இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1158



இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1158)

பொழிப்பு (மு வரதராசன்): இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது; இனிய காதலரின் பிரிவு அதைவிடத் துன்பமானது.

மணக்குடவர் உரை: தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
(தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)

இரா இளங்குமரனார் உரை: ஒத்த உணர்வுடையவர் இல்லாத ஊரில் இருந்து வாழ்வது துன்பமிக்கது. அதனினும் துன்பமிக்கது இனிய துணைவரைப் பிரிந்து ஆங்கு வாழ்வது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இனன்இல்ஊர் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும்.இன்னாது .

பதவுரை: இன்னாது-இனிதன்று; இனன்-ஒத்த உணர்வுடையவர்; இல்-இல்லாத; ஊர்-ஊர், நகரம்; வாழ்தல்-வாழ்க்கை நடத்தல்; அதனினும்-அதனைக் காட்டிலும்; இன்னாது-கொடியது, தீது; இனியார்-இனிய அன்பர் (இங்கு கணவர்); பிரிவு-பிரிந்திருத்தல், நீங்குதல்.


இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது;
பரிப்பெருமாள்: தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது;
பரிதி: தன் உறவின்முறை யில்லாத ஊரிலே வாழ்தல் பொல்லாது;
காலிங்கர்: உலகத்து ஒருவர்க்கு மிகவும் இன்னாதது யாதோ எனின், தமது இன்ப துன்பங்கட்கு உடனுறவொத்த இனம் ஏதும் இல்லாத ஊரின்கண் தனித்து இருந்து வாழ்தலாகின்ற இது பெரிதும் இன்னாது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது;

'தமக்கு இனமில்லாத ஊரில் இருந்து வாழ்தல் இன்னாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இனன் என்பதற்குப் பரிதி உறவின்முறை என்றும் காலிங்கர் உடனுறவொத்த இனம் என்றும் பரிமேலழகர் தம் குறிப்பு அறியும் தோழியர் என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறவில்லாத ஊரில் வாழ்தல் துன்பம்', 'தம்மிடம் அன்பு செலுத்தும் உறவினர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் தரும்', 'குறிப்பறியுந் தோழியர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் தருவதே', 'தம்மைச் சார்ந்தவர் இல்லாத ஊரில் வாழ்தல் மிகவும் கொடியது' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஒத்த உணர்வுடையவர் இல்லாத ஊரிலிருந்து வாழ்வது இனிதன்று என்பது இப்பகுதியின் பொருள்.

அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
மணக்குடவர் குறிப்புரை: இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.
பரிப்பெருமாள்: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.
பரிதி: அதனினும் பொல்லாது நாயகரைப் பிரிதல் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று இதனினும் சால இன்னாது நெஞ்சே! யாதெனின், கற்புடை மகளிர் தம் காதற் கொழுநரைப் பிரிந்திருக்கும் பிரிவானது; எனவே இவர்க்கு உயிரான கேளிர் இவரல்லது இல்லை என்று தனது ஆற்றாமை கூறினாளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
பரிமேலழகர் குறிப்புரை: தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின், 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு. [அழுங்குவித்து-தடைப்படுத்தி; உடன்பட்டு-இசைந்து, சம்மதித்து; அவ்விரண்டும்- இனன் இல்லூர் வாழ்தலும் இனியார்ப் பிரிவும்]

'அதனினும் இன்னாது இனியாரை/ நாயகரை/காதற் கொழுநரை/ காதலரைப் பிரிதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்பக் காதலரைப் பிரிதல் பெருந்துன்பம்', 'அதனினும் இனிய கணவரின் பிரிவு துன்பம் தரும்', 'அதைப் பார்க்கிலும் காதலரைப் பிரிதல் துன்பந் தருவதாகும்', 'தமக்கு இனியரான காதலனைப் பிரிதல் அதனினும் மிகக் கொடியது' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதனினும் கொடியது காதற் கொழுநரைப் பிரிந்திருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இனன்இல் ஊரிலிருந்து வாழ்வது இனிதன்று; அதனினும் கொடியது காதற் கொழுநரைப் பிரிந்திருத்தல் என்பது பாடலின் பொருள்.
'இனன்இல் ஊர்' எது?

