இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1296



தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்:1296)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்வதாக இருந்தது.

மணக்குடவர் உரை: என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது.
இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே.
('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: என் மனம் (காதலரை மறந்து என்னுடன் மட்டும்) தனியாக இருந்து எண்ணினபோது என்னைக் கொன்றுவிடும் போல் இருந்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
என் நெஞ்சு இருந்தது தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய .

பதவுரை: தனியே-(பிரிந்து) தனியாக; இருந்து-இருந்து கொண்டு; நினைத்தக்கால்-எண்ணியபொழுது; என்னை-என்னை; தினிய-தின்னுதற் பொருட்டு; இருந்தது-இருந்தது; என்-எனது; நெஞ்சு-உள்ளம்.


தனியே இருந்து நினைத்தக்கால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் தனிப்பட்டிருந்து நினைத்தால்;
பரிப்பெருமாள்: தனிப்பட்டிருந்து நினைத்தால்;
பரிதி: தனியே இருந்து நாயகர் கொடுமையை நினைந்தால்;
காலிங்கர் ('நினைந்தக்கால்' பாடம்): தோழீ! இப்பொழுது எனக்கு இனியது போன்று இருந்து மற்று அவர் பிரிந்த இடத்து விடாது நினைந்து கொண்ட காலத்து;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; [தன்னொடு- நெஞ்சுடன்]

'தனிப்பட்டிருந்து நினைத்தால்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் பரிமேலழகரும் 'காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்' என்ற பொருளில் உரை செய்தனர். காலிங்கர் 'அவர் பிரிந்த இடத்து விடாது நினைந்து கொண்ட காலத்து' எனப் பொருள் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனித்திருந்து அவரை நினைத்த போது', 'நான் பிறர் துணையின்றி என் நெஞ்சோடு தனியே இருந்து பிரிந்த அவரது கொடுமைகளை நினைத்தால்', 'அன்பரைப் பிரிந்து தனியேயிருந்து அவர் கொடுமைகளை நினைத்தபோது', 'நெஞ்சே தனியாக இருந்து நினைத்தபொழுது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனித்திருந்து நினைத்த போது என்பது இப்பகுதியின் பொருள்.

என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சு உடம்படாது என்னை நலிவதாக இருந்தது.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: என்னெஞ்சு இடம் பார்த்து என்னை நலிவதாக இருந்தது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'அவர் அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ள துயரம் யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேன்' என்று தலைமகள் நெஞ்சோடு புலந்து தோழிக்குக் கூறியது.
பரிதி: என்னைத் தின்னும்படி மயல் துயரம் பெருகும் என்றவாறு.
காலிங்கர்: என்னைத் தின்னற்கு இருந்தது என் நெஞ்சு.
காலிங்கர் குறிப்புரை: எனவே இப்பொழுது உறவு போன்றது என்று பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: என் நெஞ்சு ஈண்டு இருந்தது; அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம். [அன்று - காதலரைப் பிரிந்திருந்த அக்காலத்தில்; இன்று - தலைவர் வந்த இக்காலத்தில்; அவை நோக்கி - காதலரின் கொடுமைகளை எண்ணி]

'என்னெஞ்சு என்னை நலிவதாக இருந்தது' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி, காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் 'என் நெஞ்சு என்னைத் தின்பது போன்று இருந்தது' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சம் என்னைத் தின்ன உடனிருந்தது', 'அந் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்து இருந்ததுபோல் கொடுமைப்படுத்தும்', 'என் நெஞ்சு என்னைத் தின்பதுபோலத் துன்புறுத்திக் கொண்டிருந்தது', 'என்னைத் தின்னுவதற்கு இருந்தது என்ன காரணம்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்ததுபோல் இருந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனித்திருந்து கணவரை நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தினிய இருந்தது என்பது பாடலின் பொருள்.
'என்னைத் தினிய இருந்தது' குறிப்பது என்ன?

