இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1021 குறள் திறன்-1022 குறள் திறன்-1023 குறள் திறன்-1024 குறள் திறன்-1025
குறள் திறன்-1026 குறள் திறன்-1027 குறள் திறன்-1028 குறள் திறன்-1029 குறள் திறன்-1030

தான் பிறந்த குடியைப் பாடுபட்டு உழைத்து உயர்த்துகின்ற திறமே குடிசெயல்வகை எனப்படும். குடிக்கு ஒரு குறைவந்துழி அதைநீக்குவதும் இதிலடங்கும்.
- தமிழண்ணல்

தெரிந்து செயல்வகை, வினை செயல்வகை, பொருள் செயல்வகை ஆகிய செயல்வகைகள் முன்பு கூறப்பட்டன, இங்கு குடிசெயல்வகை சொல்லப்படுகிறது. தான் பிறந்த குடியை அதாவது குடும்பத்தை உயரச் செய்தலின் திறம் குடிசெயல்வகை எனப்படும். குடி-இல்-குடும்பம்-என்னும் சொற்கள் தான் பிறந்த குடியையே உணர்த்தும். தன் குடியைத் தாழாமற் செய்வதும், அதை மேன்மேலும் உயர்த்தலுமே குடிசெயல்வகையாகும். குடும்பத்தை ஆளுதலை உடைமையாக்கிக் கொள்ளுதலும், தம் குடியைச் சுமக்கும் வன்மையும், அறிவும், முயற்சியும் முதலாயின செயல்வகைகளாகக் கூறப்படுகின்றன. குடியை உயர்த்த முயல்பவனைக் குடிசெய்து வாழ்வான் என்றும் குடி செய்வார்‌ என்றும் வள்ளுவர் அழைக்கிறார்,
குடிசெய்வல் அதாவது குடியை மேன்மையும் பெருமையும் சீரும் செல்வமும் உடையதாகச் செய்வேன் எனச் சூளுரைத்து செயல் முடியும் வரை கைதூவேன் (கையொழியேன்) என முயற்சியில் ஈடுபடுவான் குடிசெய்வான். அவனது செயற்பாடுகளால் குடி சிறப்படைகிறது-புகழ் பெறுகிறது-செல்வம் அடைகிறது.
பிறந்த குடி, சுற்றம் என்று சொல்லும் போது அது ஒரு சிறு எல்லைக் கோட்டுக்குள் அடங்கி விடும். வீட்டை ஆளும் ஒருவனுக்கு உரைக்கப்பட்ட கருத்துக்கள் சமூகம், நாடு உயர்த்துவதற்கும் பொருந்துவதாகவே உள்ளன.

குடிசெயல்வகை

குடி என்பது குடும்பம், குலம், இனம், நாடு எனப் பல்வேறு அளவுள்ள மக்கள் வகுப்புகளைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. பல குடிகளின் தொகுதி குலம் என்று அறியப்படுவது. குலம் என்ற சொல்லை இத்தொகுதியில் ஆளப்படவில்லையாதலால், குடி என்பது இங்கு குடும்பத்தை மட்டும் குறிப்பதாகக் கொள்வர். குடும்பம் என்னும் சொல் குறளில் இவ்வதிகாரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் மிக முக்கியமான கூறாகத் திகழ்வது குடும்பம். குடும்பம் தாய், தந்தை, குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவாகும். குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதற்காக ஏற்பட்ட திட்டவட்டமான தொடர்புகளின் பால் உறவமைந்த குழுவே குடும்பம். உயர்த்தல் என்பது தான் பிறந்த குடியை ஒழுக்கத்தாலும் பண்பாட்டாலும் பொருளாதாரம், அரசியல் நிலை போன்றவற்றாலும் உயரச்செய்தலாம்.

