இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0924



நாணென்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:924)

பொழிப்பு (மு வரதராசன்): நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.

மணக்குடவர் உரை: நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு.
இது நாணம் போமென்றது.

பரிமேலழகர் உரை: கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு - கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் - நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள்.
(காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: யாவரும் இகழும் கட்குடியாகிய பெருங்குற்றம் உடையார் முன், வெட்கம் என்னும் நல்ல மடந்தை எதிர்நில்லாது புறம் போந்திடுவாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு நாணென்னும் நல்லாள் புறம்கொடுக்கும்.

பதவுரை: நாண்-வெட்கம், இழி தொழில்களில் மனஞ் செல்லாமை; என்னும்-என்கின்ற; நல்லாள்-நல்லவள்; புறம்கொடுக்கும்-(முகமெடுத்தும் பாராமல்) திரும்பிச்செல்வாள், எதிர் முகமாகாள்; கள்-கள்; என்னும்-என்று சொல்லப்படுகிற; பேணா-விரும்பப்படாத, இகழப்படுவதான; பெரும்-பெரிய; குற்றத்தார்க்கு-பிழை புரிந்தவர்க்கு.


நாணென்னும் நல்லாள் புறம்கொடுக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்;
மணக்குடவர் குறிப்புரை: இது நாணம் போமென்றது.
பரிப்பெருமாள்: நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின் காட்டிப்போம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாணம் போமென்றது.
பரிதி: இன்னான் என்றும் பேர் சொல்லமாட்டான்;
காலிங்கர்: நாண் என்னும் நன்னெறியாட்டி இவனின் நீங்கிப் புறத்து ஏகும்;
பரிமேலழகர்: நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். [எதிர்முகம் ஆகாள் -எதிர்ப்படாள்]

'நாண் என்னும் நன்னெறியாட்டி இவனின் நீங்கிப் புறத்து ஏகும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாண் என்னும் நங்கை விட்டுப் போவாள்', 'நாண் என்று சொல்லப்படும் சிறப்புடை நங்கை எதிரே நிற்காமல் ஓடிவிடுவாள்', ''நாணம்' என்னும் நல்ல பெண் (முகமெடுத்தும் பாராமல்) முதுகைக் காட்டுவாள்', 'நாண் என்று சொல்லப்படுகின்ற உயரந்தவள் வாராள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாண் என்று சொல்லப்படும் நல்ல பெண் எதிரே நிற்காமல் திரும்பிப் போய்விடுவாள் என்பது இப்பகுதியின் பொருள்.

கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு.
பரிப்பெருமாள்: கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு.
பரிதி: கள் என்னும் பேய் பிணித்தாற்கு2 என்றவாறு.
காலிங்கர்: இவ்வாறு புறம் மாறிப் போவது யார்க்கு எனின், கள் என்று எடுத்துரைக்கப்படும் சிறிது உணர்வுடையோர் யாவராலும் விரும்பப்படாதாகிய இந்தப் பெரிய குற்றத்தை உடையோர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை;
பரிமேலழகர் குறிப்புரை: காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது. [பேணா - விரும்பாத; கழுவப்படாமையின் - பிராயச்சித்தத்தால் போக்கப்படாமையின்; ஒளி - பிறரால் மதிக்கப்படுதல்]

'கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கள் குடிக்கும் தகாத பெருங்குற்றம் உடையவரை', 'கள்ளென்று சொல்லப்படும் யாவரும் இகழும் பெருங்குற்றம் உடையவர்க்கு', 'கள்ளைக் குடிப்பது என்ற மிகவும் விரும்பத்தகாத குற்றத்தைச் செய்கிறவர்களுக்கு', 'கள்குடி என்று சொல்லப்படுகின்ற பெரியோர் விரும்பாத பெருங்குற்றத்தினையுடையார்க்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கள்குடித்தல் என்று சொல்லப்படுகின்ற விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கள்குடித்தல் என்று சொல்லப்படுகின்ற விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு நாணென்னும் நல்லாள் புறம்கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'நாணென்னும் நல்லாள்' குறிப்பது என்ன?

