இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1297



நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சில் பட்டு

(அதிகாரம்:நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்:1297)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரை மறக்கமுடியாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்துவிட்டேன்.

மணக்குடவர் உரை: என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு.
இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன்.
(மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.)

வ சுப மாணிக்கம் உரை: அவரை மறக்கமுடியாத மடமையுடைய சிறிய நெஞ்சின்வயப்பட்டு நாணை விட்டேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு நாணும் மறந்தேன்.

பதவுரை: நாணும்-நாணையும்; மறந்தேன்-மறந்து விட்டேன்; அவர்-அவரை (காதலரை); மறக்கல்லா-மறக்க முடியாத; என்-எனது; மாணா-மாட்சிமையில்லாத, பெருமையில்லாத; மட-அறியாமை மிகுந்த; நெஞ்சில்-உள்ளத்தில்; பட்டு-கூட்டுப்பட்டு, கூடி, அகப்பட்டு, வயப்பட்டு.


நாணும் மறந்தேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்;
பரிப்பெருமாள்: எனக்கு இன்றியமையாத நாணினையும் கடைப்பிடிக்கிலேன்;
பரிதி: என் நாயகர் என்னை மறக்க நான் நாண் மறந்தேன்;
காலிங்கர்: தோழீ! முன்னம்போல நம்மை அருளாதவர் தம்மை நாம் இனி நெருங்குதல் தீது என்று நாணுதல் நமக்குக் கடன் அன்றே; மற்று அந்நாணினையும் மறந்தேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன்.
பரிமேலழகர் குறிப்புரை: நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள். [அஞ்ஞான்று - கண்ட அந்நாளில்; அதனையும் - நாணத்தையும்]

'நாண் தன்னையும் மறந்துவிட்டேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிரிற் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டேன்', 'நான் என்னுடைய நாணத்தைக் கூட மறந்துவிட்டேன்', 'நான் வெட்கத்தை மறந்தவளாயினேன்', 'என் உயிரினும் சிறந்த நாணினையும் மறந்தேன் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் நாணினையும் மறந்தேன் என்பது இப்பகுதியின் பொருள்.

.

அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.
பரிப்பெருமாள்: அவரை மறக்கமாட்டாத நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் 'யான் நாணாது தூதுவிட்டதும் என் நெஞ்சு மறவாமையாலே' என்று அதனோடு புலந்து கூறியது.
பரிதி: அறிவிலா நெஞ்சு என்வசம் வாராதபடியால் என்றவாறு.
காலிங்கர்: அக்கொடியார் தம்மை ஒரு பொழுதும் மறக்கவல்லாத என் தீய நெஞ்சின்கண் அகப்பட்டு என்றவாறு.
பரிமேலழகர்: தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி;
பரிமேலழகர் குறிப்புரை: மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல்.

'காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னை மறந்த காதலரை மறக்க இயலாத என் மாண்பில்லாத மட நெஞ்சுடனே சேர்ந்து', 'பெருமையற்ற அறிவில்லாத மனதில் சிக்கிக் கொண்டு', 'அன்பில்லாத அவரை மறக்கமாட்டாத எனது இழிந்த அழிவில்லாத நெஞ்சோடு சேர்ந்து', 'அவரை மறக்கமுடியாத என் மாட்சிமையில்லாத அறியாமை பொருந்திய நெஞ்சுடனே கூடி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவரை மறக்கமுடியாத, பெருமை குன்றிய, என் மட நெஞ்சுடனே சேர்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கணவரை மறக்கமுடியாத, பெருமை குன்றிய, என் மட நெஞ்சுடனே சேர்ந்து நாணும் மறந்தேன் என்பது பாடலின் பொருள்.
'நாணும் மறந்தேன்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'நெஞ்சே உன்னோடு சேர்ந்து நானும் கெட்டேனே - நாணத்தையும் துறந்தேனே!' - தலைவி

என் சிறிய நெஞ்சுக்கு அதன் மடத்தனத்தால் தலைவரை மறக்க முடியாமலிருக்கிறது. அதனுடன் சேர்ந்து நானும் என் நாணை விட்டுவிட்டேனே!
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக அயல் சென்றிருந்த தலைவர் நீண்டநாட்களுக்குப் பின் இல்லம் திரும்பி வந்திருக்கிறார். பிரிவால் துயருற்றிருந்த தலைவி அவர் வரவால் பூரிப்படைந்து இன்முகத்துடன் தோற்றம் தருகிறாள். கணவரை நேரில் கண்டதால் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். இன்னும் சிறுது நேரத்தில் கூடவிருக்கிறார்கள். இந்த இடைநேரத்தில் தன் நெஞ்சுடன் சினந்து கொண்ட நிகழ்வுகளை நினைவில் கொள்கிறாள்.
தன் கருத்துக்கு மாறாகத் தன் நெஞ்சு செயலாற்றுவதாகக் கற்பனை செய்து அதைக் கடிகிறாள்: 'அவருடைய நெஞ்சு அவர்க்குத் துணைநிற்றலைக் கண்டும் நீ எனக்குத் துணையாகாதது ஏன்?'; 'அன்பற்று நம்மை அகன்றவர் என்று தெரிந்தும் வெறுக்கமாட்டார் என்று நினைத்து அவரிடம் செல்கின்றாயே!'; 'கேடுற்றவர்க்கு நண்பர் இலர் என்று நினைத்துத் தானே நீ விரும்பியபடியே அவரிடம் செல்கிறாய்?'; 'கலவிக்கு முன் புலவி என்பதுபோன்ற ஆலோசனைகளை உன்னிடம் யார் கலந்து பேசுவார்?'; 'அவர் வருவதற்குமுன் அவர் நம்முடன் இல்லையே என்று வருந்தியும், வந்து கலந்தபின் அவர் மீண்டும் பிரிந்து சென்றுவிடுவாரே என எண்ணி அஞ்சியும் எனக்கு எப்பொழுதும் துன்பம் தந்துக் கொண்டே இருக்கிறாயே'; 'நான் தனித்திருந்து அவரை எண்ணும்போதெல்லாம் என்னைத் தின்பதுபோல வருத்துகிறாயே' இவை தலைவி தன் நெஞ்சோடு புலந்து கூறியனவாம்.

