இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1208



எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1208)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங் கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

மணக்குடவர் உரை: யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள்.
அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.

பரிமேலழகர் உரை: இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ?
(வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: எத்தனை முறை நினைந்தாலும் காதலர் சினவார்; எனக்கு அவர் காட்டும் பெருமை அவ்வளவு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைத்து நினைப்பினும் காயார்; காதலர் செய்யும் சிறப்புஅனைத்தன்றோ.

பதவுரை: எனைத்து-எவ்வளவு; நினைப்பினும்-நினைத்தாலும், எண்ணினாலும்; காயார்-வெகுளார்; அனைத்து-அவ்வளவிற்று; அன்றோ-அல்லவோ, இல்லையோ; காதலர்-காதலையுடையவர்; செய்யும்-செய்யும்; சிறப்பு-பெருமை, இன்பம்.


எனைத்து நினைப்பினும் காயார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்;
பரிப்பெருமாள்: யாம் அவரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்;
பரிதி: நாயகரை எப்போது நினைப்பினும் காயார்;
காலிங்கர்: கண்டு எய்திய காலத்திலும் தமது இனிய குணங்களை நினைத்தல் அன்றிப் பின்பு, 'நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்' என்று இங்ஙனம் தெளிந்து அளித்துப் பிரிதலும் ஆற்றலும் வல்லமையிற் 'படிறுடைமையும் பண்பின்மையும் உடையர் ஆயினர்' என்று இங்ஙனம் கொடுமை நினைப்பினும் காய்வது ஒன்று இலர்;
பரிமேலழகர்: (இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; [அதற்கு - மிக நினைத்தற்கு]
பரிமேலழகர் குறிப்புரை: வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல்.

'யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரை நான் எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் வெகுளமாட்டார். (கண்முன் தோன்றுவார்)', 'அவர் என்னைப் பிரிந்திருப்பதைப்பற்றி நான் எப்படியெல்லாம் அவரை நொந்துகொண்டு நினைந்தாலும் என் மனத்திலுள்ள அவர் கோபிப்பதே இல்லை', 'எவ்வளவு மிகுதியாக அவரை நினைத்தாலும் அவர் என்னைச் சினக்க மாட்டார்', 'அவரை எவ்வளவு நினைத்தாலும் அதற்காக வெறுக்க மாட்டார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நான் எவ்வளவு நினைத்தாலும் வெகுளமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள்.
மணக்குடவர் குறிப்புரை: அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
பரிப்பெருமாள்: அவ்வளவன்றோ அன்புற்றார் செய்யும் அருள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
தலைமகள் ஆற்றாமை கண்டு 'அருள் இலன்' என்று இயற்பழித்த தோழிக்கு 'யாம் கொடியர் என்று நினைக்கவும் அதற்கு முனியாது நெஞ்சத்தே உறையா நின்றார்; ஆதலால் அருளுடையர் என்று கொள்ளப்படும்' என்று இயற்பட மொழிந்தது.
பரிதி: இதுவன்றோ நல்லோர் செய்யும் குணம் என்றவாறு.
காலிங்கர்: காதலித்து உள்ளுள்ளே உறைவர்; அதனால் நமக்கு நம் காதலர் செய்யும் பெருஞ்சிறப்பு அவ்வளவைத்து அன்றோ? எனவே கண்ணெதிர் நிற்பர்; இன்று கருத்து எதிர் நிற்பர்; இதுவன்றோ நம்மாட்டுத் தலைவர் செய்யும் தலையளி என்றவாறு.
பரிமேலழகர்: காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? [அவ்வளவு அன்றோ - வெகுளாதிருத்தல் அல்லவோ]
பரிமேலழகர் குறிப்புரை: தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.

அவ்வளவன்றோ காதலர் செய்யும் அருள்/குணம்/தலையளி/இன்பம் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் செய்யும் சிறப்பு அவ்வளவன்றோ?', 'அதுவல்லவா என் காதலர் எனக்குச் செய்யும் சிறப்பு', 'அவ்வளவுதான் அவர் எனக்குச் செய்யும் நன்மையாகும்', 'காதலர் எனக்குச் செய்யும் சிறப்பு அத்தகையது அன்றோ?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காதலர் செய்யும் சிறப்பு அவ்வளவு அன்றோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நான் எவ்வளவு நினைப்பினும் காயார்; காதலர் செய்யும் சிறப்பு அவ்வளவு அன்றோ? என்பது பாடலின் பொருள்.
நினைப்பதற்காக எதற்குக் காயவேண்டும்?

