இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1250



துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்

(அதிகாரம்:நெஞ்சொடு கிளத்தல் குறள் எண்:1250)

பொழிப்பு (மு வரதராசன்): நம்மோடு பொருந்தியிருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது, இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

மணக்குடவர் உரை: மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்;
ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம்.
('குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன மெய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.

வ சுப மாணிக்கம் உரை: வாராது துறந்தவரை நெஞ்சில் வைத்திருக்கவும் இன்னும் அழகை இழக்கின்றோம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் கவின் இழத்தும்.

பதவுரை: துன்னா- தொடர்ந்து உடனிராமல்; துறந்தாரை-நீங்கிப் போனவரை; நெஞ்சத்து-உள்ளத்தில்; உடையேமா-பெற்றுள்ளேமாக, அடைந்துள்ளோமா; இன்னும்-மேலும், மற்றும், பின்னும்; இழந்தும்-இழப்போம்; கவின் -அழகு.


துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('துன்னார்' பாடம்): மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்;
பரிப்பெருமாள்: மேன்மேல் நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்;
பரிதி: கூடாமல் பிரிந்தவரை நெஞ்சத்திலே கொண்டிருந்து;
காலிங்கர் ('துன்னார்' பாடம்): நெஞ்சே! இன்றியமையாமை அறிந்தும் நம்மோடு கூடி வாழாருமாய்ப் பின்னை நினைந்து அருளாலும் இன்றிப் பெரிதும் துறந்தே ஒழிந்தாரை நாம் மற்று உடையேம்;
பரிமேலழகர்: (அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக;
பரிமேலழகர் குறிப்புரை: 'குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. [பொருட்டாய்-பொருள் உடையதாய்]

'நம்மோடு கூடி வாழாராய் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். துன்னார் என்ற பாடவேறுபாட்டால் சிறிது பொருள் வேறுபட்டது.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்மோடு கூடாமல் விட்டுப் பிரிந்த காதலரை நாம் நம் நெஞ்சகத்தே வைத்துள்ளோம்', 'நெருங்காமல் நீங்கியவரை (வேற்றூர் போயிருக்கிற காதலரை) மனதில் வைத்துக் கொண்டே (ஏங்கி) இருந்தால்', 'நம்மைக்கூட நினையாது பிரிந்து போனவரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின்', 'நம்மைக் கூடாவண்ணம் துறந்து போயினாரை நாம் நெஞ்சில் உடையேமாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உடனிராமல் நீங்கிச் சென்றாரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

இன்னும் இழத்தும் கவின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்;
மணக்குடவர் குறிப்புரை: ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.
பரிப்பெருமாள்: முன்னம் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈண்டு நெஞ்சம் என்றது மனத்தினுடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.
பரிதி: மேன்மேலும் அழகை இழக்க வேண்டா என்றவாறு.
காலிங்கர்: ஆதலால் முன்பு இழந்த கவினே அன்றி மற்று இன்னமும் கவின் இழப்பேம்; எனவே, இறந்துபாடும் இயையும் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். [புறக்கவின் -வெளித்தோற்ற அழகு; அகக்கவின் -நிறை]
பரிமேலழகர் குறிப்புரை: 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன மெய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம். [துன்னாமல் - நெருங்காமல் (கூடாமல்); மெய்க்கவின் - உடலழகு]

'முன்பு இழந்த கவினே அன்றி மற்று இன்னமும் கவின் இழப்பேம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலால் முன் இழந்த உடலழகேயன்றி இன்னும் அக அழகையும் (நிறை, நாணம்) இழப்போம்', '(இதுவரை அதனால் உறுப்பு நலனழிந்ததற்கு மேல்) இன்னும் அதிகமாக உடல் நலங்களையும் இழந்துவிடுவோம்', 'நாம் இன்னும் அழகை யிழந்தொழிவோம்', 'இன்னும் அழகினை இழப்போம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாம் இன்னும் அழகை இழப்போம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்னாத் துறந்தாரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின் நாம் இன்னும் அழகை இழப்போம் என்பது பாடலின் பொருள்.
'துன்னாத் துறந்தார்' யார்?

அவர் பாட்டுக்குச் சென்றுவிட்டார். அவரை நினைந்து நினைந்து என் உடலழகு கெட்டுவிட்டது. இன்னுமிருக்கிற அழகையும் இழக்கவேண்டுமா என்ன? அவரைக் கொஞ்சம் மறப்போமே நெஞ்சமே!

