இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1290



கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று

(அதிகாரம்:புணர்ச்சி விதும்பல் குறள் எண்:1290)

பொழிப்பு (மு வரதராசன்): கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலங்கிவிட்டாள்.

மணக்குடவர் உரை: கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே.
இது தலைமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள்.
(கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.)

வ சுப மாணிக்கம் உரை: தழுவுதற்கு என்னைவிடத் தான் துடிதுடித்துக் கண்ணால் ஊடிக் கலங்கினாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்று.

பதவுரை:கண்ணின்-கண்களால்; துனித்தே-ஊடியே; கலங்கினாள்-கலக்கமுற்றாள்; புல்லுதல்-தழுவுதல்; என்னினும்-என்னைவிட; தான் விதுப்புற்று-தான் விரைந்து அடைய.


கண்ணின் துனித்தே கலங்கினாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள்;
பரிப்பெருமாள்: கண்ணாலே புலந்து அதனையும் முடிய நிறுத்தாது கலக்கமுற்றாள்;
பரிதி: நாயகரைப் புணரவருகையில் கண்ணும் மனமும் கலங்கினாள்.
காலிங்கர்: நெஞ்சமே! கண்ணினால் துனி செய்து ஊடி நெஞ்சினால் கலக்கம் உற்றாள்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; [முன்னொரு ஞான்று - முன் ஒரு நாள்; புல்லல் விதுப்பு - முயங்கல் விரைவு;
பரிமேலழகர் குறிப்புரை: கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன். [அது - அக்கண்; நீடாள் - நீட்டித்து இருக்கமாட்டாள்]

'கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மாறுபாடாக 'காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி' என உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்ணினாலே ஊடலைப் புலப்படுத்தி', 'வருத்தம் தோன்றக் கண் கலங்கினாள்', 'கண்ணினால் மாத்திரமே பிணங்கி', 'பார்வையால் ஊடலுற்று கலங்கினாள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பார்வையால் ஊடலைக் காட்டிக் கலங்கி நின்றாள் என்பது இப்பகுதியின் பொருள்.

புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
பரிப்பெருமாள்: புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஊடற் குறிப்பு நீங்கிப் புணர விரைவது கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
பரிதி: புல்லும்போது நாயகரினும் அதிக மோகமாய்த் தானும் இன்பம் பெற்று நாயகருக்கு இன்பம் அளித்தாள் என்றவாறு.
காலிங்கர்: நம்மினும் சாலத் தான் முயங்குதல் விருப்பம் உற்றாள். அது என்ன பேறோதான் என்றவாறு.
பரிமேலழகர்: புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள்.

'புணர்தலை/முயங்குதலை என்னினும் மிகத் தான் விரைதலானே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முயங்குதலில் என்னைவிட மிகுதியும் விரைந்து அதனை விழைந்து பின் அவ்வூடலையும் மறந்து கலங்கினாள்', 'தழுவிக் கொள்ள என்னைக் காட்டிலும் அவள் விரைவுள்ளவளாகி', 'தழுவுதலில் என்னினும் விரைவுடைமையால், பிணங்கி நின்ற நிலையில் நில்லாது அவள் கலங்கினாள். (தழுவக் கருதினாள் என்பது கருத்து)', 'தழுவுதற்கு என்னைவிட மிக விரைந்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தழுவிக் கொள்ள என்னைக் காட்டிலும் விரைவுடையவளாய் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தழுவிக் கொள்வதில் என்னைக் காட்டிலும் விரைவுடையவளாய், கண்ணின் துனித்தே கலங்கி நின்றாள் என்பது பாடலின் பொருள்.
'கண்ணின் துனித்தே' குறிப்பது என்ன?

'இவ்விதம் என்னைத் தவிக்க விட்டுவிட்டீர்களே' எனக் கண் கலங்குகிறாள் தலைமகள்.

