இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1240



கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1240)

பொழிப்பு (மு வரதராசன்): காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது,

மணக்குடவர் உரை: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.
('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின் பசலையோ வருத்தப்பட்டது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.

பதவுரை: கண்ணின்-கண்ணினது; பசப்பு-நிறம் வேறுபடுதல்; ஓ-அசைநிலை; பருவரல்-துன்பம், வருத்தம்; எய்தின்றே-எய்தியதே, உற்றதே; ஒண்-ஒளி பொருந்திய, மிளிர்கின்ற; நுதல்-நெற்றி, முகம்; செய்தது-விளைத்தது (இங்கு பசலை உண்டானது குறித்தது); கண்டு-நோக்கி.


கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று;
பரிப்பெருமாள்: கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று;
பரிதி: கண்ணீரும் உடம்பிற் பசலையும் கூடி விதனம் செய்யும்;
காலிங்கர்: தோழீ! அவர் பிரிவின்கண் பசந்த பசப்புத் தான் பெரிதும் இடர் உறுகின்றதே காண்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது;

'கண்ணிலுண்டான பசலை துன்பமுற்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முயங்கிய கைகளைத் தளர்த்திய அளவில் மென்காற்று ஊடறுத்து வீசுதலான் வந்த கண்ணின் பசப்பு', 'இது என் கண்களின் மயக்கந்தானோ (அல்லது அவள் உண்மையாகவே இப்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாளோ)', 'கண்களின் பசப்பு நாணி வருத்தமடைந்தது', '(குளிர்ந்த காற்று நுழைய வந்த) கண்ணின் பசப்போ துன்பம் உற்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது இப்பகுதியின் பொருள்.

ஒண்ணுதல் செய்தது கண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு.
பரிப்பெருமாள்: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை மூன்றினானும் சொல்லியது: 'யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின் கண்ணே உடம்பை அகற்ற, அதனை அறிந்து கண் பசந்தது; அதன் பின் முயங்கிக்கொண்டு கிடந்த கைகளை விடுவிக்க நுதல் பசந்தது; அவ்வளவே அன்றி, நுதல் பசந்தபின்பு கண்ணின் பசலை போய், மற்றொன்று ஆம்படி ஆயிற்று; ஆதலான் யான் செல்லும் அளவும் ஆற்றுங்கொல்லோ' என்று வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியவாறு.
இவை அவர்வயின்விரும்பலின் பின் கூறற்பாலது. உறுப்பு நலன் அழிந்தமை கூறிய ஆகலான் ஈண்டுச் சேரக் கூறப்பட்டன என்க. பருந்து விழுக்காடு.
பரிதி: நாயகர் ஒண்ணுதலாளுக்குச் செய்த கொடுமையுடன் கூடி என்றவாறு.
காலிங்கர்: அஃது என்னை எனில், என்னது ஒள்ளிய நுதலானது தனது ஒண்மை இழந்து ஒருங்கு பசப்பு ஊர்ந்தமை கண்டு பொறுக்கல் ஆற்றாது என்றவாறு.
பரிமேலழகர்: தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.
பரிமேலழகர் குறிப்புரை: 'அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும், யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று. [அது-நுதல் (நெற்றி); அதன் மென்மையும்-நெற்றியின் மென்மையும்; வெள்கிற்று-வெட்கம் அடைந்தது; நலன் அழியும் - அழகு கெடும்; சேறும்-(செல்+தும்) செல்வோம்]

'ஒள்ளியநுதல் விளைத்த பசப்பைக் கண்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனக்குப் பக்கத்திலிருக்கும் ஒளிமிக்க நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு துன்பம் எய்தியது', 'என் காதலி முன் (என்னைப் பிரியும் போதெல்லாம்) படும் துன்பத்தை இப்போதும் பட்டுக் கொண்டிருப்பது போலவே எனக்கு முன் தோன்றி எனக்குத் துன்பமுண்டாக்குகிறது', 'அவளது ஒளி பொருந்திய நெற்றி பார்த்து', 'ஒளி பொருந்திய நெற்றி, பசப்பு அடைந்ததைக் கண்டு' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது பாடலின் பொருள்.
'கண்ணின் பசப்பு துன்பமுற்றது' குறிப்பது என்ன?