'உடனிராமல் அகன்று சென்றவரை நெஞ்சில் இருத்தியிருக்கிறோம்; அதனால் மேலும் நம் அழகு குலையப்போகிறது' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்ற கணவர் இன்னும் திரும்பவில்லை. எப்பொழுது வருவார் என்பதற்கான செய்தியும் இல்லை. தலைவிக்கு அவரது பிரிவு தாங்கமுடியாததாக இருக்கிறது. அவர் நினைவால் ஊன் உறக்கம் இல்லாததால் அவளது உடல் சீர் குலைகிறது. உறுப்பு நலன் அழிகிறது. என்ன செய்வது என்று புரியாத நிலையில் தன் நெஞ்சே துணையாக உதவும் என எண்ணி தன் உணர்ச்சிகளை உள்ளத்துடன் பகிர்ந்து ஆறுதல் அடைய நினைக்கிறாள்.
பிரிவுத் துன்பத்தைத் தீர்க்கத் தக்க மருந்து ஏதாவது ஒன்றை நீ சிந்தித்துப் பார்த்து எனக்குச் சொல்வாயா?'; 'அவர் எம்மிடம் காதலில்லாதவராக இருக்கும்போது, நீ அவரை எண்ணி வருந்திக் கொண்டிருப்பது பேதமை'; 'வருத்தும் நோயைச் செய்தவர்க்கு நமக்கு அருள் காட்டவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அவரை நினைத்து ஏன் வருந்தவேண்டும்?'; 'நெஞ்சே! நீ அவரைக் காணச் செல்லும்போது 'அவரைக் காட்டு, அவரைக் காட்டு' என்று என்னைத் தின்னும் இக்கண்களையும் உடன் கொண்டு போ'; 'நாம் துன்பப்படுவது அறிந்தும் அவர் வருந்தியதுபோல் தெரியவில்லையே. அதற்காக அவர் நம்மை வெறுத்தார் என்று கைவிட்டுவிட முடியுமா?'; 'கூடும்போது அவரைப் பிணங்காமல் இப்பொழுது ஏன் அவரைப் பொய்யாகச் சினந்துரைக்கின்றாய்?'; 'நெஞ்சமே! ஒன்று காமத்தை நினையாதே அல்லது நாணத்தை நீக்கிவிடு; என்னாலோ இவை இரண்டையும் ஒருங்கே தாங்கமுடியாது'; 'பேதைநெஞ்சமே! என்னிடம் பரிவு காட்டாமல் விட்டுச் சென்ற அவர் அன்பு காட்டவில்லையே என்று ஏக்கம் கொண்டு அவர் பின்னே செல்கின்றாயே!'; 'நெஞ்சே! அவர் உன்னிடத்தில் இருக்கவும் நீ நினைத்துச் செல்வது யாரிடம்?' என்றபடி தன் நெஞ்சத்தை நோக்கிக் கேள்விமேல் கேள்வி கேட்டு தன் துயரத்தை ஆற்ற முயன்றுகொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தன் உள்ளுணர்வுகளைத் தன் நெஞ்சுடன் பேசிப் பகிர்ந்து கொண்டிருக்கும் தலைமகள், இப்பொழுது 'நம்மோடு கூடி வாழ்தலின் இன்றியமையாமை அறிந்தும், பிரிந்தால் நாம் உறும் துன்பங்களைத் தெரிந்தும், நம்மை விட்டு நீங்கின கணவரை நெஞ்சிலே கொண்டு நினைத்துருகுகிறோம். இதனால் ஏற்கனவே உடலுறுப்புக்கள் சீர் குலைந்துவிட்டன. இன்னும் அவர் நினைவாகவே அவரை நெஞ்சில் சுமந்தால் நம் அழகுக்கு மேலும் கேடுதான் நேரும்' என மனக் கசப்புடன் தன் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துகிறாள். காதல்கணவர் தன் உணர்வுகளை மதியாமல் சென்றுவிட்டார் என்றாலும் இன்னும் அகத்திலே இருக்கிறார்; அவளால் அவரை நெஞ்சிலிருந்து நீக்க இயலாது அதாவது மறக்க முடியாது. ஆனால் இந்த நிலை நீட்டித்தால் தன் நெஞ்சின் அழகாம் நிறையும் இழப்புக்குள்ளாகுமே என வருந்துகிறாள்.

