இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1300



தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய
நெஞ்சம் தமரல் வழி

(அதிகாரம்:நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்:1300)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

மணக்குடவர் உரை: தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ?
('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: தன்னுடைய நெஞ்சமே உறவாகாத போது அயலவர் உறவாகாமை இயல்புதானே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம்உடைய நெஞ்சம் தமரல் வழி ஏதிலார் தமர்அல்லர் தஞ்சம்.

பதவுரை: தஞ்சம்-எளிது; தமர்அல்லர்-உறவினர் ஆகமாட்டார்; ஏதிலார்-அயலார்; தாம்உடைய-தம்முடைய; நெஞ்சம்-உள்ளம்; தமர்அல்-சுற்றமாக இல்லாத; வழி-பொழுது.


தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?
பரிப்பெருமாள்: ஏதிலார் சுற்றமல்லார் ஆகுதல் எளிது;
காலிங்கர் ('தமர் அல்லார்' பாடம்): தோழீ! மற்று அயலார் தமக்குத் தஞ்சமும் அல்லார், துணி;
காலிங்கர் குறிப்புரை: தஞ்சம் என்பது எளிமைப் பொருட்டு இடுக்கண் உற்றவிடத்து எய்துதல் என்பது.
பரிமேலழகர்: (இதுவும் அது.) அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ?

'ஏதிலார் சுற்றமல்லார் ஆகுதல் எளிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அயலார், உறவினர் அல்லராதல் (உதவாதிருத்தல்) எளியதே', 'மற்ற யாரும் அவருக்கு உறவாக மாட்டார்கள்; (ஆகையால் நீதான் எனக்கு உறுதுணை; நான் உன்னை) தஞ்சமடைகிறேன்', 'அயலவர் தம்மவராகாமை எளிதே', 'அயலார் உறவினர் அல்லாராதல் எளிது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அயலார் உறவினர் அல்லாராதல் இயல்பு என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்உடைய நெஞ்சம் தமரல் வழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து.
பரிப்பெருமாள்: தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல ஆகுங்காலத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'தலைமகன் யாண்டு உளன்' என்று குற்றேவல் மகளிரை அறியவிட, அவர் 'பரத்தையர் சேரியுளாள்' என்று கூறியவழி, 'அவர் வந்த காலத்தில் நெஞ்சு நம்வழி ஒழுகாது அவர் வழி ஒழுகினால் அவர் ஏதிலர் ஆகுவது எளிதன்றோ'' என்று நெஞ்சோடு புலந்து கூறியது. ஏதிலார் என்றாள், பிறர் மனையிற் செல்லுதலான்.
காலிங்கர் ('தம்முடைய' பாடம்): தோழீ! இவ்வுலகத்தில் தாம் தமக்கு உரிமையாக நெஞ்சம்கூடத் தமக்குத் துணை இல்லாத இடத்தினில், மற்று அயலார் தமக்குத் தஞ்சமும் அல்லார், துணி என்றவாறு.
பரிமேலழகர்: தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; [தமர் அல்லா வழி -உறவினர் ஆகாதபோது]
பரிமேலழகர் குறிப்புரை: 'பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது' என்பதாம். [பிறள் - வேறொருத்தி]

'தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல ஆகுங்காலத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் உரிமையாகக் கொண்ட நெஞ்சம் தமக்கு உறவினர் அல்லாதபோது (உதவாதபோது)', 'மனமே! ஒருவருக்கு அவருடைய மனமே உறவற்றுப் போய்விட்டால்', 'தாம் உடைத்தாயிருக்கிற தமது மனம் தம்மோடிணங்காதவழி', 'தம்முடைய நெஞ்சம் உறவாகப் பொருந்தி நில்லாத போது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்முடைய நெஞ்சம் உறவாகாத போது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்முடைய நெஞ்சம் உறவாகாத போது, அயலார் உறவினர் அல்லாராதல் இயல்பு என்பது பாடலின் பொருள்.
'தஞ்சம்' என்ற சொல் குறிப்பது என்ன?

'எங்குமே எனக்குத் துணைசெய்ய உறவில்லாமல் ஆக்கிவிட்டாயே என் நெஞ்சே!' - தலைவி.