ஒரு குடும்பத்தின் முதலுறுப்பினர் கணவன் மனைவி ஆகிய இருவர் ஆவர். இவர்களே குடும்பச் சுமை தாங்கிகள். இவ்விருவருள் ஆற்றலுடையார் குடிக்கடன் ஆற்றுவார். அவர் குடும்பச் சுமை மட்டுமல்லாமல், சமூகத்தின் கொடிய வழக்கங்கள் முதலானவற்றிற்கும் ஈடுகொடுத்துத் தாங்கிக் கொள்வராகவும் இருப்பார். குடிசெய்வார் குடிதாங்குவார் எனவும் கூறப்படுகிறார். இவரே குடியின் பெருமையை உயர்த்துவதற்கு பெருமுயற்சி கொள்பவராவார். இவர் மடுத்தவாய் எல்லாம் பகடன்னான்....... (இடுக்கணழியாமை 624 பொருள்: தடையாய இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவன்....) என்றாற்போல கடும் உழைப்பை மேற்கொண்டு குடியை உயரச் செய்வார்.

உலகமாவது பல் குடும்பத் தொகுதி. சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்கின்றனர். சமூக அமைப்பில் மிகப்பழமையான வடிவம் குடும்பம். பல குடும்பங்கள் இணைந்ததே சமூகம். குடும்பத்தினால் உறவின்முறை முதலிய தொடர்புகள் உண்டாகின்றன. ஒரு சமுதாயத்தின் குடும்ப அமைப்பினை அறிவதன் மூலம் அச்சமுதாயத்தின் பண்பாட்டினை அறிந்து கொள்ளமுடிகிறது என்பதால் குடும்பம் பற்றிய சிந்தனையும் இன்றியமையாததாகிறது.
தனிக்குடும்பம் உலகத்தின் ஒரு கூறாதலால் தன்குடி காப்பவனை ஒருவகையில் உலகைக் காப்பவனாக ஒப்புநோக்கவேண்டும். குடிசெய்வான் தன் குடும்பப்பொறுப்பை வாழ்வின் இயல்பு என எண்ணி அதைத் தாங்குவான். குடும்பம் காக்கப்படவில்லையென்றால் அக்குடி பிறர் சுமையாக ஆகிவிடும். போர் அதனால் உண்டாகும் உயிரிழப்புகள் இவற்றால்தாம் ஒரு நாடு காக்கப்படுகிறது, அது கொல்லாண்மை; தன் மெய்யை வருத்திப் பொருள் குவித்து குடும்பம் காப்பதால், அதற்கு 'நல்லாண்மை' எனப்பெயர் சூட்டி இன்புறுவார் வள்ளுவர். குடிதாங்குகை ஒருவன் பிறப்புக்கடன் என்ற கருத்தால், குடிசெயலை, 'கருமம் செய்' என்று குறள் கூறும் (வ சுப மாணிக்கம்). 'உலகம் முழுதும் ஒரு குடும்பமாய் நெருங்கிச் சுருங்கி வருவதையும் உணர வேண்டும். உணர்ந்தபின், 'குடிசெயல்வகை' என்பதற்கு ஈடாக 'நாடு செயல்வகை' என்று பொருள் கொண்டு கற்றால் இந்த அதிகாரம் இக்காலத்தார்க்கும் சிறந்த கருத்துகளை உணர்த்த வல்லதாய் விளங்கக் காணலாம்' என்பார் மு வரதராசன்.

