இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1142



மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1142)

பொழிப்பு (மு வரதராசன்): மலர்போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

மணக்குடவர் உரை: பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார்.
எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது.
(அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.)

சி இலக்குவனார் உரை: மலர் போன்ற கண்னை உடையாளது எய்தற்கு அரிய தன்மையை அறியாது இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு என்னைச் சேர்த்து அலர் கூறலை எமக்குக் கொடுத்து உதவியது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது .

பதவுரை: மலர்-பூ; அன்ன-போன்ற; கண்ணாள்-கண்ணினையுடையவள்; அருமை-அரிய தன்மை, அருங்குணம்; அறியாது-அறியாமல்; அலர்-வம்புப் பேச்சு; எமக்கு-நமக்கு; ஈந்தது-தந்து உதவியது; இவ்வூர்-இந்த ஊர்.


மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே;
பரிப்பெருமாள்: பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே;
பரிதி: செங்கழுநீர் மலர் போலும் கண்ணாளின் அருமை அறியாமல்;
காலிங்கர்: நெஞ்சே! மலரை ஒத்த கண்ணை உடையாளாகிய நங்காதலியது அருமை சிறுதும் அறியாதே;
பரிமேலழகர்: (இதுவும் அது.) மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது;

'பூவொத்த கண்ணாளது அருமையை அறியாதே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். அருமை என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'இற்பிறப்பின் அருமை' என்று கூற பரிமேலழகர் 'எய்தற்கு அருமை' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலர்போல கண்ணாளின் அருமையை அறியாமல்', 'மலர்போலும் கண்களை உடையாளது பெறுதற்கு அருமையை அறியாமல்', 'மலர் போன்ற கண்களை உடைய அவளது அருங்குணத்தை அறியாத', 'மலர் போலுங் கண்ணை உடையாள் பெறுதற்கரியள் என்பதை அறியாது' என்ற பொருளில் உரை தந்தனர்.

மலர் போன்ற கண்களை உடையவளது அருமை அறியாது என்பது இப்பகுதியின் பொருள்.

அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார்.
மணக்குடவர் குறிப்புரை: எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.
பரிப்பெருமாள்: இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லநின்றா ரென்றவாறாயிற்று. தமது புணர்ச்சி அலர் ஆயிற்றென்று தோழி கூறியது.
பரிதி: அலரை ஈந்தது இந்த ஊர் என்றவாறு.
காலிங்கர்: அலருரையை மிகச் சொல்லித் தீருகின்றது இவ்வூர் என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது.
பரிமேலழகர் குறிப்புரை: அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான். [அல்ல குறிப்பாடு-இரவுக்குறி தவறுதல்; இடையீடுகள்-தடை; அலர்கூறல்-பலர் அறிந்து தூற்றல்]

'இவ்வூரார் எங்கட்கு அலர் தந்தனர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'எங்களைப் பற்றிப் பழியாகக் கூறுகின்றனர்' என மணக்குடவர்/பரிப்பெருமாள் என விளக்கம் கூறினர். பரிமேலழகரும் இதே பொருளில் உரை கூறி அலர் எங்களுக்கு உதவியானது என்று மேலும் ஒரு குறிப்பு தருகிறார். 'தமது புணர்ச்சி அலராயிற்று' எனத் தோழி கூறியதாகக் குறிப்புத் தருவார் பரிப்பெருமாள்.

இன்றைய ஆசிரியர்கள் 'இந்த ஊர் எனக்கு அலரைத் தந்தது', 'அவளை எளிமையாக நினைதது இந்த ஊர் எம்மை அவளோடு இணைத்து அலர் கூறுதலை எமக்குத் தந்து உதவியது', 'இந்த ஊரார் என்னைப் பற்றிப் பரிகாசம் செய்தார்கள்', 'எமக்கு இந்த ஊர் அவளை அலரால் கொடுத்துதவிற்று' என்றபடி பொருள் உரைத்தனர்.

இவ்வூர் மக்கள் எங்களுக்கு அலர் தந்தனர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மலர் போன்ற கண்களை உடையவளது அருமை அறியாது, இவ்வூர் மக்கள் எங்களுக்கு அலர் தந்தனர் என்பது பாடலின் பொருள்.
'அருமை அறியாது' குறிப்பது என்ன?