கணவரின் பிரிவால் தலைவியின் முகம் களை இழந்ததைக் காணப் பொறுக்கமுடியவில்லை.

தலைவியின் முகம் பசலை உற்றது கண்டு, பசலையால் அழகுகெட்ட கண்கள் மேலும் வருத்தம் கொள்ளலாயிற்று.
காட்சிப் பின்புலம்:
கடமைக்காகத் தலைவர் நெடுந்தொலைவு சென்றிருக்கிறார். அவர் பிரிவை ஆற்றவொண்ணாத மனைவி துயருறுகிறாள்.
அவரை நினைந்து அழுதழுது கண்கள் ஒளியிழந்து நல்ல மலரைக் கண்டு நாணி விட்டன; பசப்படைந்த அவள் கண்கள் தலைவர் அன்பு செய்யாமையை ஊரார்க்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றன; அவரை மணந்த நாட்களில் பூரித்திருந்த தோள்கள், இப்போது மெலிந்து கணவர் உடனில்லாமையை அறிவிக்கின்றன; வளைகள் கழலும் அளவு உடல் மெலிவடைந்தது; அவளது பழைய அழகு தொலைந்துவிட்டதாக எண்ணுகிறாள் அவள்; உடல்மெலிவும் அழகு இழப்பும் காதல் கணவரது கொடுமையைச் சொல்லுவனவாக இருக்கின்றன; ஆனாலும் இதற்காக அவரைக் கொடியர் என்று சொன்னால் அது எனக்கு வருத்தத்தையே தரும் என்கிறாள்; 'என் உடல் மெலிவை அவர்க்குச் சொல்லி பெருமை கொள்வாயோ நெஞ்சே!' எனப் பழித்துரைக்கிறாள்.
இனி, சென்ற இடத்தில் கணவர் என்ன நினைக்கிறார்? பிரியும் சமயம் நிகழ்ந்தவை அவர் நினைவுக்கு வருகின்றன. அவளை இறுகத் தழுவிய தன் கைகளைச் சிறிது தளர்த்த பைந்தொடிகளை அணிந்த களங்கமற்ற அவ்விளம்பெண்ணின் நெற்றி பசப்புற்றது; உடலோடு உடல் தழுவிக் கொண்டிருக்கும்போது உண்டான சிறு இடைவெளியில் காற்று பிளந்துகொண்டுபோனதை உணர்ந்தவள் அவ்வளவு இடையீடும் பொறுக்கமாட்டாது அவளது குளிர்ந்தகண்கள் பசப்புற்றன. அத்துணை சிறு பிரிவைத் தாங்க முடியாதவள் மலைகள், காடுகள், நாடுகள் கடந்து தான் அங்கு இருக்கத் தொலைவாலும் காலத்தாலும் இந்த அளவு உள்ள பெரிய இடைவெளியை எப்படித் தாங்கிக் கொண்டிருக்கிறாளோ? என்பதாக அவரது எண்ணங்கள் உள.

இக்காட்சி:
மனைவியைப் பிரிந்து நெடுந்தொலைவு வந்துள்ள தலைவர் செயல் முடித்து இல்லம் திரும்பும் சமயம் இது. அதுபொழுது அவளைப் பிரிந்து வரும் நேரத்தில் நிகழ்ந்தனவற்றை நினைக்கிறார். தலைவரும் மனைவியும் தழுவி நின்றனர். கணவரது இறுக அணைத்த கைகள் சிறுது தளர்ந்தன. அதற்குள்ளாகவே தலைவியின் ஒளி பொருந்திய முகம் நிறம் மாறி அழகு கெட்டது. அடுத்து அவரது கைகள் இன்னும் விலகிச் சென்றபொழுது உடல்களுக்கிடையே பிளந்து செல்லும் குளிர்காற்றை உணர்ந்த தலைவி அவர் பிரிந்து செல்லப்போகிறாரே என வருந்தி அவளது கண்ணிலுண்டான பசலை கலங்கியது. அதாவது மனைவியின் நுதலில் உண்டாகிய பசப்பைக் கண்டதால் கண்ணில் உண்டாகியிருந்த பசலை துன்புறுவதாயிற்று. இவ்வாறு தலைவியின் மற்ற உறுப்புக்களும் தான் பிரிந்து வந்த பின்பு ஒன்றின் ஒன்று முற்பட்டு ஒளி இழக்கின்றனவோ என அஞ்சி அவர் விரைந்து வீடு திரும்பி தலைவியின் துயர் தீர்க்க வேண்டும் என எண்ணுகிறார்.

