இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1270



பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்
உள்ளம் உடைந்துஉக்கக் கால்

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1270)

பொழிப்பு (மு வரதராசன்): துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்று விட்டால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?

மணக்குடவர் உரை: எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?
இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை.
(இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.)

தமிழண்ணல் உரை: பிரிவினால் வருந்தி உள்ளம் உடைந்து சுக்கு நூறாகிவிட்டபிற்பாடு, அவர் நிச்சயம் வருவார் என்ற உறுதியைப் பெற்றுப் பயன் என்ன? அவர் வந்துவிட்டாரென்றாலும் அதனால் பயனென்ன? அதுமட்டுமன்றி வந்தவர் மெய்யுறத் தழுவிக்கொண்டாலும் பயன் என்ன? இறந்துபடும் நிலை வந்துவிட்ட பின், இவற்றால் பயனில்லை.கண் கெட்டபிறகு சூரிய வழிபாடு ஏன் என்பதே தலைவியின் கேள்வி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துஉக்கக் கால்.

பதவுரை: பெறின்-அடைந்தால்தான், நேர்ந்தால்; என்-என்ன?; ஆம்-(அசைநிலை); பெற்றக்கால்-முன்னரே பெற்றிருந்தோமே அதனாலும், அடைந்திருந்தாலும்; என்-என்ன?; ஆம்-(அசைநிலை) உறின்-கலந்தால், இன்பம் உற்றால்; என்-என்ன?; ஆம்-(அசைநிலை); உள்ளம்-நெஞ்சம், மனம்; உடைந்து-முறிந்து; உக்கக்கால்-அழிந்தபோது, சிதறியபோது, மக்கிப்போனபின்பு.


பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?
பரிப்பெருமாள்: அவரைப் பெறுவேம் என்றதனால் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?
பரிதி: நாயகர் வந்தால் என்ன? காதலின்பம் விளைந்தால் என்ன பயன்?
காலிங்கர் ('உறில்' பாடம்): தோழீ! காலை பகல் மாலை என்னும் முக்காலங்களிலும் யாம் அவரை எய்தப் பெறுவோமாயினும் என்? மற்றும் பெற்றோம் ஆயினும் என் ஆம்?......
காலிங்கர் பதவுரை: உறிலென்பது இன்புறுதல் என்றது.
பரிமேலழகர்: (இதுவும் அது.) நம்மைப் பெறக்கடவளானால் என்? அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. [இம்மூன்றும்-பெறின் என்னாம், பெற்றக்கால் என்னாம், உறின் என்னாம் என்னும் இம்மூன்றும்; உடம்பொடு புணர்த்தல் என்பது உத்தி வகைகளுள் ஒன்று. ஒருவன் கூற வேண்டியதை வெளிப்படையாகக் கூறாது தான் கூறுவதன் குறிப்பினால் விளங்கச் செய்தல்; அதன் மேலும் - ஆற்றாமை மேலும்; அதற்கு முன்னே - காதலி இறந்துபடுவதற்கு முன்னே]

'அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது மெய்யுறக் கலந்தால்தான் அதனால் பயன் என்னுண்டாம்?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரைப் பெற்றால் என்ன? தழுவினாலும் என்ன?', 'அவள் அவரைப் பெற்றால் என்ன பயன்? பெற்ற பின்னர் என்ன பயன்? தழுவினாலும் என்ன பயன்?', '(நான் வந்த அலுவலில்)வெற்றி பெற்றுதான் என்ன பயன்? அந்த வெற்றிக்காக மன்னனிடம் பரிசும் பணமும் பெற்றுவிட்டால்தான் என்ன பயன்? (அந்த செல்வங்களுடன்) மனைவியிடம் போய்த்தான் என்ன பயன்? (ஒரு பயனுமில்லை)', 'பெறப்போவதனாலும், பெற்றதனாலும் மெய்யுறப் பொருந்தியதனாலும் என்ன பயன்?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவரைப் பெற்றால் என்ன ஆகப் போகிறது? முன்னர் பெற்றதனாலும் என்னவாம்? கூடி இன்புற்றாலும் என்ன ஆகிவிடும்? என்பது இப்பகுதியின் பொருள்.

உள்ளம் உடைந்துஉக்கக் கால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: எனது உள்ளம் உடைந்து போயினதாயின் பின்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: பக்குவம் தப்பி உள்ளம் உடைந்து உக்கிப்போன தினமே என்றவாறு.
காலிங்கர்: மற்று அதன் முன்னமே உள்ளமானது உடைந்து உக்க காலத்து என்றவாறு.
பரிமேலழகர்: காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி.
பரிமேலழகர் குறிப்புரை: இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.