கள்ளுண்பவனை நற்குணமுடைய பெண்கள் விரும்புவதில்லை.

கட்குடித்தல் என்னும் பெருங்குற்றத்தை உடையவரரைப் பார்ப்பதற்கும் விரும்பாமல் நாணம் என்று சொல்லப்படுகின்ற நல்ல பெண் முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.
புறங்கொடுக்கும் என்ற தொடர் திரும்பிச் செல்லும் என்று பொருள்படும். நல்லோரால் இகழப்படும் ‘கள்ளுண்ணல்’ என்பதைப் பெருங்குற்றம் எனக் குறிக்கிறார் வள்ளுவர். கள்ளுண்பவனை விட்டு ‘நாண்’ என்னும் நல்ல குணம் விலகிப் போகும். ஒருவர் சால்புடையவர் என்பதற்குரிய ஐம்பெருங்குணங்களுள் நாணுடைமை ஒன்றாக எண்ணப்படும். கட்குடியனுக்கு அந்நாண் இருக்காது. குடிநிலையில் தன் வாய் குளறுவது, நடை தள்ளாடுவது போன்றவை பற்றி அவன் வெட்கப்படுவதில்லை. அங்ஙனம் நாணம் இல்லாதவனை எந்தப் பெண்ணும் காண வெட்கங் கொள்ளவே செய்வாள். இதனை நாண் என்னும் நல்லாள் கள்ளுண்பவனின் முகம்பார்க்க விரும்பாமல் விருட்டெனத் திரும்பிச் செல்வாள் என இங்கு சொல்லப்படுகிறது. கள் குடிப்பதால் நாணமின்மையும் விளையும் என்பது கருத்து.

'நாணென்னும் நல்லாள்' குறிப்பது என்ன?

நாணம் என்னும் நற்குணத்தை வள்ளுவர் ஒரு பெண்ணாக இங்கே உருவகித்துக் கூறுகின்றார். அப்பெண்ணை நல்லாள் என அழைக்கிறார். நாண் பெண்மைக்கு உரிய சிறந்த குணம். அதனால் அந்நாணினை உடைய பெண் நல்லாள் எனப்பட்டாள். பாற்பாகுபாடு நாண் என்ற பொருளுக்கு அடியாகக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து கள் குடித்தலின் விளைவாக ஒருவன் அறிவு மழுங்கிவிடும். அதனால், தான் இன்னது செய்கிறோம் என்பதே தெரியாத மயக்கத்தில் அவன் ஆழ்ந்து விடுவதால் இன்னாச் செயல்கள் பலவும் புரிவான். அதுமட்டுமல்ல. கள் வெறியனுக்கு வெட்க உணர்வும் நீங்கிவிடும். அவனது ஆடை விலகல், அற்றம் மறையாமை, தெருவில் கிடந்து உருளுதல், போவோர் வருவோர் பழித்தல், சிறுவர்கள் எள்ளிச் சிரித்தல் இன்னபிற நேர்ந்தாலும் அவை அவனை நாணமடையச் செய்யாது. கட்குடியன் நாணம் என்பதை அறவே இழந்து நிற்பான் என்பது கருத்து.

'நாணென்னும் நல்லாள்' என்பது நாணாகிய குணத்தை நல்லாள் எனப் பெண் பாலாக்கிச் சொல்லப்பட்டது.

கள்குடித்தல் என்று சொல்லப்படுகின்ற விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு நாண் என்று சொல்லப்படும் நல்ல பெண் எதிரே நிற்காமல் திரும்பிப் போய்விடுவாள். என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கள்ளுண்ணாமை ஒருவரது நாண் சிறக்கச் செய்யும்.

பொழிப்பு

கள்குடித்தல் என்னும் தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு நாண் என்னும் நல்லபெண் எதிரே நிற்காமல் திரும்பிப் போய்விடுவாள்.