இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1170



உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1170)

பொழிப்பு (மு வரதராசன்: காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

மணக்குடவர் உரை: அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா.
இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா.
(அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன'¢ ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அவர் இடத்துக்கு என் மனம் போவதுபோல், கண்களும் போக முடியின் கண்ணீரில் நீந்தா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.

பதவுரை: உள்ளம்-நெஞ்சம், மனம்; போன்று-போல; உள்-உள்ளதாகிய; வழி-இடம்; செல்கிற்பின்-செல்லமுடியுமானால்; வெள்ள-வெள்ளமாகிய, பெருக்கெடுத்து ஓடும்; நீர்-நீர்; நீந்தல-நீந்தமாட்டா; மன்னோ-(ஒழியிசை) என்-எனது; கண்-கண்கள், விழிகள்.


உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின்;
பரிப்பெருமாள்: அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின்;
பரிதி: நாயகன் மேலே வைத்த மனம் எனக்கு வசப்படாமல் நாயகனைப் பற்றிச் செல்வதுபோல;
காலிங்கர்: தோழி! எனது உள்ளமானது அவர் உள்வழிச் சென்று, என்மாட்டு வருதலின் மற்று அதுபோல;
பரிமேலழகர்: (நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், [அழற்பாலை அல்லை - அழாதிருப்பாய்]

'அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனம் போலக் காதலருள்ள இடத்திற்கு விரைவில் செல்லவல்லன ஆயின்', '(என் கண்கள் அழ ஆரம்பித்துவிட்டன) என் மனம் என் கண்ணைப் பின் தொடர்ந்து போயிருக்கிற மாதிரி என்னுடைய கண்களும் அவர் இருக்கும் இடத்திற்குப் போனால்)', 'மனம்போல, என் கண்கள் தலைவர் இருக்கின்ற இடத்திற்கு விரைந்து செல்லக் கூடியனவாயிருப்பின்', 'என் கண்கள் மனம்போல, காதலர் உள்ள இடத்திற்குச் செல்லவல்லன ஆயின்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தலைவர் உள்ள இடத்துக்கு நெஞ்சினைப் போல செல்ல முடியுமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா.
மணக்குடவர் குறிப்புரை: இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.
பரிதி: கண்ணே! உள்ளத்துடனே கூடி நாயகனைக் காண்பதன்றியே கலுழ்ந்து நீர் கரைவது என்னோ என்றவாறு.
காலிங்கர்: தாமும் ஆண்டுச் சென்று கண்டு கண்டு ஓடிவருகற்பின் அங்ஙனம் அழுது அழுது பெருவெள்ளம் கோத்தநீர் நீந்துதலைச் செய்யல, காலிங்கர் குறிப்புரை: என்னோ என் கண்களானவை. அதனால் என் நெஞ்சு போலத் தாமும் அவரைக் கண்டு மீளப்பெறாத கடுந்துயரினால் கலுழ்கின்றன என்றவாறு.
பரிமேலழகர்: என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா.
பரிமேலழகர் கருத்துரை: (அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது. [அது - (கண்களுக்கு) மனம் போலக் காதலர் உள்ள தேயத்திற்கு விரைந்து செல்லுதல்]

'என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் கண்கள் தம் வெள்ளமாகிய நீரிற் கிடந்து நீந்தா', 'பிறகு இப்படி வெள்ளம் போலக் கண்ணீரைக் கொட்டி அழுது கொண்டிருக்க மாட்டா. (அவரைக் கண்டால்தான் என் துயரம் தீரும்', 'கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருக்க மாட்டா', 'வெள்ளமாகிய தம் நீரை நீந்த வேண்டாம்' என்றபடி பொருள் உரைத்தனர்.

என் கண்கள் கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்க மாட்டா அல்லவா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தலைவர் உள்ள இடத்துக்கு உள்ளம்போன்று செல்ல முடியுமானால், என் கண்கள் கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்க மாட்டா அல்லவா என்பது பாடலின் பொருள்.
'உள்ளம்போன்று' குறிப்பது என்ன?

கணவரைக் காண முடியாதிருக்கிறதே என்று நீர் கோத்து நிற்கும் கண்களுடன் தலைவி.