தனிமைத் துயரங்கள் தலைவியைத் தின்று நலியச் செய்துவிட்டனவாம்.

'நான் தனியே இருந்தபொழுது என் நெஞ்சு தலைவரை நினைப்பூட்டி நினப்பூட்டி எனக்கு மேலும் வேதனை தந்து என்னைத் தின்றது' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகச் சென்றிருந்த கணவர் இல்லம் திரும்பி வந்துவிட்டார். பிரிவால் துன்புற்றிருந்த தலைவி அவரைக் கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறாள். அவரைத் நெருக்கமாகச் சந்திக்கும் வேளையை எதிர்நோக்கி இருக்கிறாள். இன்னும் சிறுது பொழுதில் அவர்களது கூட்டம் நிகழப்போகிறது. இதனிடை அவள் தன் நெஞ்சொடு புலந்து பேசியவற்றை நினைந்து கொள்கிறாள்.
தலைவர் அருகே அவள் நெருங்கிப்போகும் மனநிலையில் உள்ளவள், தன் கருத்துக்கு மாறாகத் தன் நெஞ்சு செயலாற்றுவதாகக் கற்பனை செய்து அதைக் கடிகிறாள்: 'அவருடைய நெஞ்சு அவர்க்குத் துணைநிற்றலைக் கண்டும் நீ ஏன் என் துணையாக நிற்பதில்லை?' என்றும் 'அன்பில்லாமல் நம்மைப் பிரிந்து சென்றுவிட்டவர் என்று அறிந்தும் வெறுக்கமாட்டார் எனக் கருதி அவரிடம் செல்கின்றாயே!' என்றும் 'கேடுற்றவர்க்கு நண்பர் இல்லை என்று எண்ணியா நீ விரும்பியபடியே அவரிடம் செல்கிறாய்?' என்றும் ''ஊடிப் பின் கூடவேண்டும்' போன்ற ஆலோசனைகளை உன்னோடு யார் கலந்து பேசுவார்?' என்றும் 'அவர் வராதபோது அவர் நம்முடன் இல்லையே என்று வருந்துகிறாய் வந்து கலந்தபின் அவர் மீண்டும் பிரிந்து சென்றுவிடுவாரே என எண்ணி அஞ்சுகிறாய்; உன்னால் நான் எப்பொழுதும் துன்பப்பட்டுக் கொண்டே இருக்கிறேனே' என்றும் நெஞ்சோடு உரையாடினாள்.

இக்காட்சி:
தான் தனித்திருந்து தலைவரை நினைத்த போது தன் நெஞ்சம் தன்னைத் தின்பதுபோல வருத்தியது என்கிறாள் மனைவி இப்பொழுது.
கணவர் தன்னுடன் இல்லாதபோது அதாவது தனித்திருந்தபோது அவள் நெஞ்சு அவளுக்கு அவர் நினைவை இடையறாது கொணர்ந்து வருத்தியது. அவர் உடனில்லாதபோது அவரைப் பிரிந்திருந்த என் நெஞ்சு அவரை மறுபடியும் மறுபடியும் நினைக்க வைத்து என்னைத் தின்பதுபோலத் தாங்கவொண்ணா துன்பம் தந்து கொண்டிருந்தது. 'அவர் பிரிந்திருந்த காலத்தில் இடைவிடாது நினைந்து கொண்டதால் என்னைத் தின்னற்கு இருந்தது என் நெஞ்சு; இப்பொழுது அவர் வந்துவிட்டார், நான் தப்பித்தேன்' என்கிறாள் தலைவி, அவரை நேரில் பார்த்தவுடன் அவரிடம் விரைந்து சென்று அவளைக் கை விட்டுவிட்டதாகத் தன் நெஞ்சைப் புலக்கிறாள் அவள்.
தானும் தன் நெஞ்சும் ஒன்றுதான்; தனியாக இருந்தபோதும் இப்பொழுது அவர் வந்துவிட்டபோதும் தலைவர் நினைவுதான் மனைவிக்கு என்பது கருத்து.