'இன்னும் இழத்தும் கவின்' என்ற பகுதிக்கு முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம், முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம், மேலும் மேலும் நாம்தான் நம் அழகை இழக்கப்போகின்றோம், இன்னும் அழகை இழக்கின்றோம், முன் இழந்த உடலழகேயன்றி இன்னும் அக அழகையும் (நிறை, நாணம்) இழப்போம், (இதுவரை அதனால் உறுப்பு நலனழிந்ததற்கு மேல்) இன்னும் அதிகமாக உடல் நலங்களையும் இழந்துவிடுவோம், இன்னும் அழகை யிழந்தொழிவோம், போன மேனியழகேயன்றி நின்ற நிறையும் இழப்பேம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். பழைய உரை ஒன்று 'முன் கூடியிருந்த உடம்பினழகு அவர் பிரியப் பிரிந்தது; நெஞ்சத்துக் கூடினவர் பிரிந்தால் நெஞ்சின் அழகும் பிரியும். நெஞ்சின் அழகு நிறையும் நாணமும் எனக் கூறுவர்' என்கிறது.
இவற்றுள் எஞ்சியுள்ள அழகை இழப்போம் என்பது பொருத்தம். அடுத்து வருவது நாண்அழிதல் அதிகாரமாதலால். நிற்கும் அக அழகையும் அதாவது நாண், நிறை போன்றவற்றையும் இழக்கப்போகின்றோம் என்ற உரையும் ஏற்கும்.
காதலர் வரவு நீட்டிப்பதால் ஏற்கனவே அவர் நினைவால் வாடியுள்ள தலைவியின் அழகு மேலும் தேயும் என்பதால் இன்னும் கவின் இழப்பேம் எனப்பட்டது. அவரை எந்நேரமும் நினைந்து இருந்து, உணவு, உறக்கம் முறையாகக் கொள்ளாமையால் அவளது உடலழகில் குறைவு உண்டானது. அவர் வாராமை தொடர்ந்தால் அவர் நினைவாலேயே இன்னும் அகஅழகும் குறையும் என்கிறாள். காதலரை நெஞ்சில் வைத்திருக்கும் பொழுது உடல் மெலிவும், உள்ள மெலிவும் உண்டாகும் என்பது கருத்து.

ஆதலான் அவரை மறத்தலே கருமம் என்றும், அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்றும், இறந்துபாடும் இயையும் என்றும், காம ஆசையினால் காதலர் வரவில்லை என்பதையே நினைத்துக் கொண்டிருப்பாயானால் நம் உடலின் அழகும் சுகமும் மிகவும் கெட்டுப் போவதால் காம ஆசையை அடக்குவோம் என்றும் சில உரையாசிரியர்கள் பொருள் விரித்தனர்.

'துன்னாத் துறந்தார்' யார்?

'துன்னாத் துறந்தார்' என்ற தொடர்க்கு நம்மோடு செறியாராய்த் துறந்து போனவர், மேன்மேல் நம்மோடு செறியாராய்த் துறந்து போனவர், கூடாமல் பிரிந்தவர், இன்றியமையாமை அறிந்தும் நம்மோடு கூடி வாழாருமாய்ப் பின்னை நினைந்து அருளாலும் இன்றிப் பெரிதும் துறந்தே ஒழிந்தார், நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினார், நம்மோடு பொருந்தியிருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலர், நம்மை நெருங்காது நீங்கிப்போன காதலர், வாராது துறந்தவர், நம்மோடு கூடாமல் விட்டுப் பிரிந்த காதலர், நெருங்காமல் நீங்கியவர், நம்மோடு நெருங்காமல் நீங்கிச் சென்ற துணைவர், நம்மைக்கூட நினையாது பிரிந்து போனவர், நம்மைக் கூடாவண்ணம் துறந்து போயினார், அருகில் நெருங்காமல் அகன்று பிரிந்தவர், எம்மைக் கூடாவண்ணம் பிரிந்து போனவர், நம்மைக் கூடாது துப்புரவாக வெறுத்து விலகியிருப்பவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஓதல் முதலியவற்றுள் இவ்வகையினது என விதவாமல் பொதுப்படவே குறளில் பிரிவு கூறப்படுகிறது. ஆனால் உரைகாரர்களில் சிலர் துன்னார் என்றதற்குத் துப்புரவாக வெறுத்து விலகியிருப்பவர், கைவிட்டுச் சென்ற காதலர் என்றவாறு பொருள் கூறியுள்ளனர். நிலையாகப் பிரிந்த துணைவர் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை. தன்னுடன் இராமல் நீங்கிப் போனவர் என்ற பொருளில் தலைவி துன்னாத் துறந்தார் எனக் கூறினாள்.

'துன்னாத் துறந்தார்' என்ற தொடர் உடனிராமல் நீங்கிச்சென்றவர் என்ற பொருள் தருவது.

உடனிராமல் நீங்கிச் சென்றாரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின் நாம் இன்னும் அழகை இழப்போம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன்அழகை இழக்கச் செய்யும் கணவர் நினைவை உள்ளத்தில் நிறுத்தி வைக்கத்தான் வேண்டுமா என்று தலைவி தன் நெஞ்சொடு கிளத்தல்.

பொழிப்பு

உடன் வாழாது நீங்கிச் சென்றவரை நெஞ்சில் வைத்திருக்கவும் இன்னும் அழகை இழக்கின்றோம்.