தீட்டிக் காட்டியுள்ளார் அவர். வறுமைப்பட்டார் நுகர்ச்சியைத் துறந்து முயன்று நல்வாழ்வைப் பெறவேண்டும் என்ற குறிப்புடன் அதிகாரம் நிறைவுறுகிறது.

நல்குரவு

நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை ஆகிய பொருட்பாலின் கடைசி நான்கு அதிகாரங்கள் குடிமக்களுக்குத் தகாதவற்றை எடுத்துக்கூறுவன. அவற்றுள்ளும் வறுமையே இரவுக்கும் கயமைக்கும் பெரிதும் காரணமாக அமைகிறது. நல்குரவு என்னும் இவ்வதிகாரத்தில் வறியவர்களின் வாழ்வை நினைந்து உருகிய உணர்வோடு வறுமையின் கொடுமையைப் புலப்படுத்துகின்றார்.
நல்குரவு என்பது பொருளில்லா நிலையைச் சொல்வது. இல்லாரை எல்லாரும் எள்ளுவர். பொருள் வலி ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. பொருளில்லா வறுமை மனிதனை மனிதனாக வாழவொட்டாமல் செய்துவிடுகிறது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அவ்வையார் பெரும்பசி வந்தால் பெருமை, அடக்கம், நாணம், உயர்வு, மேன்மை, கல்வி, அறிவு, முயற்சி, தவம், அன்பு எல்லாம் பறந்து விடும் என்றார். வறியநிலை வாழ்க்கைக்கே இடையூறானது; எவரும் எய்தக்கூடாத ஒன்று.

வறுமை உண்டாவதற்குக் காரணங்களையும் அதை நீக்குதற்கான தீர்வுகளையும் வள்ளுவர் இவ்வதிகாரத்தில் கூறவில்லை. ஆனால் கருத்தியல் வகையாகவும் உலகியல் வகையாகவும் அவற்றைக் குறள்நூலின் பிற இடங்களில் ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளர். அவற்றிலிருந்து சில:
கருத்தியல்;
உலக இயற்கை: ஆக்கமும், கேடும் உலகத்தில் இயல்பாவைதான் என்பதை கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (நடுவுநிலைமை 115 பொருள்: கேடும் பெருக்கமும் உலகில் இல்லாதன அல்ல; அவை காரணமாக உள்ளம் சாயாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகு) போன்ற குறள்கள் காட்டின. இயற்கையாக உண்டாகும் இன்ப துன்பங்களை ஒருவன் ஒத்துக்கொண்டு மேற்செல்ல வேண்டும் என்பதான சிந்தனை இது.
ஊழ்: ஊழிற் பெருவலி யாவுள? கைப்பொருள் போக்கும் ஊழ். ஒருவற்கு வறுமை அடையவேண்டும் என்றிருந்தால் அது நடந்தே தீரும். மலைபோல் உயர்ந்து தோன்றி வளமுடன் வாழ்ந்தாலும் ஊழின் செயலால் அவ்வாழ்வு மடமடவென்று சரிந்து நல்குரவால் மடுவாகிவிடும். துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் (ஊழ் 378 பொருள்: ஊழினால் அவர் அடையக்கூடியன நேராது கழிந்தால் நுகர்பொருள் இல்லா வறியவர் துறவியாகி இருப்பார்களே?) என்று ஊழ் அதிகாரக் குறள் ஒன்று கூறியது. இதன் திரண்ட கருத்து ஒருவர் துறவு மேற்கொள்ளாதிருப்பது அவர் வறுமைத் துன்பம் அடைதல் வேண்டும் என்னும் ஊழின் முறைமையாற் போலும் என்பது.
உலகியல் காரணங்களாகக் கூறப்பட்டவை:
மழையின்மை: விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி (வான் சிறப்பு 13 பொருள்: மழை பொய்த்தால் விரிந்த நீரினையுடைய அகன்ற நிலவுலகத்தின்கண் பசி உயிர்களை வாட்டி வதைக்கும்), விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது (வான் சிறப்பு 16 பொருள்: வானின்று மழைத் துளி வீழ்ந்தால் அல்லது அவ்விடத்து பச்சைப் புல்நுனியுங் காண்பது அரிது) ஆகிய குறள்கள் பசி, வறட்சி ஆகியவற்றுக்கு மழை பொய்ப்பது ஒரு காரணம் எனத் தெரிவிக்கின்றன.
பிற காரணங்கள்: இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (வரைவில்மகளிர் 920 பொருள்: இரண்டுமனத்தினை உடைய மகளிரும், கள்ளும், சூதும் செல்வத்தினின்றும் நீக்கப்படப்போவார்க்கு உறவு) என்னும் பாடல் பொருட்பெண்டிர் தொடர்பு, கள்ளுண்ணல், சூதாடல் போன்ற தீய ஒழுக்கங்கள் செல்வம் கடிதில் நீங்கி வறுமையுறுவதற்கான காரணங்களாம் என்கிறது.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் (ஆள்வினையுடைமை 616 பொருள்: முயற்சி செல்வத்தினை உண்டாக்கும்; முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையுள் செலுத்திவிடும்) போன்ற குறட்பாக்கள் முயற்சியின்மை வறுமைக்குள் புகுத்திவிடும் என்பதைச் சொல்வன.
மதிநுட்பமின்மை, வணிகத்தில் இழப்பு, பொருளாசையின்மை, தாயத்தாரும் கள்வரும் கவர்தல், இயற்கைப்பேரழிவு உண்டாதல் போன்றவற்றாலும் ஒருவர் வறுமை எய்தலாம். அறச்செய்கைகள் புரிந்து வறுமை அடைபவர்களும் உண்டு.

