இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1095



குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1095)

பொழிப்பு (மு வரதராசன்): என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

மணக்குடவர் உரை: குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்.
அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
(சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.)

இரா சாரங்கபாணி உரை: நேரே பார்க்கவேண்டும் எனக் குறிக்கொண்டு பார்க்கவில்லையே யன்றி ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போல நோக்கிச் சிரிப்பாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்.

பதவுரை: குறிக்கொண்டு-நேர் இலக்காகக் கொண்டு; நோக்காமை-பாராதிருத்தல்; அல்லால்-அன்றி; ஒருகண்-ஒருகண்; சிறக்கணித்தாள்-சுருக்கினவள் போல-போன்று; நகும்-மகிழும். .


குறிக்கொண்டு நோக்காமை அல்லால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது;
பரிப்பெருமாள்: குறித்து நோக்காமை யல்லது;
பரிதி: குறித்துப் பார்த்துப் பாராமுகம் பண்ணுமாப்போல;
காலிங்கர்: நெஞ்சமே! நம்மோடு பயின்றிலாமையின் குறிக்கொண்டு எதிர்முகம் நோக்காமையல்லது;
பரிமேலழகர்: (இதுவும் அது.)நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல;

'நேராகப் பாராமல் அன்றி' என்று பொருள்படும்படி இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்னை நேராகப் பார்க்கவில்லையே யன்றி', 'நேராக (அவள் என்னைப்) பார்க்கவில்லை தவிர', 'என்னை நேரே பார்ப்பதில்லை', 'பார்க்கவேண்டும் என்ற குறிப்புக்கொண்டு பாராமை அல்லது' என்றபடி இப்பகுதிக்கு விளக்கம் தந்தனர்.

என் முகம்குறித்து நேராகப் பார்க்கவில்லையே தவிர என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்.
மணக்குடவர் குறிப்புரை: அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.
பரிப்பெருமாள்: ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். அஃதாவது நகை தோற்றியவழிப் பிறிதொன்று கண்டாள் போல நகுதல். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.
பரிதி: ஒருகண் கீழ்க்கணித்து நோக்கிச் சிரிக்கும் என்றவாறு.
காலிங்கர்: நம்கண் தனது உட்குறிப்பினான் ஒருகண் கடைக்கணித்தாள் போல நின்று அகமுறுவல் செய்யும்.
காலிங்கர் குறிப்புரை: எனவே, மற்றொன்று நோக்குவாள் போல முகம்புரிந்து இப்பக்கத்து விழிக்கடை நோக்கு என் கண்ணதே போல்வதோர் இன்பப் புன்முறுவல் செய்யும் என முன்னிலையிலும் பின்னிலைக்குறி வேற்றுமைகண்டு மற்று இது பற்றுக்கோடாக ஆறினான் என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம். [சிறங்கணித்தாள் என்பது சிறக்கணித்தாள் என வலிந்து வந்தமையான் செய்யுள் விகாரம் என்றார்; அதுதானும் - கண் சுருங்குதலும்]

பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் கண் என்னும் உறுப்பைச் சொல்லாமல் கருத்துப் பொருளாக 'ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்' என உரைத்தனர். பரிதி 'ஒருகண் கீழ்க்கணித்து நோக்கிச் சிரிக்கும்' என்றார். காலிங்கர் 'கண் தனது உட்குறிப்பினான் ஒருகண் கடைக்கணித்தாள் போல நின்று அகமுறுவல் செய்யும்' எனக் கூறினார். பரிமேலழகர் 'ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருகண்னை இடுக்கினாற்போலச் சிரிப்பாள்', 'ஒரு கண்ணின் கடைக்கண்ணால் எங்கோ பார்க்கிறவள் போல என்னைப் பார்த்துச் சிரிப்பாள்', 'ஒரு கண்ணைச் சுருக்கியவள் போலப் பார்த்து மகிழ்வாள்', 'தலையைச் சாய்த்தாள் போலப் பார்த்து நகுவாள்' என்றபடி உரை தந்தனர்.

'ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போலச் சிரிப்பாள்' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என்னை நேராகப் பார்க்கவில்லையே தவிர, ஒருகண் சிறக்கணித்தாள் போல நகுவாள் என்பது பாடலின் பொருள்.
'ஒருகண் சிறக்கணித்தாள் போல' குறிப்பது என்ன?

கடைக்கண் பார்வையால் அவளது காதல்விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.

என்னையே குறிப்பாகக் கொண்டு பார்க்காவிட்டாலும், தன்னுடைய ஒரு கண்ணை இடுக்கிக்கொண்டது போன்று அவள் நகுவாள்.
காட்சிப் பின்புலம்:
தலைமகன், தலைவி இருவரிடை சந்திப்புகள் நிகழ்ந்தபின் தன்மீது காதலுடையவரா என்று தெரிந்துகொள்ள ஒருவர் உள்ளக் குறிப்பை மற்றவர் அறிய முயல்கின்றனர். அவள் அவனை இரண்டு வகையாகப் பார்க்கிறாள் என்கிறான் தலைவன்; ஒன்று நோய் தருவதாகவும் மற்றொரு பார்வை அந்நோயை நீக்க உதவுவதாகவும் உளவாம். அடுத்து அவள் அவனைக் களவுப் பார்வை பார்த்ததையறிந்து அவளது உள்ளத்தை வென்றுவிட்டதாக களிப்புறுகிறான். பின் நிகழ்ந்த சந்திப்பில் அவள் நேராகவே பார்க்கிறாள்; அவன் எதிர்நோக்கியபோது அவள் ஏதோ கருத்தை உட்கொண்டு நாணித் தலைகவிழ்ந்து கொண்டாள்; அது அவர்களது காதல் பயிருக்கு அவள் நீர்பாய்ச்சியது போல் இருந்தது என்று உணர்கிறான் அவன். தொடரும் சந்திப்பில் தான் பார்க்கும்போது நிலத்தைப் பார்த்தாள்; நான் பார்க்காதபோது தன்னைப் பார்த்து சிறிதே நகை புரிவாள் என்றான்.