'எவ்வளவு நான் நினைத்துக்கொண்டாலும் அவர் அதற்காகச் சினம் கொள்வதில்லை. எனக்கு அவர் செய்யும் பெருமையின் அளவு அது' என்கிறாள் தலைவி.

காதல் கணவரை நான் எவ்வளவு மிக நினைந்தாலும் சீறமாட்டார். அவர் செய்யும் அளி அவ்வளவு அல்லவா?
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகத் தலைவர் பிரிந்து சென்றிருக்கிறார். நீண்ட காலமாக அவரிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை. மனைவி அவரை எந்நேரமும் நினைத்துக் கொண்டேயிருக்கிறாள்.
அவரை நினைத்தாலும் பெரு மகிழ்ச்சியைத் தருவதால் பருகினால் அல்லாமல் களிப்புச் செய்யாத கள்ளைவிடக் காமம் இனிமையாயத் தோன்றுகிறது; பிரிவில் காமத்தை நினைத்தால் நினைப்பவர்க்குப் பிரிவுத்துன்பம் இல்லையாம்; காதல், கூடினும் பிரியினும் இனிமையே தருவது; மனைவிக்குத் தும்மல் வருவதுபோன்று வராமல் இருந்துவிட்டது, தலைவர் தன்னை நினப்பார் போன்று நினையாது விட்டாரா?; நம் நெஞ்சில் அவர் எப்பொழுதும் குடிகொண்டுள்ளார், அதுபோல் தலைவரும் அவர் உள்ளத்திலும் நாம் இருக்கின்றோமோ இல்லையா?; கணவர் தன் நெஞ்சுக்குள் யான் நுழையாதபடி தடுத்துக்கொள்கிறார். ஆனால் நம் நெஞ்சில் அடிக்கடி வந்து புகுந்து கொள்கிறாரே; அவர்க்கு வெட்கமாயிருக்காதா?; தலைவரோடு கூடியிருந்தபொழுது உண்டான இன்பத்தை நினைத்துக்கொண்டு பிரிவுத்துன்பத்திலும் உயிர் வாழ்கிறேன்; மற்றபடி நான் எதற்காக வாழவேண்டும்?; அவர் பிரிவை நினைக்குந்தோறும் அது என் நெஞ்சைச் சுடுகிறது; அவரை நினைக்காமல் அவரை நான் மறந்தால் என்ன ஆவேன்?;
இவ்விதம் தலைவி எந்தநேரமும் கணவரை நினைவில் வைத்துகொண்டே இருக்கிறாள்.

இக்காட்சி:
பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள தலைவரை மறக்கமுடியாமல் மனத்திற்குள் வைத்து அவரையே நினைத்து அந்த நினைவிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறாள் காதல் மனைவி. ஆனால் எப்பொழுதும் அல்லவா அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு சமயம் அவளுக்கு எண்ணம் தோன்றுகிறது நாம் இவ்விதம் அடிக்கடி அவரை நினைப்பதால் தன்னுள் உறையும் அவர் தன்மீது சினம் கொள்வாரோ? ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை. 'திரும்பத் திரும்ப என்முன் தோன்றி நற்காட்சி தருகிறார். எத்துணை முறை நினைத்தாலும் தலைவர் என்மீதுசினம் கொள்வதில்லை. எப்பொழுது நினைத்தாலும் அதற்குட்பட்டவராய் என் நெஞ்சினுள் வந்து குடி புகுகின்றாரே. அவர் என்மீது வெகுண்டு நெஞ்சிலிருந்து வெளியேறுவதில்லை. அந்த அளவு என்மீது அன்பு கொண்டிருக்கிறார். அதனாலேயே அச்சிறப்புச் செய்கிறார்' எனப் பெருமிதமாகச் சொல்கிறாள்.

'காதலர் செய்யும் சிறப்பு' என்பதற்குக் 'காதலர் நம்மாட்டு அருள்' என்று மணக்குடவர் கூற 'காதலர் செய்யும் குணம்' எனப் பரிதி கூறுவார். பரிமேலழகர் 'வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள்' என விளக்க உரை வரைந்தார்.
சிறப்பு என்றதற்கு பிறர் தரும் விளக்கங்கள்:
* யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள்; அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
* வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள்.
* எவ்வளவு காலம் நினைத்தாலும் அவர் அதற்குட்பட்டவராய் என் நெஞ்சினுள் வந்து குடி புகுகின்றார். அவர் என்னை வெறுத்து வெகுண்டு ஓடுவதில்லை. அவர் செய்யும் இச்சிறந்த உதவியின் சிறப்புத்தான் என்னே!' என்கிறாள் தலைவி.

