இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1217



நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1217)

பொழிப்பு (மு வரதராசன்): நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில்மட்டும் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

மணக்குடவர் உரை: நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?
இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி?
(பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம', என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நேரிலே வந்து அன்பு செய்யாத கொடியவர் கனவிலே வந்து என்னை வருத்துவது ஏன்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவினால் நல்காக் கொடியார் கனவினால் எம்மைப் பீழிப்பது என்.

பதவுரை: நனவினால்-விழிப்பு நிலையின் கண்; நல்கா-தலையளி செய்யாத, அன்புகாட்டாத; கொடியார்-தீயவர்; கனவினால்-கனவின் கண்; என்-எதனால், எதற்காக; எம்மை-எங்களை; பீழிப்பது-துன்புறுத்துவது.


நனவினால் நல்காக் கொடியார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் அருளாத கொடுமையையுடையார்;
பரிப்பெருமாள்: நனவின்கண் அருளாத கொடுமையையுடையார்;
பரிதி: நனவினால் இன்பம் தராமல் பிரிந்த நாயகர்;
காலிங்கர்: நெஞ்சே! கனவின்கண் நம்மை நன்கு அளித்தருளாத கொடியவர்;
பரிமேலழகர்:(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்;
பரிமேலழகர் குறிப்புரை: பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும்.

'நனவின்கண் அருளாத கொடியவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நனவில் தோன்றி அருள்புரியாத கொடிய காதலர்', 'நான் விழிப்பாக இருக்கும்போது வந்து எனக்கு இன்பம் தரமுடியாமல் கொடுமை செய்கிற இவர்', 'நனவிலே வந்து அருள் செய்யாத கொடியவர்', 'ஒரு பொழுதும் நனவில்வந்து அன்பு செய்யாத கொடியவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேரில் தோன்றி அருள்புரியாத கொடியவர் என்பது இப்பகுதியின் பொருள்.

கனவினால் என்எம்மைப் பீழிப்பது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?
மணக்குடவர் குறிப்புரை: இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகனைக் கனவகத்துக் கண்டு முன்பு நல்காமையை நினைத்து ஊடல் உற்றுழி அதனை உணர்த்திக் கூடுவதன் முன்னம் விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது. பீழை என்றது அவன் கூந்தலும் அல்குலும் பற்றி நலிந்ததனை.
பரிதி: கனவினால் வந்து எம்மை வருத்தம் செய்வது என்னை என்றவாறு.
காலிங்கர்: வருந்தி யாம் கண் துயிலப் பெற்றுத் துயிலின் கனவிடை எய்தியும் மற்று அவ்விடத்தும் கலந்து இன்புறாது எம்மை இடர் உறுவிக்கின்றது என்னை?
காலிங்கர் குறிப்புரை: எனவே அவ்விடத்துக் கண்டமாத்திரமே அல்லது கலந்து இன்புறாத கடுந்துயர் நினைந்து ஆற்றாளாயினாள் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி?
பரிமேலழகர் குறிப்புரை: கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம', என்பதாம்.

'கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எதற்கு?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவில் மட்டும் தோன்றி எம்மை வருத்துவது என்ன நினைத்து?', 'என் கனவில் மட்டும் வந்து ஏன் என்னை இப்படி வருத்தப்படுத்துகிறார்?', 'கனவிலே வந்து நம்மை வருத்துவது எதனாலே?', 'நாள்தோறும் கனவில் வந்து எம்மை வருத்துவது எந்தத் தொடர்பு பற்றி?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கனவில் மட்டும் வந்து என்னை வருத்துவது எதனாலே? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நேரில் தோன்றி அருள்புரியாத கொடியவர் கனவில் மட்டும் வந்து என்னை பீழிப்பது எதனாலே? என்பது பாடலின் பொருள்.
'பீழிப்பது' என்ற சொல் குறிப்பது என்ன?

கனவில் வந்து இன்பம் தந்து இடையிலேயே போய்விட்டாரே!

