இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1104



நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1104)

பொழிப்பு (மு வரதராசன்): நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?



மணக்குடவர் உரை: தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள்.
இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.

பரிமேலழகர் உரை: (பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்.
(கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.)

வ சுப மாணிக்கம் உரை: நீங்கினால் சுடும்; நெருங்கினால் குளிரும்; இன்ன தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ இவள் யாண்டுப் பெற்றாள்?

பதவுரை: நீங்கின்-அகன்றால்; தெறூஉம்-சுடும், காய்ச்சுதல், வருத்தும்; குறுகுங்கால்-நெருங்கும் போது; தண்-குளிரும்; என்னும்-என்கின்ற; தீ-நெருப்பு; இவள்-இவள்; யாண்டு-எங்கு; பெற்றாள்-அடைந்தாள்.


நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ;
பரிப்பெருமாள்: தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ;
பரிதி: நாயகினிடத்திலே இன்பத்தைவிட்டு நீங்கின் சுடவும் கூடியிருக்கின் குளிர்வும். இப்படி இருக்கிற காமத்தீயை;
காலிங்கர்: நெஞ்சே! உலகத்து தீயினது இலக்கணம் தன்னை வந்து அணுகின் சுடுதலும், அகலின் மெய்தண் என்றலும் செய்யும். அதுவல்லது இங்ஙனம் சிறுது தன்னை அகலின் சுடுதலும் அணுகின் தண் என்றலும் செய்யும் இந்தத் தீ;
பரிமேலழகர்: (பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை;

'தன்னை அகன்றவிடத்துச்சுடும்; அணுகினவிடத்துச் குளிரும்: இத்தன்மையாகிய தீ' என்றபடி இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னை நீங்கினாற் சுடும்; நெருங்கினால் குளிரும். இவ்வியல்புடைய தீயை', 'அகன்று போனால் சுடும்; நெருங்கினால் குளிரும்; இத்தன்மை உடைய தீயை', 'நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கும்போது குளிர்ச்சியை அளிக்கக்கூடியதுமான நெருப்பை', 'இந்தப் பெண்ணைவிட்டு நீங்கினால் எரிச்சலும், ஆனால், நெருங்கினால் குளிர்ச்சியும் உடைய அதிசயத் தீயை' என்றபடி உரை தந்தனர்.

தன்னை நீங்கினாற் சுடும், நெருங்கினால் குளிரும், இவ்வியல்புடைய நெருப்பை என்பது இப்பகுதியின் பொருள்.

இவள் யாண்டுப் பெற்றாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எவ்விடத்துப் பெற்றாள் இவள்.
மணக்குடவர் குறிப்புரை: இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.
பரிப்பெருமாள்: எவ்விடத்துப் பெற்றாள் இவள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இரண்டாம் கூட்டத்துக் கூடலுற்ற தலைமகன் தலைமகள் கேட்பது பயனாகத் தனது வேட்கை தோன்றச் சொல்லியது. இது புணர்ச்சி வேட்கையால் கூறுதலால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று.
பரிதி: எவ்விடத்திலே பெற்றாளோ இவள் என்றவாறு.
காலிங்கர்: எவ்விடத்துப் பெற்றனள் என்றவாறு.
பரிமேலழகர்: என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்.
பரிமேலழகர் குறிப்புரை: கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.

இப்பகுதிக்கு 'எவ்விடத்துப் பெற்றாள் இவள்?' என்று பழைய ஆசிரியர்கள் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் எங்குப் பெற்றாள்?', 'அவள் எவ்வுலகத்திலே பெற்றாள்?', 'இவள் எங்கு அடைந்தாள்?', 'இவள் எங்கிருந்து பெற்றாள்?' என்றபடி உரை கூறினர்.

எங்குப் பெற்றாள் இவள்? என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
தன்னை நீங்கினாற் சுடும், நெருங்கினால் குளிரும், இவ்வியல்புடைய நெருப்பை எங்குப் பெற்றாள் இவள்? என்பது பாடலின் பொருள்.
குளிர்விப்பது எப்படித் தீ ஆகும்?

காதலியிடத்துள்ள தீ புதுமையானது.

என்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் நெருங்கினால் குளிர்தலும் செய்யும் நெருப்பை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்? எனத் தலைவன் வியக்கிறான்.
காட்சிப் பின்புலம்:
தலைவன் - தலைவியரது களவுக் காதல் தொடர்கிறது. கூடல் முடிந்த நிலையில், தான் அனுபவித்த கலவி இன்பத்தை நினைவிற் கொண்டுவந்து மகிழ்ந்து போய் தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான் காதலன். ஐம்புலன்களால் கிடைக்கும் சுவைகள் எல்லாம் ஒருசேர ஒரே காலத்து நுகர்ந்தோம்; காதல்நோய் தந்து காமத்துக்கு மருந்தாகவும் இருக்கிறாள்; காதலியின் முயக்கத்தினும் மேலான இன்பம் வேறில்லை என்று களிப்பு மிகச் சொல்லிக்கொண்டிருக்கிறான் அவன்.

