இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1223



பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்

(அதிகாரம்:பொழுதுகண்டிரங்கல் குறள் எண்:1223)

பொழிப்பு (மு வரதராசன்): பனி தோன்றிய பசந்த நிறம்கொண்ட மாலைப்பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

மணக்குடவர் உரை: நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது.
இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: (ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது.
(குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)

வ சுப மாணிக்கம் உரை: நடுங்கி வருந்தும் மாலை வெறுப்புஊட்டிப் பிரிவுத் துன்பம் பெருகுமாறு வருகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.

பதவுரை: பனி-குளிர்; அரும்பி-தோன்றி; பைதல்கொள்-துன்பம் கொள்கின்ற, துன்பப்பட; மாலை-மாலைப்பொழுது; துனி-வெறுப்பு; அரும்பி-எய்தி; துன்பம்-துயரம்; வளர-மிகும்படி, முதிர; வரும்-வரும்.


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது;
பரிப்பெருமாள்: நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது;
பரிதி: பனியிரும்பிச் செக்கர்வானம் செய்யும் மாலைப் பொழுது;
காலிங்கர்: தன் மேனி மேல் நுண்பனி அரும்பி மயங்கு உருவாகிய பைதன்மை கொண்டு மற்று இம்மாலையானது யாங்கும் ஈண்டும் அடிகொண்டு;
பரிமேலழகர்: (ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; [பசந்து-மழுங்கி]
பரிமேலழகர் குறிப்புரை: குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது.

'நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'செக்கர்வானம் செய்யும் மாலைப் பொழுது' என்றார். காலிங்கர் 'நுண்பனி அரும்பி மயங்கு உருவாகிய பைதன்மை கொண்டு' என்றும் பரிமேலழகர் 'முன்பு என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரோடு கூடியிருந்தபோது நடுக்கம் தோன்றத் துன்பத்துடன் வந்த மாலை', 'கண்ணீர் அரும்பித் துன்பப்படுவதுபோலத் தோன்றுகிற இந்த மாலைப்பொழுது', 'காதலர் என்னோடிருக்கும்போது நடுக்கமடைந்து மங்கிவந்த மாலைப்பொழுது', 'காதலர் கூடிய நாள் எல்லாம் என் முன் நடுக்கம் அடைந்து பசந்து வந்த மாலை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குளிர் தோன்றி துன்பம் உண்டாக்கும் மாலைப்பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

துனிஅரும்பித் துன்பம் வளர வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.
பரிப்பெருமாள்: இன்றும் எனக்கு வெறுப்புத்தோற்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.
பரிதி: துனி அரும்பித் துன்பம் பெருக வரும் என்றவாறு.
காலிங்கர்: பின்னும் இத்துன்பம் நமக்கு யாமம் எல்லாம் வளர்ந்து எடுப்பதற்கு வந்து எய்தா நின்றது; மற்று என்னை செய்வது என்றவாறு.
பரிமேலழகர்: இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது. [அதற்கு உளதாம் துன்பம் - அவ்விறத்தலுக்கு உண்டாகும் துன்பம்; ஒருகாலைக்கு ஒருகால் - ஒருவேளைக்கு ஒரு வேளை;
பரிமேலழகர் குறிப்புரை: துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம். [அதனால் - உயிர் வாழ்தற்கண் வெறுப்புண்டாக வரும் மாலைக் காலத்தினால்; ஆற்றுமாறு என்னை? - பொறுக்கும் வழி யாது?]

'வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிந்த இந்நாள் எனக்கு வெறுப்புத் தோன்றித் துன்பம் மிக வந்துள்ளது', 'எனக்கு அச்சமும் துன்பமும் அதிகரிக்கச் செய்யத்தான் வருகிறது', 'இப்பொழுது எனக்குக் கவலையைத் தோற்றுவித்து என் துன்பம் மிகும்படி வருகின்றது', 'இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம். துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிகவாரா நின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

எனக்கு வெறுப்பூட்டித் துன்பம் நாளுக்கு நாள் மிகும்படி வருகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பனிஅரும்பித் துன்பம் உண்டாக்கும் மாலைப்பொழுது எனக்கு வெறுப்பூட்டித் துன்பம் நாளுக்கு நாள் மிகும்படி வருகின்றது என்பது பாடலின் பொருள்.
'பனிஅரும்பி' என்ற தொடர் குறிப்பது என்ன?

