இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1124



வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1124)

பொழிப்பு (மு வரதராசன்): ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிர்க்குச் சாவு போன்றவள்.

மணக்குடவர் உரை: கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள்.
இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்;
('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தேர்ந்தெடுத்த ஆபரணங்களை அணிந்துள்ள என் காதலி என்னுடன் இருக்கிற வரையிலும் எனக்கு உயிர் இருப்பது போன்றவள். அவள் பிரிந்தால் என் உயிர் பிரிந்தது போன்றவள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள்; நீங்குமிடத்து அதற்கு சாதல் அன்னள்.

பதவுரை: வாழ்தல்-வாழுதல்; உயிர்க்கு-உயிருக்கு; அன்னள்-ஒத்திருப்பள், ஒப்பானவள்; ஆய்-ஆராய்ந்து; இழை-அணிகலம்; சாதல்-இறத்தல்; அதற்கு-அதனுக்கு (இங்கு உயிர்க்கு என்பதைச் சுட்டி நிற்கிறது); அன்னள்-ஒத்திருப்பள்; நீங்கும்-நீங்கும்; இடத்து-வேளை.


வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்:
பரிப்பெருமாள்: கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்:
பரிதி: நாயகியுடனே கூடினநாள் உயிருடன் வாழ்வதற்கு ஒக்கும்;
காலிங்கர்: நெஞ்சே! இவளின் நீங்காது உடன் வாழ்காலத்து அவ்வுடன் வாழ்தல் இவ்வுடலோடு உயிர்வாழ் காலத்தில் வாழ்தல் உயிர்க்கு என்னது, மற்று அன்னள் நமக்கு இவ்வாயிழையாள்:
பரிமேலழகர்:(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்,
பரிமேலழகர் குறிப்புரை: 'எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன.

'கூடுமிடத்து இவ்வாயிழை உயிர் வாழ்தலோடு ஒப்பள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புணருங்கால் உயிர் இருத்தல் போன்றவள்', 'தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு கூடுமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல்போலும்', 'தெரிந்தெடுத்த சிறந்த அணிகலம் உடையாள் சேரும்போது உயிர்க்கு உடம்பில் வாழ்வது எப்படி இன்பமோ அப்படி எனக்கு இருக்கின்றாள்', 'தெரிந்தெடுக்கப்பட்ட நகைகளை உடையாள் எம்மோடு கூடுமிடத்து உயிர்க்கு உடம்போடு வாழ்தலை ஒத்தவள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது என் உயிர் இருத்தல் போன்றவள் என்பது இப்பகுதியின் பொருள்.

சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: நீங்குமிடத்து சாதலோடு ஒப்பள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்காநின்ற தலைமகன் தலைமகள் கேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: நாயகியைப் பிரிந்தால் உயிர் விடுவதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! இனி உடல் சாதல் இன்னுயிர்க்கு என்னது, மற்று அன்னள் இவள் யாம் ஒருபொழுது இவண் நீங்குமிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்;
பரிமேலழகர் குறிப்புரை: வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான். [வாழுங்காலத்து-உயிர் உடம்போடு வாழுங்காலத்தில்; வழி நிற்றல்-ஒரு சொல். அதன் பொருள் இருத்தல்; வருத்தம் செய்தலானும்-உயிர்க்கு உடம்பு துன்பத்தைச் செய்தலானும்; அவற்றை-வாழ்தலையும் சாதலையும்]

'நீங்குமிடத்து சாதலோடு ஒப்பள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரியுங்கால் அது பிரிதல் போன்றவள்', 'பிரியுமிடத்து உயிர்க்கு உடம்பினின்றும் நீங்கிச் சாதல் போலும்', 'அவள் பிரியுங்காலை சாவது உயிர்க்கு எப்படியோ அப்படி அவள் எனக்குத் துன்பந்தருகின்றாள்', 'நீங்கும்போது உடம்பிலிருந்து உயிர் நீக்கிப் போவதை ஒத்தவள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பிரியுமிடத்து உடம்பிலிருந்து உயிர் நீக்கிப் போவதை ஒத்தவள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வாழ்தல் உயிர்க்கு அன்னள், தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள்; பிரியுமிடத்து உயிர்க்குச் சாதலை ஒத்தவள் என்பது பாடலின் பொருள்.
'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்றால் என்ன?

'என் வாழ்வும் சாவும் அவளே' எனக் காதலியை நினைத்து உருகுகின்றான் தலைவன்.

