இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1268



வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1268)

பொழிப்பு (மு வரதராசன்): அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்றுவரும் மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம்.

மணக்குடவர் உரை: நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வோமாக.
வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.

பரிமேலழகர் உரை: (வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.
(மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: வேந்தன் போரில் ஈடுபட்டு வென்று வருக; மனையில் மகிழ்ந்து மாலையில் விருந்திடுவோம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேந்தன் வினைகலந்து வென்றீக; மனைகலந்து மாலை அயர்கம் விருந்து.

பதவுரை: வினை கலந்து-வினையில் ஈடுபட்டு, அரச காரியம் புரிந்து; வென்றீக-வெற்றியினைப் பெறுக, வெல்க; வேந்தன்-மன்னன்; மனை-இல்லம், மனை; கலந்து-கூடி; மாலை-மாலைப்பொழுது; அயர்கம்-செய்வோம்; விருந்து-விருந்தினர்க்கு இடும் உணவு..


வினைகலந்து வென்றீக வேந்தன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக;
மணக்குடவர் குறிப்புரை: வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள்.
பரிப்பெருமாள்: நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக;
பரிப்பெருமாள் குறிப்புரை: வருதற்கு இடையீடு அரசன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள்.
பரிதி: வினைவென்று வரும் நாயகனது;
காலிங்கர்: காலைப் பகையோடு எதிர்மயங்கிப் பொருது வெல்வோனாக நம் வேந்தனாவன்;
பரிமேலழகர்: (வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; [வேந்தற்கு உற்றுழிப் பிரிவு - ஒரு வேந்தனுக்கு உதவி செய்யப் பிரிதல்]

'வேந்தன் போரின்கண்ணே பொருந்தி/வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி மட்டும் வேந்தன் என்று சொல்லாது நாயகன் என்கிறார். குறளில் காணப்படும் வினை என்பதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் போர் எனக் கொள்ள, பரிதியும் பரிமேலழகரும் வினை என்றே கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் போர் வினையிற் கலந்து கொண்டு வெற்றி பெறுவானாக', 'மேற்கொண்டு வந்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு அரசனிடம் விடைபெற்று', 'அரசன் போர் புரிந்து வெல்வானாக', 'தலைவன் வினை செய்தலைப் புரிந்து வெற்றியடைக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வேந்தன் வினைசெய்தலின் கண்ணே பொருந்தி வெற்றி பெறுவானாக என்பது இப்பகுதியின் பொருள்.

மனைகலந்து மாலை அயர்கம் விருந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வோமாக.
மணக்குடவர் குறிப்புரை: மனை - அட்டில்.
பரிப்பெருமாள்: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வோமாக.
பரிப்பெருமாள் குறிப்புரை: மனை - அட்டில். வந்தால் விருந்து இடுமாறு நினைந்து கூறியது.
பரிதி: மால் என்னும் பசிக்கு என் ஆகம் விருந்திடுவேன்.
காலிங்கர்: என்னெனில் யாமும் இற்றை மாலை எல்லைக்கு இம்மனைக்கண் விருந்து இயற்றுவம் ஆக.
காலிங்கர் குறிப்புரை: அவரோடு வரூஉம் விருந்தினர் அனைவர்க்கும் என்றவாறு.
பரிமேலழகர்: யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.
பரிமேலழகர் குறிப்புரை: மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று. [மனை என்னும் இடப்பெயர் அம்மனையில் இருப்பவளை உணர்த்துதலால் இடவாகு பெயர்; முதலிய என்றமையின் மஞ்சளரிசி தூவல், நறும்புகை காட்டல், விளக்கிடல் ஆகியவற்றையும் கொள்ளலாம்; மாலைக்கு என்னும் நான்கனுருபு (கு) விகாரத்தால் தொக்கு 'மாலை' என நின்றது; அது - தலைமகள் கூற்று என்பது]

