இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1274



முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1274)

பொழிப்பு (மு வரதராசன்): அரும்பு தோன்றும்போதும் அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

மணக்குடவர் உரை: மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு.
இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு.
(முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.)

வ சுப மாணிக்கம் உரை: மொட்டுக்குள் மணம் இருத்தல் போல இவள் சிரிப்புக்குள் ஒரு குறிப்பு உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு.

பதவுரை: முகை - மலரும் பருவத்து ஆகிய அரும்பு; மொக்குள் - மொட்டினுள்; உள்ளது - இருக்கும், இருப்பதாகிய; நாற்றம்போல் - நல்ல மணம் போன்று; பேதை - பெண். இவ்விடத்து காதலி குறித்தது; உள்ளது ஒன்று உண்டு - இருப்பதாகிய (குறிப்பு) ஒன்று உண்டு.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போல;
பரிப்பெருமாள்: மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போல;
பரிதி: அரும்புக்கு நாற்றம்போலே;
காலிங்கர்: நெஞ்சமே! முன் அரும்புகின்ற முகையானது பின் புடைபெயர அங்ஙனம் மொக்குளித்து நின்ற மொக்குகளின் அகத்து ஒரு நாற்றம் உள்ளதுபோல;
பரிமேலழகர்: (இதுவும் அது.) முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; [முகை-மொட்டு (அரும்பு); நாற்றம் - மணம்]
பரிமேலழகர் குறிப்புரை: முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். [புடைபடுதல் -உப்புதல்]

'மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலரப் போகின்ற மொட்டில் உள்ளதாகிய மணம்போல', '(இதழ் விரியாவிடினும்) மலரப் போகிற பூ மொட்டுக்குள் உள்ளே இருக்கிற மணம் (வெளீயிலும் வீசுவது) போல', 'இதழ் மூடிய அரும்பினுள் மணம் அடங்கியிருத்தல்போல', 'பூ மொட்டு மலரும் சமயத்தில் உள்ளிருந்து தோன்றும் நறுமணம் போல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மலரும் நிலையிலுள்ள மொட்டில் உளதாகிய மணம்போல என்பது இப்பகுதியின் பொருள்.

பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோரின்பம் உண்டு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோரின்பம் உண்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்த இடத்து, இவள் குறிப்பினாள் நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: நாயகி சிரிப்பிலே, அன்பு உண்டு அல்லது இல்லை என்று காட்டும் என்றவாறு.
காலிங்கர்: இப்பேதையாளது நகைமொக்குள் அகத்துப் புறப்படாது பொதிந்திருப்பதோர் குறிப்பு உண்டுகாண்; காலிங்கர் குறிப்புரை: எனவே யான் தன்னைப் பெரிது அளித்தமை பிறிது ஒன்றிற்கு உரித்து என்று இங்ஙனம் குறித்தனள் போலும் என்றவாறு.
பரிமேலழகர்: நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. [குறிப்பு-புணர்ச்சி இன்பத்தைக் காட்டும் குறிப்பு]
பரிமேலழகர் குறிப்புரை: நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.

பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோர் இன்பம்/குறிப்பு உண்டு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெண்ணின் சிரிப்பு முகிழ்ப்பில் உள்ளதாகிய ஒரு குறிப்பு உண்டு. (குறிப்பு-புணர்ச்சிக் குறிப்பு)', '(பல் தெரியாமல்) குவிந்திருக்கிற இப்பேதையின் உதடுகளின் உள்ளே (சிரிப்பு) இருக்கிறது (எனக்குத் தெரிகிறது)', 'இவளது சிரிப்பாகிய முகிழ்ப்பினுள் அடங்கியிருக்கும் ஒரு குறிப்பு உண்டு', 'இப் பெண் சிரிக்க விரும்பும் சமயத்தில் தோன்றும் ஒரு குறிப்பு உண்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இவ்விளம்பெண்ணினது நகைமுகிழ்ப்பில் ஒரு குறிப்பு உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மலரும் நிலையிலுள்ள மொட்டில் உளதாகிய மணம்போல இவ்விளம்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு என்பது பாடலின் பொருள்.
'நகைமொக்குள்' குறிப்பது என்ன?

இவளது அமுக்குச் சிரிப்பிற்குப் பொருள் உண்டு.