'அவர் இல்லாதபோது மாலைநேரத்துக் குளிர் பொறுத்துக் கொள்ளமுடியாததாக உள்ளது' - தலைவி

குளிருடன் தோன்றி துன்பம் தரும் மாலைப்பொழுது வெறுப்பை மனதில் கொள்ளச்செய்து பிரிவுத் துன்பம் வளரும்படியாகவே வருகின்றது என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகக் கணவர் பிரிந்து தொலைவு சென்றிருக்கிறார். தலைவிக்கு பிரிவுத்துயரைத் தாங்க இயலவில்லை. அவர் உடனிருக்கும்போது மாலைப்பொழுது முன்பு இனிமையாக இருந்தது. இப்பொழுது ஒவ்வொரு மாலையும், காமத்துயர் உயிர்போகும் வண்ணம் வாட்டுகிறதாம்; பகலெல்லாம் ஒளியுடன் காட்சி தந்த பொழுது இப்பொழுது மயங்கிக் காட்சி யளிப்பதை அதுவும் துன்புறுவதாக எண்ணி, பொழுதை விளித்து 'என் கணவர்தான் அருளின்றிப் பிரிந்து சென்றிருக்கிறார் என்று எண்ணீயிருந்தேன், உன் துணையும் என் காதலரைப் போலவே கொடுமையுடையது தானோ' என இரக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
கணவரை நினைத்து அவர் எப்பொழுது திரும்பி வருவாரோ என்ற ஏக்கத்துடன் தலைவி காத்துக் கொண்டிருக்கிறாள். பகல்நீங்கி சுற்றிலும் ஒளிகுறைந்து மழுங்கிய பொழுதாகிறது. குளிர் பரவத் தொடங்குகிறது. ஒவ்வொரு மாலையும் இவ்வாறு குளிர் தோன்ற மயங்கிவருகிறது. மாலைப்பொழுது வந்தால் காதலர்க்கு காம நோய் வருத்தத் தொடங்கும். குளிர் காதலுணர்ச்சியைத் தூண்டக்கூடியதாதலால் காம வேதனை வாட்டப் போகிறதே என்று நடுங்குகிறாள் தனிமையில் துடித்துக்கொண்டிருக்கும் தலைவி; கணவர் ஒருவராலேயே இக்குளிர் தரும் துன்பத்திலிருந்து தன்னைக் காக்கமுடியும். அவர் பிரிந்து சென்றதிலிருந்து ஒவ்வொருமாலையும் கிளர்ச்சியால் துயரம் கண்டவள் என்பதால் இப்பொழுது ஏன் வருகிறது என்ற வெறுப்பு மாலைநேரத்தின்மீது அவளுக்கு ஏற்படுகிறது. அவர் உடன் இருந்தால் இக்குளிர் பெருமகிழ்வு எய்தத் துணை செய்யும். அவர் இல்லையாதலால் குளிர் மாலைப்பொழுது தனக்கு வெறுப்புஊட்டிப் பிரிவுத் துன்பம் பெருகுமாறு வருகின்றது என்கிறாள்.

தலைவி கணவருடன் இருந்த காலத்து மாலைப் பொழுது அவளைக் கண்டு நடுக்கமடைந்து துன்புற்று அஞ்சியதாகவும், இப்பொழுது அவளைக் கண்டு அஞ்சாது அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றித் துன்பம் வளருமாறு வருகின்றது என்றும் இக்குறளுக்கு வேறொரு பொருள் கூறினர். இது அத்துணைச் சிறப்பில்லை. பைதல் என்ற சொல் துன்பம் என்ற பொருள் தருவது; ‘பைதல்கொள் மாலை’ என்பதற்குத் துன்பப்படும் மாலைநேரம் என்ற கருத்துக் கொணர இவ்விதம் விளக்கினர்.

'பனிஅரும்பி' என்ற தொடர் குறிப்பது என்ன?

'பனிஅரும்பி' என்றதற்கு எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கி, தன் மேனி மேல் நுண்பனி அரும்பி, என்முன் நடுக்கம் எய்தி, பனி தோன்றிய, பனி பெய்து நடுக்கமுற்று, நடுங்கி வருந்தும், நடுக்கம் தோன்ற, கண்ணீர் விட்டு, நடுக்கம் தோன்றி, நடுக்கமடைந்து, என் முன் நடுக்கம் அடைந்து, பனிபடர்ந்து நடுங்கவைக்கும், குளிர்ச்சி தோன்றி, குளிர்ச்சியைக் கொடுத்த என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நாமக்கல் இராமலிங்கம் கண்ணீர் அரும்ப என ஒரு மாறுபாடான பொருள் கூறுகிறார். சிலர் என்முன் அஞ்சி நடுக்கம் எய்திய மாலை என்றனர். பலர் குளிர் தோன்றிய மாலைப்பொழுது என்று உரை கூறினார். குளிரால் நடுக்கம் தோன்ற வந்த மாலை எனப் பிறர் உரை கொண்டனர். இவற்றுள் குளிர் உண்டாக்கிய அல்லது குளிருடன் வந்த மாலை என்பதே பொருத்தம்.

'பனிஅரும்பி' என்றது குளிர் தோன்றிய மாலை குறித்தது.

குளிர் தோன்றி துன்பம் உண்டாக்கும் மாலைப்பொழுது எனக்கு வெறுப்பூட்டித் துன்பம் நாளுக்கு நாள் மிகும்படி வருகின்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கிளர்ச்சியூட்டிய குளிர்மாலை இப்பொழுது வெறுப்புத் தோன்றச் செய்கிறதே என்னும் தலைவியின் பொழுதுகண்டிரங்கல்.

பொழிப்பு

குளிர் தோன்ற, துன்பம் எய்தச் செய்யும் மாலைப்பொழுது வெறுப்புத் தோன்ற காதல் துன்பம் மிகுவிக்க வருகின்றது