இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1303



அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

(அதிகாரம்:புலவி குறள் எண்:1303)

பொழிப்பு (மு வரதராசன்): தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பநோய் செய்து வருத்தினாற் போன்றது.

மணக்குடவர் உரை: ---------------------------------------------------------------.

பரிமேலழகர் உரை: (பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.
('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.

வ சுப மாணிக்கம் உரை: பிணங்கிய மகளிரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் வருத்துதல் போலாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்.

பதவுரை: அலந்தாரை-துன்புற்றாரை, கலக்கமுற்றாரை; அல்லல்-வருத்தம்; நோய்-துன்பம்; செய்து-இயற்றி; அற்று-போன்றது; ஆல்-(அசை) தம்மை-தம்மை; புலந்தாரை-பிணங்கியவரை; புல்லாவிடல்-தழுவாமல் விட்டுச் செலல்.


அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்;
பரிப்பெருமாள்: முன்பே கலக்கம் உற்று அழிந்தாரை அதன் மேலும் அல்லல் செய்யும் நோயைச் செய்தாற் போலும்.
பரிதி: நல்லோற்குத் துன்பம் செய்தற்கு ஒக்கும்;
காலிங்கர்: முன்பு கலக்கம் உற்று அழிந்தாரை அதன் மேலும், அல்லல்நோயைச் செய்தாற்போலும்;
பரிமேலழகர்: (பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்; [பரத்தையர் -பொது மகளிர்; விலை கொடுப்பார் யாவர்க்கும் தம் நலத்தை விற்பவர்]

'முன்பு கலக்கம் உற்று அழிந்தாரை அதன் மேலும், அல்லல்நோயைச் செய்தாற்போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன்பே துன்பத்தினால் வருந்தியவரை மேலும் துன்பப்படுத்தினாற் போலும்', '(முன்னாலேயே) நொந்து போயிருக்கிற (ஒருவருடைய நிலைமையைத் தெரிந்து கொண்டே இரக்கமில்லாமல்) மேலும் அவரை நோகச் செய்வதற்குச் சமானம்', 'துன்பமுற் றழிந்தவர்க்கு மேன்மேலும் துன்பநோய் விளைவித்தல் போலாகும்!', 'துன்பமுற்றாரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வருந்தியவரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள் ('காமம் புலந்தாரைப்' பாடம்): காமத்தில் புலந்தாரை முயங்காது விடுதல் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் புலந்துழி அதனை அறிந்து அகம்புக்க தோழி தலைமகற்குச் சொல்லியது.
பரிதி: முடியப் பிணக்கறுத்துக் கூடாத இன்பம் என்றவாறு.
காலிங்கர் ('புல்லா'- 'புல்லார்' பாடம்): காமத்தினால் புலந்தாரை முயங்காது விடுதல் என்றவாறு.
பரிமேலழகர்: தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம். [பிறர் என்றது தலைமகளை; புல்லீர்ஆயின் -முயங்காவிடில்]

'காமத்தினால் புலந்தாரை முயங்காது விடுதல்'/'தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மிடம் புலவி கொண்ட மகளிரைப் புலவி நீக்கிக் கூடாமல் நீங்குதல்', 'தம்முடன் பிணங்கிய காதலியை (காதலன் அவளுடைய பிணக்கத்தை விடச் செய்து) புணராமல் (பிணக்கத்தை அப்படியே) விட்டுவிடுவது', 'பிணங்கின மகளிரைப் பிணக்கு நீக்கித் தழுவாது விடுதல்', 'தம்மை அடையாது ஊடல் செய்த மகளிரைத் தழுவாது விடுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் அலந்தாரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது என்பது பாடலின் பொருள்.
'அலந்தார்' யார்?

ஊடல் உணர்ந்து தழுவாதிருப்பது நொந்து போயிருக்கிறவரை இன்னும் நோகப் பண்ணுவதாம்.