'தமக்கு உரிமையுடைய நெஞ்சே தமக்கு உறவாக இருந்து உதவாதபோது, அயலார் அயலாரகவே இருப்பர் என்பது புரிந்துகொள்வதற்கு கடினம் அல்ல' என்கிறாள் தலைமகள்.
காட்சிப் பின்புலம்:
பொருள் தேடிப் பிரிவில் சென்றிருந்த தலைவர் இல்லம் திரும்பி வந்துவிட்டார். அவர் வருகை அறிந்து தன்னை நன்கு அணி செய்து பெண்மைப் பொலிவுடன் இருக்கிறாள் தலைவி. அவரைக் கண்டவுடன் பேருவகை கொள்கிறாள். அவரைக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கிறாள். அதுபொழுது முன்நிகழ்ந்த மனவோட்டங்கள் அவள் நினைவுக்கு வருகின்றன:
'தலைவருடைய நெஞ்சு அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நெஞ்சே! நீ ஏன் எனக்குத் துணையாகாமல் இருக்கிறாய்?'; 'அன்பற்று நம்மைப் பிரிந்து சென்றுவிட்டவர் என்று தெரிந்தும் வெறுக்கமாட்டார் என நினைத்து அவர்பின் செல்கின்றாயே!; 'கெட்டவர்க்கு நண்பர் இலர் என்று கருதியா நீ விரும்பியவாறு அவரிடம் செல்கிறாய்?'; 'கூடலுக்கு முன் சிறுசினம் கொள்வது போன்றவற்றை உன்னோடு யார் கலந்து பேசுவார்?'; 'உன்னால் எனக்கு எப்பொழுதும் துன்பம்தான்; அவர் இங்கில்லாதபோது நம்முடன் இருந்தாரிலையே என்று வருந்துகிறாய் வந்துவிட்டபின் அவர் மறுபடியும் பிரிந்து சென்றுவிடுவாரே என எண்ணிக் கலங்குகிறாய்!'; 'நான் தனித்திருந்து தலைவரை எண்ணிய போது என்னைத் தின்பதுபோல வருத்தினாய்; அவர் வந்தபின் இப்போது அவரிடம் விரைந்து சென்று சேர நினைக்கிறாயே!'; 'அவரை மறக்க முடியாத அறியாமை மிகுந்த உன்னுடன் சேர்ந்து எனது நாணினையும் மறந்தேனே!'; 'அவரைப் பொருட்படுத்தாதிருந்தால் அது இழிவான செயலாகவே ஆகுமாதலால் அவர் வருந்தத்தக்க எச்செயலையும் செய்யாமல், அவரது பண்புகளையே எண்ணி, அவரை நாடி அவர் பக்கமே செல்கிறாயே!; 'உன்னைத்தானே நான் நம்பியிருக்கிறேன். இப்பொழுது எனக்கு வேறு யார் துணையாக வருவர்? வந்தாலும் உன்துணை அல்லாத வழி எப்பயனும் கிட்டாதே!'

இக்காட்சி:
நம்முடைய மனம் நம்மிடம் உறவு பாராட்டாதபோது அயலார் நமக்கு சுற்றமாக மாட்டார் என்பது எளிதில் உணர்ந்துகொள்ளக்கூடியதே என்கிறாள் தலைவி இங்கு. இது தன் நெஞ்சே நமக்கு உதாவாதபோது வெளியார் எப்படி நமக்கு உதவுவர்? என்பதைச் சொல்வது. அவளது நெஞ்சம் தலைவரைக் கண்டபொழுது ஓடோடி அவரிடம் சென்றுவிட்டது. நெஞ்சே தனக்கு உதவியாக இல்லாதபோது தனக்கு யார் துணையாவார் என முன்னர் கேட்டாள் அவள். இங்கு தனது நெஞ்சமே தம்பக்கமிருந்து தனக்கு உறவாக நில்லாமல் அவருடன் சென்றுவிட்டபோது, அயலார் உறவாக நின்று உதவுவது எங்ஙனம்? என்று நெஞ்சோடு புலக்கிறாள்.

