இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1128



நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1128)

பொழிப்பு (மு வரதராசன்): எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.

மணக்குடவர் உரை: எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து.
இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.)

இரா சாரங்கபாணி உரை: காதலர் எம் நெஞ்சிலுள்ளார் ஆதலால் சூடாக உண்ணுதலையும் அஞ்சுவோம். நெஞ்சிலுள்ள அவர் சூடுபட்டு வெந்துபோதலுக்கு அஞ்சி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.

பதவுரை: நெஞ்சத்தார்-நெஞ்சத்தின் கண்ணே உள்ளார், உள்ளத்தில் உள்ளார்; காதலவர்-காதலர்; ஆக-ஆகியிருக்க; வெய்து-வெப்பமானது, சூடானது; உண்டல்-உண்ணுதல்; அஞ்சுதும்-அஞ்சுகின்றோம், அஞ்சாநின்றேம்; வேபாக்கு-வெப்பமுறல்; அறிந்து-தெரிந்து.


நெஞ்சத்தார் காத லவராக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார் ஆதலானே;
பரிப்பெருமாள்: என்னால் காதலிக்கப்பட்டவர் எம் நெஞ்சகத்தே இருக்கலானே;
பரிதி: நெஞ்சத்திலே நாயகர் இருக்கையினாலே;
காலிங்கர்: கேளாய்! எங்களே! இவ்வாறு எப்பொழுதும் என் நெஞ்சத்தார் நம் காதலராகவே;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான்;

'காதலர் எம் நெஞ்சத்தில் இருக்கின்றார் ஆதலால்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் நெஞ்சில் உள்ளார் ஆதலின்', 'என் காதலர் என்னுடைய நெஞ்சிலேயும் இருந்து கொண்டிருப்பதால்', 'என் காதலர் என் நெஞ்சில் இருக்கின்றார்', 'காதலர் எம் நெஞ்சின் உள்ளாராதலின்' என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலர் என் நெஞ்சில் உள்ளாராதலால் என்பது இப்பகுதியின் பொருள்.

வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து.
மணக்குடவர் குறிப்புரை: இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.
பரிப்பெருமாள்: வெய்தாக வுண்டலை அஞ்சா நின்றேன், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது பசியடநிற்றல் என்னும் மெய்ப்பாடு. [பசியடநிற்றல்- தொல்காப்பியம். பொருள். மெய்ப்பாட்டியல் சூ.22]
பரிதி: சுட்ட சோறு அசமை பண்ணாள் என்றவாறு.
காலிங்கர்: வெய்து ஒன்று உண்டலும் அஞ்சுதும்: என்னை எனில் அதனாலே அவர்மேனி வெம்மை உறுவதோர் கூறுபாட்டினை அறிந்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இதனாலும் இன்றியமையாமை இவன் அறிவது பயன்.
பரிமேலழகர்: உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; அவர் அதனான் வெய்துறலை அறிந்து. [வெய்தாக-சூடாக; வெய்து உறல்-சூடுறுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.

'வெய்தாக உண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடும் என்பதனை அறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெந்து போவார் என்று சூடாக உண்ணேன்', 'சூடான உணவுகளை உண்ண அஞ்சுகிறேன். ஏனெனில் அது அவரைச் சுட்டுவிடுமோ என்று எண்ணுகிறாள்', 'அவர்க்குச் சூடான உணவினால் மேனி வருந்துமென்று எண்ணிச் சூடான உணவை உட்கொள்ள அஞ்சுவேன்', 'அவர் சுடப்படுதலை அறிந்து சூடாக உண்ணுதலை அஞ்சுகின்றோம்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அவர் வெம்மை உறுவார் என்பதால் சூடான உணவை உட்கொள்ள அஞ்சுகிறோம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலர் என் நெஞ்சில் உள்ளாராதலால் சூடான உணவை உட்கொள்ள அஞ்சுகிறோம், அவர் வேபாக்கு அறிந்து என்பது பாடலின் பொருள்.
'வேபாக்கு' என்றால் என்ன?

சூடாக உண்டு என் நெஞ்சில் குடியிருப்பவர்க்கு ஊறு உண்டாக்குவேனா!

