இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1286



காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறுஅல் லவை

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1286)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரை யான் காணும்போது (அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை.அவரைக் காணாத போது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

மணக்குடவர் உரை: அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
(செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: என் காதலரை யான் காணும்பொழுது அவர் செய்த தவறான செயல்களைக் காண மாட்டேன். அவரைக் காணாத பொழுது தவறான செயல்களையே யன்றி மற்றவற்றை காண மாட்டேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காணுங்கால் தவறாய காணேன் காணாக்கால் தவறு அல்லவை காணேன்.

பதவுரை: காணுங்கால்-பார்க்கும்போது; காணேன்-தெரிவதில்லை; தவறாய-தவறான செயல்களை; காணாக்கால்-நேரில் பார்க்காவிட்டால்; காணேன்-அறிய மாட்டேன்; தவறு அல்லவை-தவறு அல்லாதவற்றை.


காணுங்கால் காணேன் தவறாய:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்;
பரிப்பெருமாள்: அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்:
பரிதி: நாயகரைக் கண்டால் குற்றம் காணேன்;
காலிங்கர்: கேளாய் தோழீ! பல சொல்லி என்? யான் அவரைக் காணும் காலத்துக் காணேன் தன் தவறாவன;
பரிமேலழகர்: (இதுவும் அது.) கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; [அவன் தவறாயவற்றை - தலைவன் செய்த குற்றங்களை]
பரிமேலழகர் குறிப்புரை: செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. [செயப்படு பொருள்-கொண்கனை]

'கொண்கனைக் கண்டபொழுது அவன் தவறாயவற்றைக் காணேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காணும்போது அவர் பிழையைக் காண்பதில்லை', 'காதலரைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவரிடத்தில் எந்தக் குற்றமும் இருப்பதாகத் தெரிவதில்லை', 'தலைவனைக் காணுங்கால் குற்றமானவை யொன்றையும் நான் அறியேன்', 'காதலன் நேரில் காணும்பொழுது அவன் தவறுகளைக் காண்கின்றேன் இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேரில் பார்க்கும்போது தவறுகள் தென்படுவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

காணாக்கால் காணேன் தவறு அல்லவை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.
பரிப்பெருமாள்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய சொற்கேட்டுக் 'கண்டகாலத்து மறக்குமாறு போலக் காணாத காலத்திலும் மறப்பது நன்று' என்று நகைக்குறிப்பினால் கூறிய தோழிக்குச் சொல்லியது.
பரிதி: காணாக்கால் குற்றம் காண்பேன்; இது என்ன மாயமோ என்றவாறு.
காலிங்கர்: மற்று இனி யான் அவரைக் காணாக்காலும் காணேன் மற்று அவர் தவறல்லன; காலிங்கர் குறிப்புரை: எனவே நாள்தோறும் காணாக்கால் ஆற்றாமையும் கண்ட இடத்து வழிபாடும் கற்புடை மகளிர்தம் கடன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம். [புலந்திலேன் - பிணங்கவில்லை]

'காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காணாதபோது பிழைதவிர வேறு காண்பதில்லை', '(ஆனால்) அவரைக் பார்க்காவிட்டால் அவரிடம் குற்றங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரிவதில்லை', 'அவனைக் காணாதபோது குற்றமல்லாதவற்றை அறியேன். (அவர் குற்றமே காண்டேன்.)', 'காணாதபொழுது தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணவில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காணாதபொழுது தவறுகளைத் தவிர வேறு தெரிவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காணுங்கால் காணேன் தவறாய; காணாதபொழுது தவறுகளைத் தவிர வேறு தெரிவதில்லை என்பது பாடலின் பொருள்.
'காணுங்கால் காணேன் தவறாய' குறிப்பது என்ன?

காணாத போது தலைவர் பற்றித் தோன்றிய களங்கமெல்லாம் இப்பொழுது எங்கே போயின?

கணவர் தன் அருகில் நெருங்கி இருக்கும்போது அவரது தவறுகள் எதுவுமே கருத்தில் படுவதில்லை. ஆனால் அவர் விலகிச் சென்றவுடன் தவறல்லாதவை எதுவுமே எனக்குத் தெரிவதில்லை, அதாவது எல்லாமே தவறாகப் படுகின்றன என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாக தொலைவு சென்றிருந்த கணவர் திரும்பி இல்லம் வந்துவிட்டார். தன்னை நன்கு அழகுபடுத்திக்கொண்ட தலைவி அவரைத் தனிமையில் பார்ப்பதை எதிர்நோக்கி இருக்கிறாள். தலைவரும் மனைவியும் இன்னும் தனிமையில் சந்திக்கவில்லை. இருப்பினும் இருவரும் நேரில் பார்த்த மகிழ்ச்சியில் குறிப்புகளால் பேசிக் கொள்கின்றனர்.
எப்படிக் காதல் கணவரைக் காணும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறதோ அதுபோல அவரை நினைக்கும் போதெல்லாமும் களிப்பு உண்டாகிறது; காமஎண்ணங்கள் பனையளவு தோன்றினால் தினையளவும் ஊடாமை வேண்டும்; அவர் இல்லம் திரும்பியதிலிருந்து அவர் விருப்பப்படியே எல்லாம் செய்து தன்னை இகழ்கின்றாரெனினும் அவரைக் பார்க்காது தன் கண்கள் அமைவதில்லை; அவருடன் ஊடல் கொள்ளவே விரும்புகிறேன். ஆனால் அதை மறந்து தன் நெஞ்சு அவரைக் கூடத்தான் நினைக்கிறது; கண்ணில் மை எழுதப்படும்பொழுது கோலைக் காணமுடியாது, அதுபோல கணவரைக் கண்டபொழுது அவர் தவறுகளைத் தன்னால் காணமுடியவில்லை;
இவ்வாறு எண்ணிக்கொண்டு அவரைக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கிறாள் தலைமகள்.