'தழுவுவதிலே என்னைக் காட்டிலும் விருப்பம் கொண்டவளாகப் பார்வையாலேயே பிணக்கத்தைக் காட்டிக் கலக்கமுமுற்றாள்' என்கிறார் தலைவர்.
காட்சிப் பின்புலம்:
நீண்ட காலப் பிரிவிற் சென்ற கணவர் திரும்பி வந்துவிட்டார். பிரிவுக் காலத்தில் மிகுந்த துன்பத்துடன் காணப்பட்ட தலைவி இப்பொழுது அவரை நேரில் பார்த்ததால் களிப்பு மிகுந்த நிலையில் இருக்கிறாள். அவர் வருகை அறிந்து கண்ணுக்கு மைதீட்டி, மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் இல்லத்துள் வலம் வருகிறாள்.
நெடிய காலம் அவரைப் பார்க்காமலிருந்ததால், கூடுதலை நினைத்தும் காதலரைக் காண்பதிலும் அவளது மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடியது; இந்நிலையில் தன் கொள்கைக்கு மாறாக, அவருடன் ஊடாதிருந்து நேரே கூடிக்கொள்ள வேண்டும் எனவும் எண்ணிக்கொள்கிறாள்; இவ்வளவு காலம் தன்னைப் பிரிவுத் துன்பத்தில் ஆழ்த்தியிருந்தாலும் அவரைப் பார்க்காமல் என் கண்கள் அமைவதில்லையே! அவருடன் சிறுசண்டையிட வேண்டும் என ஒருபுறம் மனம் நினைக்க இன்னொரு பக்கம் அதுவே அவரை கூடவேண்டும் என்றும் விரும்புகிறது; எவ்விதம் கண்களுக்கு மை தீட்டும்போது அருகில் இருக்கும் எழுதுகோல் கண்களுக்கு தெரிவதில்லையோ அதுபோல் அவரை நெருங்கி நேரில் பார்த்தபின்னால் அவரது குறைபாடு எதுவும் அவளுக்குத் தோன்றவேயில்லையாம்; தலைவர் தொலைவில் இருக்கும்போது அவர் பிரிந்து சென்ற குற்றமே பெரிதாகத் தெரிந்தது, இப்பொழுது அவரை நேரில் பார்த்தபின் அவரது தவறுகளைக் காண்கின்கின்றாளில்லை; தம்மை உள்இழுத்துக்கொண்டு செல்லும் என்பதை அறிந்தும் பாய்ந்து செல்லும் நீரில் குதிப்பார்போல இப்பொழுது தானிருக்கும் நிலையில் கூடலே நன்று; ஊடல் உதவாது என்பதை உணர்கிறாள்; கள் இழிவான துன்பத்தைச் செய்யும் தன்மையதென்றாலும் கள்ளுண்பவர்க்கு அது மேலும் களிப்பு தருவ போல, அவர் பிரிந்துசென்று துன்பம் தந்திருந்தாலும், இப்பொழுது நேரில் வந்திருக்கும் அவரது மார்பு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றதாம் அவளுக்கு; காதலர் இருவர் உள்ளமும் ஒன்றிய நிலையில் அன்பு கொண்டு தழுவி வாழும் இன்பநிலை காமமாம். அது மலரினும் மெல்லியது. அதைப் பக்குவமாகக் கையாள வேண்டுமே என்ற எண்ணமும் தோன்றுகிறது;
தனிமையில் கூடுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

இக்காட்சி:
தலைவியின்‌ புணர்வு வேட்கையைக்‌ கண்டு காதல்கணவர்‌ கூற்றாக உள்ள செய்யுள் இது.
தன்னைத் தனிமையில் விட்டுத் தொலைவு சென்று துன்ப வாழ்வு தந்ததால் கணவர் மேல் சினத்தில் இருந்தாள் தலைவி. அதனால் அவர் வந்தால் அவருடன் பூசல் கொள்ளவேண்டும் என்று கருதியிருந்தாள். அதே நேரத்தில் விரைவில் அவரைக் கூடிவிடவேண்டும் என்ற உணர்வும் அவளுக்கு இப்பொழுது மேலோங்குகிறது. ஒரு புறம் ஊட வேண்டும் என்ற எண்ணம்; மறுபுறம் கணவர் அருகில் சென்று அவரை எப்போது கட்டி யணைக்கப் போகிறேனோ என்ற விதும்பல் இவ்விரண்டிற்கும் இடையில் என்ன செய்வது என்று அறியாதிருந்தாள் அவள். கணவர் உள்ளே வருகிறார். தனது கண்களில் சினம் காட்டி அவரைப் பார்க்கிறாள் அவள். பின் அவரைக் கட்டியணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தடுமாறி நிற்கிறாள். தலைவியின் விழியோரத்தில் கண்ணீர் தோன்றுகிறது. அவளது இவ்விரண்டு மாறுபட்ட நிலைகளையும் காண்கிறார் அவர்.