இக்காட்சி:
காதலியின் அணைப்பை விட்டுப் பிரிய முடியாத நிலையில் 'அவளை அகன்றால் என் உடல் கொதிக்கின்றது; அணுகினால் குளிர்விக்கிறதே' எனத் தலைமகன் தனக்குள்ளே சொல்கிறான். அணுகினால் சுடுதலும், அகன்றால் வெப்பம் நீங்குவதும் உலகத்து தீயினது இயல்பாகும். ஆனால், காமத்தீயினது இயல்பு எதிர்மாறாக இருக்கிறது. காதல் நெருப்புக்கு இடமான தலைவியை விட்டு நீங்கில் சுடுதலும் அவளைக் குறுகில் வெம்மை நீங்கித் தண் என்று குளிர்ச்சியும் உண்டாகின்றன. இத்தகைய தீயை எங்கிருந்து பெற்றாள் இவள்? என இலக்கணமே மாறிய நெருப்பாக வந்து மகிழ்வித்த காதலியை எண்ணுகிறான்.

இக்குறள் காதலர் கூடியிருக்கும் போது மனமும் உடலும் குளிர்ந்து மகிழ்ந்திருப்பர் என்றும் பிரிந்திருக்கும்போது வாடி வருந்துவர் என்பதைத் தெரிவிக்கிறது. இக்குறட்கருத்தை வேறு ஓர் உணர்வு பட தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ (பிரிவு ஆற்றாமை 1159 பொருள்: நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய்போல் தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?) என்ற பாடலில் தொட்டால்தான் தீ சுடும்; இந்தக் காதல் தீ விட்டாலும் சுடுகிறதே? எனக் காதலி குறிப்பாள்.

'தெறும்' (தெறூஉம் என்பது அளபெடை) என்ற சொல்லுக்குச் சுடும் என்பது பொருள். இச்சொல்லுக்குக் 'காய்ச்சுதல்' என்றும் 'வருத்தும்' என்றும் பொருள் உரைப்பர்.

குளிர்விப்பது எப்படித் தீ ஆகும்?

காமம் ஒரு தீயாக இங்கு உருவகிக்கப்படுகிறது. 'தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்' என்று பரிமேலழகர் இக்குறட்கருத்தை விளக்குவார். காதல் ஆற்றலால் தீபோல் காமம் வெளிப்படுவதால் அவளை நெருப்பாகக் காண்கிறான். அவளை நெருங்கி வந்தபோது அதே நெருப்பு குளிர்விக்கிறதாம்.
காதல் மனத்ததாதலின், சுடுதலும் குளிர்தலும் உள்ளத்தின்மேல் நின்றது. கூடும் முன்னர் பிரிந்து நின்ற நிலையில் காதல் என்னும் அகத்தீ எரிந்து துன்புறுத்தியத்தியதாலும் கூடியபோது அக்காமத் தீயே தண்மையாகி குளிரூட்டியதாலும் இரண்டுவேளைகளிலும் தீ ஆயிற்று. ஒரு நெருப்பு சூடாகவும் மற்றொன்று தண்மை தருவதாகவும் இருந்தது.
குளிர்ச்சி என்றது காமத்தின் குளிர்ச்சியை. அது தீக்குள் இருக்கும் குளிர். குளிராய்க் காய்கிறாள் அவள். சேர்ந்திருக்கும்போது தண்மைத்தீயாகவும் பிரிந்திருக்கும்போது வெம்மைத்தீயாகவும் காதலி விளங்குகிறாள். இதனால்தான் நெருப்புக்குரிய இலக்கணமே மாறிப்போயிருக்கிறதே எனத் தலைவன் வியப்படைகிறான்.
இவ்விதம் காதலை நெருப்புக்கு ஒப்பிட்டு அதன் தன்மையை வேறுபடுத்திக் காட்டிய அரும்புனைவாக அமைந்தது பாடல்.

தன்னை நீங்கினாற் சுடும், நெருங்கினால் குளிரும், இவ்வியல்புடைய நெருப்பை எங்குப் பெற்றாள் இவள்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புணர்ச்சி மகிழ்தலுற்ற தலைவன் காதலியின் அணுக்கத்தையே விழைகிறான்.

பொழிப்பு

விலகினால் சுடும், நெருங்கினால் குளிரும், தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?