குறிக்கொண்டு நோக்காமை அல்லால்:
பதவுரை: குறிக்கொண்டு-நேர் இலக்காகக் கொண்டு; நோக்காமை-பாராதிருத்தல்; அல்லால்-அன்றி.
பொருள்: நேராகப் பாராமல் அன்றி.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது;
பரிப்பெருமாள்: குறித்து நோக்காமை யல்லது;
பரிதி: குறித்துப் பார்த்துப் பாராமுகம் பண்ணுமாப்போல;
காலிங்கர்: நெஞ்சமே! நம்மோடு பயின்றிலாமையின் குறிக்கொண்டு எதிர்முகம் நோக்காமையல்லது;
பரிமேலழகர்: (இதுவும் அது.)நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல;
'நேராகப் பாராமல் அன்றி' என்று பொருள்படும்படி இத்தொடர்க்குப் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'என்னை நேராகப் பார்க்கவில்லையே யன்றி', 'என்னை நேரே பார்ப்பதில்லை', 'குறிப்பாக என்னைப் பார்க்கவில்லையே
தவிர','என்னை முகநோக்கி உற்றுப்பார்க்காத தன்மையே யன்றி', 'பார்க்கவேண்டும் என்ற குறிப்புக்கொண்டு பாராமை அல்லது' என்றபடி
இத்தொடர்க்கு விளக்கம் தந்தனர்.
'என் முகம் குறித்து நேராகப் பார்க்கவில்லையே தவிர' என்பது இத்தொடரின் பொருள்.
ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்:
பதவுரை: ஒருகண்-ஒருகண்; சிறக்கணித்தாள்-சுருக்கினவள்' போல-ஒக்க; நகும்-மகிழும்.
பொருள்: ஒருகண் சுருக்கினவள் போலச் சிரிப்பாள்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்.
மணக்குடவர் விரிவுரை: அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல்
நகுதல் உடன்படுதலாமென்றது.
பரிப்பெருமாள்: ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்.
பரிப்பெருமாள் விரிவுரை: அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். அஃதாவது நகை தோற்றியவழிப்
பிறிதொன்று கண்டாள் போல நகுதல். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.
பரிதி: ஒருகண் கீழ்க்கணித்து நோக்கிச் சிரிக்கும் என்றவாறு.
காலிங்கர்: நம்கண் தனது உட்குறிப்பினான் ஒருகண் கடைக்கணித்தாள் போல நின்று அகமுறுவல் செய்யும்.
காலிங்கர் விரிவுரை: எனவே, மற்றொன்று நோக்குவாள் போல முகம்புரிந்து இப்பக்கத்து விழிக்கடை நோக்கு என் கண்ணதே போல்வதோர் இன்பப்
புன்முறுவல் செய்யும் என முன்னிலையிலும் பின்னிலைக்குறி வேற்றுமைகண்டு மற்று இது பற்றுக்கோடாக ஆறினான் என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
பரிமேலழகர் விரிவுரை: சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான்.
'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.
பழைய ஆசிரியர்கள் அனைவரது உரைகளயும் தொகுத்துப் பார்க்கும்பொழுது 'மற்றொன்று நோக்குவாள் போல கடைக்கண்ணால் என்னைப் பார்த்து
அகமுறுவல் செய்தாள்' என்பது பெறப்படும்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு கண்ணால் சுருக்கிப் பார்த்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள்', 'ஒருகண்னை இடுக்கினாற்போலச் சிரிப்பாள்',
'ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போல நோக்கிச் சிரிப்பாள்', 'எங்கோ பார்க்கிறவள் போலக் கடைக் கண்ணால் என்னையே பார்த்துச் சிரிப்பாள்',
'தலையைச் சாய்த்தாள் போலப் பார்த்து நகுவாள்' என்றபடி உரை தந்தனர்.
'ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போலச் சிரிப்பாள்' என்பது இத்தொடரின் பொருள்.
|