'என்னைத் தினிய இருந்தது' குறிப்பது என்ன?

'என்னைத் தினிய இருந்தது' என்றதற்கு உடம்படாது என்னை நலிவதாக இருந்தது, இடம் பார்த்து என்னை நலிவதாக இருந்தது, என்னைத் தின்னும்படி மயல் துயரம் பெருகும், என்னைத் தின்னற்கு இருந்தது என் நெஞ்சு, என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே, என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்வதாக இருந்தது, என்னைத் தின்று தொலைக்கவே உடன் இருந்தது, என்னைத் தின்ன உடனிருந்தது, என்னைத் தின்னுவதற்கு வந்து இருந்ததுபோல் கொடுமைப்படுத்தும், என் நெஞ்சம் என்னைத் தின்றுவிடும் போல் இருந்தது, என்னை அரித்துத் தின்பதற்கென்றே இருந்தது என் நெஞ்சு, என் நெஞ்சு என்னைத் தின்பதுபோலத் துன்புறுத்திக் கொண்டிருந்தது, நெஞ்சே என்னைத் தின்னுவதற்கு இருந்தது, என் மனம் எனக்கு ஆறுதல் செய்து உதவுவதற்கல்லாமல், என்னையே அரித்துத் தின்னுவதற்குத்தான் உள்ளது என்றவாறு உரையாசிரியரகள் பொருள் கூறினர்.

'என்னைத் தினிய இருந்தது' என்ற தொடர்க்கு என்னைத் தின்னுவதற்கு இருந்தது என்பது பொருள். தலைவர் பிரிந்து சென்றுள்ள காலத்தில் அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துயர் உண்டாகிறதென்பதால். என் மனதை, அவரை நினைக்காமல் சற்று என்னோடு இருக்கச் சொன்னேன். ஆனால் அது நான் சொல்வதைக் கேளாமல் அவர் பின்னாலேதான் சுற்ற நினைத்தது. இதைத்தான் தான் மறந்திருந்தாலும் அவரை இடையறாது நினைக்கச் செய்து தன்னைத் தின்னுவதாய் இருந்தது தன் நெஞ்சு என்று தலைவி கூறுகிறாள். தலைவரைப் பிரிந்து வாழும் மனைவியை அவரது நினைவுகள் அணு அணுவாய்க் கொல்லும் என்பதைச் சொல்வது இப்பாடல்.
இதே நடையில் அமைந்துள்ள மற்றொரு குறள் கணவர் வருவதற்கு முன் தலைவி கூறியதாக உள்ளது. அது: கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காணல் உற்று (நெஞ்சொடுகிளத்தல் 1244 பொருள்: நெஞ்சே! நீ அவரிடம் செல்வாயானால் இக்கண்களையும் உடன் கொண்டு போ; 'அவரைக் காட்டு' என்று என்னைத் தின்பதுபோல இவைகள் என்னை வருத்துகின்றன) என்பது. முன்னர் அவரைக் காட்டு என்று கண்கள் வருத்தின. இங்கு அவரை நினைப்பூட்டி நெஞ்சு துன்பம் தருகிறது.

'என்னைத் தினிய இருந்தது' என்றது என்னைத்தின்பது போன்ற துன்பம் தந்தது என்பது குறித்தது.

தனித்திருந்து கணவரை நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்ததுபோல் இருந்தது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவரை நினைக்கச் செய்து வருத்திய நீ இன்று அவரை நேரில் கண்டவுடன் அவரிடம் விரைந்து செல்லத் துடிக்கிறாய் என்று தலைவி நெஞ்சொடுபுலத்தல்.

பொழிப்பு

தனித்திருந்து தலைவரை நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்னுவதற்கு வந்து இருந்ததுபோல் துயரப்படுத்தியது.