எங்கள் காதலுறவு பற்றி ஊரார் வேறுவகையாகப் பேசுகிறார்களே என வருந்துகிறான் தலைவன்.

மலர் போன்ற கண்களை உடையவளான காதலியின் அருமை அறியாமல், அவளை எளியவளாகக் கருதி இவ்வூர் அலரினைத் தருகிறது.
காட்சிப் பின்புலம்:
காதலர் சந்திப்பதில் இடையூறு உண்டாகிறது. தலைவன் நாண் துறந்து மடலேறத் துணிகிறான். இச்செய்திமூலம் அவர்கள் மறைவொழுக்கத்தில் பழகியதையும் மெய்யுறு புணர்ச்சி கொண்டதையும் அறியும் ஊரார் அவர்களை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள். அவ்விதம் ஊர் பேசுவது காதலர்க்கு அறிவுறுத்தப்படுகிறது. ஊரார் அலர் கூறினாலும் அது ஒருவகையில் நன்மை செய்கிறது என்கிறான் காதலன். தலைவி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுக் காதலர் சந்திக்க இயலாமல் போனதே என்ற துயரத்தால் அவனது உயிர் துன்புற்று நீங்கும் நிலைக்குச் சென்றது; இப்பொழுது அலர் எழுந்ததால் களவுக்காதல் ஊரார்க்குத் தெரிந்துவிட்டது. அதனால் காதலரது மணவினைக்கு, காதலியின் பெற்றோர் விரைவில் ஏற்பாடு செய்வார்கள் என்ற நம்பிக்கை பிறந்ததால் உயிர் நிலை நின்றது; வெளியுலகிற்குத் தெரியாத இச்செய்தியைப் பலர் அறியார்கள். அதை அலர்கூறுவார் அறிந்தால் அலர்கூறுவதை நிறுத்தி விடுவர்; எமது உயிரும் நிலைபெறாது போகும் என்கிறான் தலைவன். அலர், உயிர் காத்து, திருமணத்தை விரைவுபடுத்தும் நன்மை செய்வதைப் பாக்கியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
ஊரார்க்கு காதலரது களவொழுக்கம் தெரியவருகிறது. அதுபற்றி வாய் வலிக்க கன்னபின்னாவென்று அலருரையைச் சொல்லித் தீர்க்கின்றனர். காதலியின் அருமை அறியாது தங்களிடையே உள்ள உறவு பற்றித் தவறாகப் பேசுகிறார்களே என்று உள்ளுர வருந்தும் காதலன் உரைப்பது: 'பூப் போன்ற கண்களை உடைய என் காதலியின் அருமை தெரியாமல் இந்த ஊரார் எங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறி வருகின்றனர். எனினும் இந்த அலரும் ஒருவகையில் எங்களுக்கு உதவியே செய்கிறது.'

முன்னர் காதலன் மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி (நலம்புனைந்துரைத்தல் 1119 பொருள்: மலர்போலுங் கண்களை யுடையாளது முக ஒளிநலத்தை ஒத்திருக்க விரும்பினால், பலரும் காணும்படி தோன்றாதே நிலவே!) என்று கூறினான். 'மலரன்ன கண்ணாள்' என்ற சொற்றொடரின் ஒற்றுமை மட்டுமல்ல அக்குறளின் பொருளும் இங்கே இயைபாகிறது. அப்பாடலின் உட்கருத்து தலைவி தனக்கு மட்டுமே உரியவள்; அவள் பலர் காணும் மலர் அல்ல; அதாவது அவள் முக அழகு தான் ஒருவனே துய்த்தற்குரியது என்ற ஒரு வரம்பினையுடையவள் என்பது. ஆனால் இவளது அருமையான குணநலங்களை அறியாது, எளிதில் எய்தற்குரியவள் என மனம் போன போக்கில் அலருரையில் தூற்றுகிறார்களே' என்று வருத்தம் கொள்கிறான்.
அலர் என்றதால் ஊரில் பலரும் பலவிதமாகப் பேசுவார்கள் என்பது அறிந்ததே. ஆயினும் அவர்களது 'வம்புப்பேச்சு எங்கள் தொடர்பை உறுதிப்படுத்துவதுடன் அதுவே எங்களைச் சேர்த்து வைக்கவும்தான் உதவப் போகிறது; அலர் ஒரு நன்மையாகவே அமைந்தது' என்று விட்டுக் கொடுக்காமல் காதலன் கூறுகிறான்.