வறுமையைவிடத் துன்பந்தருவது வேறு இல்லை; வறுமையே கொடியது. வறுமையென்னு மாபாவி ஒருவனுக்கு மறுவுலக இவ்வுலக இன்பங்களைக் கெடுக்கும். வறுமை என்பது பேராவல் கொண்டது; அனைத்து பழம்மரபுகளையும் அழகினையும் ஒருசேர அழித்துவிடும். நற்குடிப்பிறந்தாரைக்கூட வறுமைத்துன்பம் இழிவுச் சொற்கள் பேசச்செய்யும். வறுமையின் கண் வேறு பல துன்பங்களும் தாமே வந்து சேரும்; மற்ற வன்மையுடைய பல இடும்பைகளில் உறைவிடம் நல்குரவுத் துன்பமே ஆகும். நல்ல பொருள்களை எண்ணிச் சொன்னாலும் வறியவரின் சொற்கள் பொருட்படுத்தப்படா. மகன் செய்யும் எல்லாத் தவறுகளையும் மன்னிக்கும் தாய் அவனது அறத்தோடு இயைபில்லா வாழ்வால் அவனுக்கு வறுமை உண்டானால் அவனை வேற்றுஆள் போலப் பார்த்து அகல்வாள். வறுமை என்பது உண்மையில் சாவுதான்; நேற்று வந்து கொன்றது போன்று துன்பத்தைச் செய்த பசித்துன்பம் இன்றைக்கும் என்பால் வந்துவிடுமோ? என்றும் ஒருவன் நெருப்பிடையே கூடத் தூங்கிவிடலாம் ஆனால் வறுமையில் உறக்கம் வராது என்றும் நல்கூர்ந்தார் நாளும் அஞ்சித் துடிப்பர். பொருளிலார் நுகர்ச்சியை முற்றும் துறவாவிடின் உப்புக்கும் கூழுக்கும் தண்டமாக இருப்பர். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

