இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1093



நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1093)

பொழிப்பு (மு வரதராசன்): என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலைகுனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

மணக்குடவர் உரை: முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள். அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர்.
தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.

பரிமேலழகர் உரை: (நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று.
(அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.)

இரா சாரங்கபாணி உரை: யான் காணாதபோது என்னை அன்போடு நோக்கினாள். நோக்கியபின் எதனையோ ஒன்றனை மனத்துட்கொண்டு தலை குனிந்தாள். அச்செயல் அவள் காமப்பயிர் வளர்தற்கு பாத்தியுள் பாய்ச்சிய நீராயிற்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர்.

பதவுரை: நோக்கினாள்-பார்த்தாள்; நோக்கி-பார்த்து; இறைஞ்சினாள்-தலை கவிழ்ந்தாள்; அஃது-அது; அவள்-அவள்; யாப்பினுள்-அணை கட்டிய பாத்தியுள், தளையுள்; அட்டிய-வார்த்த; நீர்-நீர்.


நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள்.
பரிப்பெருமாள்: முற்பட நோக்கிப் பின்பு நாணினாள்.
பரிதி: நோக்கினாள் முகத்தை யான் நோக்கத் தலைகீழிட்டது.
காலிங்கர்: நெஞ்சமே! இங்ஙனம் சிறந்த நோக்கினை உடையாள் முன்னம் தான் நோக்கிப் பின்னர் யான் தன்னை நோக்குமிடத்து எதிர்நோக்கு இன்றி முகம் இறைஞ்சி நின்றாள்.
பரிமேலழகர்: (நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்;

இப்பகுதிக்கு 'என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணித் தலை குனிந்தாள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்த்தாள்; பார்த்துக் குனிந்தாள்', 'என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கித் தலைகுனிந்து பணிந்தாள்', 'என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணித் தலை குனிந்தாள்', 'என்னைச் சிறு பார்வையாகப் பார்த்தாள். உடனே தலை குனிந்து கொண்டாள்', 'நோக்கியபின் எதனையோ ஒன்றனை மனத்துட்கொண்டு தலை குனிந்தாள்' என்றபடி பொருள் கூறினர்.

என்னைப் பார்த்தாள்; நான் அவளை எதிர்பார்வை பார்த்ததும் தலை கவிழ்ந்தாள் என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர்.
மணக்குடவர் குறிப்புரை: தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.
பரிப்பெருமாள்: அஃது அவள் நட்பு வளர வார்த்த நீர் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாயிற்று. பந்தம் என்பதனை யாப்பு என்று கூறினார். பார்த்தவள் பெயராது நாணி நிற்றலும் உடன்படுதலாம் என்றது.
பரிதி: அஃது என்போல என்னில் கட்டிய கட்டில் தண்ணீர் விட்டதற்கு ஒக்கும்.
காலிங்கர்: மற்று அஃது யாதினை ஒக்குமோ எனில் ஓர்ப்புறைந்த இடத்துப் பின்னும் அதற்கு உறுதி பெறுவதாக நீர் பெய்து கூறு கொண்டாற்போலத் தானும் நம்மிடத்து ஓர்த்தற் குறிப்புடைமை வைப்புறுத்தினாள் போலும் என்று மகிழ்ந்து தேறினான் தலைமகன் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. [இருவேமிடையும்-எம் இருவரிடத்தும்; அதன்கண்-அன்பாகிய பயிரில்]
பரிமேலழகர் குறிப்புரை: அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம். [அச்செய்கைக்கு-நோக்கித் தலை குனிந்த அச்செயலுக்கு]

'அது அவர்களிடையான நட்புப்பயிர் வளர்தற்கு வார்த்த நீர் ஆனது' என இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் உரை வழங்கினர்.