மலரும் நிலையிலுள்ள மொட்டில் உளதாகிய மணம் போல, தலைவியின் உள்ளத்தில் இருக்கும் மறைபொருளான எண்ணம் ஒன்றினை அவளது புன்முறுவல் என்னும் குறிப்பு தெரிவிக்கின்றது.
காட்சிப் பின்புலம்:
பிரிவிற் சென்றிருந்த கணவர் கடமை முடித்துத் திரும்பி வந்துவிட்டார். அவர் வீடு திரும்புகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே அதுவரை தளர்ந்திருந்த தலைவியின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. அவரும் இப்பொழுது இல்லம் வந்துவிட்டார். கண்ணுக்கு மையெழுதி மணிமாலை அணிந்து அவரை எதிர்கொள்ள நிற்கின்றாள். வீடு திரும்பிய தலைவனும் மனைவியை நெருக்கமாகச் சந்திக்க இயலவில்லை. அதனால் பலவகைக் குறிப்பு மொழிகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
'என்னைவிட்டு நீங்காமல் என்னுடனேயே நீங்கள் எப்பொழுதும் இருக்கவேண்டும்' என்ற செய்தியைச் சொல்லாது மறைத்தாலும் அவளது மையுண்ட கண்களினூடே அக்குறிப்பைத் தலைவர் அறிந்துகொண்டார்; மூங்கிலை ஒத்த வளவளப்பான உடல்அழகு மிகக் கொண்டுள்ள இவளுக்கு நாணம் என்னும் பெண்மையும் மிக நிறைந்துள்ளது என்றிவற்றை மகிழ்ந்து சுவைக்கிறார் அவர்; மணியில் கோக்கப்பட்டுள்ள நூல் தெரியாமல் தெரிவது போன்று, அவளது உள்ளத்தில் அவரை விரைந்து கூட விரும்புகிறாள் என்பது இழையோடி இருப்பதாக அவளது தோற்றப்பொலிவில் அவர்க்குக் குறிப்பாகத் தெரிந்தது;
இவ்வாறு அவள் தரும் குறிப்புகளை அவளது உடல்உறுப்புகள் வாயிலாகத் தலைவர் தெரிந்துகொண்டிருக்கிறார்.

இக்காட்சி:
இங்குள்ள காட்சியில், நாண்மிக, கணவரை நோக்கி, உப்பிக்கொண்டு வருவதுபோன்ற புன்னகையை முகிழ்க்கின்றாள் தலைவி. அது கண்டு. திரண்டு விரிய உள்ள மலரின் மொக்கின் உள்ளே நறுமணம் வெளிப்படாது அடங்கிக் கிடப்பது போல் வெள்ளை உள்ளம் படைத்த மனைவியின் குறுநகைக்குள்ளே அவளது உள்ளக் குறிப்பு ஒன்று உண்டு என உணர்கிறார் தலைவர். அந்த 'ஒன்று' என்பது யாது? 'ஒன்று' என்ற அச்சொல்லுக்கு இன்பம், அன்பு, குறிப்பு, புணர்ச்சியின்பத்தை வேண்டும் குறிப்பு, புணர்ச்சிக் குறிப்பு, சிரிப்பு எனப் பொருள் கூறினர். இங்கு 'ஒன்று' என்றதற்குக் காதல்இன்பம் வேண்டிநின்ற குறிப்பு என்ற பொருள் பொருத்தம். அவள் தலைவர்மீது அளவு கடந்த காதல் கொண்டிருக்கிறாள் என்பது அந்தக் குறிப்பு. வாய்விட்டு வெளிப்படையாய்ச் சொல்லவியலாக் கூட்ட இன்பத்தை விரும்பும் தலைவியின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து அதை மறைந்திருக்கும் மொட்டின் நறுமணத்திற்கு ஒப்பாக்கி 'ஒன்று' எனத் தலைவர் குறிக்கிறார்.
தன் காதல் ஆசைகளை உள்ளே அடக்கி வைத்து, தலைவி தன் உதடுகளைக் குவித்து இல்லம் திரும்பியுள்ள கணவரைப் பார்த்து புன்முறுவல் செய்கிறாள். அக்காட்சியைப் பார்த்த தலைவர்க்கு அவள் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை வாசிக்க முடிகிறது. மலரும் நிலையிலுள்ள பூ தன்னுள்ளே நறுமணம் கொண்டிருந்தாலும் அது எப்படிப் புறத்துப் புலனாவதில்லையோ அது போன்று புடைத்துக் கொண்டிருக்கும் தலைவியின் முறுவலில் அவளது மனத்திலுள்ள எண்ணங்கள் முகிழ்த்துத் தோன்றுகின்றன; அவளது நகைமொக்குள் தனக்கு மட்டுமே விளங்கக்கூடிய காமக் குறிப்பு இருப்பதைத் தலைவர் அறிகிறார்.