தலைவியின் பரபரத்த நிலையை உணர்ச்சி குன்றாமல் படம் பிடித்துக் காட்டும் காட்சி!
புணர்ச்சி விதும்பலில் கணவர்க்கு இணையாக உள்ளாள் தலைவி. சிறிய மரக்கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருந்தது போன்று, அவளது காம விருப்பம் இப்பொழுது அவளாலேயே தாங்க முடியாதளவு உள்ளது. எனவே அவரைப் பார்த்த அளவிலே தன் கண்களாளேயே மனக்குமுறல்களைக் காட்டினாள்; சினமும் துக்கமும் ஒருங்குசேர அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வருகிறது. அவள் பிணக்கம் கொள்ள எண்ணுவதையும் பிறகு அதை ஒதுக்கிவிட்டுக் கூட விரும்புவதையும் காதல்தலைவர் காண்கிறார்; அவளுடைய அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள போராட்டத்தை உணர்கின்றார். அவளது புணர்வு வேட்கையைக் கண்டு, 'என்மீதுள்ள வருத்தத்தைக் கண் சிவந்து காட்டிவிட்டு என்னைவிட விரைவு கொண்டு வேட்கையுடன் என்னைத் தழுவிக் கொள்ளத் துடிதுடித்து அவள் முந்துகிறாளே, தான் தோற்றுவிட்டதுபோல் கலங்கியும் நிற்கிறாள் பேதை!' என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறார்.

'கண்ணின் துனித்தே' குறிப்பது என்ன?

'கண்ணின் துனித்தே' என்ற தொடர்க்குக் கண்ணாலே புலந்தும், கண்ணினால் துனி செய்து ஊடி, கண் மாத்திரத்தான் ஊடி, கண்பார்வையின் அளவில் பிணங்கி, கண்ணால் சிவந்துகாட்டி ஊடி, கண்ணால் ஊடி, கண்ணினாலே ஊடலைப் புலப்படுத்தி, கண்ணால் பிணங்கி, கண்ணினால் மாத்திரமே பிணங்கி, பார்வையால் ஊடலுற்று, கண்ணால் மட்டும் ஊடி, கண்ணினால் சிறு துளி விட்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இப்பகுதியைக் காலிங்கர் 'கண்ணினால் துனி செய்து ஊடி நெஞ்சினால் கலக்கம் உற்றாள்' என விளக்கினார். துனி என்ற சொல் முதிர்ந்த காதற்பூசலை உணர்த்துவது; அதாவது அது பிணக்கின் பெருநிலை; துனி என்றதால் அவள் எவ்வளவு சினம் கொண்டுள்ளாள் என்பதை அறியலாம். பரிமேலழகர் 'கண்ணால் சிவந்து காட்டி ஊடினாள்' என்றார். கண்ணளவாக ஊடுதல் என்பது ஏதும் பேசாமல் கண்ணால் சிவந்து காட்டி தன் வருத்தத்தைத் தெரிவித்தலைக் குறிக்கும். சொல் நிகழ்ச்சியின்றி ஊடுதல் என்பது எவ்வளவு அழகிய காட்சி!
‘கண்ணிற் றுளித்தே’ என்று பாடம் கொண்டு பழைய உரை ஒன்று 'கண்ணினால் துளிவிட்டு அதாவது கண்ணின் நீர் ஓர் ஓரத்தில் துளித்து இருக்கக் கலங்கிநின்றாள்' என்கிறது. இப்பாடமும் சிறப்பாக உள்ளது.

'கண்ணின் துனித்தே' என்ற தொடர் கண்ணால் ஊடி என்ற பொருள் தருவது.

தழுவிக் கொள்வதில் என்னைக் காட்டிலும் விரைவுடையவளாய், பார்வையால் ஊடலைக் காட்டிக் கலங்கி நின்றாள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவியின் ஊடிய கண் புணர்ச்சி விதும்பலில் துளிர்த்தது.

பொழிப்பு

தன் பார்வையால் ஊடிக் கலங்கினாள்; தழுவுதற்கு என்னைவிட அவள் விரைவு காட்டினாள்.