நனவிலே வந்து அருள் செய்ய நினையாத கொடியவர், கனவிலே வந்து நம்மைத் துன்புறுத்துவது எதனாலே?
காட்சிப் பின்புலம்:
கணவர் பணி நிமித்தம் அயல் சென்றிருக்கிறார். தலைவி அவரையே நாளெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கிறாள். அவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லையே என்று கவலையுற்றிருக்கும்போது அவர் கனவில் வந்து தோன்றினார். அக்கனவு அவள் துயரத்தையெல்லாம் நீக்கிவிட்டது என்று உணர்ந்தாள். அக்கனவுக்கு நன்றி பாராட்டும் வண்ணம் அதற்கு என்ன வகையான விருந்து வைக்கப் போகிறேனோ எனச் செய்வதறியாமற் போனாள். அடுத்து அவர் கனவில் வரும்போது தான் எவ்வாறு பிரிவில் உயிர் நீங்காமல் உள்ளேன்; அவரைக் கனவில் கண்டதால்தான் பிழைத்திருக்கிறேன் என்பதைச் சொல்வேன்; அவரைத் தேடித் தன்னிடம் தருவதனால் கனவின்மீது தனக்குக் காதல் உண்டாகிறது; அவரைக் கனவில் கண்டாலும் தனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது; நனவு என்ற ஒன்று இருப்பதால்தானே கனவு கலைந்ததும் அவர் மறைந்துவிடுகிறார் என்றவாறு அவள் எண்ணிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிவுத் துயர் தலைவியை வாட்டுகிறது. இன்னும் அவர் திரும்பிவரவில்லையே என்று அவளுக்கு சினம் வருகிறது. இதனால் காதற் தலைவரைக் கொடியவர் என்கிறாள். ஆனாலும் உள்ளத்தில் அவர்மேல் தீராக் காதல் கொண்டவள் அவள். நேரில் பார்க்க முடியாத காதலரைக் கனவு மூலம் கண்டு இன்பம் கொள்கிறாள். மனதை ஆற்றிக் கொள்ளவும் செய்கிறாள். ஆனாலும் அவரை நேரில் காணவேண்டும் என்ற விருப்பம் மேலோங்கி நிற்கிறது. கணவர் கனவில் வந்து கூடி இன்பம் அளித்துவிட்டு நனவில் மறைந்து விடுவதனால், உற்ற இன்பம் நிலைக்காதுபோய் வருத்தம் பெரிதாகிறது. கனவில் அவரை அவள் கண்டதால் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். ஆனால் விழிப்புவந்தவுடன் 'மறைந்துபோய்த் துன்புறுத்துகிறாரே' என்று ஊடுவது போன்ற நிலையில் சிறிது சினம் கொண்டு நேரில் வந்து அருள் செய்யாத கொடிய காதலர், கனவிலே வந்து, இன்பம் தந்துவிட்டு நீங்கி, நம்மை வருத்துவது எதனாலே? என எண்ணுகிறாள்.
கனவிலே தன்னுடன் கலந்து இன்பம் தந்தவர் நனவில் வந்தால்தான் என்ன என்றவாறு கனவுநிலையை நினைத்து மகிழ்ந்து, நனவில் வந்து எப்பொழுது மகிழ்விப்பாரோ என்ற நினைப்பில், தனது பிரிவாற்றாமையைத் தணிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் தலைமகள்.

இக்காட்சியை நினைப்பூட்டும் குறுந்தொகைப் பாடல் ஒன்று:
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்துயில் எடுபுதி கனவே!
எள்ளார் அம்ம, துணைப்பிரிந் தோரே
(குறுந்தொகை 147 பொருள்: கனவே! நுண்ணிய வேலைப்பாடமைந்த அணியை உடைய தலைவியைக் கொணர்ந்து கொடுத்தாய் போல இனிய துயிலினின்றும் எழுப்புகின்றாய் தம் துணைவியரைப் பிரிந்தோர் உன்னை இகழார்) என்கிறது. குறள் கனவினின்றும் நீங்கிய தலைவியின் நனவைக் கூறுகிறது; இச்சங்கப்பாடல், பிரிவின்கண் உள்ள தலைவனை எழுப்பித் தலைவியைக் காணவைத்த கனவு பற்றிச் சொல்கிறது.

'பீழிப்பது' என்ற சொல் குறிப்பது என்ன?