'உள்ளம் உடைந்து போயின்' என்று மணக்குடவர்/பரிபெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உள்ளம் உடைந்து உக்கிப்போன தினமே' என்றும் காலிங்கர் 'உள்ளமானது உடைந்து உக்க காலத்து' என்றும் உரைத்தனர். பரிமேலழகர் 'உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி' எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் உடைந்து சிதறியபின்', 'தலைவி துன்பம் தாங்காது உள்ளம் உடைந்து சிதறியபின்', '(என்னைப் பிரிந்திருக்கும் ஏக்கத்தால்) என் மனைவி மனமுடைந்தவளாகி அவளுக்கு ஏதேனும் கெடுதியுண்டாகி விட்டால்', 'பிரிதலை ஆற்றாது மனம் உடைந்து இறந்துபட்ட பொழுது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உள்ளம் உடைந்து சிதறியபின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளம் உடைந்து உக்கக்கால் அவரைப் பெற்றால் என்ன ஆகப் போகிறது? முன்னர் பெற்றதனாலும் என்னவாம்? கூடி இன்புற்றாலும் என்ன ஆகிவிடும்? என்பது பாடலின் பொருள்.
'உக்கக்கால்'- என்றால் என்ன?

உள்ளம்தான் உலர்ந்து போய்விட்டதே, இனி. அவர் வந்தால் என்ன, வராவிட்டால்தான் என்ன?

உடைந்த உள்ளத்தளாயின பிறகு முன்புபோல காதல்இன்பம் பெறமுடியுமா? அவர் வந்தால்தான் என்ன? வராமல் போனால்தான் என்ன? வந்து கூடினால்தான் என்ன? என மனம் துவண்டு கேட்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து தொலைவிற் சென்றுள்ளார் கணவர். பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியாமல் உள்ள தலைவி அவர் எப்பொழுது திரும்ப வரப்போகிறார் எனக் காத்திருக்கிறாள்
வழிமேல் விழிவைத்துப் பார்த்துப் பார்த்து தலைவியின் கண்கள் ஒளிமங்கின, நாட்களை எண்ணி எண்ணி விரல்களும் தேய்ந்தன; அவரை நினைக்காமல் இருந்தால் என் அழகுபோய் தோளணிகள் நீங்கத் தொடங்கிவிடும்; தனது ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு விருப்பத்துடன் சென்ற அவர் சென்ற குறிக்கோள் நிறைவுபெற்று திரும்பி வருதலை விரும்பியே நான் உயிரோடு உள்ளேன்; மிகுந்த காதல்கொண்ட காலத்தில் பிரிந்த அவர் வரவை எதிர்பார்த்து என் உள்ளம் மரத்தின் கிளைகள் தோறும் ஏறி எட்டிப்பார்க்கிறது; அவரைக் கண்ட பின்பு எனது மெல்லிய உடலில் பரவியுள்ள பசலை நீங்கிவிடும்; அவர் வந்துவிட்டால் துன்பம் தரும் நோய்கள் நீங்க அவரை அள்ளிப் பருகுவதுபோலத் துய்ப்பேன்; கணவர் திரும்பிவந்தவுடன் அவருடன் ஊடுவேனோ? இறுக அணைத்துக் கொள்வேனோ? அவருடன் கலந்து விடுவேனோ?; வேந்தர்க்கு வெற்றி கிட்டட்டும், நம் தலைவர்க்கு வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் விருந்துண்ணுவோம்!; தலைவிக்கு ஒரு நாள் செல்வது என்பது ஏழு நாள் கழிவதுபோல் நெடிதாகத் தோன்றுகிறதாம். இவ்விதம் தலைவரைக் காணும் ஏக்கத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறாள் மனைவி.

இக்காட்சி:
கணவர் நாளை வருகிறார், இப்பொழுது வந்து விடுவார் எனக் காத்துக்காத்து மனது நொறுங்கிப் போய்விட்டாள் தலைவி. அவர் இன்னநாள் கடமை முடித்துத் திரும்பிவந்துவிடுவேன் எனக் குறித்த நாளில் வரவில்லை. வினை முடிவு நீட்டிப்பதால் அவர் வரும் நாள் மறுபடியும் மறுபடியும் தள்ளிப்போகிறது. அவர் வருவாரா மாட்டாரா? இன்னும் இல்லம் திரும்பாமல் ஏன் என்னை வாட்டி வதைக்கிறார்? என்று கேட்டுக் கேட்டு அவளது மனம் அழிகிறது. இப்பொழுது அவளது எண்ண ஓட்டங்கள் வேறு திக்கில் செல்கின்றன. 'உள்ளம் தான் உடைந்து சிதைந்து சிதறிப்போயிற்றே! இனி அவர் வந்துதான் என்ன ஆகப்போகிறது? வராவிட்டால்தான் என்ன? அப்படியும் அவரை அடைந்து கூடினாலும் தான் என்ன ஆகிவிடும்?' எனப் பக்குவம் தவறி, உடைந்த நெஞ்சினளாய் அடுக்கிய வினாக்களை இகழ்ச்சிக்குறிப்புடன் தொடுக்கிறாள் தலைவி.

