இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1185



உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்புஊர் வது

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1185)

பொழிப்பு (மு வரதராசன்): அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலைநிறம் வந்து படர்கின்றது

மணக்குடவர் உரை: எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய்.
இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ?
('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: எம் காதலர் பிரிந்து செல்கின்றார். அங்கே பாராய். அதனால் என் மேனியில் பசப்புப் பாய்தலை இங்கே பாராய்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்.மேனி பசப்புஊர் வது

பதவுரை: உவக்காண்-உங்கே பார்; எம் காதலர்-என் காதலர், என் அன்பர்; செல்வார்-செல்கிறார்; இவக்காண்-இங்கே பார்; என்மேனி- என்உடல்; பசப்பு-நிறம் வேறுபடுதல்; ஊர்வது-படர்வது, படர்கிறது.


உவக்காண்எம் காதலர் செல்வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்;
பரிப்பெருமாள்: எங்காதலராய்ச் செல்கின்றாரை உங்கே பாராய்;
பரிதி: அதே, நாயகர் செல்வம்;
காலிங்கர்: தோழி! கேளாய் அவர் பிரிந்தது பெரிது கொல் என்று கருதவேண்டா; போய் அங்கே காண்; எம் காதலர் இப்பொழுது செல்வார் ஆயினார்;
பரிமேலழகர்: (காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; [அணித்தாய் இருக்கவும்- பக்கத்தில் இருக்கவும்; பண்டு - முன்பும்]

'எம் காதலர் செல்கின்றார் அங்கே பாராய்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் உரை மாறுபாடானது. அவர் காண் என்பதை இடைச்சொல்லாகக் கருதி உங்கே செல்கிறார் என்று மட்டும் உரை செய்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதோ பார்! காதலர் போகிறார்', 'என் காதலர் சென்றிருப்பது எங்கோ வேறிடத்தில்!', 'தலைவர் உடனிருந்த காலத்திலேயே அவர் ஒரு சிறுது பிரிந்து சென்றால்', 'அங்கு நம் காதலர் பிரிந்து செல்வாராக' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உங்கே பார் என் காதலர் செல்கிறார் என்பது இப்பகுதியின் பொருள்.

இவக்காண் என்மேனி பசப்புஊர் வது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய்.
மணக்குடவர் குறிப்புரை:: இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: என்மேனி மேலே பசப்புப் பரப்பதனை இங்கே பாராய்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது
பரிதி: இதே, என் மேனி பசப்புறுவது பார் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வளவில் இங்குக் காண். என் மேனி ஓர் பசப்பு வந்து ஊர்வது என்றவாறு.
பரிமேலழகர்: என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? [அப்பெற்றியது- அத்தன்மையது; பிறிதொன்றுஆமோ - வேறு ஒன்று ஆகுமோ?]
பரிமேலழகர் குறிப்புரை: 'உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம். [அவர்- காதலர்]

'என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இங்கும் பரிமேலழகர் காண் என்பதை இடைச்சொல்லாகக் கொண்டு இங்கேயன்றோ? என்று மட்டும் உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் '!இதோ பார்! என் மேனி மேல் பசலை படர்கிறது', 'என் மேனி பசந்து போனதோ இங்கே என்னிடத்தில். இது என்ன விந்தை', 'என் உடம்பின்மேலே இதோ வந்துவிட்டேனென்று பசலை படர்ந்துவிடும். (அவர் பிரிவுற்ற இக்காலத்திலே அது யாது செய்யாது?)'; 'என் மேனி பசப்பு ஊர்வது இங்கே யன்றோ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

என் உடம்பில் பசலை படர்வதை இங்கே பார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உவக்காண் என் காதலர் செல்கிறார், என் உடம்பில் பசலை படர்வதை இவக்காண் என்பது பாடலின் பொருள்.
உவக்காண், இவக்காண் குறிப்பன எவை?

'விடைபெற்று அங்ஙனக்குள்ளதான் போயிருக்கிறர் என் கணவர். அதற்குள் பார் என் உடம்பில் பசலை தோன்றிவிட்டது'.

'அங்கே பார், என் காதல்கணவர் என்னைப் பிரிந்து செல்கின்றார்; இதோ! அதற்குள்ளாகவே என் உடலில் பசலையானது பற்றிப் படர்கின்றது' என்கிறாள் தலைமகள்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவர் வரவை எதிர்நோக்கி மனைவி காத்திருக்கிறாள். பிரிவைத் தாங்கமுடியாமல் அவர் நினைவாகவே உண்ணாமல் உறங்காமல் இருப்பதால் அவள் உடல் மெலிகிறது. தூக்கமுமில்லாமல் இருந்ததால் உடல் நிறம் மாறிற்று; பசலை படர்ந்தது.
பிரிவுக்கு உடன்பட்டதும் பின்னர் அதனை ஆற்றாது பசலையுற்றதும் எல்லாம் தன்னாலே வந்தனவே எனத் தன்னிரக்கமாகத் தலைவி உரைக்கின்றாள்; அவர் நீங்கியதால்தானே இப்பசப்பு உண்டானது. எனவே இது அவர் கொடுத்ததுதான் எனச் சொல்லி துயரத்திலும் ஒரு ஆறுதல் தேடுகிறாள் அவள்- அவர் தந்த உரிமையுடன் பசலை வந்து தன் மீது ஊர்வதாக எண்ணிக்கொள்கின்றாள்; காமநோயையும் பசலையும் தனக்குக் கொடுத்துவிட்டு தனது சாயலையும் நாணையும் உடன் எடுத்துச் சென்றுவிட்டாரே! என வெருட்சியுற்றுப் புலம்புகிறாள்; கணவரைத்தானே எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; அவர்குணங்களைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் ஏன் இந்தப் பசலை வஞ்சனை என ஆற்றமாற்றாமல் கூறிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவர் பிரிந்து சென்ற அக்கணமே தனக்கு பசலையுண்டானதை நினைவு கூர்கிறாள் மனைவி. காதல்தலைவியிடம் விடைபெற்றுச் சிறுது தூரம்தான் சென்றிருக்கிறார் கணவர். அதற்குள் பிரிவுத் துன்பம் தாங்கமுடியாமல் அவளது உடலில் பசலை படர்ந்துவிடுகிறது. அப்பொழுது அவள் வருந்திக் கூறுகிறாள்: 'அங்கே பார் என் தலைவர் செல்கிறார். இங்கே பார் என் உடலில் பசலை படர்வதை' என்று.
காதலர் பிரிவும் தன் உடலுக்குற்ற துன்பமும் விரைந்து ஒருசேர நிகழ்ந்தன என்பதைத் தலைவி கூற விழைகிறாள். சிறுது நேரம் கூட அவர் பிரிவை அவளால் ஆற்ற இயலாது. இவ்விதம் 'அவர் அந்தப்பக்கம் சென்றார்; பசலை இந்தப் பக்கம் வந்து ஒட்டிக்கொண்டதே' என விரைந்து உண்டான தன் நிறவேறுபாட்டை உணர்ச்சியுடன் உரைக்கிறாள்.

உவக்காண், இவக்காண் குறிப்பன எவை?

'உவக்காண், இவக்காண்' ஆகிய தொடர்களுக்கு உங்கே பாராய் இங்கே பாராய், அதே பார் இதே பார், போய் அங்கே காண் அவ்வளவில் இங்குக் காண். உங்கே இங்கே, அதோ பார் இதோ பார்!, அங்கே பாராய் இங்கே பாராய், எங்கோ இங்கே, உதோ பார் இதோ பார், அங்கு இங்கே, அதோ பாருங்கள் இதோ பாருங்கள், உதோ இங்கே, அந்தப் பக்கம் இங்கு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உவக்காண் என்பதற்குச் சற்றுத் தொலைவில் அங்கே பார் என்பது பொருள். இவக்காண் என்பது இங்கே பார் எனப்பொருள்படும். அங்கே பார் பிரிந்து போகிறார். இங்கே என் உடம்பில் பசலை படரத் தொடங்கிவிட்டது பார் என தலைவி ஆற்றாமையால் கூறுகிறாள் என்கிறது இக்குறள். அங்கே, இங்கே என்பவற்றைக் குறிக்க உவக்காண், இவக்காண் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அங்கே என்றால் மிகத்தொலைவைச் சுட்டிக் காட்டுவது. இங்கே என்பது மிக அருகில் உள்ளதைக் குறிக்கும் சொல். உங்கே என்பது வெகு தொலைவும் இல்லை; மிக அண்மையும் அல்லாத தொலைவு - 'கல்லெறி தூரம்' அதாவது கூப்பிடு தொலைவில்தான் எனப் பொருள்படும்.
‘உவ’, ‘இவ’ சுட்டிடைச் சொற்கள். காண் முன்னிலையசை, ‘உவ’ என்றது ஒரு சில அடித்தொலைவேயுள்ள முன்னிலையிடத்தை, இம்முன்மைச் சுட்டு இற்றைத் தமிழகத்தில் வழக்கிறந்தது (தேவநேயப் பாவாணர்).
உவக்காண், இவக்காண் என்பனவற்றிலுள்ள காண் என்ற சொல்லைத் தனியே பிரித்து உங்கே பாராய், இங்கே பாராய் என்று பரபரத்துத் தலைமகள் கூறுவதாக மணக்குடவர் நயமாக உரை செய்தார். இதையே பரிதி 'அதே, நாயகர் செல்வம். இதே, என் மேனி பசப்புறுவது பார்' என உரைத்தார். காலிங்கரும் 'போய் அங்கே காண், இங்குக் காண்' என பார் என்ற பொருளிலேயே உரை காண்கிறார். பரிமேலழகர் வேறுபாடாகப் பொருள் கூறுகிறார். இவர் காண் என்பதை இடைச்சொல்லாகக் கொண்டு, அங்கே, இங்கே என்று மட்டும் பொருள் கொள்கிறார். இரண்டிற்கும் சேர்த்து தேய அண்மையால் கால அண்மை கூறப்பட்டது என்று முடிக்கிறார். தேய அண்மை இப்பாட்டில் புலப்படுகிறது என்பது விளங்கவில்லை. மணக்குடவர் முதலான மற்ற தொல்லாசிரியர்கள் உரைகள் பொருட்சிறப்போடு உள்ளன.

உவக்காண், இவக்காண் ஆகியவை அங்கே (கூப்பிடு தொலைவில்) பார், இங்கே பார் எனப்பொருள்படுவன.

உங்கே பார் என் காதலர் செல்கிறார் என் உடம்பில் பசலை படர்வதை இங்கே பார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவர் கூப்பிடு தொலைவு போவதற்குள் என் மீது பசப்பு வந்துவிட்டதே என்னும் தலைவியின் பசப்புறுபருவரல்.

பொழிப்பு

உங்கே பார் என் காதலர் பிரிந்து செல்கின்றார்; என் மேனியில் பசப்புப் படர்தலை இங்கே பார்