'அது அவள் காதற்பாத்தியில் இறைத்த நீர்', 'அஃது எங்கள் இருவருக்குமுள்ள தொடர்பு வளரும்படியாக அவள் விட்ட நீர்', 'இவள் அப்படிச் செய்தது சம்மதம் என்ற பயிருக்கு நீர் பாய்ச்சியது போல் இருந்தது', 'அக்குறிப்பு காதல் வளர அவள் வார்த்த நீராகும்' என்று இன்றைய ஆசிரியர்கள் உரை செய்தனர்.

அது அவள் எங்கள் உறவு வளர காதல் பாத்தியில் ஊற்றிய நீர் போல் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவள் பார்க்க என் எதிர்பார்வைக்கு அவள் இறைஞ்சியது யாப்பினுள் அட்டிய நீர் போல் ஆயிற்று என்பது இக்குறட்கருத்து.
'யாப்பினுள் அட்டிய நீர்' குறிப்பது என்ன?

என்னை நோக்கித் தலையைச் சாய்த்து நாணி நின்றாள். அன்பு காட்டுகிறாள் என்பதைத்தானே இது உணர்த்துகிறது?

என்னை நோக்கினாள்; பின் அவள் தலை நாணத்தால் கவிழ்ந்தது. அது அன்புப்பயிர்க்கு நீர் வார்த்ததாயிற்று.
காட்சிப் பின்புலம்:
அவனுக்கு அவள் மேலும் அவளுக்கு அவன்மேலும் காதல் தோன்றியபின்னர் அவளது உள்ளக் கருத்தினை அறிய விரும்பினான் தலைவன். அடுத்த முறை எதிர்கொண்டபோது அவளது பார்வையில் இரண்டு நோக்குகள் தெரிந்தன - முதல் பார்வை காதல்நோயைத் தந்தது; இரண்டாவது பார்வை அந்நோயை ஆற்றவல்ல மருந்தாக இருந்தது. இரண்டாவது பார்வையில் அவளும் அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்ற ஒரு குறிப்புக் கிடைக்கிறது. பின் நேர்ந்த சந்திப்பில் அவன் அவளைப் பார்க்கிறான். அவள் அவனுக்குத் தெரியாமல், அவன் அவளைப் பார்த்துவிடுமுன், அவனைக் கள்ளத்தனமாகப் பார்க்கிறாள். அப்பார்வை அவன்மீது அவளுக்குள்ள காதலைக் காட்டிவிட்டது. அவளது உள்ளத்தை வென்றுவிட்டோம் என்ற உணர்வு அவனுக்குப் பேருவகையை உண்டாக்குகிறது. தன் காதல் செம்மையான பகுதியைக் கடந்து விட்டது என மகிழ்ச்சி பொங்கக் கூறினான்.
இக்காட்சி:
இப்பொழுதைய சந்திப்பில் அவன் இன்னும் நெருக்கமான இடைவெளியில் அவளைக் காண்கிறான். அன்று களவுப்பார்வை பார்த்தவள் இப்பொழுது நேராகவே பார்க்கிறாள். அவன் அவளை எதிர்நோக்குக் கொள்கிறான். அவள் பெண்களுக்குள்ள இயல்பான நாணம் காரணமாகத் தலைகவிழ்ந்து கொள்கிறாள். அவ்வாறு அவள் செய்தது அவர்களது புதிய உறவு தொடர்வது உறுதிப்பட்டுவிட்டதற்கான குறிப்பு கிடைத்ததாக அவன் அறிகிறான். அவர்களது காதல் பயிருக்கு அவள் நீர்பாய்ச்சியது போல் இருந்தது என்கிறான். அவளது இச்செயல் அவள் எத்தகைய உணர்வுடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்திவிட்டது. இவ்விதம் அவர்களிடைத் தோன்றிய காதல்பயிர் அவள் ஊற்றிய நீரால் மெல்லப் பற்றி முளையிடத் தொடங்கியது.
காதல் இல்லாவிட்டால், தன்னைப் பார்த்த அவள் தலைகவிழ்ந்து நிற்கமாட்டாள்; எனவே குறிப்பறிவித்தவாறு. அவளது நோக்கும் நாணும் அவளுக்கு அவன்மீதுள்ள காதலை அறிவித்தன என்பது பாடலின் கருத்து.