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'மனையிலே பொருந்தி மாலைப் பொழுதில் காதலர்க்கு விருந்து செய்வோமாக' என்று இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'மால் என்னும் பசிக்கு என் ஆகம் விருந்திடுவேன்' என்கிறார். காலிங்கர் 'வேந்தரோடு வரும் அனைவர்க்கும் விருந்து இயற்றுவோம்' எனக் கூறினார். பரிமேலழகர் இப்பாடலைத் தலைவன் கூற்றாகக் கொண்டு 'மனைவியைக் கூடி மாலை விருந்து அயர்வேம்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாம் மாலைப்பொழுதில் வீட்டிற்குச் சென்று காதலியோடு கூடி விருந்துண்போம்', 'வீட்டுக்குப் போய் (மனைவியுடன்) மாலை விருந்தாகிய காமக் கலவிகளைச் சலிக்கச் சலிக்க அனுபவிக்க வேண்டும்', 'வென்றமாலைப் பொழுதில் மனைவியோடு கூடி விருந்துண்போமாக', 'வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் விருந்து வைப்போம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வீட்டில் ஒன்றாகக் கூடி மாலைப்பொழுதில் விருந்துண்போம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வேந்தன் வினைசெய்தலின் கண்ணே பொருந்தி வெற்றி பெறுவானாக; வீட்டில் ஒன்றாகக் கூடி மாலை அயர்கம் விருந்து என்பது பாடலின் பொருள்.
'மாலைஅயர்கம் விருந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

'தலைவர் விரைந்து வரட்டும்; விருந்து படைக்கிறேன்' என்கிறாள் தலைமகள்.

'வேந்தன் வினை செய்தலைப் புரிந்து வெற்றியடைக; வீட்டில் ஒன்றாகக் கூடி மாலைப் பொழுதில் விருந்து செய்வோம்' எனத் தலைவி கூறுகிறாள்.
காட்சிப் பின்புலம்:
கணவர் தொலைவு சென்றுள்ளார். அவரை எந்நேரமும் நினைத்து துயருற்றுக் கொண்டிருக்கிறாள் தலைவி. வெற்றிக்கான வலிமையுடன், ஊக்கமே துணையாக, அயல் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே, இன்னும் உயிரோடுள்ளேன் என்கிறாள் அவள். தலைவர் திரும்பி வரப்போகிறார் என்ற செய்தி வருகிறது. அப்பொழுதிலிருந்து அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கிறது. அவர் வரும்வழி மீது விழி வைத்து இமைக்காமல் காத்திருக்கிறாள். சுவற்றில் கோடிட்டு நாட்களை எண்ணியெண்ணி அவளது விரல்களும் தேய்ந்துபோயின; உடல் மெலிந்து அணிகள் நழுவுகின்றன. சென்ற நோக்கத்தில் வெற்றியுடன் அவர் திரும்பிவருதலைப் பார்ப்பதற்காகவே தான் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கூறுகிறாள்.. 'மரத்தின் கிளைகள்தோறும் மனம் ஏறி அவர் வரவை நோக்குகின்றது; அவர் வந்தபின் என்மீது படர்ந்த பசலை நீங்கிவிடும்; என்னை இதுநாள் வருத்தும் காதல் நோய் எல்லாம் தீர அவரை ஆரத் துய்ப்பேனே' என்று நினைக்கிறது அவளது ஆசை நெஞ்சம். மேலும் அவர் வந்தவுடன் ஊடி மகிழ்வதா? இறுக அணைத்துக் கொள்வதா? அல்லது அவருடன் இரண்டறக்கூடி இன்பமடைவதா? என அவர் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்.

இக்காட்சி:
அரசனுக்கு உதவியாகக் காதல்கணவர் போரில் ஈடுபட்டு வென்று திரும்புவாராக! வெற்றி பெற்றுவிட்டால் விரைவில் அவர் இல்லம் திரும்பி வந்துவிடுவார். அன்று மாலை பெரும் விருந்து படைத்துக் கொண்டாடிவிடுவோம்! என இப்பொழுது எண்ணுகிறாள்.
இப்பாடலில் சொல்லப்படும் தலைவர் வேந்தற்கு உற்றுழிப்பிரிவில் சென்றுள்ளவர் அதாவது போர்ச்செயல் புரிவதற்காகக் காதலியைப் பிரிந்து சென்றிருக்கிறார், போர் முடியும் தறுவாயில் இருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் தலைவி பணைத்தெழும் மகிழ்ச்சியில் உள்ளாள். 'தலைவர் சென்ற செயல் வெற்றியுடன் நிறைவேறட்டும்; அவன் விரைவில் வீடு திரும்பட்டும்; அவனுக்கு அன்றைய மாலைப்பொழுதில் நல்லதோர் விருந்து செய்து வைப்போம்' எனத் துள்ளல் குரலுடன் கூறுகிறாள் அவள். கணவர் வருதற்கான இடையூறு வேந்தனது போர்ச்செயல் முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். வென்றல்தானே விரைவில் வீடு திரும்புவார்!
ஒருவர் தாம் மேற்கொண்ட நோக்கம் செம்மையாக நிறைவேறினால் வெற்றி மகிழ்ச்சியில் திளைத்து அதைக் கொண்டாட நினைப்பர். எல்லா வெற்றிகளும் கொண்டாடப்படவேண்டியனவே. அதுவும் நாட்டின் பாதுகாப்பிற்கான போர்க் கடமையாற்றுவதில் வெற்றி கண்டால் அதை விழாவுடன் நாடே கொண்டாடும். தலைவி தன் பங்குக்கு 'வேந்தன் போரில் வெற்றி வாகை சூடி விரைவில் வரட்டும், மாலையில் விருந்து படைத்து கொண்டாடி மகிழலாம்' எனச் சொல்கிறாள். அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஒன்று போரில் கணவர் வெற்றிக்குப் பங்களித்திருக்கிறார், மற்றது அவரது இல்லம் திரும்புதலால் ஆற்றமாட்டாதிருந்த பிரிவு முடிவுக்கு வரப்போகிறது.