நல்குரவு அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1041ஆம் குறள் வறுமையைப் போலத் துன்பம் தருவது எது என்றால் வறுமை போலக் கொடியது வறுமையே என்கிறது.
  • 1042ஆம் குறள் வறுமை என்று சொல்லப்படுவதொரு மாபாவி மறுஉலக இன்பமும் இவ்வுலக இன்பமும் இல்லாமல் செய்யவரும் என்று சொல்கிறது.
  • 1043ஆம் குறள் வறுமை என்று சொல்லப்படும் ஆசை வழிவந்த குடிச்சிறப்பையும் அதனால் வரும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும் என்கிறது.
  • 1044ஆம் குறள் நற்குடியில் பிறந்தாரிடத்தும் வறுமையானது இழிவு தரும் சொற்கள் தோன்றுதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும் எனச் சொல்கிறது.
  • 1045ஆம் குறள் வறுமை என்று சொல்லப்படும் பெருந்துன்பத்துள் பலவகைத் துன்பங்களும் வந்து சேரும் எனச் சொல்கிறது.
  • 1046ஆம் குறள் நல்ல செய்தியை நன்கு அறிந்து சொன்னாலும் வறியவர் கூறுஞ் சொல்லும் பொருளும் ஏற்றுக் கொள்ளப்படா என்கிறது.
  • 1047ஆம் குறள் அறத்தோடு இயைபில்லா வாழ்வால் வறுமை உண்டானால் பெற்ற தாயாலும் வேற்றுஆள் போலப் பார்க்கப்படும் நிலை ஏற்படும் என்கிறது.
  • 1048ஆம் குறள் நேற்று வந்து என்னைக் கொன்றது போன்று துன்பத்தைச் செய்த நிரப்பு இன்றைக்கும் வந்துவிடுமோ? எனக் கேட்கிறது.
  • 1049ஆம் குறள் நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் கூடும்; வறுமை வந்தபோது சிறிது தூங்குவதற்கும் கண்மூடல் கடினம் என்கிறது.
  • 1050ஆம் குறள் நுகர்தற்கு வேண்டும் பொருள் இல்லாதவர் அந்நுகர்வை முற்றும் துறவாதிருத்தல் உப்புக்கும் புளித்த நீருக்கும் பிடித்த கேடேயாம் என்கிறது.

நல்குரவு அதிகாரச் சிறப்பியல்புகள்

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது (1041) என்னும் குறள் இல்லாமையின் கொடுமையை உணர்த்த வந்தது. இன்மை என்பது நுகர்வதற்கு ஒன்றுமில்லாத வறுமைநிலைமை. வறுமையை விடத் துன்பம் தருவது எது என்று கேட்டால் வறுமையை விடத் துன்பம் தருவது அவ்வறுமையேயாகும். அதற்கு இணையாக வேறொன்றைச் சொல்வதற்கில்லை என்பது கருத்து. இன்மைக்கு உவமை காணப் புகுந்து, அதன் கொடுமைக்கு எதை எதையோ உவமையாக எண்ணி எண்ணி, அவற்றுள் ஒன்றும் அதன் கொடுமைக்கு அருகில் வரமுடியாதென்பதை உணர்ந்து, இறுதியில் அதற்கு அதுவே ஒப்பு என்று சொல்லி முடித்து விடுகிறார் வள்ளுவர்(கி வா ஜகந்நாதன்).

இளிவரல் என்பது இழிவு உணர்ச்சி. இன்சொல் கூறலுக்கு எப்பொழுதும் சிறப்பிடம் தரும் வள்ளுவர், வறுமையின் கொடுமையைக் காட்டும் இவ்வதிகாரத்தில், இளிவரல் பண்பினைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும் (1044) என்ற பாடல் இனிமையான சொற்களையே பேசிப்பழகி வந்த நற்குடியில் பிறந்தவர்களிடத்திலும், வறுமையானது, இழிவான சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வினை உண்டாக்கிவிடும் என்கிறது.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு (1048), நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது (1049) ஆகிய பாக்கள் அவலச் சுவையை நன்கு காட்டுவன. வறுமையின் கொடிய பிடியிலிருந்து தப்பியோட வழி தெரியாமல், மனம் கலங்கி நிற்பவனது இதயக்குமுறல்கள் நம் உள்ளத்தைப் பிழிந்து எடுக்கின்றன.




குறள் திறன்-1041 குறள் திறன்-1042 குறள் திறன்-1043 குறள் திறன்-1044 குறள் திறன்-1045
குறள் திறன்-1046 குறள் திறன்-1047 குறள் திறன்-1048 குறள் திறன்-1049 குறள் திறன்-1050