இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1279



தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1279)

பொழிப்பு (மு வரதராசன்): தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.



மணக்குடவர் உரை: தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது.
அது - உடன்போக்கு.

பரிமேலழகர் உரை: (தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.
(செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275) என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.)

இரா சாரங்கபாணி உரை: காதலர் பிரிந்தால் இவை நில்லா என வளையல்களை நோக்கி இவை மெலியும் எனத் தோள்களை நோக்கிப் பின் இவை நிகழாமல் அவருடன் சென்று காத்தல் வேண்டுமெனத் தன் அடிகளையும் நோக்கி அவள் ஆண்டுச் செய்த குறிப்பு உடன்போக்காகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடி நோக்கி மென்தோளும் நோக்கி அடி நோக்கி அஃது ஆண்டு அவள் செய்தது.

பதவுரை: தொடி-கைவளை; நோக்கி-பார்த்து; மென்தோளும்-மென்மையான தோளும்; நோக்கி-பார்த்து; அடி-தாள்; நோக்கி-பார்த்து; ஆண்டு-அவ்விடத்து, அப்பொழுது, அங்ஙனம்; அவள்-அப்பெண்; செய்தது-செய்து காட்டியது.


தொடி நோக்கி மென்தோளும் நோக்கி அடி நோக்கி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி;
பரிப்பெருமாள்: தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி;
பரிதி: நாளை உடன்போக்குக்கு உடன்பட்டுத் தன் வளையைப் பார்த்தும், தோளைப் பார்த்தும், காலைப் பார்த்தும்;
காலிங்கர்: நெஞ்சே! தன் வளையை நோக்கி மற்று அவ்வளை அணிந்த மென்தோளினையும் நோக்கிப் பின் தன் சீறடியையும் நோக்கிவிட்டு;
காலிங்கர் குறிப்புரை: எனவே இற்றைநாள் நம்மோடு செறிந்திருந்த வளையே! இவர் எம்மைவிட்டு நீங்க நீங்குவை; பணைத்து நிறத்தது ஓர் தோளே! நீயும் இவர் விடப் பசுக்குவை; இறுதிக்கண் கைவிடும் நும்மை நம்புவதனினும் அவர் தம்மோடு சேறலே தலைமை; இதற்கு இனி இவ்வடியிணை செய்வது என்னை என்று அறிகிலேன் என்று இவை அவை நோக்கி நம் குறிப்பு அறிந்து அலமால் உற்ற அத்துணையே;
பரிமேலழகர்: (தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி, அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி, பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; [யான் அது தெளிவித்த வழி - தோழியாகிய யான் உனது பிரிவைத் தெளிவித்தவிடத்து; இவை (நில்லா) - வளையல்கள்; அதற்கு ஏதுவாக - வளையல்கள் நில்லமைக்குக் காரணமாக; இவை - தோள்கள்; இவ்விரண்டும் - வளையல்கள் நில்லமையும் தோள்கள் மெலிதலுமாகிய இவ்விரண்டும்;]

'தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அடி இணை செய்வது என்ன என்று அறியாமாட்டேன்' எனக் கலங்கி நிற்பதாகவும் பரிமேலழகர் 'இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும்' எனவும் விளக்கம் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வளையலையும் தோளையும் காலையும் பார்த்தாள்', '(தளர்ந்து போன) வலையல்களைப் பார்த்துவிட்டு, மெலிந்து போன தன் கைகளையும் பார்த்துவிட்டு (தலை குனிந்து கொண்டு) தன் பாதங்களைப் பார்த்தாள்', 'பிரிவினால் வளையல் கழலுமென்று வளையலை நோக்கி, தோள் மெலியுமென்று தோளைத் நீக்கித் தம்மை நீர் நடந்து காக்கவேண்டு மென்று தன் அடிகளுக்குணர்த்துவாள்போல அடிகளை நோக்கி', 'வளையல்களைப் பார்த்து, மெல்லிய தோள்களைப் பார்த்து, அடிகளைப் பார்த்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி என்பது இப்பகுதியின் பொருள்.

