இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1254



நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1254)

பொழிப்பு: யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன்; ஆனால், என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

மணக்குடவர் உரை: யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது.
இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது.
(மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: நானோ என் மனத்தை நிறுத்தும் ஆற்றல் உடையேன் என்று கருதிக்கொண்டிருப்பேன். ஆனால் என் காதல் என் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படுகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யானோ நிறையுடையேன் என்பேன்மன்; என் காமம் மறையிறந்து மன்றுபடும்.


நிறையுடையேன் என்பேன்மன் யானோ:
பதவுரை: நிறையுடையேன்-நிறை உடைத்தாயிருக்கிற நான்; என்பேன்-என்று கருதியிருந்தேன்; மன்-(ஒழியிசை) யானோ-நானோ.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: [யானே என்பது பாடம்] யானே நிறையுடையே னென்றிருப்பன்;
பரிப்பெருமாள்: யானோ நிறையுடையே னென்றிருப்பன்;
பரிதி: என்னிலே யான் நிறையுடையேன் என்றிருப்பேன்;
காலிங்கர்: தோழீ! என்னுள்ளே யான் பெரிதும் நாணும் குறைபடாமை நிறைவேற்றிக்கொண்டு ஒழுகும் நிறையுடையேன் என்று இருப்பேன் யான் மிகவும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; [இன்றினூங்கெல்லாம்-இதற்கு முன் எல்லாம்]
பரிமேலழகர் குறிப்புரை: மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன.

யானோ நிறையுடையேன் என்று கருதியிருந்தேன் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறுதியுடையேன் என்று சொல்லுவேன் நான்', 'முன்பெல்லாம் யானோ மனத்திண்மை உடையேன் என்று கருதிக் கொண்டிருந்தேன்', 'நான் யாரிடத்திலாவது 'நான் காம ஆசையை அடக்கி வைக்கும் திறமுடையவள்' என்று சொல்லிக் கொண்டேயிருக்கிற அப்போதே', 'இதுவரை யான் அடக்கமுடையே னென்றிருந்தேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நானோ மனத்திண்மை கொண்டவள் நான் என்று கருதிக்கொண்டிருப்பேன் என்பது இப்பகுதியின் பொருள்.

என் காமம் மறையிறந்து மன்று படும்:
பதவுரை: என்-எனது; காமம்-காதல் வேட்கை; மறை-மறைத்தல்; இறந்து-கடந்து; மன்று-பலரும் அறிய; படும்-தோன்றும்/உண்டாகும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிப்பெருமாள்: இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிதி: என்னுடைய ஆசை அடக்க மற்று ஊர் மன்றிலே இருக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இங்ஙனம் இருப்பவும் அவர் பிரிவின்கண் யாம் உற்ற காம நோயானது யான் பிறர் அறியாமல் மறைத்து ஒழுகும் மறைவரம்பைக் கடந்து மன்றத்துச் சென்று உளது ஆம். இஃது என்ன வியப்போ என்றவாறு.
பரிமேலழகர்: இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.)

என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் காமமோ ஒளிவின்றி அம்பலப்படும்', 'ஆனால், இப்பொழுது என் காம வேட்கை நெஞ்சமாகிய அறையைக் கடந்து அம்பலத்திற்கு வந்துவிட்டது. (மறை இறந்து என்று பிரித்து மறைத்தலைக் கடந்து என்றும் கூறலாம்.)', 'என் காமம் 'நான் அதை அடக்கி வைத்திருந்த மறைவிடத்தை விட்டு வெளியில் பாய்ந்தோடி வந்து என் சொல்லைப் பொய்யாக்கும்', 'இப்போது என் காமம் மறைத்தலைக் கடந்து பலரும் அறிய வெளிப்படுவதாயிற்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆனால் என் காதல்வேட்கை மறைத்தலைக் கடந்து பொதுவெளியில் வந்துவிடும் போல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நானோ மனத்திண்மை கொண்டவள் நான் என்றிருந்தேன். ஆனால் என் காதல் வேட்கையோ ஒளிவின்றி ஊருக்குள் பரவி விடும்போல.

நானோ மனத்திண்மை கொண்டவள் நான் என்று கருதிக்கொண்டிருப்பேன்; ஆனால் என் காதல்வேட்கை மறைத்தலைக் கடந்து மன்றுபடும் என்பது பாடலின் பொருள்.
'மறையிறந்து மன்றுபடும்' என்பதன் பொருள் என்ன?

நிறையுடையேன் என்ற சொல்லுக்கு மனஉறுதியுடையவள் நான் என்பது பொருள்.
என்பேன்மன் என்றது என்று கூறுவேன் எனப்பொருள்படும்.
யானோ என்ற சொல்லுக்கு நானோ என்று பொருள்.
என் காமம் என்ற தொடர் என் காதல் வேட்கை என்ற பொருள் தரும்.