இக்காட்சி:
கணவர் பிரிந்து சென்ற நாளிலிருந்து அவரை நினைந்து நினைந்து இன்றுவரை துயரத்திலே ஆழ்ந்திருந்தாள், பணி முடிந்து திரும்பியுள்ள தலைவர் இப்பொழுது அவள் கண்முன்னேதான் இருக்கிறார்; அவரை நேரில் கண்டதில் பெருமகிழ்ச்சியுடன் காட்சி அளிக்கிறாள் அவள்.
தலைவரை நேரில் பார்த்ததும் அவருடன் ஊடல் கொள்ள வேண்டும் என்றிருந்த எண்ணமும் மனைவிக்கு மறைந்துவிட்டது. அப்பொழுது அவள் சொல்கிறாள்: அவர் அருகில் இல்லாதபோது அவருடைய குற்றங்கள் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றுவதில்லை. குற்றங்கள் என்றது அவளைத் தனிமையில் துன்பம் துய்க்கச் செய்துவிட்டுச் சென்றது; குறித்த காலத்தில் இல்லம் திரும்பாதது; சென்றபின் செய்தி ஏதும் அனுப்பாதது போன்றன. அவரை நேரில் கண்டபின் இக்குற்றங்கள் எல்லாம் அவள் மனத்திலிருந்து நீங்கிவிட்டனவாம்.

பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
பிரிந்த பொழுது நினைந்துஅவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனப்பொற் கபாடந் திறமினோ
(கலிங்கத்துப் பரணி 65 பொருள்: பிரிவுத் துன்பத்தால், அன்பு செய்யும் கணவர் செய்யும் பிழைகளையெல்லாம் நினைந்து, அவரைக் கண்ட உவகையில் அதை மறந்திருப்பீர் திறமின்) எனக் காதல்மனைவியின் இயல்பு கூறும் சிற்றிலக்கிய தொகைப் பாடல் ஒப்பு நோக்கத்தக்கது.

'காணுங்கால் காணேன் தவறாய' குறிப்பது என்ன?

'காணுங்கால் காணேன் தவறாய' என்றது (அவரைக்) காணும்போது அவர் செய்த தவறுதல்களை காணேன் எனப் பொருள்படும். அதாவது அத்தவறுகள் எனக்குத் தோன்றுவதில்லை என்பதாம்.
'என் கணவர் என் உடன்இருந்து கொண்டேயிருந்தால் அவர் என்ன குற்றம் செய்தாலும் அது குற்றமாகவே தோன்றுவதில்லை. ஆனால் அவர் என்னை விட்டுப் பிரிந்து போனால் அவர் செய்யும் எல்லாமும் குற்றமாகவே எனக்குப் படுகிறது' என்று தலைவி சொல்வது அவளது தீராத காதல் அன்பையே காட்டுகிறது. தன் கண்பார்வையில் இருந்து ஒருபொழுதும் கணவர் விலகக் கூடாது என்று தலைவி விரும்புகிறாள். காதல் பெருக்கத்துடன் அவள் இவ்வாறு கூறுவதில் நீண்ட பிரிவிலிருந்து வந்துள்ளவரைச் சென்று விரைவில் சேர வேண்டும் என்ற ஆசையும் வெளிப்படுகிறது.
பிரிவு தலைவரைக் குற்றவாளியாகக் கருதச் செய்யும். தலைவர் இல்லாதபோது அவர் செய்த தவறுதல்கள்தாம் நினைவுக்கு வந்தன. ஆனால் அவரை நேரில் கண்டவுடன் முன் நினைந்ததையெல்லாம் மறந்து அவனுடன் கூடுவதற்கு நெஞ்சு விரைகிறது.
இக்குறளுக்கு உரை வரைந்த பரிதி 'நாயகரைக் கண்டால் குற்றம் காணேன்; காணாக்கால் குற்றம் காண்பேன்; இது என்ன மாயமோ' என்றார். ஆம்! இது ஒரு மாய நிலைதான். அருகில் இருந்தால் நல்லவன். விலகிப்போனால் கொடுமைக்காரன் என்பது தலைவியின் மனநிலை. காலிங்கர் 'நாள்தோறும் காணாக்கால் ஆற்றாமையும் கண்ட இடத்து வழிபாடும் கற்புடை மகளிர்தம் கடன் என்பது பொருள்' என உரைக்கிறார்.
காதல்கணவர் சேய்மையில் இருக்கும்போது அவர் செய்த குற்றங்கள் நினைவில் மேலோங்கி அவருடன் சண்டைபோட வேண்டுமென்று விரும்புவதும், காணும்படி அருகில் வந்துவிட்டாலோ அவரிடம் குற்றமிருப்பதாக நினைக்க முடியாமல் அவருடன் கூடி உறவாடுவதும் மகளிர் இயல்பு எனக் கூறப்பட்டது.

'காணுங்கால் காணேன் தவறாய' என்பது தலைவரைக் காண்கையில் அவரது தவறுகள் தெரிவதில்லை என்பதைச் சொல்வது.

கணவரை நேரில் பார்க்கும்போது தவறுகள் தென்படுவதில்லை; காணாதபொழுது தவறுகளைத் தவிர வேறு தெரிவதில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

என் அருகில் இல்லாமலிருப்பதுதான் கணவன் செய்யும் குற்றம் என்னும் தலைவியின் புணர்ச்சிவிதும்பல்.

பொழிப்பு

கணவரைக் காணும்போது அவர் தவறுகளைக் காண்பதில்லை; காணாதபோது தவறன்றி வேறுஎதுவும் தெரிவதில்லை.