அஃது ஆண்டு அவள் செய்தது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது.
மணக்குடவர் குறிப்புரை: அது - உடன்போக்கு.
பரிப்பெருமாள்: அவள் அவ்விடத்துச் செய்த குறிப்பு அதுவாயிருந்தது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அது - உடன்போக்கு. இஃது யான்பிரிவு உணர்த்தியவழி, இருப்பேம் ஆயின் தோள் மெலிந்து வளை கழலும் என்று நினைத்துப் போவளாகக் கருதி நடக்கவல்ல ஆகவேண்டும் என்று அடியைப் பார்த்தாள்; ஆதலால் உடன்போதல் கருதினள் என்று தோழி தலைமகற்குக் கூறியது
பரிதி: செய்தால் பாலையில் பரல் கடக்க வேண்டும் என்னும் குறிப்பு என்றவாறு.
காலிங்கர்: அத்துணையே அவ்விடத்து அவள் செய்த கருமம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: நெஞ்சே! யாம் ஒன்று குறித்த இடத்து அவள் செய்த கருமம் இவை என்று எண்ணிச் செலவு அழுங்குவனாவது பயன் என அறிக.
பரிமேலழகர்: அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275) என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.

'அவ்விடத்துச் செய்த குறிப்பு அதுவாயிருந்தது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'அது' என்பதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் உடன்போதல் குறித்தது என்றனர்; காலிங்கரும் பரிமேலழகரும் அஃது அழுங்குதல் பயன் என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இது பிரிவு சொன்னபோது அவள் செய்தது', 'அவ்வளவுதான் அப்போது அவள் செய்தது', 'அவ்விடத்து உடன்போக்கைத் தலைவி குறிப்பித்தாள்', 'அவள் அங்கே செய்தது அது. (உடன் போக்குக்கு உடன்பட்டாளாகக் குறிப்புச் செய்தாள்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது அவ்விடத்து அவள் செய்தது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி அது அவ்விடத்து அவள் செய்தது என்பது பாடலின் பொருள்.
'அது அவள் செய்தது' குறிப்பது என்ன?

இன்னொரு பிரிவை என்னால் தாங்கமுடியாது; பிரிவு உண்டானால் என்னையும் உடன் கூட்டிச் செல்லுங்கள் என்கிறாள் தலைமகள்.

