இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1305



நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து

(அதிகாரம்:புலவி குறள் எண்:1305)

பொழிப்பு (மு வரதராசன்): நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

மணக்குடவர் உரை: நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்.
நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே.
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: நற்பண்பு உடைய ஆடவர்க்கு அழகு மலரன்ன மகளிரின் ஊடலை நீக்குதல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் பூஅன்ன கண்ணார் அகத்து புலத்தகை.

பதவுரை: நலத்தகை-நற்குணங்களால் சிறந்த; நல்லவர்க்கு-நல்லவர்க்கு; ஏஎர்-அழகு; புலத்தகை-ஊடல் மிகுதி, ஊடலினை அறியும் மாண்பு; பூ-மலர்; அன்ன-போன்ற; கண்ணார்-கண்களையுடையவர்; அகத்து-இடத்து.


நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம்;
பரிப்பெருமாள்: நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு அழகாம்;
பரிதி: நல்ல ஆபரணம் இராக்காலம் நல்ல பெண்மை உடையர்க்காம்;
காலிங்கர்: பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி சொல்லுமாறு நலத்தகையினானே நல்ல கற்புடைய மகளிர்கள் மாட்டுப் புலத்தல் தீது;
பரிமேலழகர்: (தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல்.

'நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு அழகாம்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'நல்ல ஆபரணம் இராக்காலம் நல்ல பெண்மை உடையர்க்காம்' எனப் பொருந்தா உரை கூறுகிறார். காலிங்கரும் 'நலத்தகையினானே நல்ல கற்புடைய மகளிர்கள் மாட்டுப் புலத்தல் தீது' என ஏலா உரை கூறினார். பரிமேலழகர் 'நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது' என்றார். இவர் நல்லவர்க்கு என்பதை நல்லவர்க்கும் எனக் கொண்டார்; நல்லவர் என்பதற்குத் தலைவர் எனப் பொருள் உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்குணங்கள் நிறைந்த காதலர்க்கு அழகாகும்', 'அன்புள்ள காதலனுக்கும் இன்பம் தருவதாகும்', 'நற்குணங்களால் சிறந்த தலைவர்க்கு அழகாவது', 'நற்குணங்களால் தகுதியுடைய தலைவர்க்கு அழகாவது' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நற்குணத் தகுதியுடைய தலைவர்க்கு அழகு என்பது இப்பகுதியின் பொருள்.

புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்.
மணக்குடவர் குறிப்புரை: நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
பரிப்பெருமாள்: பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
பரிதி: நல்ல...................ம் என்றவாறு. (இவ்வுரை சிதைந்துள்ளது)
காலிங்கர்: எனவே மற்றுப் பரத்தையர்க்கு அழகாம் பூவன்ன கண்ணார்மாட்டுப் புலத்தல் என்றவாறு.
பரிமேலழகர்: தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே.
பரிமேலழகர் குறிப்புரை: தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.

'பூவன்ன கண்ணார்மாட்டுப் புலத்தல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி உரை முழுமையாகக் கிடைக்கவில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'மலர் போன்ற கண்ணை உடைய மகளிர் மனத்தே நிகழும் ஊடலை அறிந்து நீக்குதல்', 'மலர் போன்ற கண்களையுடைய காதலியிடத்தில் பிணக்கம் இருப்பது', 'மலர் போன்ற கண்ணையுடைய தலைவியர்பாலுள்ள பிணக்கு மிகுதியே', '(தம்முடைய) பூவினை ஒத்த கண்ணினை உடையவரிடம் ஊடல் மிகுதி உண்டாதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மலர் போன்ற கண்களையுடைய காதலியின் உள்ளத்துள்ள ஊடல் மிகுதி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்குணத் தகுதியுடைய தலைவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களையுடைய காதலியின் உள்ளத்துள்ள புலத்தகை என்பது பாடலின் பொருள்.
'புலத்தகை' குறிப்பது என்ன?

அவளது ஊடல் மிகுதல் தலைவனுக்குப் பெருமித இன்பமாம்.

நல்லியல்புகள் பொருந்தியுள்ள தலைவர்க்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய காதலியின் மனத்தே உண்டாகும் ஊடல் மிகுதியே ஆகும்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாக அயல் சென்றிருந்த கணவன் நீண்ட பிரிவிற்குப் பின் இல்லம் திரும்பியுள்ளான். மனைவி படுக்கையறையில் உள்ளாள். அவன் வந்தால் அவனுடன் ஊடல் கொள்ளலாம் என எண்ணுகிறாள். ஊடலுக்குப் பின் வரும் கூடல் இன்பமிகுதிக்காகவும் கூடலுக்கு முன் காதலனது தவிப்பைப் பார்த்து மகிழ்வதற்காகவும் புலக்க நினைக்கிறாள். காரணம் ஏதுமில்லா ஊடல் இது. அதுவும் உப்பளவே இருக்க வேண்டுமென்பதையும் அவள் அறிந்தவளே. தலைவனும் ஊடலை உணராதவன்போல் இருந்து அவளைத் தழுவாது நின்று அவள் துன்பமுறச் செய்கிறான்.

