இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1226



மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1226)

பொழிப்பு (மு வரதராசன்): மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர் என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

மணக்குடவர் உரை: மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்.
அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.

பரிமேலழகர் உரை: ('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன்.
('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: மாலைக்காலம் நோய் செய்யும் என்பது காதலர் பிரியாதபோது எனக்குத் தெரியாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாலை நோய்செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்ததுஇலேன்.

பதவுரை: மாலை-மாலைப்பொழுது; நோய்-துன்பம்; செய்தல்-செய்தல்; மணந்தார்-மணந்தவர், கணவர்; அகலாத-பிரியாத; காலை-வேளை, பொழுது, காலத்தில்; அறிந்ததுஇலேன்-அறியப்பெற்றது இலேன்.


மாலைநோய் செய்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாலைப்பொழுது நோய் செய்தலை;
பரிப்பெருமாள்: மாலைப்பொழுது நோய் செய்தலை;
பரிதி: மாலைக்காலம் நம்மை நோய் செய்கிற வகைக்கு;
காலிங்கர்: தோழீ! மாலைப் பொழுதானது எம்மை இப்படி இடர் செய்தலை;
பரிமேலழகர்: ('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; [இன்னையாகின்ற நீ- இத்தன்மையளாகின்ற நீ]

'மாலைப்பொழுது நோய் செய்தலை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாலைப்பொழுது துன்பம் செய்தலை', 'இந்த மாலைப்பொழுது எனக்குத் துன்பம் உண்டாக்கின்றதில்லையே', 'மாலைப்பொழுது துன்பஞ் செய்யு மென்பத்தை', 'மாலைப்பொழுது இன்று துன்பம் செய்தலை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாலைப்பொழுது துன்பம் உண்டாக்குதலை என்பது இப்பகுதியின் பொருள்.

மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்.
மணக்குடவர் குறிப்புரை: அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.
பரிப்பெருமாள்: என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிந்தேனாயின், அது நோய் செய்யுமென்று கூறலாம். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.
பரிதி: கூடிய நாயகர் இருக்கையிலே பிரிந்தவர்க்கு மாலைப் பொழுது இல்லை என்று கெட்டேன் என்றவாறு.
காலிங்கர்: எம்மைக் கைகலந்த காதலர் கையகலாது உடன்வாழ்காலத்துச் சிறுதும் யான் அறிந்தததோ இல்லேன் என்றவாறு.
பரிமேலழகர்: காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம். [வேறுபடுதல் - முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பம் செய்து வந்த மாலைக்காலம் இப்போது வேறுபடும் பகையாய்த் துன்பம் செய்தல்; உடம்படேன் - ஒப்பமாட்டேன்]

'கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்னை முயங்கிய காதலர் பிரியாதபோது அறிந்தேன் இல்லை', 'என் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் என்னுடன் இருக்கிற காலங்களில்', 'காதலர் பிரியாத காலத்து நான் தெரிந்துகொள்ளவில்லை', 'என்னை மணந்து கொண்ட காதலர் என்னை விட்டு நீங்காத பொழுதில் அறியப் பெற்றிலேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மணந்து கொண்ட காதலர் என்னை விட்டு பிரியாத காலத்து தெரிந்திருக்கவில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாலைப்பொழுது துன்பம் உண்டாக்குதலை மணந்தார் என்னை விட்டு பிரியாத காலத்து தெரிந்திருக்கவில்லை என்பது பாடலின் பொருள்.
'மணந்தார்' யார்?

'கணவர் உடனிராத மாலைப்பொழுது கடுந்துயர் தரக்கூடியது.

மாலைப்பொழுது இவ்விதம் துன்புறுத்துமென்று கணவர் என்னை விட்டு பிரிந்து செல்வதற்கு முன் தெரியாமல் போயிற்று!
காட்சிப் பின்புலம்:
கடமை ஆற்றுவதற்காகக் கணவர் பிரிந்து சென்றுள்ளார். பிரிவு தாங்கமுடியாமல் தலைவி வருந்திச் சோர்வுற்றிருக்கிறாள்.
மாலைநேரம் நெருங்குகிறது. அவளது துயர் மிகுகிறது. மாலைப்பொழுதே! நான் அவரோடு கூடியிருந்தபோது வந்தாய், ஆனால் அப்பொழுது இப்பொழுதுபோல் உயிரை உண்ணும் வேலாய் இருந்ததில்லையே! 'நீ நல்லா இரு!' என்று வாழ்த்துவது போல அதைப் பழிக்கிறாள் அவள்; மயங்கிய மாலைப்பொழுதே! நின் துணையும் எம்துணைபோல் வன்கண்மை உடையதோ! நீயும் என்னைப்போல் துன்பம் உடையாய் போலும் என்கிறாள்; குளிருடன் தோன்றி துன்பம் தரும் மாலைப்பொழுது பிரிவுத் துன்பம் வளரும்படியாகவே வருகின்றதே! என வெறுப்படைகிறாள் தலைவி; அவர் இல்லாதபோது வரும் மாலைப்பொழுது கொலைக்களத்துக் கொலைஞர் போல் காட்சியளிக்கிறதே எனச் சொல்கிறாள்; மாலைப்பொழுதே உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன் என்று என்னை வருத்துகிறாய்? எனக் கேட்டுகொண்டு இருக்கிறாள் அவள்.