தெரிந்தெடுத்த அணிகளைப் பூண்டுள்ளவளைக் கூடும்போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; அவள் என்னை விட்டு நீங்கும் போதோ சாவதுபோல் உள்ளது!
காட்சிப் பின்புலம்:
களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ள தலைமக்கள் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள உறவுபற்றி நினைக்கின்றனர். இப்பொழுது -அவர்கள் இருவரும், ஒருவரையொருவர் விட்டு நீங்கி இருக்கும் நிலையில்- அவளிடம் முன்பு பெற்ற இன்பங்களில் ஒன்றை நினைவு கூர்கிறான் தலைவன். பின்னர், 'உடம்பும் உயிரும் எப்படியோ யானும் இவளும் அப்படி' என்றும் 'கண்ணின் கருமணியில் காதலியின் உருவத்துக்கு மட்டுமே இடம் என அவளை எந்த நேரமும் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்' என்று தான் விழைவதையும் தனக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
காதல் என்னும் உள்ளப் புணர்ச்சி குறித்து எண்ணுகிறான் தலைவன். அவளைச் சந்தித்துப் பிரியும் ஒவ்வொரு முறையும் வாழ்ந்து சாகிறேன் என்கிறான் அவன். தலைவி உடன் இருக்கும்போது, உயிர் வாழ்வதாகவும், அவள் நீங்கிச் சென்றுவிட்டால், தன்னுயிர் நீங்கியது போலவும் உணர்வதாகவும் கூறுகிறான். அதாவது அவனுக்கு அவள் உயிராக இருக்கிறாள் என்கிறான். உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு (1122) என முந்தைய குறள் ஒன்றில் உடம்புக்கும் உயிருக்கும் இடையிலிருந்த நட்பே, தனக்கும் தன்காதலிக்கும் இடையே உள்ள நட்பு என்றான். அதனை இன்னும் தெளிவாக்குவதற்காக இங்கு உடம்பும் உயிருமாய் அவர்கள் இரண்டறக்கலந்து நிற்கும் ஒருமை நிலைபற்றி 'உயிர்க்கு வாழ்வு எத்தன்மையானதோ, அத்தன்மையானவள் எனக்கு இவள்' என்கிறான்.

காதலி உடன் இருக்கும்போது, உயிர் வாழ்வதாகவும், அவள் தன்னைவிட்டு நீங்கிச் சென்றுவிட்டால், உயிர் வாழ்வை நீக்கி இறப்பது போலவும் உள்ளது என்று தன் காதலியின் அணுக்கத்தை நினைந்து கூறுகிறான். அவள் அருகிலேயே எந்த நேரமும் இருக்க வேண்டும் என்னும் தன் விருப்பத்தைத்தான் 'காதலியினுடனான தொடர்புதான் என் உயிர். அத்தொடர்பு நீங்கினால் என் உயிர் போய்விடும்' என்கிறான் காதலன். இதனாலேயே 'என் காதலியின் பிரிவு என்பது, உயிர்க்குச் சாக்காடு எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது' என்று அரற்றுகிறான். அவளுடன் வாழ்தலே உயிருடன் வாழ்வது; அவளை நீங்குவது சாவு என்பதாக உணர்கின்றான்.
நீங்கும் இடத்து என்பதை மட்டும் சொல்லி, கூடும் இடத்து என்பதை வருவித்துக் கொள்ளுமாறு அமைந்திருக்கிறது இக்குறள்.

இக்குறளிலுள்ள ஆயிழை என்ற தொடர் பொருத்தமான அணிகலன்களைத் தேர்ந்தெடுத்து அணிந்துள்ளவள் என்ற பொருளில் உள்ளது. ஆயிழை என்பது ஆ(ய்ந்து), இழை(அணி) என்னும் இரு சொற்கள் இணைந்து 'ஆயிழை' என்றாகி ஆராய்ந்து தெரிந்தெடுக்கப்பட்ட அணியினை அணிந்தவள் எனத் தலைவியைக் குறித்தது. கூடுமிடத்து அணிகலன்கள் அவளது அழகைக் கூட்டிக் காட்டுவதைக் கண்டு மகிழ்கிறான். உடையின் நிறத்துக்கும் காலநேரத்துக்கும் தகுந்த அணியாகத் தேர்ந்தெடுத்து அணியும் அவளது பாங்கு ஈர்க்கும் வகையில் இருந்தது. தெரிந்தெடுத்த அணிகலன் எனச் சொல்லப்பட்டதால், அது அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் உள்ள ஈடுபாட்டைத் தெரிவிப்பதாகவும் அவளது ஆடைஅணி அழகுணர்ச்சியைத் தெரிவிப்பதாகவும் உள்ளது.

'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்றால் என்ன?

'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்பதை 'உயிர்க்கு வாழ்தல் அன்னள்' என்று மாற்றி அமைத்துப் பொருள் கூறுவர் உரையாசிரியர்கள்.
உயிருக்கு வாழ்தல் என்ற தொடர் உயிரோடிருத்தல் என்ற பொருள் தரும். காதலி உடனுறையும்போது உடம்போடு உயிர் கூடி வாழ்தலைப்போல அன்பு காட்டுவாள். உடல் நீங்கினால் உயிர்க்கு எப்படி வாழ்வு இல்லையோ, அப்படியே அவள் நீங்கினால் வாழ்வு இல்லை. 'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்பதற்கு 'உடலோடு உயிர்வாழ் காலத்தில் வாழ்தல் உயிர்க்கு எப்படியோ மற்று அப்படிப்பட்டவள் எனக்கு இவள்' எனப் பொருள் அமையும்.

'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்பது இவள் என்னைக் கூடும்போது உயிருக்கு உடம்பில் வாழ்வது எப்படி இன்பம் தருகிறதோ, அவ்விதம் இன்பத்தையளிக்கிறாள் என்னும் பொருள் தரும்.

தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது என் உயிர் இருத்தல் போன்றவள்; பிரியுமிடத்து உடம்பிலிருந்து உயிர் நீங்கிப் போவதை ஒத்தவள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவள் என் அருகில் இருக்கும்பொழுது உயிர்வாழ்வாக இருக்கிறது என்று தலைவன் காதற்சிறப்பு உரைத்தல்.

பொழிப்பு

தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது உயிர் உடம்போடு கூடி வாழ்தல்போலும். பிரியுமிடத்து உயிர் உடம்பினின்றும் நீங்கிச் சாதல் போலும்.