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று (அவையறிதல் 718 பொருள்: செய்தியை உடன் புரிந்துகொள்ளும் திறனுடைய கூட்டத்தின் முன்னர் சொல்லுதல் வளர்கின்ற பயிரின் பாத்தியில் நீரை ஊற்றியது போல) என வளரும் பயிர் மேலும் நீராலேயே வளரும் என்பது முன்பும் கூறப்பட்டது.

'யாப்பினுள் அட்டிய நீர்' குறிப்பது என்ன?

'யாப்பினுள் அட்டிய நீர்' என்றதற்கு நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர், நட்பு வளர வார்த்த நீர், கட்டிய கட்டில் தண்ணீர் விட்டது, ஓர்ப்புறைந்த இடத்துப் பின்னும் அதற்கு உறுதி பெறுவதாக நீர் பெய்து கூறு கொண்டது, அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீர், அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீர், எங்கள் நட்புப் பயிர் வளர, அதனடியில் அவள் வார்த்த நீர், காதற்பாத்தியில் இறைத்த நீர், காமப்பயிர் வளர்தற்கு பாத்தியுள் பாய்ச்சிய நீர், சம்மதம் என்ற பயிருக்குள் அவள் நீர் பாய்ச்சியது, மணவாழ்வு என்னும் பயிர் வளர்வதற்குரிய பாத்தியில் அவள் பாய்ச்சிய நீர், எங்கள் இருவருக்குமுள்ள தொடர்பு வளரும்படியாக அவள் விட்ட நீர், காதல் வளர அவள் வார்த்த நீர், காதல் பயிர் மீது நீரைக் கவிழ்த்தது, எங்கள் இருவருக்கும் இடையே உள்ள தொடர்பான அன்பு விதையை வளர்ப்பதற்காக மனப்பாத்தியுள் பெய்த நீர், என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நீர் நிறுத்துதற்கு வரம்பு கட்டி அமைக்கப் பெற்ற பாத்தி ‘யாப்பு’ என்று சொல்லப்படும். யாப்பு என்பதற்குக் கட்டு என்ற பொருளும் உண்டு. இங்கு பாத்தி என்ற பொருளில் இச்சொல் ஆளப்பட்டது. யாப்பினால் ஆகிய காதல் பயிரைப் பற்றி இப்பாடல் பேசுகிறது.
வயலுள் விட்ட நீர் பயிர்கள் வளர ஏதுவாயினாற்போல, தன்னைக் காதற் பார்வை பார்த்து நாணி அவள் தலை கவிழ்ந்த குறிப்புச் செயலானது, தங்கள் இருவரிடத்தும் தோன்றிய அன்பு என்ற பயிரை வளர்க்க அவள் இறைத்த நீராயிற்றாம்.
காலிங்கர் 'பாத்தி யமைத்து நீர்பாய்ச்சிய தரையினைக் கருவிகொண்டு குத்தி மேலும் கூறுகொண்டு இறுகச் செய்தாற் போலும்' என சற்று வேறுபாடாக விளக்கம் தந்தார்.
யாப்பினாலாகிய அன்பைப் பயிராக உருவகம் செய்யாததால் இதை ஏகதேச உருவகம் என்பர் இலக்கண ஆசிரியர்.

அவள் பார்க்க என் எதிர்பார்வைக்கு அவள் இறைஞ்சியது யாப்பினுள் அட்டிய நீர் போல் ஆயிற்று என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பார்த்தவள் பெயராது நாணி நின்றதால் உறவு தொடர்வதற்கான குறிப்பறிதல் பெற்றான்.

பொழிப்பு

என்னைப் பார்த்தாள்; பார்த்துத் தலை தாழ்ந்தாள்; அது எங்கள் உறவு தொடர அவள் காதற்பாத்தியில் பாய்ச்சிய நீர் போலானது.