இக்காட்சி:
மாலைப்பொழுது இவ்வாறு வருத்தும் என்பதை கணவரைப் பிரியாதகாலத்து அறியப்பெற்றிலேன் என்கிறாள் தலைவி.
கணவர் உடனிருந்த காலத்திலும் நாள்தோறும் மாலைப் பொழுது வந்தது. ஆனால் அப்போதெல்லாம் மாலைக்காலம் இன்பம் செய்ததுவே அன்றித் தன்னை வருத்தியது இல்லையென்றும் இப்போது அவர் என்னைவிட்டு நீங்கிய நிலையில்தான், மாலைக்காலம் துன்பம் தரவல்லது என அறிந்துகொண்டனள் என்றும் கூறுகிறாள். கணவர் பிரிந்துசெல்வதற்கு முன் உடன் வாழ்ந்த காலத்தில் இவ்வாறு மாலைக்காலம் என்னை வருத்தியது இல்லையே! அவர் இருக்கும்வரை மாலைப்பொழுது இந்த அளவு தீங்கு செய்ய வல்லது என்பதை அறியாதிருந்தேன். இப்போதுதான், அவர் நீங்கிய பிறகுதான் தெரிகிறது அது எவ்வளவு கொடியது என்று தலைவி சொல்கிறாள்.

'காதல்கணவர் பிரிந்து செல்வதற்கு முன்வரை மாலைப்பொழுதில் என்னுடன் இருந்து வந்தார். அதனால் எனக்கு இன்பமாக இருந்தது. மாலை துன்பமாகத் தெரியவில்லை. இப்பொழுது பிரிந்த நிலையில் மாலைப் பொழுதினால் உண்டாகும் காமத்துன்பம் அறிகிறேன். அவர் என்னோட இருந்த வரைக்கும்-என்னை விட்டுப் பிரியாமல் இருந்த வரைக்கும்- இந்த மாலைப்பொழுது என்கின்ற ஒன்று இவ்வளவு துயரம் தரும் என்று தனக்குத் தெரியாமல் போய்விட்டது. அவர் கூட இல்லாமல் இருக்கும் இப்பொழுது அது நன்றாகத் தெரிகிறது' என்கிறாள்.

பொற்கோ “இன்று காலையில்தான் அவர் என்னை விட்டுப் பிரிந்தார். காலையில் அவர் என்னோடு உடன் இருந்தார். மாலைப் பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை அவர் என்னோடு உடன் இருந்த காலைப் பொழுதில் நான் தெரிந்துகொள்ளவில்லை” என்று இக்குறளுக்கு இன்னொரு பொருளாக உரைக்கின்றார். குறளில் இடம்பெறும் காலை என்னும் சொல் காலைப் பொழுது, நேரம், சமயம், காலம் என்னும் பலபொருள் கொண்டதாய் அமைந்துள்ளதனைக் கருத்தில் கொண்டு இவ்வாறு மாற்றுரை தருகிறார் பொற்கோ.

'மணந்தார்' யார்?

'மணந்தார்' என்ற சொல்லுக்கு என்னோடு கூடினவர், கூடிய நாயகர், எம்மைக் கைகலந்த காதலர், காதலர், என்னை மணந்த துணைவர், என்னை முயங்கிய காதலர், என்னை மணந்த கணவர், என் துணைவர், என்னை மணந்து கொண்ட காதலர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'மணந்தார்' என்றதற்கு என்னோடு கூடியவர் எனப் பொருள் உரைக்கின்றார். இதற்குச் சான்றாக .....குருகு முண்டுதான் மணந்த ஞான்றே (குறுந்தொகை 25 பொருள்: அவன் என்னோடு உறவு கொண்டபோது குருகு (நாரை) பார்த்துக்கொண்டிருந்தது) என்றவிடத்தில் தலைவன் தன்னைக் 'களவில் மணந்த' காலத்தில் அதாவது கூடிய காலத்தில் என்ற பொருளில் வந்துள்ளதை இரா சாரங்கபாணி சுட்டிக் காட்டுவார்.

மணந்தார் என்றதற்கு அண்மையில் மணந்தவர் (just married) என்பது பொருளாகலாம்.

'மணந்தார்' என்ற சொல்லுக்கு மணம் செய்துகொண்டு கூடியவர் என்பது பொருள்.

மாலைப்பொழுது துன்பம் உண்டாக்குதலை மணந்து கொண்ட காதலர் என்னை விட்டு பிரியாத காலத்து தெரிந்திருக்கவில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதலர் பிரிவில்தான் தெரிகிறது மாலை எவ்வளவு கொடியது என்று தலைவி பொழுதுகண்டு இரங்கல்.

பொழிப்பு

மாலைப்பொழுது துன்பம் செய்யும் என்பதை காதலர் பிரிவதற்கு முன் அறிந்திருந்தேன் இல்லை.