என் உள்ளத்தைப் போலவே, என் கண்களும், அவர் இருக்கும் இடத்திற்குச் செல்ல இயலுமானால், அவை இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே!
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிந்து சென்ற கணவரைத் தலைவி எந்த நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். பிரிவைத் தாங்கமுடியாத அவளுக்குத் துயரம் கூடிக்கொண்டே செல்கிறது. அவருடன் சேர்ந்து கழித்த காதல் நிகழ்வுகளை நினைந்து ஆறுதல் அடைய முயல்கிறாள்.
காதல்நோய் தரும் துன்பத்தை மறைத்தாலும். நீர்வேண்டி இறைப்பவர்க்கு ஊற்று நீர் வருவது போல அது மிகுகின்றது; இந்நோயைத் தந்தவர்க்கு செய்தியைச் சொல்லியனுப்பவும் நாண் தடுக்கிறது; காமம் ஒருபுறமும், நாண் மறுபுறமும் உள்ளதைத் தாங்கமுடியாதிருக்கும் அவள் உடல் உயிரைச் சுமக்கிறது; கடல் அளவிலான காமத்துன்பத்தை தலைவர் என்னும் காவலான மிதவை இல்லாமல் எப்படி நீந்திக் கடப்பேன்?; இல்லம் திரும்பாமல், காதலுடைய என்னிடமே கடுமை காட்டுகிறாரே, பகைவரிடம் என்ன செய்வரோ?; இன்பம் துய்க்கும்போது கடல்போல் தெரிந்த காமம் துன்பம் செய்யும்போது அதனினும் பெரிதாக உள்ளதே; இரவில் விரைந்து செல்லும் காம நீரைக்கடந்து கரைகாண முடியாதவளாய் தனியாய் உள்ளேனே!; உலகத்து உயிர்களையெல்லாம் தூங்கவைத்துவிட்டு அன்பு காட்டும் இரவுக்கு என்னைத் தவிர வேறு துணை இல்லைபோலும்; தலைவரைப் பிரிந்திருக்கும் இந்நாட்களில் நீண்டனவாய்க் கழியும் இரவுப்பொழுதுகள் அவரைவிடக் கொடியனவாய் உள்ளன;
இவ்வாறு தலைவி வருந்தி உரைத்துக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவியின் நெஞ்சில் கணவரது நினைவே எப்பொழுதும் இருக்கிறது. நாட்குறித்துச் சென்றிருந்தாலும் அவரை இப்பொழுதே நேரில் காணவேண்டுமென்று ஆவல் கொண்டு தவிக்கிறாள். அவர் அருகில் இல்லாததை நினைத்து நினைத்துக் கண்ணீர் சொரிகிறாள். கண்களில் நீர் பெருகி வெள்ளமாகக் காட்சியளிக்கிறது. அப்பொழுது அவள் சொல்கிறாள்: தான் நினைத்த நேரத்தில் என் மனம் கணவரிடம் சென்றுவிடுகிறது; ஆனால் அதுபோல என் கண்கள் சென்று அவரை நேருக்கு நேர் காணமுடிந்தால் அவை என்னுடனேயே தங்கி என் கண்ணில் பெருகும் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தவேண்டி இருக்காவே எனச் சொல்கிறாள்.

'உள்ளம்போன்று' குறிப்பது என்ன?

மனம் எண்னிய நேரத்தில் இப்பரந்த உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லும். எந்தப் பொருளானும் சென்று பற்றும். ஆனால் உடம்பாலும் அதன் உறுப்புக்களாலும் அங்ஙனம் முடிவதில்லை. தலைவர் இருக்கும் தொலைவு எவ்வளவானாலும் எண்ணங்களுக்கேற்ப அவள் உள்ளம் நீண்டு கொண்டே செல்லமுடியும். ஆனால் அவளது புறக் கண்களால் அவ்விதம் சென்று தலைவனை எட்டமுடியாது. அவை அருகிலிருக்கும் பொருள்களை மட்டும்தான் அணுகிப் பார்க்க முடியும். தன் உள்ளம்போல கண்களும் செல்லமுடிந்தால் அவை கண்ணீரில் நீந்திக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்கிறாள் தலைவி. அதாவது தலைவரைக் காணஇயலாமல் கண்களில் வெள்ளமாய் நீர் வருமாறு அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பது. அவரை விரைந்து நேரில் பார்த்தாக வேண்டும் என்னும் வேட்கையை இவ்வாறு புலப்படுத்துகிறாள். உள்ளம் அவர் நினைவாகவே இருப்பதால் அது அவரிடம் சென்று விட்டது. கண்கள் அவ்வாறு செல்ல முடியவில்லையாதலால் கண்ணீர் வெள்ளத்துள் அமிழ்ந்து கடுந்துயரினால் கலுழ்கின்றனவாம்.
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காணல் உற்று (நெஞ்சோடுகிளத்தல் 1244 பொருள்: நெஞ்சே! நீ அவரிடம் செல்வாயானால் இக்கண்களையும் உடன் கொண்டு போ; அவரைக் காணவிரும்பி என்னைத் தின்பதுபோல இவைகள் வருத்துகின்றன) எனப் பிறிதோரிடத்தில் உள்ளத்தையும் கண்களையும் இணைத்துக் குறள் சொல்லும்.

உள்ளம் போன்று கண்களுக்கு ஆற்றல் இல்லையே என இரங்குகிறாள் தலைவி.

தலைவர் உள்ள இடத்துக்கு உள்ளம் போன்று செல்ல முடியுமானால், என் கண்கள் கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்க மாட்டா அல்லவா என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

என் உள்ளம் போல் என் கண்களுக்கு அவரிடம் சென்று சேரத் தெரியவில்லையே என்னும் தலைவியின் படர் மெலிந்து இரங்கல்.

பொழிப்பு

தலைவர் உள்ள இடத்துக்கு என் மனம் போவதுபோல், கண்களும் போக முடியுமாயின் அவை கண்ணீராகிய வெள்ள நீரில் நீந்தா.