ஒருவன் தன் குடும்பத்துக்காக கடும் உழைப்பை மேற்கொள்வது, தன் குடியை உயரச்செய்தற்பொருட்டுத் தான் பல துன்பங்களைத் தாங்குவது இவை பற்றி இவ்வதிகாரம் சிறப்பாகப் பேசுகிறது. எனவே ஆள்வினையுடைமை (விடாமுயற்சி), ஊக்கமுடைமை, மடியின்மை (சோம்பல் இல்லாமை), இடுக்கணழியாமை (முயற்சியில் பொருளிழப்பு, மெய் வருத்தம், தோல்வி போன்ற துன்பங்கள் வந்த பொழுது, அதற்கு மனங்கலங்காமை) போன்ற பல அதிகாரங்களில் விரித்துரைத்த செய்திகளே மீண்டும் 'குடிசெயல்வகை'யில் சொல்லப்பட்டுள்ளனபோல் தோன்றும். குடிசெயலில் தயங்காது செயற்படுதல் வேண்டும் என்பதற்காகவே வள்ளுவர் அவற்றை இங்கும் வலியுறுத்துகிறார். தாம் உண்டு மகிழ்வதைவிட, குடிசெயல்வகையில் மகிழ்வதும், உண்பதை விட உண்பிக்க உண்பதுவுமே சிறப்பும் உயர்வுமாகும்.

குடிசெயல் பணியில் ஈடுபடுவதையும் அதைக் 'கைதூவேன்‌' ((முடிக்காமல்) கையொழியேன்) என இடையீடின்றி முடித்தலையும் மேற்கொள்ளும் கருமப் 'பெருமை'யைக் காட்டிலும் சிறந்த 'பீடி'ல்லை. கடுமுயற்சி விரிவான அறிவுநோக்கு ஆகியன கொண்டு குடி உயர்ந்து விளங்கச் செய்யமுயல்வார் குடிடிசெய்வார். கடவுளும் அவருக்குத் தானாக முன்வந்து உதவுவார். அவரது குறிக்கோள் தானாகவே நிறைவேறும். இந்த உலகம் முழுவதும் அவரைச் சார்ந்திருக்கும்; உலகத்தார் அவரைச் சுற்றமாகக் கொள்வர். குடிசெய்வார் தன் குடும்பத்தை ஆளும் தன்மையைத் தனக்கு உளதாக்கி கொண்டு நல்லாண்மையுடன் ஆள்வார். அவர் போர்வீரர்போல் செயல்படுவார்; குடி உயர்த்தும் முயற்சியில் எதிர்கொள்ளும் எவ்வகையான தாக்குதல்களையும் தாங்கிக் கொள்வார். எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக் கொள்வார். குடி செய்வார்க்கு இல்லை பருவம், மடி, மானம். குடிதாங்கக்கூடிய நல்லவர் இல்லாத குடும்பம் இடையூறுகள் அதனைப்பற்றி அழிக்க முழுதும் கெடும். இவை இவ்வதிகாரப்பாடல்கள் தரும் செய்திகளாகும்.

குடிசெயல்வகை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1021ஆம் குறள் தன் குடும்பக்கடமை செய்து முடிப்பதற்கிடையிலே அதனைக் கைவிட்டு நீங்கேன் என்ற முயற்சிப் பெருமைபோல மேம்பாடு உடையது வேறில்லை என்கிறது.
  • 1022ஆம் குறள் முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டினையும் உடைய இடையறாத செயலால் குடி உயரும் என்று சொல்கிறது.
  • 1023ஆம் குறள் என் குடும்பத்தை உயர்த்துவேன் என்று முயலும் ஒருவனுக்குத் தெய்வமே உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கும் என்கிறது.
  • 1024ஆம் குறள் தம் குடும்பம் தாழ்வுறாதவாறு கடுமையாக முயல்வோர்க்கு அவர்கள் எண்ணுவதற்குள் அது தானாகவே நிறைவேறிவிடும் எனச் சொல்கிறது.
  • 1025ஆம் குறள் குற்றமின்றிக் குடும்பத்தை உயரச்செய்து வாழ்பவனை உலகோர் சுற்றமாகச் சூழ்ந்து கொள்வர் எனச் சொல்கிறது.
  • 1026ஆம் குறள் ஒருவனுக்கு நல்லஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த இல்லத்தின் ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல் என்கிறது.
  • 1027ஆம் குறள் போர்க்களத்தில் பொறுப்பெல்லாம் வீரத்தில் சிறந்தாரைச் சார்ந்தது போல குடும்பத்திலும் பொறுப்பு அதன் சுமை தாங்கவல்லார் மேலேயே இருக்கின்றது என்கிறது.
  • 1028ஆம் குறள் தம்குடியை உயரச் செய்யவேண்டும் என்று முயல்பவருக்கு இன்ன காலம் என்று ஒன்று இல்லை; சோம்பல் கொண்டு, தன்நிலையில் தாழாதும் இருக்க வேண்டும் என்று கருதுவாரேயானால் குறிக்கொண்டநோக்கம் கெட்டுப் போய்விடும் எனச் சொல்கிறது.
  • 1029ஆம் குறள் தன் குடும்பம் குற்றத்துக்குள்ளாகதவாறு காக்கின்றவனது உடம்பு துன்பங்களையே போட்டு வைக்கும் ஏனமோ? என்கிறது.
  • 1030ஆம் குறள் முட்டுக்கொடுக்க நல்ல ஆளில்லாத குடும்பம், துன்பம் தாக்க அடியோடு வீழ்ந்துவிடும் என்கிறது.

