இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1236



தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1236)

பொழிப்பு (மு வரதராசன்): வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றை காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

மணக்குடவர் உரை: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன்.
(ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: வளையலும் தோளும் நெகிழ்வதால் அவரைக் கொடியரெனக் கூறக்கேட்டு வருந்துகிறேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.

பதவுரை: தொடியொடு-வளையோடு; தோள்-தோள்; நெகிழ-மெலிய; நோவல்-நொந்து போகிறேன், வருந்துகிறேன்; அவரை-அவரை (இங்கு கணவரை); கொடியர்-கொடுமையானவர், தீயர்; என-என்று; கூறல்-சொல்லுதல்; நொந்து-பொறாது.


தொடியொடு தோள்நெகிழ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்;
பரிப்பெருமாள்: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்;
பரிதி: தொடியொடு தோள் வாட;
காலிங்கர்: தோழீ! இங்ஙனம் தொடியுடனே தோளும் கூட நெகிழ அதற்கு யான் உடம்பட்டிருப்பது என் எனின்;
பரிமேலழகர்: (தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய;
பரிமேலழகர் குறிப்புரை: ஒடு - மேல் வந்த பொருண்மைத்து.

'வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வளையலும் தோளும் நெகிழ்வதால்', 'பிரிவாற்றி இருக்கவும் வளைகழலத் தோள்கள் மெலிவதற்கே யான் வருந்துகின்றேன்', 'வளைகள் கழலும்படி என் கை மெலிவடைந்ததைப் பார்த்து', 'நான் பொறுத்திருக்கவும் வளையல்கள் கழலுமாறு தோள்கள் மெலிய' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் தோள்கள் மெலிந்து அணிகள் கழலவும் என்பது இப்பகுதியின் பொருள்.

நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.
பரிப்பெருமாள்: நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பதுபட சொல்லியது.
பரிதி (‘நோவேம் இவர்தாம்’ பாடம்): நோவோம். நாயகர் விட்டுப் பிரிந்தால் கொடியர் இவர் என்று சொல்லுதற்கு என்றவாறு.
காலிங்கர் ('நேர்வர்' பாடம்): என்மாட்டு அன்பு உடையவரைக் கொடியர் என்று இவை பிறர்க்கு உரைத்தலை உள்ளுள்ளே பெரிதும் நொந்து என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். [அவற்றை - தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிவனவற்றை]
பரிமேலழகர் குறிப்புரை: 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம். [கூறுகின்றதற்கு-கொடியர் என்று சொல்லியதற்கு]

'யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரைக் கொடியரெனக் கூறக்கேட்டு வருந்துகிறேன்', 'அதற்காக என் காதலரைக் கொடுமையுடையவர் என்று நொந்து கூறாதே', 'நீ அவரைக் கொடியவரென்று சொன்னதை என்னுள்ளம் பொறுக்கமாட்டாமையால், யான் வருந்துகின்றேன்', 'அவற்றைக் கண்டு நீ அவரைக் கொடியர் என்று கூறுதலைப் பொறாது நான் வருந்துவேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஆற்றமாட்டேன்; தலைவரைக் கொடியரென்று கூறுவதைப் பொறுக்கமாட்டாமல் வருந்துவேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் தோள்கள் மெலிந்து தோள்அணிகள் கழலவும் தலைவரைக் கொடியரென்று கூறியதற்கு உள்ளம் பொறுக்கமாட்டாமையால் வருந்துவேன் என்பது பாடலின் பொருள்.
'நோவல்' குறிப்பது என்ன?

என் தோள்கள் மெலிந்தால் அவர் எப்படிக் கொடியவராவார்? - தலைவி.