பிரிவுக் காலத்தில் தன்னுடைய நெஞ்சம் தன்னிடம் இல்லாது, எப்போதும் தலைவரையே நாடி, அவரிடமே சென்று விடுகின்றது என்று அடிக்கடி தலைவி மனதுக்குள் சொல்லிக்கொள்வாள். தன் நெஞ்சும் துணையாக இல்லாததால், அவள் மிகுந்த துயருற்றாளாம். இதை அவர்மீது உள்ள தீராக்காதலை வெளிப்படுத்துவதாகவே கூறுவாள்.
கெட்டார்க்கு நட்டார்இல்.... (1293) என்று இவ்வதிகாரத்து மற்றொரு குறளில் தன் நெஞ்சோடு மாறுபட்டுக் கூறினாள் தலைவி. அதுபோன்றே இங்கும் தன்னுடைய நெஞ்சமே உறவாகாத போது அயலவர் உறவாகாமை இயல்புதானே என்று தனக்கு உதவும் உறவினர் எவரும் இல்லை என்கிறாள்.
முற்குறளில் (1299) துணையாக யார் வருவார்? எனத் தனக்குத் துணை தேடியவள்போல் கூறினாள். இங்கு தனக்கே உரித்தாகவுடைய தனது நெஞ்சம் தனக்கு உறவாய்நின்று உதவாத இடத்து, பிறர் யாரும் உதவாமையைச் சொல்லவும் வேண்டுமோ? யாரும் வரமாட்டார்கள் என்று அயர்வடைந்த நிலையில் சொல்கிறாள். தன் நெஞ்சம் தன்னிடம் இல்லை; தனக்கு முன்னால் தன் கணவரிடம் சென்றுவிட்டது என்பதையே உணர்த்துகிறாள். தனக்கு உறவான தன் நெஞ்சம்தானே அவரிடம் சென்றது எனத் தலைவி ஆற்றிக்கொள்கிறாள் போலும்!

சில உரையாளர்கள் பரத்தையர் பிரிவைத் தொடர்புபடுத்தி இக்குறளுக்கு உரை வரைந்தனர். குறளகத்து பரத்தையர் பிரிவு எங்கும் கூறப்படவில்லை. எனவே இவர்கள் உரை ஏற்காது.

'தஞ்சம்' என்ற சொல் குறிப்பது என்ன?

'தஞ்சம்' என்ற சொல்லுக்குச் சொல்லல் வேண்டுமோ?, எளிது, தஞ்சமும், சொல்ல வேண்டுமோ?, எளிதே, இயல்புதானே, எளியதே, அடைக்கலம், எளிது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

காலிங்கர் 'தஞ்சம் என்பது எளிமைப் பொருட்டு இடுக்கண் உற்றவிடத்து எய்துதல் என்பது' எனப் பதவுரை தருகிறார். நாமக்கல் இராமலிங்கம் 'ஒருவருக்கு அவருடைய மனமே உறவற்றுப் போய்விட்டால் மற்ற யாரும் அவருக்கு உறவாகமாட்டார்கள். ஆகையால் நீதான், எனக்கு உறுதுணை நான் உன்னைத் தஞ்சம் அடைகிறேன்' எனத் தஞ்சம் என்ற சொல்லுக்கு அடைக்கலம் என்ற பொருள் கூறி உரை செய்வார். ஆனால் தஞ்சம்-புகலிடம் (அடைக்கலம்) என்பது பிற்கால வழக்கு என இப்பொருளை இக்குறளுக்கு ஏற்க மறுப்பார் இரா சாரங்கபாணி.
பலரும் 'தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே' (தொல். சொல். இடை. 18.) என்ற இலக்கண நூல் கூறுவதன் அடிப்படையில் எளிது எனப் பொருள் கொண்டனர். சிலர் இயல்பு எனவும் பொருள் கண்டனர்.

'தஞ்சம்' என்ற சொல்லுக்கு எளிது என்பது பொருள்.

தம்முடைய நெஞ்சம் உறவாகாத போது, அயலார் உறவினர் அல்லாராதல் இயல்பு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தனக்கு உறவாகாமல் விரைந்தோடிக் கணவரிடம் சென்றுவிட்டது எனத் தலைவி நெஞ்சொடுபுலத்தல்.

பொழிப்பு

தன்னுடைய நெஞ்சம் உறவாகாத போது அயலவர் உதவாதிருத்தல் இயல்பு.