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், ஏற்கனவே வருந்திக் கொண்டிருப்பவரை மேலும் துன்பத்துக்குள்ளாக்குவதாகும்.
காட்சிப் பின்புலம்:
கடமை முடித்து, நீண்ட இடைவெளிக்குப் பின், இல்லம் திரும்பியுள்ளார் தலைவர். கணவர்-மனைவி இருவருமே பிரிவால் உண்டான காதல் நோயால் துயரப்பட்டிருப்பதால் புணர்ச்சியை விதும்பியவர்களாகவே இருக்கின்றனர்.
இரவுநேரம் நெருங்கிவிட்டது. தலைவர் பள்ளியறையுள் வரும்போதே தழுவலை எதிர்பார்த்துத்தான் வருவார், அந்த நேரம் அவரைத் தொடாது பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக்கொண்டு அவரை ஏங்கவிட்டு அவர் படும் துன்பத்தைச் சிறுது நேரம் வேடிக்கை காணலாம் எனத் தலைவி நினைக்கிறாள்; அதே நேரம் அவ்வூடலை உணவிற்கு உப்பின் அளவுபோல் கொள்ளவேண்டும் என்ற உணர்வும் அவளுக்குத் தோன்றுகிறது;
பின் வரப்போகும் கூடலின்பத்தைப் பெருக்கும் நோக்கத்துடன், தலைவி அவருடன் பிணக்கம் கொள்ள நினைக்கிறாள். ஆனால் அப்பிணக்கு மிகாமலும் குறையாமலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையிலும் உள்ளாள்.

இக்காட்சி:
தலைவி, தான் திட்டமிட்டபடி, தன் காதல்கணவரை நெருங்கவிடாமல் பிணக்கம் காட்டுகிறாள். அப்பிணக்கத்தால் அவர்கள் இருவரும் இன்பத்திலிருந்து விலகியிருக்கின்றனர். பிணங்கியிருக்கும் தலைவியைத் தழுவிக் கணவர் ஊடல் நீக்கவேண்டும். இல்லாவிட்டால் முன்பே துன்புற்று வருந்தியவளை மேலும் துன்ப நோயால் வருத்துவது போலாம். இவ்வுண்மை தலைவர்க்கு தோன்றவேண்டும். அதை உணராமல் ஊடலை நீடிக்கவிட்டால், பிணக்குகள் பெரிதாகி, கூடல் விலகிப்போகலாம்; இருவர் உறவிலும் விரிசல் ஏற்படலாம். எனவே கூடலுக்கு முன் புலவியை தலைவன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் புணர்ச்சி இனிதாகும்.

துன்பப்பட்ட மனைவி தன் மனத்தில் கொண்ட வருத்தத்தை ஊடல் வழி வெளிப்படுத்துகிறாள் என்பதைத் தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வருகிறது இப்பாடல். அவளது வருத்தம் எல்லாம் அவர் பிரிவு நீட்டித்து இல்லம் திரும்பியதுதான். ஆகவே, உணர்ச்சி வயப்படாமல் ஏன் பிரிவுகாலம் நீடித்தது என்பதற்குத் தன்நிலை விளக்கம் தந்து, அவளை ஆறுதல் செய்ய வேண்டும், தான் தவறு செய்யவில்லை; ஆனால் தவறு என்ற எண்ணம் தலைவிக்கு எப்படியோ உண்டாகிவிட்டது என்றால் தயங்காமல் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுவதில் இழுக்கில்லை. அவள் அதை மறந்து மகிழ்விக்க வேண்டிய வழிகளைத் தேட வேண்டும். தன்பால் குற்றமே இல்லை என்பதை நிலைநாட்ட வீணே சொற்போரில் ஈடுபடக் கூடாது. அதற்கு உரிய நேரம் அதுவன்று. அளவுடன் ஊடுவது மனைவியின் உரிமை; அதை உணர்ந்து தெளிவிப்பது, கணவரது கடமை என்பதைக் காட்டுகிறது இக்குறள். தலைமகள் புலந்திருக்கும்போது, அதனை விரைந்து முடித்துக் கூடி இன்பம் தர வேண்டும் என்பது தலைமகள் எதிர்பார்ப்பாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், புலந்திருக்கும் தலைமகளைத் தழுவாது இருப்பது, முன்னரே கலக்கமுற்று இருப்பாரை மேலும் கலக்கத்திற்கு உள்ளாக்குவது போன்றதாகும். ஊடல் கொண்டவரிடம் தவறின்மை காட்டி, அவர் மனங்கொள்ளுமாறு தெளிவுபடுத்தல் வேண்டும்; பின் கூட வேண்டும் என்பவை குறள் தரும் செய்திகள்.
'புலந்தாரைப் புல்லாவிடல்' என்ற தொடரில் 'தழுவி ஊடல் நீக்குக' என்ற குறிப்பும் அடங்கியுள்ளது. புலந்தவரை நேரடியாகப் புல்லிப் புலவியை நீக்கலாம் என்பது செய்தி. புல்லாவிடல் என்ற தொடர்க்கு நேர்பொருள் தழுவாது விடுதல் என்பது. உரையாளர்கள் பலரும் இதற்குக் கலவாமல் நீங்குதல் என்றே பொருள் கொள்கின்றனர். ஊடல் கூடலில் முடியவேண்டும் என்பது இதன் கருத்து.