மொட்டினுள்ளே இருக்கும் நறுமணம் எப்படிப் புறத்துப் புலனாவதில்லையோ அது போன்று தலைவியின் உள்ளத்தே காதல்ஆசைகள் முகிழ்த்துள்ளன. தலைவியின் உள்ளம் காதலைச் சொல்ல விழைந்தாலும் அங்குள்ள சூழல் அவள் தலைவரைத் தனியே சந்திக்க இயலாதிருக்கிறது. இந்நிலையில் களங்கமற்ற அப்பெண்ணினது அகத்தே விளங்கும் நாணம் வீறுபெற்றிருப்பதால் கணவர் மீதுள்ள காதல் உணர்வை கள்ளமாக மறைத்து ஒரு குறுநகை மூலம் அவற்றை வெளிப்படுத்துகிறாள். முகையுள்ளும் மணமுண்டு என்பதை உவமைப்படுத்திய இக்காட்சி ஓர் அழகிய சொல்லோவியமாக இக்குறளில் தீட்டப்பட்டுள்ளது.

அரும்பிலிருந்து மலராகி உதிர்வது வரை பதிமூன்று படிநிலைகள் இருக்கின்றனவாம். அவை:
(1) அரும்பு – அரும்பும் நிலை
(2) நனை – அரும்பு வெளித்தெரியும் நிலை
(3) முகை – முத்துப்போன்ற வளர்ச்சி நிலை
(4) மொக்குள் – நாற்றத்தின் உள்ளடக்க நிலை
(5) முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
(6) மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
(7) போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
(8) மலர்- மலரும் பூ
(9) பூ – பூத்த மலர்
(10) வீ – உதிரும் பூ
(11) பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
(12) பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்
(13) செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம்பெற்றழுகும்நிலை

'நகைமொக்குள்' குறிப்பது என்ன?

'நகைமொக்குள்' என்ற தொடர்க்கு நகைமுகிழ்ப்பின்கண்ணே, சிரிப்பிலே, நகையது முகிழ்ப்பினுள் (முகிழ்ப்பு -முதிர்ச்சியாற் புடைபடுதல்), புன்முறுவலின் தோற்றத்தில், மலரும் நிலையிலுள்ள புன்னகையாகிய மொட்டுக்குள், சிரிப்புக்குள், சிரிப்பு முகிழ்ப்பில், பல் தெரியாமல் இதழ் குவிந்திருக்கிற வாயின், சிரிக்க விரும்பும் சமயத்தில், புன்னகை மொட்டுக்குள் புன்சிரிப்பில், புன்முறுவலுக்குள், நகை யரும்பும் முறுவலுக்குள், மொட்டாக இருக்கும் புன்னகையிலும், மலர்ந்த முகத்தில் உண்டாகும் புன்சிரிப்பிலே, புன்முறுவலுக்குள்ளே, சிரிப்பாகிய முகிழ்ப்பினுள் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

நகை என்ற சொல் இங்கு தலைவியின் முறுவல் குறித்து நின்றது. மொக்குள் என்ற சொல் மொட்டாக இருக்கும் நிலையுள் என்ற பொருள் தரும். நகை மொக்குள் என்பது நகைத்து ஏதோ சொல்ல நினைத்த தலைவி அதைச் சொல்ல விரும்பாமல் அடக்கிக் கொள்வதைச் சொல்வது. அந்த அடக்கத்துள் ஒரு குறிப்பு உண்டு என்கிறது பாடல். அக்குறிப்பானது அவள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் காதலின்ப உணர்வுகளாம். காதல் வேட்கை தன்னைத் தாக்க உளம் நிறைந்த மகிழ்ச்சியில் அவள் முழுவதுமாக நகைக்காமல் புன்னகை மட்டும் காட்டுகிறாள். அது நகைமொக்குள் என்று அழைக்கப்பட்டு மலர் முகிழ்ப்பதற்கு முன்னால் உள்ள நிலையுடன் ஒப்பிடப்பட்டது.
அரும்பு முகிழ்த்திருப்பது புன்முறுவலையும், அரும்பினுள் இருக்கும் மணம் தலைவியின் மனத்தில் நிறைந்திருக்கும் இன்ப உணர்ச்சிகளையும் குறித்து நின்றன.

'நகைமொக்குள்' என்ற தொடர் நகை வெளித்தோன்றாது நகைக்கின்ற தலைவியின் தோற்றத்தைக் காட்டுவது.

மலரும் நிலையிலுள்ள மொட்டில் உளதாகிய மணம்போல இவ்விளம்பெண்ணினது நகைமுகிழ்ப்பில் ஒரு குறிப்பு உண்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவியின் முறுவலிலும் குறிப்பறிவுறுத்தல் உண்டு.

பொழிப்பு

மலரப் போகின்ற மொட்டில் இருப்பதான மணம்போல, இப்பெண்ணின் புன்சிரிப்பு முகிழ்ப்பில் உள்ளதாகிய ஒரு குறிப்பு உண்டு.