நான் மனக்கட்டுபாடு உடையவள்தான். ஆனால் என் காதல்விருப்பங்கள் என்னாலேயே ஒளிவின்றி ஊர் மன்றத்துக்குச் சென்றுவிடும் போலும். எல்லாம் வெட்டவெளிச்சமாகி விடப்போகிறது!

கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள காதலனை நாளும் நினைந்து நினைந்து துயருறுகிறாள் தலைவி. அவனை எப்பொழுது காணப்போகிறோமோ என்ற காதல் வேட்கை மிகுந்து கொண்டே செல்கிறது. இதுவரை அந்தக் காதல் வேட்கை பற்றி அவள் யாரிடமும் சொன்னதில்லை. இதற்கு முன் எல்லாம் அது காப்பற்றப்பட்டது அவள் மன உறுதியால் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள். ஆனால் இப்பொழுது அதுவும் சிதைந்துவிடும்போல் இருக்கிறது. இவ்வுறுதி குலைந்து அவள் வேட்கை அவள் வாயாலே சொல்லப்பட்டு அது பொதுவெளிக்கு வந்துவிடும் போல. 'என் காதலைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் ஆற்றல் உடையேன் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னுடைய காதல் விருப்பத்தால் அப்பெருமை குலைந்து, மனதுக்குள் மறைத்து வைத்திருந்த எண்ணங்கள் தாமாக வெளிப்பட்டு வீதிக்கு விடுமோ- பலர் கூடும் மன்றில் பேசப்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது. 'நிறையுடையேன்' என்று நான் எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? என் நிறையழிந்து வருகிறது' என ஆற்றாது வருந்துகின்றாள் தலைவி.

இக்குறட்கு மணக்குடவர் 'இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது' என்றும் பரிமேலழகர் 'மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது' என்றும் காட்சிப் பின்புலம் காட்டுவர்.

'மறையிறந்து மன்றுபடும்' என்பதன் பொருள் என்ன?

மறை இறந்து என்ற தொடர் மறைத்தலைக் கடந்து என்ற பொருளது. 'இரகசியம்' என்று வழக்கில் உள்ளதே மறை எனப்படுவது. கமுக்கம் என்று வழக்கில் உள்ள சொல்லும் இதே பொருளைத் தரும். 'மந்தணம்' என்ற சொல்லும் 'மறை' என்னும் பொருளில் வழங்கப்படுகின்றது. மறையிறந்து என்பது மறை காக்கப்படாமல் எனப்பொருள்படும்.
'மன்றுபடும்' என்பதற்கு மன்றின்கண் வெளிப்படாநின்றது, ஊர் மன்றிலே இருக்கும், மன்றத்துச் சென்று உளது ஆம், பலருமறிய அம்பலமாகிவிட்டது, அம்பலப்படும், அம்பலத்திற்கு வந்துவிட்டது, வெளியே பாய்ந்து வந்துவிடும், ஊரறிய வெளிப்பட்டு விடும், பலரும் அறிய வெளிப்படுவதாயிற்று, மன்றின்கண் வெளிப்படுகின்றது, ஊர் நடுவில் உலா வருகின்றதே, அவையின்கண் வெளிப்படுகின்றது, அம்பலப்பட்டுவிட்டது, ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது என உரைகாரர்கள் பொருள் கூறினர்.
மன்றுபடும் என்றது ஊர்மன்றத்தில் பேசப்படும் என்ற பொருள் தரும். அதாவது தலைவியின் காதல் விருப்பம் எல்லாரும் அறிந்த இரகசியம் ஆயிற்று. அதாவது இனி அது மறை அல்ல. ஊர் அறிந்த ஒன்றாகிவிட்டது.
நாமக்கல் இராமலிங்கம் 'நான் காமத்தை அடக்கி என் மானத்தைக் காத்துக் கொள்ளக் கூடியவள் என்று வாயால் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் காமம் என் முகத்தின் பசப்பினாலும் கண்களின் நீரினாலும் நான் சொல்வது பொய்யென்று காட்டி என் மானத்தைக் கெடுத்துவிடுகிறது. அதனால் காமத்தை அடக்கிவிடுவேன் என்று வாயாற் சொல்லலாம். ஆனால் என்னால் உண்மையில் அடக்க முடியவில்லை' எனக் காதல் வெளிப்படுவதை விளக்கினார்.

நானோ மனத்திண்மை கொண்டவள் நான் என்று கருதிக்கொண்டிருப்பேன்; ஆனால் என் காதல்வேட்கை மறைத்தலைக் கடந்து பொதுவெளிக்கு வந்துவிடும்போல என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

என் காதல் வேட்கை என் வாயாலேயே வெளிஉலகத்திற்குத் தெரிந்துவிடும்போலும் என்று தலைவி தன் நிறையழிதல் சொல்லும் பாடல்.

பொழிப்பு

இதுகாறும் மனத்திண்மை உடையேன் என்றிருந்தேன்; ஆனால் இப்போது என் காமவேட்கை ஒளிவின்றி பொதுவெளிக்கு வந்துவிடும் போலும்.