குடிசெயல்வகை அதிகாரச் சிறப்பியல்புகள்

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுஉடையது இல். (1021) என்னும் பாடல் குடும்பத்தாரின் மேம்பட்ட வாழ்விற்கு மையமாக அமைய வேண்டிய செயல் திறத்தைச் சொல்கிறது. இது ஒவ்வொரு குடும்பத்தாரை நோக்கி இத்தகைய ஓர் சூளுரையை நீங்களும் கொள்ளுங்கள் என வேண்டுவது போல் உள்ளது. 'என் குடியின் குடும்ப நலங்காப்பதற்கும் அதன் பெருமையை உயரச் செய்தற்கும் உரிய கடமைகளைச் செய்து முடிக்கும்வரை சோர்வடைய மாட்டேன்' என்பது அச்சூளுரை.

தன் குடியை உயரச் செய்ய முயலும் ஒருவர்க்குத் தெய்வமே, அதாவது நல்லூழே, 'தள்ளிநில்! நான் செய்கிறேன்!' எனக்கூறி தான் உடுத்தியுள்ள ஆடையைச் சரிசெய்துகொண்டு தானே முன்வந்து உதவும் என்று ஊக்கமூட்டுகிறது ஒரு பாடல். அது: குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் (1023)

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் (1026) என்ற பாடலில் உள்ள இல்லாண்மை என்பது தன் குடும்பத்தை ஆளுந்தன்மையை தனக்கு உரியதாக எடுத்துக்கொண்டு நல்லாட்சி தருவதைக் குறிக்கும். இல்லாண்மை ஆக்கிக்கொளல் என்பது தனது செயற்பாடுகளால் தான் எல்லார்க்கும் தலைவன் ஆதலைச் சொல்லி குடிசெய்வார் புகழப்படுகிறார்.

'தொடங்குவதற்கு நேரம் காலம் பார்த்துக்கொண்டு இராமல் இப்பொழுதே செய்; ஏதாவது சாக்குபோக்கு சொல்லி சோம்பி இருக்காதே; பொய்மானம் எல்லாம் பார்க்காதே.' என்று குடிசெய்வானை விரைவுபடுத்துகிறது குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் என்ற பாடல். இப்பாடலால் உந்தப்பெற்ற, கொண்டாடப்பட்ட அரசியல், சமூகத் தலைவர்கள் பலர். பொதுத்தொண்டில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அருமையான பாடல் இது.




குறள் திறன்-1021 குறள் திறன்-1022 குறள் திறன்-1023 குறள் திறன்-1024 குறள் திறன்-1025
குறள் திறன்-1026 குறள் திறன்-1027 குறள் திறன்-1028 குறள் திறன்-1029 குறள் திறன்-1030