தன் கைவளைகளை நோக்கி, மெலிந்த தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அது அவள் செய்தது.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிவில் சென்றிருந்த தலைவர் இல்லம் திரும்பியுள்ளார்; அதுவரை ஆற்றாது வாடியிருந்த மனைவி புத்துணர்வோடு காட்சி தருகிறாள். ஆயினும் இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்கவில்லை. குறிப்புகள் வாயிலாகவே உரையாட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
'என்னைவிட்டு நீங்காமல் என்னுடனேயே நீங்கள் எப்பொழுதும் இருக்கவேண்டும்' என்ற செய்தியைச் சொல்ல மனைவியின் நாண் தடுத்தாலும் மையுண்ட அவள் கண்களினூடே அக்குறிப்பை தலைவர் தெரிந்துகொண்டார்; தன் கண் முன்னேதான் கணவர் இருக்கிறார் என்ற பெருமகிழ்வில் புதுப்பொலிவுடன் தோன்றுகிறாள் தலைவி. புற அழகுநலம் மிகக் கொண்டுள்ள இவளுக்கு நாணம் என்னும் அக அழகும் நிறைந்துள்ளது இன்னும் பேரழகாம் என இவற்றை அறிந்து மகிழ்ந்து சுவைக்கிறார் அவர்; மணியில் கோக்கப்பட்டுள்ள நூல் புறத்துத் தெரியாமல் தெரிவது போன்று, காதலியின் உள்ளத்தில் அவரைப் பெரிதும் காதலிக்கிறாள் என்பதும் விரைந்து கூட விரும்புகிறாள் என்பதும் இழையோடி இருப்பது அவளது தோற்றப்பொலிவில் அவர்க்குக் குறிப்பாகத் தெரிந்தது; அரும்பினுள்ளே இருக்கும் நறுமணம் எப்படிப் புறத்துப் புலனாவதில்லையோ அது போன்று தலைவியின் முறுவலில் புறத்தே புலனாகாத காதல்ஆசைகள் முகிழ்த்துத் தோன்றுகின்றன; தன் கைநிறைய உள்ள வளையல்களைத் தன் கணவர்க்கு மட்டுமே புரிகின்றவகையில்க் குலுக்கி ஒலி எழுப்பிக் கள்ளத்தனமாகக் குறிப்புத் தந்தபோது தன் துயரம் எல்லாம் நீங்கியதுபோல் அவர் உணர்ந்தாராம்;
இச்சமயத்தில் மனைவியின் நெஞ்சம் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கிறது - அவர் உடனிருக்கும் இந்த இன்பம் இப்படியே நிலைக்குமா? அல்லது தனக்குத் தண்ணளி செய்யாமல் அவர் மீண்டும் பிரிந்து செல்வாரா? இன்னும் சிறிது நேரத்தில் அன்புடன் கூடிக் கலப்பார் என்பதும் அவள் அறிந்ததேயானாலும் மீண்டும் அன்பற்றுப் பிரிந்து போய் விடுவாரோ என்று காதலி கவலையுறுகிறாள்; இவ்வாறாகத் தலைவரோடு கூடி இன்பத்தை நுகரப்போகிற நேரத்தில் தலைவியின் மனமானது, 'இவ்வளவுகாலம் ஆற்றியிருந்த கொடுமையான பிரிவுத் துன்பத்தை நினைந்து அது மீண்டும் வரக்கூடாதே' என எண்ணுகிறது. அவர் அன்புடன் தலைவியை நோக்குகிறார். அந்த அன்பு நோக்கே அவளுக்கு விரைவில் பிரியப் போகிறாரோ என்ற ஐயத்தை உண்டு பண்ணுகிறது. பிரிவச்ச மனநிலையில் உள்ளதால் அவர் பிரிந்தேவிட்டார் என்பது போலக் கலக்கமுற்றாள். அவர் பிரிவை ஆற்றியிருக்க முடியாது என உள்ளத்தால் வருந்தியதனால் அவள் உடல் வாட்டமுற்றதாகிறது. உடல் வாடியதால் வளையல்கள் கைகளினின்று கழலத் தொடங்கி விட்டனவாக உணர்ந்து தான் தலைவனது பிரிவை தெரிந்துகொள்வதற்கு முன்னரே தன்னுடைய வளையல்கள் அறிந்து விட்டன என்கிறாள் தலைவி. மேலும் 'என் தலைவர் நேற்றுத்தான் என்னை விட்டுப் பிரிந்தார். ஆனால், அவர் பிரிவை உணர்ந்து என் உடல் பசந்து ஏழுநாள்களாகிவிட்டன' எனவும் கூறுகிறாள் அவள்.
தான் செய்யும் தொழிலின் இயல்பு காரணமாக அவர் அடிக்கடி பிரிந்து செல்பவராக இருக்கவேண்டும். எனவேதான் அவர் வந்ததும் மறுபடியும் திரும்பப் போவதற்காகத்தானே வந்திருக்கிறார் என்று தலைவி கருதுகிறாள்; அவர் பிரிந்து சென்று விட்டதாகவே நினைக்கத் தொடங்கி விட்டாள் தலைவி. காதலன் உடன் இருக்கும் போதே பிரிந்துவிட்டார் போன்ற அச்சநிலையில் மனைவி இப்பொழுது இருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிவினால் வளையல்கள் கழலும் என்று உணர்த்த அவற்றை நோக்கியும், அவளுடைய மெலிந்ததோள் இன்னும் நலிவுறும் என்ற கருத்தால் அவற்றை நோக்கியும், தம்மைக் காக்கக் காதலருடன் நடக்க வேண்டிவரும் என்பதற்காகத் தன் அடிகளையும் நோக்கினாள்; இக்காட்சியைக் கண்ணுற்று 'அது அவ்விடத்து அவள் செய்த குறிப்பு' என்று தலைவர் கூறுகிறார்.
இப்பொழுதுதான் கணவர் திரும்பி வந்துள்ளார். அதற்குள் மனைவியின் பேதை நெஞ்சுள் அவர் மறுபடியும் பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற அச்சம் தோன்றி அவர் பிரிந்துவிட்டதாகவே கற்பனை செய்துகொள்கிறாள். அவர் நீங்கிவிடக்கூடாதே என்ற மனநிலையில் எழுந்தது இது. அப்பொழுது அவள் ஒன்று செய்தாள் - கணவர் பார்வை படும்படி இருக்கும்போது கைவளையல்களை நோக்கினாள்; அடுத்து தன் மெல்லிய தோள்களைப் பார்த்தாள். பின் தன் தாள்களை நோக்கினாள். தலைவியின் இச்செயல் தரும் குறிப்பு என்ன? அவர் பிரிந்தால் வளையல்கள் கழலும் தோள் மெலியும் என்று தலைவர்க்குத் தெரிவிக்கிறாள்; இனியும் அவரை நீங்கித் தன்னால் வாழமுடியாது என்பதையும் அப்படி அவர் பிரிந்தே ஆகவேண்டியிருந்தால் தானும் உடன் போதலே செய்வது என்பதையும் அறிவிக்கத் தன்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்பாள் போலத் தன் சீறடிகளை நோக்கினாள். இதுவே அவள் செய்த குறிப்புக்கள்.