கணவர் உடனில்லாமல் இருப்பது தோழமையுள்ளவர் எவரும் இல்லாத இடத்தில் வாழ்வது போன்றது.

ஒத்த உணர்வுடைய எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துயர்தரும்; காதல் கணவரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது
காட்சிப் பின்புலம்:
தலைவர் கடமை காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறார். தலைவிக்குத் தன் இனிய கொழுநர் பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பிரியும் சமயம் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறாள்;
'உன்னைவிட்டுப் பிரிந்துசெல்லமாட்டேன் என்பதைக் கூறுவதானால் உரையுங்கள், வேறு ஏதாவது சொல்வதானால் அப்பொழுது நான் உயிரோடு இருக்கமாட்டேன்' என்றாள்; 'இப்பொழுது அவரது பார்வை பிரிவை உணர்த்துவதால் துன்பமாக உள்ளது, முன்பு அன்புடன் கூட நினைப்பார்' எனக் கூறினாள். 'பிரிவு இருக்கத்தான் செய்யும் என்பதை உணர்ந்தவள்தான் என்றாலும் பிரிவைத் தாங்க முடியவில்லையே' எனப் புலம்பினாள்; 'உன்னைவிட்டுப் பிரியேன் என்று உறுதியளித்தவரே பிரிகிறாரே, அவர் சொன்னதை மெய் என்று நம்பிவிட்டேனே' என அரற்றினாள்; 'அவர் பிரிந்துசென்றால் என் உயிர் நீங்கிவிடுமே, அவர் போகவேண்டாம் என்று தடுங்களேன்' என வருந்தியுரைத்தாள்; என்னைவிட்டு அகன்று செல்லும் அளவுக்குக் கல்மனம் கொண்டவர் திரும்பி வந்து தன்னளி காட்டுவாரா? எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்; 'மணிக்கட்டைத் தாண்டாதிருந்த வளையல்கள் கழன்று கீழே விழுந்திடும் நிலைக்கு வந்துவிட்டனவாதலால், ஊரார் என் நிலைமையை அறிந்துகொள்வார்கள்தாமே?' எனச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பேசிப்பழக என ஒருவருமில்லா ஊரில் ஒருவர் வாழ்தல் துன்பமுடையதாகும்; அதைவிடப் பெருந்துன்பமானது தம் காதல்கணவரை விட்டுப்பிரிந்து தனிமையில் இருப்பது என்கிறாள் தலைவி. பணி முடிந்தபின் தலைவர் திரும்பி வந்துவிடுவார்தான். ஆனாலும் இப்பிரிவு அவளுக்குக் கொடுமையாக உள்ளது; அது எவ்வளவு துன்பந்தருவது என்று எண்ணிப் பார்க்கிறாள். தாம் வாழும் இடத்தில் தன் இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தால் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். தமக்கு ஏதேனும் சிக்கல் நேர்ந்தால், ஒத்த உணர்வுள்ள அவர்கள் அருகில் இருந்தால் அவர்களுடன் உறவாடி ஆறுதல் பெறலாம்; அவர்கள் துணையையும் நாடலாம். ஆனால் அப்படிப்பட்ட சுற்றம் இல்லாத வேற்றுச் சூழலில் வாழ்வது மிகுந்த துயரமுள்ளதாக அமையும். அதைவிடத் துன்பம் தரக்கூடியது கணவரைப் பிரிந்து வாழ்வது - அது சிறிது காலமே ஆனாலும் - என்கிறாள் அவள்.

'இனன்இல் ஊர்' எது?