என் தோள்கள் மெலிந்து தோள் அணிகளும் இறுகாது கழன்று விழுவதால் அவரைக் கொடியவர் என்று கூறுகிறார்களே ஊரவர் அது பொறுக்காது வருந்துகின்றேன்.
காட்சிப் பின்புலம்:
தலைவர் கடமை கருதி நெடியபயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பிரிவை மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பிரிவாற்றாது மனைவி அழுதழுது அவளது கண்கள் மலரைக் காணவும் நாணுகின்றன; தம்மை விரும்பிக் காதலித்தவரது அன்பில்லாமையை ஒளியிழந்த கண்கள் பிறர்க்கு அறிவிக்கின்றனவே; அவரை மணந்த மகிழ்வால் பெருத்திருந்த தோள்கள் இப்பொழுது இளைத்திருப்பதால் அவர் பிரிவை நன்கு தெரிவிக்கின்றனவே!; துணைவர் உடனில்லாமல் தன்னுடைய பழைய அழகை இழந்த தோள்கள் மெலிந்து பசிய வளைகள் கழலுகின்றன; பழைய அழகும் மறைந்ததும், வளையல்களை இழந்து தோள்கள் வாடி நிற்கின்றமையும் அவரது கொடுமையைச் சொல்லுமே;
இவ்வாறு தன் உறுப்பு நலன்கள் அழிந்துகொண்டு வருவதை எண்ணிக்கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
'தோள்கள் மெலிவதையும் அணிகள் கழல்வதையும் கண்டு யான் நோகின்றேன். அதற்காக என் தலைவரைக் கொடுமையுடையவர் என்று ஊரார் கூறுவதை ஆற்றமாட்டாமல் நான் வருந்துகிறேன்' என்கிறாள் தலைவி.
கணவர் தொழில் கருதி நீண்ட பிரிவில் சென்றிருக்கிறார். ஊண் உறக்கம் இன்றி வருந்திக் கொண்டிருக்கிறாள் தலைவி. அவரையே நினைத்துக் கொண்டிருந்ததால் உடல் மெலிந்தாள். தோள் இளைத்து வளையல் நெகிழ்ந்து விழுகின்ற நிலையில் அவள் உடல் இருக்கிறது. அவர் வரவு நீட்டித்துக்கொண்டே போவதாக இப்பொழுது அவள் உணர்வதால் அவள் பொறுமை இழந்த நிலையில் உள்ளாள். கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் (குறள் 1235) என்று முந்தைய பாடலில் தனது மெலிந்த உடலும் அதனால் அதிலிருந்து நழுவி நழுவி விழும் தோள்அணியும் கொடியார் கொடுமை உரைக்கும் என்று ஆற்றாமல் தலைவரையே திட்டினாள் அவள்.
ஆனால் இப்பொழுது ஊரார் தனது தற்போதைய உடல்நிலைக்குக் கணவரே காரணம் என்பதால் அவரைக் ‘கொடியவர்‘ என்று கூறுகிறார்கள் எனக் கேள்விப்படுகிறாள். வெளியார் அவரைக் கொடியவர் எனக் கூறுவதை அவளால் தாங்கமுடியவில்லை. எனவே 'தொடியொடு தோள் நெகிழ நோவல் (நோகின்றேன்); அவரை நொந்து கொடியரென்று யாரும் கூறவேண்டாம் என்ற பொருளில் உரைக்கின்றாள் அவள்.
முன்பு உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர் (காதற்சிறப்பு உரைத்தல் 1130 பொருள்: காதலர் என் உள்ளத்துள்ளே என்றும் மகிழ்ந்து உறைகிறார்; அதனை அறியாது, காதலியைப் பிரிந்து உறைவர் அன்பிலார் என்று இவ்வூரார் அவரைப் பழிப்பர்) எனக் கணவரை அன்பில்லாதவர் என்றதற்கே வருத்தப்பட்ட தலைவி இன்று அவரைக் கொடியவர் என்று கூறியதைக் கேட்டு நொந்து துடிக்கும் அவளது உள்ளத்தைக் காண முடிகின்றது. தலைவர் பிரிந்திருந்து துன்பம் தந்தபோதும் விட்டுக் கொடுக்காமல் தம் காதலைப் பிறர் தூற்றா வண்ணம் காக்கின்ற உள்ளத்தை உடையவளாக தலைவி திகழ்கிறாள். அவள் தன் தலைவன்பால் கொண்டுள்ள பற்றும் மதிப்பும் நன்கு வெளிப்படுகின்றன.

'நோவல்' குறிப்பது என்ன?

'நோவல்' என்ற சொல்லுக்கு நோவேன், நோவோம், யான் உடம்பட்டிருப்பது, நோவா நின்றேன், நோகின்றேன், வருந்துகிறேன், நோகவில்லை, வருந்திக் கூறாது விடுக, வருந்துகின்றேன், வருந்துவேன், வருத்தம் மேலிடுகிறது, நொந்து போகிறேன், நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இதற்கு 'நோவேம் இவர்தாம்’ என்று பரிதியும் ‘நேர்வல்’ என்று காளிங்கரும் பாடங்கொண்டனர். ‘நோவல்’ எனும் பாடமே பொருட் சிறப்பினது (இரா சாரங்கபாணி).
தன்வயமில்லாமல் வளை கழலும் அளவிற்கு என் தோள்கள் மெலிவதற்கு யான் 'நோகின்றேன்'. பொலிவற்ற தோள்களைக் காணும் ஊரவர் அதற்குக் காரணமான தலைவரை நொந்துகொண்டு அவர் கொடுமையுடையவர் என்பதை நினைந்து நான் வருந்துகிறேன் என்கிறாள் தலைவி. நோவல் என்பது தோள் மெலிதல் தழுவியது.

'நோவல்' என்ற சொல் நோகின்றேன் அதாவது வருந்துகிறேன் என்ற பொருள் தருவது.

என் தோள்கள் மெலிந்து தோள்அணிகள் கழலவும் தலைவரைக் கொடியரென்று ஊரார் கூறியதற்கு உள்ளம் பொறுக்கமாட்டாமையால் வருந்துவேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எனது தோள் உறுப்புநலனழிதல் அவரைக் கொடியர் என்று ஊர் கூறும்படி ஆயிற்றே!

பொழிப்பு

தோள் மெலிந்து தோள்வளையும் நெகிழ்வதால் கணவரைக் கொடியர் என்று கூறியதற்குப் பொறுக்கமுடியாமல் வருந்துவேன்.