இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1323



புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1323)

பொழிப்பு (மு வரதராசன்): நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ?

மணக்குடவர் உரை: நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?
நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.
(நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.)

இரா சாரங்கபாணி உரை: நிலத்தொடு நீர் கலந்தாற் போன்ற மனம் ஒன்றிய காதலரிடத்துப் புலவியாற் பெறும் இன்பம் போல் மேலுலகத்தில் உளதோ? இல்லை!


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலத்தொடு நீர் இயைந் தன்னார் அகத்துப் புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ?

பதவுரை: புலத்தலின்-ஊடல் கொள்ளுவதைக் காட்டிலும்; புத்தேள்நாடு-வானவர் உலகம்; உண்டோ-உளதோ; நிலத்தொடு-நிலத்துடன்; நீர் இயைந்த-நீர் பொருந்திய; அன்னார்அகத்து-அத்தகையவர் மாட்டு.


புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?
பரிப்பெருமாள்: புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?
பரிதி: கலவி இன்பத்திலும் இன்பம் உண்டோ தேவர் உலகத்தினும்; அது எங்ஙனமோ எனில் அன்புள்ள நாயகரிடத்தில் புலவி என்றவாறு.
காலிங்கர்: புலத்தல்போல இன்பம் தருவது ஒரு தேவர் உலகு உண்டோ;.
பரிமேலழகர்: (இதுவும் அது.) புலத்தல் போல நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை;

'புலத்தல்போல இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடுதலைவிடத் தேவருலகம் இன்பமானதோ?', '(அவர்கள்) பிணங்கியிருந்து புணரும்போது உண்டாவது போன்ற இன்பம் தேவலோகத்திலும்கூட இருக்காது', 'பிணங்குதல்போன்று இன்பஞ் செய்வது தேவருலகத்து முண்டோ?', 'புலத்தல் போல, நமக்கு இன்பம் தருகின்ற தேவர் நாடு உண்டோ? இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊடுதலைவிட இன்பம் தருவதொரு வானவர் உலகம் உளதோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டு.
மணக்குடவர் குறிப்புரை: நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.
பரிப்பெருமாள்: நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நிலத்தோடு நீர் இயைதலாவது அவை வெப்பமும் தட்பமும் கூட அனுபவிப்பார் மாட்டு என்றவாறு. தலைமகன் புலந்து நீங்கியவழி, 'நுமக்குப் புலவி நன்று ஆயிற்று' என்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
ஊடிக்கூடல் முடிந்தது.
காலிங்கர்: நிலனும் நீரும் பொருந்தினாற்போல, ஒன்றுபட்ட நெஞ்சுடையார் புல்லி.
காலிங்கர் குறிப்புரை: நிலத்தொடு நீர் இயைதலாவது நிலத்தின் வெப்பமும் நீரின் தட்பமும் கூட அனுபவிக்கும் அவைபோலக் காமத்தின் இன்பத் துன்பங்கூட அனுபவிப்பார்மாட்டு என்றவாறாயிற்று.
பரிமேலழகர்: நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டு.
பரிமேலழகர் குறிப்புரை: நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது. [அதுபற்றி - காதலர் தாம் கூடிய மகளிர் இயல்பினராதல் பற்றி; நமக்கும் - தாம் கூடிய மகளிரிடத்தன்றி நமக்கும்; அன்னர் ஆகலின் - அத்தன்மையார் ஆதலால்; பயன் உவமம்: நிலத்தொடு நீர் இயைந்தன்னார் என்பது பயன் உவமம். பயன் காரணமாக வரும் உவமம் பயன் உவமம்]

'நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மண்ணோடு நீர் குழைந்தாற்போன்ற காதலரிடம்', 'நிலவளமும் நீர் வளமும் சேர்ந்தது போன்ற (மனமொத்த) காதலர்களுக்கிடையில்', 'நிலத்தினோடு நீர் கலத்தல்போல ஒற்றுமையுடைய காதலர் மாட்டு', 'நிலத்தோடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலரிடம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நிலத்தோடு நீர் பொருந்தினாற்போன்ற ஒன்றுபட்ட உள்ளமுடையாரிடம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிலத்தோடு நீர் பொருந்தினாற்போன்ற ஒன்றுபட்ட உள்ளமுடையாரிடம் ஊடுதலைவிட இன்பம் தருவதொரு வானவர் உலகம் உளதோ? என்பது பாடலின் பொருள்.
'நிலத்தொடு நீரியைந்த அன்னார்' யார்?

தன் இணையிடம் ஊடிப்பெறுவது போன்ற அகஇன்பம் தரக்கூடியது எவ்வுலகிலும் இல்லை.