'ஈந்தது' என்ற சொல்லாட்சி கொண்டு, வாளா 'தந்தது' எனக் கொண்டால் குறட்கருத்து ஒன்றும் கிடைக்காது என்றதால், அது நன்மையைத் தரவல்லது என்ற பொருளில் 'உதவியது' என்று பொருளுரைத்தார் பரிமேலழகர். 'அலர் தூற்றியது இவ்வூர்' என்று கூறாமல் 'அலர் எமக்கு ஈந்தது இவ்வூர்' என்று கூறுகின்றான் தலைமகன். இத்தொடருக்கு 'ஊரவர்தாம்' கூறும் 'அலரால்' அவளை எனக்குக் கொடுத்து உதவுகின்றனர் எனவும் விளக்கம் செய்யலாம். தம் காதலைப் பழித்து உரைத்ததால், அது மறைமுகமான உதவியாகவே அமைந்தது என்பது கருத்து.

'அருமை அறியாது' குறிப்பது என்ன?

'அருமை அறியாது' என்றதற்கு இற்பிறப்பின் அருமையை யறியாதே, அருமை அறியாமல், அருமை சிறுதும் அறியாதே, எய்தற்கு அருமை அறியாது, அருமையை அறியாமல், அருமையான குணங்களை (காதலை) அறியாத, பெறுதற்கு அருமையை அறியாமல் அவளை எளிமையாக நினைத்து, அரிய நலங்களை அறியாமல், பெறுதற்கரியள் என்பதை அறியாது, எய்தற்கு அரிய தன்மையை அறியாது, பெறுதற் கருமையை அறியாது, கற்பு நிலையைத் தெரியாது, மாண்பினை உணராமல், எளிமையாக எய்துதற்கரியள் என்று எண்ணாமல், அருங்குணத்தை அறியாது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

பரிப்பெருமாள் என்னும் பழம் உரையாசிரியர் காதலரது புணர்ச்சி அலர் ஆயிற்று என்று ஓர் குறிப்பு தருகிறார். அவர்களது புணர்ச்சி அலரான காரணத்தால் வெவ்வேறு இழிவான, திரிபு நிலையில், குறிப்பாகக் காதலியின் குணநலன் பாதிக்கும் வகையில், நற்குடிப்பிறந்த தலைவியைக் குறை கூறி, அலருரை கூறப்பட்டது என்பது பெறப்படுகிறது.
அவ்விதம் அலர் பரவுவதைக் கேள்வியுற்று வருந்துகிறான் தலைவன். 'மலர் போன்ற குளிர்வும் பொலிவும் உடைய தலைவி, தான் மட்டுமே அவள் எழில்நலங்களைத் துய்க்கவேண்டும் என்னும் எண்ணங்கள் கொண்டவளாக இருக்கிறாள்; அவள் பலர் காண்பதற்காகத் தோன்றுபவள் அல்லள். தனக்கு மட்டுமே அவள் முக அழகு தோன்றுமாறு காட்சி தருவாள். அது அவள் அணிந்த நாண் என்னும் நற்குணத்தால் உண்டாவது' என்று கூறி அவள் தனக்கே தனக்கு மட்டுமே உரியவள்; வேறு எவரையும் நாடுபவள் அல்லள்' என்பதை உணர்த்துகிறான் அவன். அவள் நற்குணங்கள் நிறைந்தவள் என்னும் பொருளில் 'அருமையான குணங்கள் கொண்டவள்-பெறுதற்கரியள்' என அவளை உயர்த்திக் கூறுகின்றான் தலைவன். இதை அறியாது ஊரார் அலர் எழுப்புகின்றனர்' என்கிறான்.

'அருமை அறியாது' என்பது காதலியின் அருங்குண நலங்களை அறியாது என்று பொருள்படும்.

மலர் போன்ற கண்களை உடையவளது அருமை அறியாது, இவ்வூர் மக்கள் எங்களுக்கு அலர் தந்தனர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன் காதலி பழிக்கப்படுவதை அலர்அறிவுறுத்தல் வழி அறிந்து அதைப் பொறுக்கமுடியாதவனாகிறான் தலைமகன்.

பொழிப்பு

மலர்போலும் கண்களை உடையாளது சிறப்பான குணநலன்களை அறியாமல், எங்களைப் பற்றிப் பழியாகப் பேசி வருகின்றனரே இவ்வூர் மக்கள்!