நினைப்பதற்காக எதற்குக் காயவேண்டும்?

எனைத்து நினைப்பினும் காயார் அதாவது எத்தனை முறை நினைத்தாலும் வெகுளமாட்டார் என்று தலைவி கூறுகிறாள். தன் தலைவரை தான் நினைத்தால் அதற்காக அவர் ஏன் தன் மீது வெறுப்புக் கொள்ள வேண்டும்?
'பிரிந்து சென்றுள்ள காதலரை தான் எந்த வகையால் எவ்வளவு நினைத்தாலும் தன் நினைவு எப்படிப்பட்டதாய் இருப்பினும் அந்நினைவுகளில் சில அவருக்குச் சினத்தை உண்டாக்கக் கூடியதாய் இருப்பினும் அவர் தன் மீது எக்காரணம் கொண்டும் சினங்கொள்ளமாட்டார். அவர் எனக்குத் தரும் சிறப்பு அத்தகையது ஆகும்; அவர் நினைப்பாகவே தான் இருப்பதை அவரும் விரும்புகிறார் என்பதாலும் அவர் தன்னிடம் கடிந்துக்கொள்வதில்லை' எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறாள் தலைவி.
யாரைக்குறித்து ஒருவர் நினைத்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் அதை அறியவோ சினங்கொள்ளவோ போவதில்லை. அந்தநிலையில், இவள் என்ன நினைத்துப் புலம்பிக்கொண்டு இருக்கிறாள் என்று அவளை விட்டுப் பிரிந்து போனவர்க்கு எங்கே தெரியப்போகிறது? எனினும், அவர்க்கு எல்லாமே தெரிவதாகவும், இருந்தும் சினங்கொள்ளாமல் இவளைப் பொறுப்பதாகவும் கற்பனை செய்து இங்கே பாடுகிறாள் தலைவி.

எப்பொழுது அவர் திரும்பி வருவார் என்று ஆற்றாமையால் வருந்திக் கொண்டிருந்தாலும் அவரது கடமைச் சுமையையும் உணர்ந்தே இருக்கிறாள். தான் அவரை நினைப்பது அவர் கடமைக்கு இடையூறாக இருக்கும் என்ற 'குற்ற உணர்வும்' அவளிடம் தோன்றுகிறது. தான் நினைப்பதால் அவருக்குத் தும்மல் வரலாம் அல்லது தான் நினைக்கிறோம் என்ற உள்ளுணர்வு அவருக்குத் தோன்றலாம். தம் நினைவு அவருக்கு வந்து விட்டால் அவர் பணி தடைபடும். பணி தடைபடுவதால் சினம் வரலாம். ஆனாலும் அவர் தன்மீது சினம் கொள்ளாமல் எனக்குக் காட்சி தருகிறார். தன் மீது கொண்ட காதல் காரணமாக அவ்வாறு சினம் காக்கிறார் தலைவர்.
தலைவர் அவள் உள்ளத்துள்ளே உறைகிறார் என்று அவள் கருதுகிறாள். அவர் விரைந்து திரும்பி வராமல் 'கொடுமை' செய்வதை நினைத்து நினைத்து அவரை நொந்துகொண்டாலும் அது நெஞ்சில் உள்ள அவருக்குத் துன்பம் செய்யலாம். அதனால் அவர் அவள் மீது சினம் கொள்ளலாம். ஆனல் தன்மீதுள்ள அன்பு காரணமாக அப்படி அவர் சினம் கொள்வதில்லை; அன்று கண்முன் நின்றார்; இன்று கருத்துள் நிற்கிறார் என்கிறாள் தலைவி.

நான் எவ்வளவு நினைத்தாலும் வெகுளமாட்டார்; காதலர் செய்யும் சிறப்பு அவ்வளவு அன்றோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

என் உள்ளத்திலிருந்து நீங்காமல் காதலர் எனக்குப் பெருமை சேர்க்கிறார் என்னும் தலைவியின் நினைந்தவர்புலம்பல்.

பொழிப்பு

எத்தனை முறை நினைத்தாலும் வெகுளமாட்டார்; எனக்கு அவர் காட்டும் பெருமை அவ்வளவு.