நிலத்தோடு நீர் கலந்தாற்போல் மனம் ஒன்றிய காதலரிடம் ஊடிப்பெறுவது போன்ற இன்பம் தேவருலகத்திலும் கிடைக்குமா?
காட்சிப் பின்புலம்:
பணி கருதிப் பிரிவில் சென்றிருந்த கணவர் கடமை முடிந்து இல்லம் திரும்பியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பின் அவரை நேரில் கண்டதால் பெருமகிழ்வுற்று மலர்ந்த முகத்துடன் தன்னை நன்கு அழகுசெய்து காட்சி அளிக்கிறாள் தலைவி. தலைவரும் காமமிகுதி கொண்டிருப்பார் என்பதை அறிந்து வைத்திருந்தும் அவள், காமவின்பம் நன்கு துய்க்கவேண்டும் என்ற நோக்கில், நேரே கலவியில் ஈடுபடாமல் முதலில் ஊடிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறாள்.
ஊடவேண்டும் என்னும்போது அவர் தவறு செய்தவர்போன்று ஏதாவது புனைந்து உரைக்கவேண்டும். அவரிடம் தவறு இல்லையாயினும் அப்படிச் செய்தால்தான் தனக்கு பிணக்கத்தை நீக்கும்பொருட்டு இரங்கி வருவார் என நினைக்கின்றாள்; ஊடலில் ஏற்படும் சிறு புலவியால் உண்டாகும் தலையளி பெருமைக்குரியதே;
இத்தகைய எண்ணங்களுடன் காத்திருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
ஒருவருக்காக மற்றொருவர் என்ற வகையிலான மனம் ஒன்றுபட்ட இணையர் அவர்கள். உள்ளம் ஒன்றியவர்கள் தங்களுக்குள் ஊடல் கொள்ளத் தொடங்குகின்றனர். ஆனால் இது மனம் வேறுபட்டதால் உண்டான சண்டை அல்ல. இது ஊடற்பூசல் எனப்படுவது. மற்றப் பூசல்களினால் மனக்கசப்பும் துன்பமும்தான் தோன்றும். ஆனல் மனம் ஒத்த இவ்இணைகள் ஊடலில் ஈடுபடும்போது இன்பம் மட்டுமே காண்கின்றனர். அதுவும் எப்படிப்பட்ட இன்பம்? துன்பம் அற்றது எனவும் பேரின்பம் மட்டுமே கொண்டது எனவும் தொன்மங்கள் கூறும் மேலுலகத்திலுள்ள இன்பத்தைவிட மேலான இன்பம் அது என்கின்றனர் அவர்கள். மனம் ஒன்றிய கணவன் - மனைவிக்கே இத்தகைய ஊடல் இன்பம் கிட்டும்.

ஒருவனுக்கு ஒருத்தியும் ஒருத்திக்கு ஒருவனும் என்பது மணவாழ்க்கையின் அறம். அப்படிப்பட்டவர்கள் அன்பு வழி நின்று ஒத்த உரிமையோடு ஒருவர்க்குள் ஒருவராய் பிணைந்து இன்ப வாழ்வு நடாத்துவர். அவர்களது உறவு நிலமும் நீரும் ஒன்றாகப் பொருந்தியுள்ளது போன்றதாகும். நீர் நிலத்தியல்புக்கு ஏற்ப நிறமும் சுவையும் பெற்று அதனுடன் ஒன்றாய்க் கலந்துவிடும். அது போன்று உடல்கள் வேறுவேறு ஆனாலும் அன்பால் அவர்கள் ஒன்றாய்க் கலந்து நிற்பர். இவ்வாறு ஒன்றுபட்டாரிடையே தோன்றும் புலவி இருவர்க்கும் பேரின்பம் அளிக்கிறது. புலவி என்பது ஏதாவதொரு காரணத்துக்காக காதலரிடையே ஏற்படும் பிணக்கு. உண்மையான காரணம் ஒன்றுமே இல்லாவிட்டாலும் இல்லாத காரணத்துக்காகவும் பிணக்கம் கொள்வர் அவர்கள். பிணக்கம் தணிக்கத் தண்ணளி செய்யவரும் காதலரிடம் பொய்ச்சினம் காட்டுவதும் செல்லமாய்ச் சிணுங்குவதும் பெரும் இன்பம் தரும். பொய்யாகச் சண்டையிடுவது அவர்களுக்கு அளவிறந்த மகிழ்ச்சி தரும். மனம் ஒன்றுபட்ட காதலர் வாழ்வில் ஊடுவது தனி இன்பமாக இருக்கின்றது. தேவருலகத்தில் பெறக்கூடிய இன்பத்தினும் மேலானது இது என்கின்றனர் அவர்கள். 'தேவருலகத்தில் அத்தகைய ஊடல் உண்டோ?' என்று காதலர் வாய்ச் சொற்களாலேயே அவ்வின்பத்தின் எல்லையைக் கூறுகிறது இப்பாடல்.
முன்னர் தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு(புணர்ச்சி மகிழ்தல் குறள்எண்:1103 பொருள்: தன்னைக் காதலிக்கும் பெண்ணுடன் மகிழ்ந்திருந்துவிட்டு அவளது மெல்லிய தோள்களில் உறக்கம் கொள்வதில் பெறும் இன்பம் சொர்க்க உலகத்தில் கிடைக்கும் இன்பத்தைவிடப் பெரிது) என்று காதலன் நினைப்பதாகச் சொல்லப்பட்டது. அக்குறளில் கூடலின்பம் பெரிதாகப் பேசப்பட்டது. அதுபோன்ற பேரின்பம் ஊடலில் உண்டு என்று இங்கு கூறப்படுகிறது.