இப்பாடலிலுள்ள வேந்தன் என்ற சொல் யாரைக் குறிக்கிறது? நாட்டின் அரசனையா அல்லது அவன் உடன் சென்றுள்ள காதலனையா? மற்றத் தொல்லாசிரியரகள் அனைவரும் வேந்தன் எனக் குறிப்பிட பரிதி ஒருவர் மட்டும் நாயகன் எனச் சொல்கிறார். பொதுவாக இச்சொல் தலைவனை அதாவது காதலனையே குறிக்கப் பயன்படுத்தப்படும். நாயகன் என்ற சொல் அரசனையும் குறிக்கலாம். இங்கு காதல்கணவரைக் குறிப்பதாகக் கொள்வது பொருந்தும்.
இங்கு கூறப்பட்டது போர்வினையா அல்லது வேறு பொதுவான வினையா? கல்வி முதலிய அறுவகைப் பிரிவுகளுள் இவ்வகையினது என விதவாமல் பொதுப்படவே குறள் காதலர் பிரிவு பற்றிப் பேசுகிறது. இப்பாடல் ஒன்றில் மட்டுமே 'வேந்தற்கு உற்றுழிப் பிரியும் பிரிவு' - அதாவது அரசர்க்குதவியாகப் பிரிவது- சொல்லப்பட்டது. எனவே அரசனின் போர்ச்செயலுக்கு உதவி புரியச் சென்றுள்ள கணவர் இங்கு பேசப்படுகிறார் எனக் கொள்ளலாம்.

இப்பாடல் தலைவி கூற்றென பரிமேலழகர் தவிர்த்த அனைத்துத் தொல்லாசிரியர்களும் கூறுவர். பரிமேலழகர் தலைவன் கூற்று எனச் சொல்லி அதற்கேற்றாற்போல ஒரு விளக்கவுரையும் தருகிறார். இப்பாடலில் உள்ள மனை என்ற சொல்லுக்கு மனை அல்லது வீடு என மற்றவர்கள் கொண்டனர்; மணக்குடவர்/பரிப்பெருமாள் 'மனையிலே பொருந்தி மாலைப் பொழுதில் காதலர்க்கு விருந்து செய்வோமாக' என்று உரை செய்ய, பரிமேலழகர் மட்டும் இப்பாடலைத் தலைவன் கூற்றாகக் கொண்டு 'மனைவியைக் கூடி மாலை விருந்து அயர்வேம்' எனப் பொருள் கூறினார். இக்குறளை மணக்குடவர் உரைத்தபடி தலைவியின் கூற்றாகக் கொள்வதே பொருத்தம்.