இக்காட்சி:
இப்பொழுது நேருக்கு நேர் அவனை முழுமையாகப் பார்க்காமல், வேறு எங்கோ பார்ப்பது போல் முகம் காட்டிக்கொண்டு ஒரு விழிப் பார்வையால் அவனை நோக்கித் தனக்குள்ளே சிரித்து மகிழ்கிறாள். காதல்குறிப்பு கலந்த ஓரக்கண் பார்வையை அவனை நோக்கிச் செலுத்தியதும், அவள் சிறக்கணித்துச் சிரித்ததும், அவளது எண்ணத்தில் அவனே நிறைந்திருக்கிறான் என்பதைக் குறிப்பாகக் காட்டித் தன் காதலை ஐயத்திற்கு இடமின்றி முழுமையாகத் தெரிவிக்கிறாள் என அவன் உணர்கிறான். உளப் பொருத்தம் வளர்ந்து இருவரிடையே காதல் கனிந்துவிட்டது என்பதைச் சொல்வது இது.

இடைவெளி முற்றிலும் குறைந்து காதலர் உள்ளங்கள் ஒன்றுபடும் நிலை காட்டப்படுகிறது இங்கு.
நேரே அவனைக்குறித்துப் பார்க்காமை மட்டுமன்றி இடுங்கிய கண்ணால் அவனைப் பார்த்துப் பார்த்துத் தலைவி தனக்குள்ளே இன்பப் புன்முறுவல் செய்வாள் என்கிறான் தலைமகன். இன்னும் பழகவில்லையாதலால் எதிர்முகம் நோக்காமல் அகமுறுவல் செய்தாள். முற்குறளில் மென்புறுவல் பூத்தாள் (மெல்ல நகும்). இங்கு உளப்பொருத்தம் வளர்ந்தநிலையில் தன் மகிழ்ச்சியை நன்கு புலப்படுத்துகிறாள். அதை 'நகும்' என்ற சொல் உணர்த்திநிற்கிறது.

'ஒருகண் சிறக்கணித்தாள் போல' குறிப்பது என்ன?

'ஒருகண் சிறக்கணித்தாள் போல' என்றதற்கு ஒருகால் உடம்பட்டாள் போல, ஒருகண் கீழ்க்கணித்து நோக்கி, கண் தனது உட்குறிப்பினான் ஒருகண் கடைக்கணித்தாள் போல. ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல, ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல், ஒரு கண்ணால் சுருக்கிப் பார்த்து, ஒருகண்னை இடுக்கினாற்போல, ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போல, ஒரு கண்ணின் கடைக்கண்ணால் எங்கோ பார்க்கிறவள் போல, ஒரு கண்ணைச் சுருக்கிப் பார்த்தாற் போல, ஒரு கண்ணைச் சுருக்கியவள் போல, தலையைச் சாய்த்தாள் போல, ஒரு கண்ணைப் புருவத்துள் மறைப்பது போல் சிமிட்டி, ஒரு கண்ணைச் சுருக்கிப் பார்த்தாற்போல, தலை குனிந்த நிலையில் கண்ணைச் சுருக்கி ஓரமாய் என்னைத்தான் பார்த்து என்றவாறு பொருள் கூறினர்.

சிறங்கணித்தாள் என்பது சிறக்கணித்தாள் என எதுகைக்காக வலிந்து வந்தது என்பர். இச்சொல் சுருக்கினவள் எனப்பொருள்படும்.
நேருக்கு நேராகப் பார்க்காமல் ஒரு கண்ணைச் சாய்த்ததுபோல அவனைப் பார்த்தது அவள் உள்ளத்தளவில் அவனை மிகவும் நெருங்கிவிட்டாள் என்பதைச் சொல்லியது. அவள் ஒருகண்னை இடுக்கினாற்போல நகுதல் புரிந்தது காதல்குறிப்பைக் காட்டிற்று. அது வெளிப்பட நிகழாமையாற் 'போல' எனச்சொல்லப்பட்டது.

'ஒருகண் சிறக்கணித்தாள் போல' என்றது ஒரு கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள் போன்று என்ற பொருள் தரும்.

என்னையே குறிப்பாகக் கொண்டு பார்க்காவிட்டாலும், தன்னுடைய ஒரு கண்ணை இடுக்கிக்கொண்டது போன்று அவள் நகுவாள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சுருக்கிய ஓரவிழிப்பார்வையுடன் கூடிய சிரிப்பால் தலைவியும் காதல்கொண்டமைக் குறிப்பறிதல்.

பொழிப்பு

என் முகம் குறிக்கொண்டு அவள் நேராக என்னைப் பார்க்கவில்லையே தவிர ஒருகண்னை இடுக்கினாற்போலச் சிரிப்பாள்.