புத்தேள்நாடு என்பது மாந்தர் புனைவால் உருவாக்கப்பட்ட உலகத்தைக் குறிக்கும். இதை வானுலகம், மேலுலகம், தேவருலகம் என்றும் அழைப்பர். குறளிலும் அது புத்தேளிர் வாழும் உலகு, புத்தேள் நாடு. புத்தேள் உலகு, மேல் உலகம் என்று வேறு வேறு சொற்களால் குறிக்கப்படுகிறது. அது துன்பமே இல்லாத ஓர் உலகம்.
இப்பாடலில் புத்தேள்நாடு என்பதில் அடை ஏதும் இல்லை; இன்பம் என்ற சொல் இடம்பெறவில்லை. ஆனால் குறள் நடைநோக்கி உரையாளர்கள் அனைவரும் அது இன்ப உலகம் குறித்தது எனவே கொண்டனர். காம இன்பம் பெருக்கும் புலவி தரும் இன்பம் புத்தேள் நாடு தரும் இன்பத்தினும் சிறந்தது என்றனர்.
குறளில் இச்சொல் பயின்ற பிற இடங்களில் புத்தேள் உலகத்தில் கற்புநெறி சான்ற பெண்களும் ஆண்களும் இருப்பர் (58), கைம்மாறு கருதாமல் உதவி செய்யும் நல்லோரைக் கொண்டது இவ்வுலகம் (213), பிறர்க்கு உதவி செய்வோரை வரவேற்று இணைத்துக் கொள்ளும் இது (234), இங்கு திருட்டு என்பதே இல்லை (290), புகழ் பெற்றவர்கள் வாழும் உலகமிது (966) எனக் கூறப்பட்டிருப்பதால் புத்தேள் நாட்டில் நற்பண்புகள் நிறைந்த புகழ் பெற்ற பெரியோர்கள் உள்ள அமைதியான உலகம் என்று அறியலாம். அங்கு இன்பத்திற்குக் குறைவிருக்காது.

மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய மூன்று உரையாசிரியர்கள் இப்பாடலைக் குறள் நூலின் இறுதிச் செய்யுள்ளாக(1330)க் கொண்டனர் என்பது அறியத்தக்கது.

'நிலத்தொடு நீரியைந்த அன்னார்' யார்?

'நிலத்தொடு நீரியைந்த அன்னார்' என்றதற்கு நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார், அன்புள்ள நாயகரிடத்தில், நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர், நிலத்துடன் நீர் சேர்ந்ததுபோல ஒன்றுபட்ட மனமுடைய காதலர்கள், மண்ணோடு நீர் குழைந்தாற்போன்ற காதலர், நிலத்தொடு நீர் கலந்தாற் போன்ற மனம் ஒன்றிய காதலர், நிலவளமும் நீர் வளமும் சேர்ந்தது போன்ற (மனமொத்த) காதலர்கள், நிலத்தொடு நீர் இரண்டறக் கலந்தாற் போலப் பொருந்தியவர், நிலத்தினோடு நீர் கலத்தல்போல ஒற்றுமையுடைய காதலர், தம்முள் ஒன்றுபட்டுத் தண்ணளி செய்யும் காதலர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நிலமும் நீரும் சேர்ந்தாலொத்த மனம் ஒன்றிய தலைமக்கள் பற்றிய குறட்பா இது. நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் ........... (சிற்றினம் சேராமை 452 பொருள்: நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மை உடைத்தாவது போல.....) என்று முன்பும் இவ்வுவமை குறளில் ஆளப்பட்டது.
செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (குறுந்தொகை 40 பொருள்: செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைப்போல், அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன) என்று குறுந்தொகை கூறியது.

'நிலத்தொடு நீரியைந்த அன்னார்' என்றது நிலத்தொடு நீர் கலந்தாற்போல, பிரிக்கவியலாது பொருந்திய, ஒன்றுபட்ட மனமுடைய காதலர்கள் குறித்தது.

நிலத்தோடு நீர் பொருந்தினாற்போன்ற ஒன்றுபட்ட உள்ளமுடையாரிடம் ஊடுதலைவிட இன்பம் தருவதொரு வானவர் உலகம் உளதோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அன்புடைய காதலர் பெறும் ஊடலுவகை எல்லை இல்லாதது.

பொழிப்பு

நிலத்தொடு நீர் கலந்தாற் போன்ற ஒன்றுபட்ட உள்ளமுடையாரிடம் ஊடுதலைவிட இன்பம் தரவல்ல மேலுலகம் உண்டா?