'மாலை அயர்கம் விருந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

''மாலை அயர்கம் விருந்து' என்றதற்கு இம்மாலைப்பொழுதிலே விருந்து செய்வோமாக, மால் என்னும் பசிக்கு என் ஆகம் விருந்திடுவேன், இற்றை மாலை எல்லைக்கு விருந்து இயற்றுவம் ஆக, ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக, அன்றுவரும் மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம், அன்றைய மாலைப்பொழுதில் விருந்து படைத்துக்கொண்டாடுவோம், மாலையில் விருந்திடுவோம், மாலைப்பொழுதில் விருந்துண்போம், மாலை விருந்தாகிய காமக் கலவிகளைச் சலிக்கச் சலிக்க அனுபவிக்க வேண்டும், மாலைப் பொழுதில் இனிய விருந்து கொண்டாடுவோமாக, வென்றமாலைப் பொழுதில் மனைவியோடு கூடி விருந்துண்போமாக, மாலைப் பொழுதில் விருந்து வைப்போம், அன்று மாலை விருந்து செய்து கொண்டாடுவோம், அற்றை மாலைப் பொழுதின்கண் விருந்துண்டு மகிழ்வேம், அன்று மாலை மனைவியோடு அவள் விருந்தாக இருந்து மகிழ்வோமாக என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'மாலை அயர்கம் விருந்து' என்றது யாம் எம் மனையில் கணவரோடு கூடி மாலைப் பொழுதில் இனிய விருந்திட்டுக் கொண்டாடுவோமாக என்ற பொருள் தருவது.
இவ்விடத்தில் மாலை என்று பொழுதைக் குறித்தது எதற்காக? மாலை என்று சொன்னது மாலை வேளையில் கொடுக்கப்படும் விருந்தைக் குறிப்பதாகக் கொள்ள இடமுண்டு. வினையின் வெற்றிக்காக விருந்து வைத்துக் கொண்டாடும் வழக்கம் அன்றும் இருந்துள்ளமை தெரிகிறது. காலிங்கர் உரை 'காலைப் பகையோடு எதிர்மயங்கிப் பொருது வெல்வோனாக நம் வேந்தனாவன்; என்னெனில் யாமும் இற்றை மாலை எல்லைக்கு இம்மனைக்கண் விருந்து இயற்றுவம் ஆக. அவரோடு வரூஉம் விருந்தினர் அனைவர்க்கும்' என்கிறது. இதன்படி காலையில் போர் தொடங்கி மாலையில் முடியும் இன்றே வேந்தரோடு வரும் அனைவர்க்கும் விருந்து கொடுப்போம் என்றாகிறது.
போரோ அல்லது மற்ற வினையோ அன்று முடிவதாகச் செய்தி வந்திருக்க வேண்டும் எனக் கொண்டால் அற்றை மாலையே விருந்து செய்வோமாக எனப் பொருளாகலாம்.

மாலைப் பொழுதில் உண்ணப்படும் விருந்தயர் என்னும் தொடர் வரும் நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது. அது:
படுமழை பொழிந்த தண்ணறும் புறவின்
நெடுநா ஒண்மணி பாடுசிறந் திசைப்ப
மாலை மான்ற மணல்மலி வியனகர்த்
தந்தன நெடுந்தகைத் தேரே என்றும்
அரும்படர் அகல நீக்கி,
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே
(நற்றிணை: 361: 5-9 பொருள்: மிக்க மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியோசை மிக்கு ஒலிப்ப; அவனது தேரை மாலைப் பொழுது மயங்கிய மணல்மிக்க அகன்ற மாளிகை வாயிலிலே கொணர்ந்து நிறுத்தின; திருந்திய கலனணிந்த தலைவி தான் முன்பு எந்நாளுங் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பமெல்லாம் ஒருங்கே நீங்கி; இறைமகனுக்கு விருந்தயரும் விருப்பத்தையுடையளா யிராநின்றனள்)
குறுந்தொகைப் பாடல் ஒன்றிலும் 'மாலை விருந்தயர்' என்னும் தொடர் ஆளப்பட்டது: மாலை நனி விருந்து அயர்மார்... (குறுந்தொகை 155: 6-7 பொருள்: மாலைக் காலத்தில் மிக விருந்து நுகரும் பொருட்டு....) என்பது அது.

'மாலை அயர்கம் விருந்து' என்ற தொடர் போரில் வென்ற மாலைப்பொழுதில் விருந்துசெய்வோம் என்ற பொருளது.

வேந்தன் வினைசெய்தலின் கண்ணே பொருந்தி வெற்றி பெறுவானாக; வீட்டில் ஒன்றாகக் கூடி மாலைப் பொழுதில் விருந்துண்போம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வெற்றியுடன் வரும் தலைவர் தானளிக்கும் விருந்தைச் சுவைக்க அவர்வயின் விதும்பல்.

பொழிப்பு

வேந்தன் வினையிற் கலந்து கொண்டு வெற்றி பெறுவானாக; மனையில் கூடி மாலையில் விருந்திடுவோம்.