இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1112



மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1112)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்!

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்.
இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: (இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய், நின்அறிவு இருந்தவாறென்?
(மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: நான் ஒருவன் பார்க்கும் இவள் கண், மனமே! பலர் பார்க்கும் மலர் ஒக்குமென மயங்குகிறாய்!


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று மலர்காணின் மையாத்தி.

பதவுரை: மலர்-பூ; காணின்-கண்டால்; மையாத்தி-நீ மயக்கம் கொண்டாய்; நெஞ்சே-உள்ளமே; இவள்-இவளது; கண்-விழி; பலர்-பலர்; காணும்-பார்க்கப்படும்; பூ-மலர்; ஒக்கும்-நிகர்க்கும்; என்று-என்பதாக.


மலர்காணின் மையாத்தி நெஞ்சே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்;
பரிப்பெருமாள்: நெஞ்சே! மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்;
பரிதி: நெஞ்சே! தாமரை செங்கழுநீர் இவற்றைக் கண்டால் மயங்குகின்றாய்;
காலிங்கர்: நெஞ்சே! நீ மலர் கண்ட இடத்து மையலுறுதி; மதிப்பில்லை என்றவாறு;
பரிமேலழகர்: (இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே; தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்;
பரிமேலழகர் குறிப்புரை: மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். [மையாத்தல்-மயக்கத்தைக்கொள்ளுதல்]

'நெஞ்சே! மலர் கண்டால் மயங்குகின்றாய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சமே! குவளை, நீலம் முதலிய மலர்களைக் காணின் மயங்குகிறாய்', 'மனமே! ஒரு பூவைப் பார்த்தவுடன் மயங்குகிறாயே!', 'நெஞ்சே! தாமரை, குவளை, நீலம் முதலிய மலர்களைப் பார்த்தவுடன் மயங்குகின்றாயே!', 'நெஞ்சமே! மலர்களைக் கண்டால் மயங்கின்றாய்' என்றபடி உரை தந்தனர்.

நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய் என்பது இப்பகுதியின் பொருள்.

இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று.
மணக்குடவர் குறிப்புரை: இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இவள்கண் பலரானும் காணப்படும் பூவையொக்கு மென்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறியது. இவை இரண்டினானும் தான் கிட்டுதற்கு அருமை கூறினானாம்.
பரிதி: அவைகள் நாயகி கண்ணைக்கண்டால் நாணும். 'நாயகி கண்போல் வண்ணம் பெற்றோம்; விரகப் பார்வை அறியோம்' என்று தலையிறக்கிடும் என்றவாறு.
காலிங்கர்: எம்மால் காதலிக்கப்பட்ட இவள் கண்மலர் யாவரும் காணும் பூமலர் ஒக்கும் என்று கருதி.
பரிமேலழகர்: யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; நின்அறிவு இருந்தவாறென்?
பரிமேலழகர் குறிப்புரை: இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு. [ஒருபுடை-ஒருவகையில்]

'இவள் கண்மலர் யாவரும் காணும் பூமலர் ஒக்கும் என்று கருதி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' யான் மட்டும் காணும் இவள் கண்களைப் பலராலும் காணப்பெறும் பூக்களை ஒக்கும் என்று கருதி. என்னே உன் அறிவு!', 'பலபேர் காணப் பொதுவில் பூத்திருக்கும் அந்தப் பூ என் காதலியின் கண்ணுக்குச் சமானமாக இருக்கிறதென்று', 'இவள் கண் எல்லாப் பூக்களிலுஞ் சிறந்தது என அறியாத உன்னுடைய அறிவு எவ்வ்ளவு இழிவானது?', 'இவள் கண்கள் பலரும் காண்கின்ற தாமரை, குவளை, நீலம் முதலிய பூக்களை ஒக்கும் என்று(நின் அறிவு இருந்தவாறு என்னே!)' என்றபடி பொருள் உரைத்தனர்.

இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இவளது கண் பலர்காணும் பூவையொக்கும் என்று நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய் என்பது பாடலின் பொருள்.
'பலர்காணும் பூ' குறிப்பது என்ன?

மலர் காணும்போது காதலியின் கண்ணே தலைவன் மனதில் தோன்றுகிறது!