''இனன்இல் ஊர்' என்றதற்குத் தமக்கு இனமில்லாத ஊர், தன் உறவின்முறை யில்லாத ஊர், தமது இன்ப துன்பங்கட்கு உடனுறவொத்த இனம் ஏதும் இல்லாத ஊர், தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூர், இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊர், தமக்கு வேண்டியவர் என ஒருவருமில்லா ஊர், உறவில்லாத ஊர், தம்மிடம் அன்பு செலுத்தும் உறவினர் இல்லாத ஊர், உற்றார் உறவினர் இல்லாத ஊர், ஒத்த உணர்வுடையவர் இல்லாத ஊர், குறிப்பறியுந் தோழியர் இல்லாத ஊர், தம்மைச் சார்ந்தவர் இல்லாத ஊர், உறவு இல்லாத ஊர், குறிப்பறிந்துதவும் உறவினர் போன்ற தோழியர் இல்லாத வேற்றூர், நன்மை கொடுக்கக்கூடிய நல்லவர் இல்லாத ஊர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இனம் என்ற சொல்லே இனன் என்று வந்தது.
ஒத்த உணர்வுள்ளவர்கள் கூட்டாக இனம் என்று அழைக்கப்படுவர். 'சிற்றினம் சேராமை' அதிகாரத்தில் இந்தப் பொருளிலேயே இனம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இங்கும் அப்பொருள் கொள்வதே பொருத்தம்.
சமுதாய வாழ்வில் மாந்தர் ஒன்றாகக் கூடி ஒருவரையொருவர் அறிந்தும் பேசியும் பழகிக்கொள்வர். நண்பர்களும் உறவினரும் அதே ஊரில் இருப்பின் இன்னும் நெருங்கிப் பழகித் தம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வர். அத்தகைய நன்மக்கள் வாழும் ஊரில் வாழ்ந்தால் ஒருவரது வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். துயரத்தில் அவர்கள் தக்க துணையாயுமிருப்பர். நட்பும் உறவும் இல்லாத ஊர்களில் மக்கள் வாழ விரும்பார். தம்மிடம் அன்பு செலுத்தும் உற்றார் உறவினர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமாயிருக்கும். அதனினும் கொடுமையான துன்பம் இனிய துணைவரைப் பிரிந்து வாழ்வது என்கிறாள் தலைமகள் இங்கு.

இக்குறளுக்கான சக்கரவர்த்தி நாயனார் உரை 'திருமணத்திற்குப் பின், அயலார் வாழ்கின்ற தன்கணவன் ஊருக்குச் செல்லும் பெண்ணுக்கு, அங்கே பலரும் அறிமுகமில்லாதவராக இருப்பதால், அவ்வூர் முன் தான் வாழ்ந்த இடம்போல் மகிழ்வளிக்காது. அவ்வூரில் வாழும் துன்பத்திலும் கணவனைப் பிரிந்து வாழ்தல் அவளுக்கு மிகுந்த துன்பந்தரும்' என்று புதிய இடத்தை இனன் இல்லூர் என்று கூறியது சற்று வேறுபாடாக உள்ளது.

'இனன்இல் ஊர்' என்ற தொடர்க்கு ஒத்த உணர்வுடையவர் இல்லாத ஊர் என்பது பொருத்தமான பொருள்.

ஒத்த உணர்வுடையவர் எவரும் இல்லாத ஊரிலிருந்து வாழ்வது இனிதன்று; அதனினும் கொடியது காதற் கொழுநரைப் பிரிந்திருத்தல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அன்பு காட்டிப் பழகும் ஒருவரும் இல்லாத வேற்றூரில் வாழ்வதை விடக் கொடுமையானது கணவர் உடனில்லாத தனிமை வாழ்வு என்று பிரிவாற்றமையால் தலைவி கூறுவது.

பொழிப்பு

ஒத்த உணர்வுடையவர் இல்லாத ஊரில் இருந்து வாழ்வது இனிதன்று; அதனினும் கொடியது காதலரைப் பிரிந்திருத்தல்