உறின் என்ற சொல் அடைந்தாலும் என்ற பொருளது. காலிங்கர் இன்பம் அடைதல் என இதற்குப் பதவுரை தருகிறார். மற்றவர்கள் மெய்யுறக் கலத்தல் எனக் கொள்வர்.
'ஆம்' என்றது ஆகும் என்பதன் தொகுத்தல்.
இக்குறளைத் தலைவி கூற்றாகப் பலரும் கொள்ள, பரிமேலழகரும் அவரைப் பின்பற்றுவோரும் இதைத் தலைவன் கூற்றாக உரைக்கின்றனர். ஏன் தலைவன் கூற்று என்பதற்குப் பரிமேலழகர் கூறும் விளக்கம் 'அதற்கு (அவள் இறப்பதற்கு) முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று, இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை யறிக' என்பது.
இப்பாடலைத் தலைவியின் கூற்றாகக் கொள்வதே சிறக்கும்.

'உக்கக்கால்'- என்றால் என்ன?

'உக்கக்கால்' என்ற சொல்லுக்கு போயின், போயினதாயின், உக்கிப்போன தினமே, உக்க காலத்து, இறந்துபட்டவழி, அழிந்து விட்டால், சிதறியபின், கெடுதியுண்டாகி விட்டால், இறந்துபடுவாளாயின், உயிர் பிரியும் நிலை உண்டானால், இறந்துபட்ட பொழுது, தூள் தூளாகிய பிறகு, இறந்து போனால், இறந்து பட்டபின், நிலையிழந்து போய்விடுமானால், அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால், உளுத்துப்போன பின்பு, நிலையிழந்து போய்விடுமானால் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கணவரின் பிரிவு தலைவியின் உள்ளம் தாங்கும் எல்லைக்கு மேல் சென்றுவிடுகிறது. அவளது காதல் வெறும் உடலளவான - உடல் வேட்கையால் அமைந்த காதல் அன்று. உடல் உணர்வினும் உள்ளத்து உணர்வே பெரிதாய் நிற்பது அவளது அன்பு. அவரைக் கண்ணாரக் கண்டு மகிழ மனம் விழைகிறது. அவன் உடனே அவள்முன் தோன்றவேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகின்றது. அதனாலேயே அவளது உள்ள நிலை கெடுவதற்குமுன் அவனை அடைய விரும்பி இவ்வாறு கூறுகின்றாள். உள்ளம் உடைந்து விட்டால் காதலின்பம் விளைந்தாலும் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ஆகவே, தலைவன் விரைந்து வர வேண்டுமென்கிற துடிப்பு அவளிடம் தெரிகிறது.
உள்ளம் உடைந்தவிடத்து இருப்பது உடம்பு ஒன்றுதானாதலால் உள்ளம் உடைந்து உக்கக்கால் என்று சொன்னது அவள் உயிர் அவளிடம் இல்லாதபோது என்ற பொருளில் வந்தது. 'உயிரற்ற உடம்புடன் அவரைக் கூடுவதாலும் என்ன இன்பம் பெறப்போகிறேன்? உடைந்த உள்ளம் சிதறிப் போகும் முன்னர் அவரைக் காணவேண்டும்' என்ற விதுப்புடன் தலைமகள் இவ்வாறு கூறுகிறாள்.
உக்கக்கால் என்பதற்கு இறந்துபட்டால் என்னும் உரை பொருந்தி வரவில்லை. இதற்கு நெஞ்சழிந்து கெட்டுப் போனால் என்ற அளவில் பொருள்கோடல் தகும் என்பார் தண்டபாணி தேசிகர்.

'உக்கக்கால்' என்ற சொல்லுக்குக் கெட்டுப்போனபின் என்பது பொருள்.

உள்ளம் உடைந்து கெட்டுப்போனபின் அவரைப் பெற்றால் என்ன ஆகப் போகிறது? முன்னர் பெற்றதனாலும் என்னவாம்? கூடி இன்புற்றாலும் என்ன ஆகிவிடும்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உள்ளம் உடைந்து அழிவதற்குமுன் கணவரைக் காணவேண்டும் என்ற வேட்கையுடன் அவர்வயின் விதும்பல்.

பொழிப்பு

உள்ளம் உடைந்து கெட்டுப்போனபின், அவரைப் பெற்றால் ஆகப் போகிறது என்ன? முன்னர் பெற்றதனாலும் என்ன பயன்? கூடி இன்புற்றாலும் என்ன ஆகிவிடும்?