தலைவர் பிரியும் சமயம் தலைவியின் நெற்றியும் கண்ணும் பசந்து நலனழிந்ததைக் கூறுவது இப்பாடல். இதை முந்தைய இரண்டு குறட்பாக்களையும் ஒருங்கிணைத்துப் பொருள் காண்பது நன்று. பரிப்பெருமாளும் பரிமேலழகரும் இவ்வதிகாரத்து முந்தைய குறட் கருத்துக்களின் தொடர்ச்சியாகவே கருதி இப்பாடலுக்கு உரை தந்தனர். 'இறுதி மூன்று குறள்களும் (1238, 1239, 1240) வரிசை மாற்ற முடியாதபடி, ஓர் இயைபுபடத் தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளாக அமைந்துள்ளன' என்பார் தமிழண்ணல்.

குறட்பாக்களில் நுதல் என்று சொல்லப்பட்டது மகளிர் முகத்தைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. முகத்தின் ஒரு பாகமான நெற்றி மட்டும் நிறம் மாறியது என்பதில் சிறப்பாக ஒன்றுமில்லை. எனவே நுதல் என்றதற்கு நெற்றி என்னாமல் முகம் எனப் பொருள் கொள்ளலாம்.

'கண்ணின் பசப்பு துன்பமுற்றது' குறிப்பது என்ன?

நெற்றி நிறமிழக்கிறது; அதைப் பார்த்துக் கண்கள் மிகு துன்பமுற்றன என்கிறது பாடல்.
கண்கள் எதற்காகத் துன்பம் அடைந்தது என்பதற்கு 'நெற்றியின் பசப்புக்காக கண்ணின் பசப்பு இரங்கி வருந்தியது அதாவது நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின் பசலை வருத்தப்பட்டது' என்றும், 'கண்ணின் பசலை நெற்றியின் பசலையை முந்தவில்லையே என்பதற்காக வருந்தியது' என்றும் 'கண்ணின் பசப்பு தாம் மென்மையற்றிருக்கிறோமே என வருந்தின என்றும் மற்ற உறுப்புகளும் பசப்புறுமே என்பதற்காகவும் துன்பம் உற்றது' என விளக்கினர்.

'எவ்வளவு அழகிய முகம் எப்படி இவ்விதம் வாடிக்கிடக்கின்றது?' எனத் தலைவியைப் பார்ப்போர் எவரும் வருந்தவே செய்வர். பருவரல் என்ற சொல் எவ்வாற்றானும் பொறுக்கமுடியாத துன்பத்தைக் குறிப்பது. தலைவியின் முகஅழகு கெட்டதைக் கண்ட கண்கள் பருவரல் எய்திற்று அதாவது தாங்கமுடியாத துன்பமுற்றது எனச் சொல்லப்பட்டதால் வருத்தத்தின் அளவைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒளிமிக்க முகத்தில் தோன்றிய பசப்பைக் கண்டு ஏற்கனவே பசப்புகொண்ட கண்கள் பொறுக்க மாட்டா துன்பம் எய்தின என்பது பாடலின் பொருள்.

ஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒளிமங்கிய முகம், கலுழ்ந்த கண்கள் எனத் தொடர்ந்து உறுப்புநலனழிதல்.

பொழிப்பு

மிளிரும் நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணின் பசலையோ வருத்தப்பட்டது.