என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் என் காதலர் வெம்மை அடைந்திடுவாரே என அஞ்சி, யாம் சூடாக எதனையும் உண்பதில்லை.
காட்சிப் பின்புலம்:
ஒருவரையொருவர் புரிந்துகொண்ட தலைவனும் தலைவியும் அடிக்கடி சந்திக் கொள்கின்றனர். மெய்யுறு புணர்ச்சியும் நடந்தேறியது. பின்னர் தனித்திருக்கும்போது தாங்கள் துய்த்த இன்பத்தை மகிழ்ந்து நினைவு கூர்கின்றனர். அவன் அவளது அழகைப் புகழ்ந்து வியக்கிறான். முத்தம் தந்த இன்பத்தை நினைக்கிறான்; உடம்பும் உயிரும் எப்படியோ யானும் இவளும் அவ்விதம் எனப் பெருமிதம் கொள்கிறான்; அவளைக் கூடாதிருக்கும்போது சாதல் போன்ற உணர்வு உண்டாகின்றது என்றும் தன் கண்ணின் கருமணியில் காதலியின் உருவத்துக்கு மட்டுமே இடம் என்றும் அவளை மறத்தலை ஒருபோதும் அறியேன் என்றும் கூறுகிறான். அவளும் அவனுடனான காதல் நினைவுகளைச் சொல்லத் தொடங்குகிறாள். தலைவர் என் கண்ணிலிருந்து நீங்கார்; அவர் என் கண்ணிலே முழுதும் நிறைந்திருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரத்தில் அவரைப் பார்க்கமுடியாது என்பதால் மையும் தீட்டமாட்டேன் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
நெஞ்சில் உறைபவர் வெம்மை அடைவார் என்பதால் சூடான உணவு எதையும் உட்கொள்ளேன் எனக் காதலி கூறுகிறாள்.
களவு ஒழுக்கத்தில் இன்பம் காணும் காதலர் சந்தித்துப் பிரிந்து கொண்டிருக்கின்றனர். தலைவனது சிறு பொழுது பிரிவையும் தாங்கமுடியாத காதலி சூடான உணவு எதையும் உண்பதில்லை என்கிறாள். உணவைச் சூடாகச் சாப்பிடுவதில் சுவை கூடுதலாக இருப்பதால் அனைவரும் சுடச்சுட உண்ணுவதையே விரும்புவர். காதலன் தன்னுடன் இல்லாத வேளையில், வழக்கத்திற்கு மாறாக, வெம்மையானதை அவள் உண்பதில்லை அல்லது எல்லா உணவுப் பொருள்களையும் ஆறிய பின்னே அவள் உண்கிறாள். ஏன்? 'என் நெஞ்சத்திலே காதலர் உறைந்திருக்கிறார்; அவரை வெப்பம் காய்ச்சுமே என்று அஞ்சி சூடானவற்றை உண்பதை விட்டுவிட்டேன்' என வெள்ளை உள்ளத்துடன் கூறுகிறாள். இங்கு வெம்மையான உணவுபற்றிப் பேசி தன் நெஞ்சினுள் காதலன் உறைந்திருப்பதை வெளிப்படுத்துகிறாள்.
இப்பாடலில் உலகியலலைக் கடந்த கற்பனை இடம் பெற்றுள்ளது என்றாலும் புதுமையாகவும் இன்பமூட்டுவதாகவும் உள்ளது. அஞ்சுதும் அதாவது அஞ்சுகிறோம் எனத் தன்மைப் பன்மையாற் தலைவி கூறுவதுபோல் பாடல் உள்ளது, இதற்கு, நெஞ்சிலுள்ள தலைவனையும் உளப்படுத்தி ஒன்று பட்ட உள்ளத்தால் உரைக்கின்றாள் என நயம் கூறுவர்.

பரிப்பெருமாள் இப்பாடல் 'பசியடநிற்றல்' என்னும் மெய்ப்பாடு சார்ந்தது என்பார். பசியட நிற்றல் என்பது பசிவருத்தவும் அதனைக் களைய முற்படாமல் உணவை வெறுத்திருத்தலைக் குறிக்கும்.

'வேபாக்கு' என்றால் என்ன?

வேபாக்கு என்பது வெய்துறல்- வெப்பமுறுதல் - வெம்மை உறுதல் - சூடுறுதல் அதாவது வெந்து போதல் என்று பொருள்படும். முந்தைய குறளில் கூறப்பட்ட கரப்பாக்கு என்ற சொல் போல் இதுவும் 'செய்பாக்கு' என்ற வடிவத்தைப் பெற்றுள்ள மற்றொரு சொல். இதுவும் வள்ளுவரின் புதிய ஆட்சி ஆகும். வெய்தல் என்ற தொழிற்பெயர் பாக்கு விகுதி பெற்று வேபாக்கு ஆனது.

'வேபாக்கு' என்றது சூடுறுதல் என்ற பொருள் தரும்.

காதலர் என் நெஞ்சில் உள்ளார் ஆதலால் அவர் வெம்மை உறுவார் என்று அஞ்சி சூடான உணவை உட்கொள்ளேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நெஞ்சினிலுள்ள காதலரை வேகவைத்துவிடும் என்பதால் வெய்துண்டலை வெறுக்கும் தலைவியின் காதற்சிறப்பு உரைத்தல்.

பொழிப்பு

காதலர் என் நெஞ்சில் உள்ளார் ஆதலால் அவர் வெம்மை உறுவார் என்று அறிந்து சூடாக உண்ண அஞ்சுகிறேன்.