'அது அவள் செய்தது' குறிப்பது என்ன?

'அது அவள் செய்தது' என்றதற்குக் குறிப்பு அது உடன்போக்காயிருந்தது, உடன்போதல் கருத்தினள், நாளை உடன்போக்குக்கு உடன்பட்டு பாலையில் பரல் கடக்க வேண்டும் என்னும் குறிப்பு, அவள் செய்த கருமம் இவை என்று எண்ணிச் செலவு அழுங்குவனாவது பயன், அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது, அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும், உடம்புபிரிவால்‌ மெலிந்துவிடும்‌ என்றும்‌ அது நிகழாமல்‌ உடன்‌ செல்லுமாறு அடிகளை நோக்கினாள்‌ என்பதாம், ஒன்று என்னையும் உடனழைத்துச் செல்லுங்கள் அல்லது செல்லுவதைத் தவிருங்கள் எனத் தலைவி பேசாமல் பேசிக் குறிப்பால் அறிவித்த திறம் இது, இது பிரிவு சொன்னபோது அவள் செய்தது, இவை நிகழாமல் அவருடன் சென்று காத்தல் வேண்டுமெனத் தன் அடிகளையும் நோக்கி அவள் ஆண்டுச் செய்த குறிப்பு உடன்போக்காகும், (தலை குனிந்து கொண்டு) தன் பாதங்களைப் பார்த்தாள். அவ்வளவுதான் அப்போது அவள் செய்தது, அவள் செய்தது அவ்வளவேயாம்!, அவ்விடத்து உடன்போக்கைத் தலைவி குறிப்பித்தாள், அவள் அங்கே செய்தது அது. (உடன் போக்குக்கு உடன்பட்டாளாகக் குறிப்புச் செய்தாள்), அப்புறம் எமையும் அழைத்துச் செல்லுங்கள் என்ற குறிப்புடன் தன் பாதங்களைப் பார்த்தாள், அஃது ஆண்டு அவள் செய்தது-இங்ஙனம் உடன்போக்குக் குறித்த அச்செயலையே அன்று அவள் செய்தாள்; பிரிவுக் குறிப்புண்டாயின் செலவழுங்குவித்தல் இதன் பயனாம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காதலன் தன்னைக் காணும்போது தன் வளைகளைப் பார்க்கிறாள். தன் தோள்களைப் பார்க்கிறாள்; பின்னர் தன்னுடைய அடிகளை நோக்குகிறாள். தலைவி அரங்கேற்றிய இந்த ஊமை நாடகம் தரும் குறிப்பு என்ன?
'அது உடன்போக்குக் குறிப்பு, உடன்போதல் இல்லாவிட்டால் செலவுஅழுங்கல் (செல்வதை நிறுத்துதல்), உடன்போக்குக்கு உடன்பட்டு பாலையில் பரல் கடக்க வேண்டும், உடம்புபிரிவால்‌ மெலிந்துவிடும்‌;‌ அது நிகழாமல்‌ உடன்‌ செல்லவேண்டும் என்று பலரும் உடன்போக்கே குறிப்பாக உள்ளது என்று இச்செயலுக்கு உரைசெய்தனர்.
உடன்போக்கு என்பதற்கு உடன்செல்லுதல் என்று பொருள். தலைவன் பிரிவில் செல்லும்போது தன்னையும் கூட்டிச் செல்லுமாறு தலைவி வேண்டுவதாக இக்குறட்கருத்தை விளக்குவர். உடன்போக்கு என்பது களவியலுக்குரியது என்று கருதப்படுவது. களவில் காதலனும் காதலியும், மணவினைக்கு முன், பெற்றோர்க்கு அறிவிக்காமல் இல்லத்திலிருந்து இடம்பெயர்ந்து செல்வதை உடன்போதல் என்பர். உடன்போக்கு களவுக்குரியது என்ற பொதுவான கருத்தால் இக்குறட்பாவையும் இவ்வதிகாரத்து மற்றப் பாடல்களையும் களவிற்குரியதாகக் கொண்டு சிலர் உரை செய்ததால் குழப்பம் உண்டாயிற்று. அதிகாரப் போக்கு தடைபெற்றது.
ஆனால் உடன்போதல் கற்பியலிலும் உண்டு என்று சொல்பவர்களும் உண்டு. கற்பியலில் உடன்போதல் என்பது தொழில் காரணமாகக் கணவன் செல்லும்போது உடன்போவதைக் குறிக்கலாம். ஆனால் அது படிப்பதற்குச் சுவையாக இருக்காது என்பதால் பொதுவாக அங்கு பாடப்படுவதில்லை. இருப்பினும் இவ்வதிகாரம் கற்பியலுக்கு உரியதுதான் என்றும் அங்கு உடன்போதலைத்தான் மனைவி குறிப்பிட்டாள் எனவும் கொள்வதில் குற்றமில்லை. எனினும் கடமையாற்றச் செல்லுமிடத்தில் கணவர் மனைவியையும் கூட்டிச் செல்லுதல் - அன்றும் சரி, இன்றும் சரி - மரபு அன்று; அது முறையும் இல்லை.

பிரிவின் துயரத்தை ஏற்கனவே துய்த்தது போதும்; இனி ஒருபொழுதும் தலைவர் தன்னுடன் இல்லாமல் தன்னால் ஆற்றியிருக்க முடியாது என்பது காதல்மனைவி தந்த குறிப்பின் பொருள்.

தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி அது அவ்விடத்து அவள் செய்தது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மறுபடியும் தலைவன் பிரியநேரிட்டால் அதற்கான தீர்வைக் குறிப்பறிவுறுத்தலாகக் காதல் மனைவி செய்தது.

பொழிப்பு

வளையலைப் பார்க்கிறாள்; தோளைப் பார்க்கிறாள்; அடிகளைப் பார்க்கிறாள். அவ்வளவே அவள் செய்தது.