செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்:
பதவுரை: செறாஅ-வெகுளாத; சிறுசொல்லும்-இன்னாத மொழியும்; செற்றார்போல்-பகைவர்போல; நோக்கும்-பார்க்கும்.
பொருள்: சினமற்ற இன்னாத மொழியும் பகைவர்போல பார்வையும்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும்;
பரிப்பெருமாள்: செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும்;
பரிதி: ஊடுதலில்லாத சொல்லும் அயலார் போலப் பார்க்கும் பார்வையும்;
காலிங்கர்: நெஞ்சமே நமக்கு ஒன்று சொல்லினும் இவள் எங்ஙனம் சொல்லுமோ என்று இடர் உறவேண்டா; உள்ளத்தில் செறாது புறம்பு உரைக்கும்
புன்சொல்லும் அங்ஙனம் சிரியாரே செற்றாரைப் போல்வதோர் நோக்கும் இவை இரண்டும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும், அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்;
பழம் ஆசிரியர்கள் சினம் இல்லாத கடுஞ்சொல்லும் பகைவர் போன்று பார்வையும் என்று இத்தொடரை விளக்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகையாத கடுஞ்சொல் பகைபோல் பார்வை', 'வெறுப்பில்லாத மறுப்புச் சொல்லும் மனத்தில் பகையின்றிப் பகைவர் போலப்
பார்க்கும் சினந்த பார்வையும்', 'சினமின்றியே சினங்கொண்டவர்போல் பேசிக் கொள்ளும் சிறுசொற்களும் பகையின்றியே பகைவர்கள் போல் பார்த்துக்கொள்ளும்
பார்வைகளும்', 'சீற்றமுற்று வருத்தாத கடுஞ்சொல்லும், பகைவர் போன்ற பார்வையும்' என்றபடி உரை தந்தனர்.
சினங்கொண்டவர்போல் கூறும் சுடுசொல்லும் பகைவர்கள் போன்ற பார்வையும் என்பது இத்தொடரின் பொருள்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு:
பதவுரை: உறாஅர்-நொதுமலர்; போன்று-போல; உற்றார்-நண்பர்; குறிப்பு-அடையாளம்.
பொருள்: பகைவர் போல நட்பாராயினர் அடையாளம்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது
பரிப்பெருமாள்: அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள் கருத்துரை: மேலே தலைமகள் கூறிய கடுஞ்சொல்லும் அதன்பின் கடுத்து நோக்கின நோக்கமும் குறித்து இவ்வாறு செய்யினும்
அன்பின்மை தோற்றம் இல்லாமையின் உடம்பாடு என்று தேறியது.
பரிதி: காமம்மிக்க நாயகியின் குணம் என்றவாறு.
காலிங்கர்: புறத்துப் பரிவிலாதார் போன்று வைத்து அகத்து அன்புடையார் செய்யும் மனக்குறிப்பு என்று ஆற்றியுளேம் ஆதலே கருமம் என்பது
பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன.
பரிமேலழகர் விரிவுரை: குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.
புறத்துப் அன்பில்லாதவர் போன்று வைத்து அகத்து நட்புடையார் செய்யும் மனக்குறிப்பு என்பது பழம் ஆசிரியர்களின் உரையாகும். பரிதி காமம் மிக்க
நாயகியின் குணம் என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவை அயலவர் போன்ற அன்பர் குறிப்பு', 'பொருந்தாத பகைவர் போன்ற நண்பராயினார்க்குக் குறிப்புணர்த்தும் செயல்களாம்',
'வெளியே உறவில்லாதவர்கள் போன்று காட்டிக்கொண்டு உள்ளே மனமொன்றிவிட்ட காதலர்களின் உட்குறிப்புள்ள செயல்களாகும்', 'தொடர்பு இல்லாதவர் போல்
பிறர்க்குக் காணப்பட்டாலும் அவை நெருங்கிய பற்றுள்ளம் கொண்டவர்களது சொற்குறிப்பும் கண்குறிப்பும் ஆம்' என்றவாறு உரை பகன்றனர்.
தொடர்பு இல்லாதவர் போல் வெளிக்குக் காணப்பட்டாலும் பொருந்திய காதலர்களிடையேயான குறிப்புணர்த்தும் செயல்களாகும் என்பது
இத்தொடரின் பொருள்.
|