இக்காட்சி:
ஊடல் இன்பம் வழங்கும் நிலை பேசப்படுகிறது இங்கு. மனைவியின் ஊடல் மிகமிக அது பண்புள்ள தலைவனுக்கு ஒரு புத்தழகை உண்டாக்குகிறது; காதலியால் புலக்கப்படுவதில் ஆடவர்க்குப் பெருமிதம் கூடுகிறது என்கிறது பாடல்.
தன் தலைவன் நற்குணங்கள் நிரம்பப் பெற்றவனாய் இருப்பதுவே அவனுக்கு ஒரு அழகுதான். அதற்குமேலும் தன் ஊடல் அறிந்து அதற்குப் பொருந்த அவனும் அதில் பங்குபெறும்போது அவன் முன்னிலும் மிகையாக அழகாகிறான். நற்குணப் பெருமை வாய்ந்த காதலனுக்கு அவள் ஊடிக்கொண்டிருப்பது ஓர் இன்ப உணர்வாகவே இருக்கிறது. தலைவி தன் மலர்போன்ற கண்களாலேயே கணவனோடு பொய்யாகப் பிணங்குகிறாள் என்பது குறிப்பு.

மனைவி மீது அன்பு கொண்ட கணவன் அவள் ஊடுவது கண்டு‌ சினம்கொள்ளமாட்டான்‌. மேலும்‌ மேலும்‌ அவள்‌ ஊடுவதையும் விரும்புவான்‌. அவளது ஊடல் விளையாட்டில் பங்குபெற முன்வருவான். அவள் புலக்கும்போது அவளது குளிர்மை நிறைந்த பூப்‌ போன்ற கண்களும்‌ முகமும்‌ காட்டும்‌ அழகை மிகவும் துய்ப்பான்‌. அவள் புலக்க புலக்க இவனது முகநலமும் கூடும். தலைமகனோடு அவள் புலந்து இருந்த போது, அவனுடைய அன்பின் பிணைப்பு, ஒன்றிய விருப்பார்வம், உறவின் நெருக்கம் ஆகியன அவளை மகிழச்செய்கின்றன. தாங்கள் இருவரும் காரணம் இல்லாமல் பொய்யாகப் புலக்கின்றோம் என்பதை அறிந்தவர்களே அவர்கள்.
ஊடல் காலத்திலும், ஒருவர் மற்றொருவரை உயர்ந்த நிலையில் மதிப்பர் என்பதை பூவன்ன கண்ணார், நல்லவர் ஆகிய சொல்லாட்சிகள் உணர்த்துகின்றன. இச்சொற்களில் வரும் 'அர்' விகுதிகள் பன்மை குறிக்காது; 'பெருமை' குறிப்பனவாகும். அவளது ஊடலில் வெம்மை இல்லை என்பதைச் சொல்லவே குளிர்மையான மலர்போன்ற கண்களியுடையாள் எனச் சொல்லப்பட்டது. 'நலத்தகை நல்லவர்' என்றது தலைமகன் தவறில்லாதவன் என்பதைக் குறிக்க வந்தது.

ஏர் என்றால் அழகு. அது ஏஎர் என்று அளபெடுத்தது அழகின் மிகுதியைக் குறிப்பதற்காக.
இப்பாடலிலுள்ள 'நல்லவர்' என்ற சொல்லுக்குப் பரத்தையர், கற்புடை மகளிர் எனச் சிலர் பொருள் கூறினர். இது எவ்வகையினும் பொருத்தமாக இல்லை. நல்லவர் என்பது தலைமகனைக் குறிப்பதாகக் கொள்வதே ஏற்புடைத்து.

'புலத்தகை' குறிப்பது என்ன?

'புலத்தகை' என்றதற்கு புலத்தல், புலவி மிகுதி, ஊடலின் சிறப்பு, புலவியழகு, ஊடலை நீக்குதல், ஊடலை அறிந்து நீக்குதல், பிணக்கம் இருப்பது, ஊடற் சிறப்பு, பிணக்கு மிகுதி, ஊடல் மிகுதி உண்டாதல், ஊடலை மனமுவந்து தீர்ப்பது, புலவிச் சிறப்பு, ஊடலின் காரணம் அறிந்து ஊடல் நீக்கி நன்மை செய்யும், ஊடலினை அறியும் மாண்பு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

புலத்தகை என்ற சொல்லுக்கு, வாளா புலத்தல் என்றும் புலவிச் சிறப்பு, புலவி அழகு, புலவி நீக்குதல், புலவி மிகுதி எனவும் பலவாறு பொருள் கூறினர். இவற்றுள் புலவி மிகுதி என்பது பொருந்தமாகும். இப்பாடல் அவள் எவ்வளவு புலக்கிறாளோ அவ்வளவு அவன்மேல் காதல் கொண்டிருக்கிறாள் என்பதையும் அவன் அத்துணை பெருமைமிகத் தோன்றுவான் என்பதையும் சொல்வது.

'புலத்தகை' என்ற சொல்லுக்கு ஊடல் மிகுதி என்பது பொருள்.

நற்குணத் தகுதியுடைய தலைவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களையுடைய காதலியின் உள்ளத்துள்ள ஊடல் மிகுதி என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புலவி மிகுதி காதலனது மாட்சிமை காட்டும்.

பொழிப்பு

நற்குணங்கள் நிறைந்த காதலர்க்கு அழகு மலர் போன்ற கண்களையுடைய தலைமகளின் ஊடல் மிகுதி.