'அலந்தார்' யார்?

'அலந்தார்' என்ற சொல்லுக்கு முன்பே கலக்கம் உற்று அழிந்தார், நல்லோர், பண்டே துன்பமுற்று அழிந்தார், துன்பத்தால் வருந்தியவர், முன்பே துன்பமுற்று வருத்தத்தில் ஆழ்ந்து கிடப்பவர், வருந்தியவர், முன்பே துன்பத்தினால் வருந்தியவர், (முன்னாலேயே) நொந்து போயிருக்கிற ஒருவர், துன்பமுற்றவர், துன்பமுற் றழிந்தவர், துன்பமுற்றார், துன்பத்தால் முன்னே வருந்தினவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அலந்தார் என்ற சொல் துன்பத்தால் வருந்தியவர் என்ற பொருள் தரும். யார் அந்தத் துன்பத்தில் வருந்தியவர்?
'தம்மிடம் புலவி கொண்ட மகளிரைப் புலவி நீக்கிக் கூடாமல் நீங்குதல், முன்பே துன்பத்தினால் வருந்தியவரை மேலும் துன்பப்படுத்தினாற் போலும்' என்று அலந்தார் தலைவியைக் குறிக்கும் என்று பலரும் பொருள் கூறினர். ‘காமம் புலந்தாரை’ என்று பாடங் கொண்டு பரிப்பெருமாள் தணியாத பிணக்குடையன் ஆகிய இடத்து தலைமகன் புலந்துழி அதனை அறிந்து அகம்புக்க தோழி தலைமகற்குச் சொல்லியது என்று உரை செய்தார். 'தலைமகன் புலந்துழி' என்றதால் அலந்தார் என்று தலைமகனை இவர் குறிக்கிறார் என்றாகிறது. இஃது தலைவி-தலைவன் இரு சாரார்க்கும் பொருந்தும் என்கின்றனர் மற்றும் சிலர்.
'அலந்தாரை' (1303) என்பதற்கு 'முன்பு கலக்கம் உற்று அழிந்தாரை' எனப் பலரும் பொருளுரைக்கப் பரிதி 'நல்லோர்க்கு' எனப் பொருள் தருகிறார்; ‘நல்லோர்க்கு’ என்னும் சொல் மூலத்தோடு இயையவில்லை.
'பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என அலந்தார் என்பது பரத்தையர் குறித்தது எனக் கருத்துரைக்கின்றார் பரிமேலழகர். பரத்தையர், அதாவது விலை கொடுப்பார் யாவர்க்கும் தம் நலத்தை விற்பவர், வீட்டிலிருந்து வந்த தலைவன் பரத்தையது புலவியை நீக்க வேண்டும் என்பதாக இவர் கூறுகின்றார். குறளின் காமத்துப்பாலில் பரத்தையர்க்கு இடமேயில்லையாதலால் இவர் கூறும் விளக்கம் முற்றிலும் பொருந்தவில்லை.

'அலந்தார்' என்றது தலைவி குறித்தது.

தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புலவி ஒரு தழுவலில் தீர்ந்துவிடும்.

பொழிப்பு

தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் வருத்துதல் போலாம்.