'பீழிப்பது' என்ற சொல்லுக்கு துன்பம் உறுத்துவது, துன்பப்படுத்துவது, வருத்துவது, வருத்தி துன்பம் தருவது, வருத்தப்படுத்துவது, அலைக்கழிப்பது, கடுந்துயரில் ஆழ்த்துவது, துயரைப் பெரிதாக்குவது என உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவை அனைத்துமே வருத்தப்படுத்துவது என்ற பொருள் தருவனவே.

'பீழி (வருத்து) என்ற வினைச்சொல்லும் பீழை (வருத்தம்) என்ற தொழிற்பெயரும் குறளில் முதன்முதலாக வந்துள்ளன' என்கிறார் செ வை சண்முகம். மேலும் அவர் 'பீழை என்பது வருத்தம், துன்பம் என்ற பொருள் தருவதால் தேவை கருதி கடனாளாமல் நாகரிகம் கருதி கடனாண்ட சொல் என்பது தெளிவு. அப்படிப்பட்ட சொற்கள் சங்க இலக்கியத்திலும் காணப்படுகின்றன. இது வடமொழியில் பீடா (pida) என்றும் பாலி பிராகிருத மொழிகளில் பீளா என்றும் உள்ளது. எனவே பாலி அல்லது பிராகிருத மொழியிலிருந்து கடனாளப்பட்டிருக்கலாம்' எனவும் உரைக்கிறார்.
கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் (வினைத்தூய்மை 658 பொருள்: பழிக்கப்பட்டவற்றை இகழ்ந்து விலக்காது செய்தார்க்கு செயல் முடிந்தாலும் பின் துன்பம் உண்டாகும்) , அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது (புல்லறிவாண்மை 843 பொருள்: புல்லறிவாளர் தாமே தம்மை வருத்திக் கொள்ளும் துயரை பகைவராலும் செய்ய இயலாது) ஆகிய குறட்பாக்களிலும் பீழை என்ற சொல் ஆளப்பட்டுள்ளது.

'எம்மைப் பீழிப்பது என்?' என்ற தலைவியின் கூற்றை உரையாசிரியர்கள் எவ்விதம் அணுகினர்?
மணக்குடவர்: 'விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது' என ஆற்றாமைக்குக் காரணம் கூறாமல் பொருளுரைத்தார்.
பரிப்பெருமாள்: 'தலைமகனைக் கனவகத்துக் கண்டு முன்பு நல்காமையை நினைத்து ஊடல் உற்றுழி அதனை உணர்த்திக் கூடுவதன் முன்னம் விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது' என உரைத்து 'பீழை என்றது அவன் கூந்தலும் அல்குலும் பற்றி நலிந்ததனை' என்ற விளக்கமும் தந்தார்.
காலிங்கர்: 'தலைவி வருந்தி கண் துயிலப் பெற்றுத் துயிலின் கனவிடை எய்தியும் மற்று அவ்விடத்தும் கொடியவர் கலந்து இன்புறாது அவளுக்கு இடர் விளைக்கின்றது என்னை? எனவே அவ்விடத்துக் கண்டமாத்திரமே அல்லது கலந்து இன்புறாத கடுந்துயர் நினைந்து ஆற்றாளாயினாள் என்பது பொருள்' என்றார்.
பரிமேலழகர் 'கனவில் தோள் மேலராய் இருந்தவர் விழிப்பால் திடுமென மறைந்ததால் பெருந்துன்பம் உற்றாள் தலைவி' என விளக்கினார்.

கணவர் கனவில் தோன்றி இன்பம் நல்கிவிட்டு தான் கண் விழித்தவுடன் அவ்வின்பம் நிலைத்து நில்லாவண்ணம் மறைந்துவிட்டது தன்னைத் துன்புறுத்துகிறது என்கிறாள் தலைவி.

நேரில் தோன்றி அருள்புரியாத கொடியவர் கனவில் மட்டும் வந்து என்னை வருத்துவது எதனாலே? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கனவில் களிப்புதந்து, நனவில் மறைந்து, கண்ணீர் வரவழைக்கிறாரே எனத் தலைவி கனவுநிலை உரைத்தல்.

பொழிப்பு

நேரில் வந்து அருள்புரியாத கொடிய காதலர் கனவில் மட்டும் தோன்றி என்னை வருத்துவது எதனால்?