'இவள் கண்கள் பலராலும் காணப்படும் பூவைப் போன்றதாகுமோ' என்று 'மலரைக் கண்ட நெஞ்சே நீயும் மயங்குகின்றாயே!'
காட்சிப் பின்புலம்:
களவொழுக்கத்தில் காதலியுடன் கூடிப் பெற்ற இன்பத்தை நினைவில் கொண்டுவந்து மகிழ்ச்சி அடைகிறான் தலைவன். அவள் மலரினும் மெல்லிய இயல்புடையவள் என அறிந்தோமே! என்பதை எண்ணி அதில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
தலைவனது நினைவு முழுதும் தலைவி மேலேயே உள்ளது. தலைவனது நெஞ்சம் அவள் கண்கள் போன்ற நிறமுடைய குவளை, நீலம் முதலிய மலர்களைக் கண்டால் தன் காதலியின் கண்களல்லவா இவை என்று மையல் உறுகின்றனவாம். உடன் 'அது பலர் காணும் மலராயிற்றே' என்ற எண்ணமும் உண்டாகிறது. அவளது கண்கள் அவனுக்கு மட்டுமே உரிமையானவை ஆயிற்றே- அவற்றின் அழகுநலன் அவன் மட்டுமே கண்டு மகிழக் கூடிய ஒன்றாகும் அல்லவா! 'நெஞ்சே! மலரைப் பார்த்தவுடனே அவள் கண்கள் போல் உள்ளது என்று மயங்குகிறாயே. இந்த ஒப்புமை தவறு. அம்மலரைப் பலரும் பார்ப்பார்கள் என்பதை நீ அறியவில்லையா?' என்று தன் நெஞ்சை விளித்துச் செல்லமாகக் கடிந்து கொள்கிறான்.

இக்குறளில் ஒலிநயம் சிறப்புற அமைந்து செவிக்கு இன்பம் ஊட்டுவதை உணரலாம்.
மையாத்தி என்ற சொல்லுக்கு மயங்குகின்றாய் என்று பொருள். மை-மயக்கத்தை; யாத்தி-கொள்கிறாய் என்ற இரு சொற்கள் இணைந்து மையாத்தி என்று ஆனது.
இப்பாடலில் 'மையாத்தி நெஞ்சே' என்று முன்னிலையும் விளியும் வருதல் காணத்தக்கது. விளிச் சொல்லைப் பின்னால் கொண்டுவந்து கவிதை நயம் தோன்றக் கூறப்பட்டது (ச அகத்தியலிங்கம்).

'பலர்காணும் பூ' குறிப்பது என்ன?

'பலர்காணும் பூ' என்ற தொடர்க்குப் பலரால் காணப்படும் பூ, பலரானும் காணப்படும் பூ, யாவரும் காணும் பூமலர், பலரானும் காணப்படும் பூக்கள், பலரும் காண்கின்ற மலர்கள், பலரும் பார்த்து மகிழும் பூக்கள், பலர் பார்க்கும் மலர், பலராலும் காணப்பெறும் பூக்கள், பலர் காணப்(பொதுவில் பூத்திருக்கும்) பூ, பலராலும் காணப்படும் மலர்கள், பலராலுங் காணப்படும் பூக்கள், பலரும் காண்கின்ற தாமரை, குவளை, நீலம் முதலிய பூக்கள், பலரும் பார்த்து மகிழும் மலர்கள், எல்லாராலும் எளிதாய்க் காணப்படும் பொது வகையான பூக்கள், பலராலும் காணப்படும் மலர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பார்ப்போர் மனதுக்கு இன்பம் தருவன மலர்கள். எனவே பூக்களை எல்லோரும் காண்பர்.
பலர்காணும் பூ என்பதற்குப் 'பலரால் காணப்படும் பூ' எனவே பலரும் பொருள் கொண்டனர். பூவோடு தலைவியின் கண்களை ஒப்பிட்டு 'மலர் பலராற் காணப் பெறுவது; இவளது கண் தான் ஒருவனே காண்பதற்குரியது' என்ற வகையில் பொருளுரைத்தனர்.
தான் காணும் மலரெல்லாம் தன் காதலியின் கண்கள் போல இருக்கிறதே என்று முதலில் நினைத்த தலைவனுக்கு 'அது பலர் காணும் பூ'வாய் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லையாம் என்றனர் சிலர்.
கண்ணுக்கு மலர் ஒப்புமை உண்டு. மலர் எல்லோரையும் ஒரே பார்வையில் பார்க்கிறது; காதலியின் கண்களும் எல்லோரையும் பார்க்கின்றன. எனினும் தலைவனை நோக்கும் காதல் பார்வையில் வேறுபட்டது. எனவே, மலரை என் காதலியின் கண்ணோடு ஒப்பிட்டு மயங்காதிருக்கும்படிசொல்லி காதலியின் கண்ணை, அதில் மலரும் காதலை சிறப்பித்துக் கூறுகிறான் தலைவன்.

மலர் பார்க்கும் தன்மை கொண்டது என்பதாகக் காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் (1114 பொருள்: குவளை மலர்கள் என் காதலியைக் கண்டால், சிறந்த அணியை உடையவளது கண்களுக்கு யாம் இணையாக மாட்டோம் என்று, நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும்)என்று குறள் இவ்வதிகாரத்து பிறிதோரிடத்திலும் கூறும்.

'மலர் பலராற் காணப் பெறுவது; இவள்கண் தான் ஒருவனே காண்பதற்குரியது' என்ற குறிப்புப் பொருள் 'பலர் காணும் பூ' என்ற தொடரைப் பொருந்த விளக்கும்.

'இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று, நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய்' என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவளது கண்ணில் தெரியும் காதல் வேறானது என விழியின் நலம்புனைந்துரைத்தல்.

பொழிப்பு

நெஞ்சே! தலைவியின் கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று கருதி மலர்களைக் கண்டால் மயங்குகிறாயே!.