இக்காட்சி:
தலைவியின் நெஞ்சுக்குப் பிரிந்து சென்றுள்ள கணவரை மறக்க முடியவில்லை. எப்பொழுதும் அது அவர் பின்னாலேயே சுற்றித் திரிகிறது. இப்பொழுது தலைவியும் அதனுடன் சேர்ந்து கொண்டாளாம். இதனால், மறக்கக் கூடாததாகிய தன் நாணத்தையும் மறந்து விட்டதாக அவள் கூறுகிறாள். தன் நெஞ்சுடன் கூட்டுப்பட்டதாலேயே தான் அறிவற்றவளாகி விட்டதாகவும், குணம் கெட்டுப் போனதாகவும், நாணத்தைக்கூட இழந்தவளாக ஆகி விட்டதாகவும் தலைவி நெஞ்சைப் புலந்து கூறுகிறாள்.
தானும் தன் நெஞ்சமும் ஒன்றுதான். தன் நெஞ்சத்தைக் கடிவதுபோல் தன்னைத்தானே திட்டிக்கொள்கிறாள் அவள். நாண் மறந்தேன் என்றது கூப்பிடு தொலைவில் உள்ள தலைவருடன் விரைந்து சேரத் துடிக்கிறாள் மனைவி என்பதைச் சொல்வது.

மாணா என்ற சொல் பெருமையில்லாத என்ற பொருள் தருவது. மட நெஞ்சு என்ற தொடர் அறிவு கெட்ட மனம் எனப்பொருள்படும். இதற்குப் பரிமேலழகர் 'கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல்' என நினைவு, மறத்தல் ஆகிய சொற்கள் கொண்டு புதுமையாக விளக்கம் தருகிறார்.
இக்குறளிலுள்ள பட்டு என்ற சொல்லுக்குக் கூட்டுப்பட்டு, கூடி, அகப்பட்டு, வயப்பட்டு என்றவாறு பொருள் கூறினர். இவற்றுள் நெஞ்சின் வயப்பட்டு என்ற விளக்கம் சிறக்கும்.

'நாணும் மறந்தேன்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'நாணும் மறந்தேன்' என்ற தொடர்க்கு என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன், எனக்கு இன்றியமையாத நாணினையும் கடைப்பிடிக்கிலேன், நான் நாண் மறந்தேன், நாணினையும் மறந்தேன், என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன், மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்துவிட்டேன், நான் என் உயிரனைய நாணத்தையும் மறந்துவிட்டேன், நாணை விட்டேன், உயிரிற் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டேன், நான் என்னுடைய நாணத்தைக் கூட மறந்துவிட்டேன், யான் விடக்கூடாத நாணத்தையும் விட்டுவிட்டேன், நான் வெட்கத்தை மறந்தவளாயினேன், என் உயிரினும் சிறந்த நாணினையும் மறந்தேன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பெண்கள் எதை மறந்தாலும் நாணத்தை கடைப்பிடிப்பதிலிருந்து மாற மாட்டார்கள். 'காதல் கணவரைக் கண்டவுடன் புணர்ச்சி விரைவு கொண்டு, அந்த நாணினையும் மறந்துவிட்டேன்' என்கிறாள் தலைவி இங்கு. பணி முடித்து திரும்ப வந்துள்ள தலைவரைக் கண்ட பொழுதே கூடவிரைதல் நாண் மறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. இதைத் தானாகச் சொல்வதாக இல்லாமல் தலைவரைச் சிறுது நேரங்கூட மறக்கமுடியாததாகிவிட்ட தன் நெஞ்சத்துடன் கூடித் தான் நாண் மறந்ததாகக் கூறுகிறாள் அவள்.
'நாண்' என்பதற்கு 'எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல்' அதாவது நாளும் கூடி ஒழுகினாலும் அப்பொழுதுதான் கண்டார் போன்று நாணிநிற்றல் என்ற பொருள் தந்தார் பரிமேலழகர். இதையே நாலடியார் எஞ்ஞான்றும், எம் கணவர் எம் தோள்மேல் சேர்ந்து எழினும், அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் (கற்புடை மகளிர் .385 பொருள்: எம் கணவர் எந்நாளும்எம் தோள்மேல் முயங்கியெழுந்தாலும் அன்றுகண்டேம்போல் அவர்பால் யாம் நாணமுடையமாயிருக்கின்றேம்) என்று சொல்லும்.

'நாணும் மறந்தேன்' என்ற தொடர் உயிரனைய நாணத்தையும்‌ மறந்து விட்டேன் என்ற பொருள் தரும்.

கணவரை மறக்கமுடியாத, பெருமை குன்றிய, என் மட நெஞ்சுடனே சேர்ந்து என் நாணினையும் மறந்தேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

'உன்னுடைய சேர்க்கையினாலேயே நான் நாணிழக்க நேர்கிறது' என்று தலைவி தன் நெஞ்சொடுபுலத்தல்.

பொழிப்பு

தலைவரை மறக்கமுடியாத மடமையுடைய சிறிய நெஞ்சுடனே சேர்ந்து நாணை மறந்தேன்.