இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0871



பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

(அதிகாரம்:பகைத்திறம் தெரிதல் குறள் எண்:871)

பொழிப்பு (மு வரதராசன்): பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

மணக்குடவர் உரை: பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று.
இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.

பரிமேலழகர் உரை: பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று.
(மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)

தமிழண்ணல் உரை: பகைமை என்னும் பண்பற்ற ஒன்று, ஒருவன் விளையாட்டாகவும் விரும்பும் தன்மையுடையதன்று. பகையுணர்ச்சி பண்பைக் கெடுக்குமாதலின் இங்ஙனம் கூறினார். விளையாட்டாய்த் தொடங்குவன பல வினையாய் முடிவதுண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பகையென்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பதவுரை: பகை-பகை; என்னும்-என்கின்ற; பண்பு-குணம்; இலதனை-இல்லாததை; ஒருவன்-ஒருவன்; நகையேயும்-விளையாட்டாகவும், விளையாட்டின்கண்ணும்; வேண்டற்பாற்று-விரும்பற்பாலது, விரும்பும் இயல்பு; அன்று-கூடாது, இல்லை.


பகையென்னும் பண்பு இலதனை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை;
பரிப்பெருமாள்: பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை;
பரிதி: பண்பிலாத பகையை;
காலிங்கர்: பகைமை என்று சொல்லப்படும் நெறி இல்லதனை;
பரிமேலழகர்: பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை;

'பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைக்கும் தீய குணத்தை', 'பகை என்று சொல்லப்படுகின்ற தீய பண்பினை', 'பகை என்னும் நன்மையற்ற அது', 'பகையென்னும் தீமை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகை என்று சொல்லப்படுகின்ற குணமற்றதனை என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.
பரிப்பெருமாள்: ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எவ்விடத்தும் பகைஆகாது என்றது; பகை ஆகாது என்றமையால் எண்ணம் ஆயிற்று.
பரிதி: அதனாலே சிலவகை உண்டாகிலும் வேண்டாம் என்றவாறு.
காலிங்கர்: ஒரு மக்கட் பண்புடையோன் தான் ஒருவரோடு நகையாடியும் செய்யவேண்டற்பாலது அன்று;
காலிங்கர் குறிப்புரை: எனவே என்றும் குறிக்கொண்டு இது செய்யற்க என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று.
பரிமேலழகர் குறிப்புரை: மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.

'ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று/விரும்புதல் இயற்கைத்தன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் விளையாட்டாகவும் விரும்புதல் கூடாது', 'ஒருவன் சிரித்து விளையாடும் விளையாட்டிடத்தும் விரும்புதல் இயல்பன்று', 'யாரும் விளையாட்டாகக்கூட விரும்பத்தக்கது அல்ல', 'விளையாட்டிலுங்கூட ஒருவன் விரும்பத்தக்க தன்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விளையாட்டாகவும் யாரும் விரும்பத்தக்கது அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகை என்று சொல்லப்படுகின்ற குணமற்றதனை விளையாட்டாகவும் யாரும் விரும்பத்தக்கது அல்ல என்பது பாடலின் பொருள்.
'நகையேயும்' என்ற சொல் குறிப்பதென்ன?

பகை என்பது வேடிக்கைப் பொருளல்ல.

பகை என்று சொல்லப்படுகின்ற குணம் கெட்டதனை ஒருவன் விளையாட்டாகவும் விரும்புதல் கூடாது.
பகை என்பதற்குப் பண்பு கிடையாது. பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல் (கலித்தொகை 133) என்று சொல்கிறது சங்கப்பாடல் ஒன்று. பாடறிந்து ஒழுகல் என்பது பிறர் பண்­பு­க­ளையும் அறிந்து அவற்­றுக்குத் தக நடத்­தலைக் குறிப்பது. உலக வழக்கை அறிந்து அதற்­கேற்ப நடத்தலும் பாடறிதலாம். பாடறிந்து ஒழுகத் தெரியாதலாலேயே பெரும்பாலான பகை உண்டாகிறது. பகைத்திறம் அறிய முற்படுவோர் பகையின் பண்பிலாத இத்தன்மையை நன்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
சிலர் வறிதே மற்றவரைச் சீண்டிப்பார்க்க வேண்டுமென எண்ணுவர். அதை நகைப்புக்காக-விளையாட்டாகக் கருதிச் செய்வர். ஆனால் அது பெரும் தீச்செயல்களுக்கிடமாகி விடும். 'விளையாட்டுச் சண்டை வினையில் முடியும்' என்பது முதுமொழி. எனவே பகை விளையாட்டு வேண்டாம்; அதை விரும்பாதே என்கிறார் வள்ளுவர். எந்தவகையிலும் மாணாத பகை உண்டாவதைத் தவிர்க்க வேண்டுமென்பது அவர் அறிவுரை.

'நகையேயும்' என்ற சொல் குறிப்பதென்ன?

'நகையேயும்' என்றதற்கு விளையாட்டின்கண்ணும், ஒருவரோடு நகையாடியும், விளையாட்டின் கண்ணேயாயினும், விளையாட்டுக்காகிலுஞ் செய்கிறது, விளையாட்டினிடத்தும், சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும், விளையாட்டாகவும், நகைச்சுவைக்காகக் கூட, சிரித்து விளையாடும் விளையாட்டிடத்தும், விளையாட்டாகவும் கூட, தன் விளையாட்டுக்காகக் கூட, விளையாட்டிலுங்கூட, விளையாட்டுக்காவேனும், விளையாட்டு அல்லது வேடிக்கைக்காகக் கூட என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நகையாடுவதற்காகக் கூட பண்பில்லாத பகை விரும்பத்தக்கது அல்ல என்று எந்தச் சூழலிலும் பகை வேண்டவே வேண்டாம் என்கிறது பாடல். நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு (பண்புடைமை 995 பொருள்: ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவர்க்குப் பகைமை உள்வழியும் நல்ல பண்புகள் உள) என்ற குறள் 'விளையாட்டாக'வும் ஒருவரை இகழவேண்டாம் என்கிறது.

'நகையேயும்' என்ற சொல்லுக்குச் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் என்பது பொருள்.

பகை என்று சொல்லப்படுகின்ற குணமற்றதனை விளையாட்டாகவும் யாரும் விரும்பத்தக்கது அல்ல என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பகையை விலக்கும் பகைத்திறம் தெரிதல் வேண்டும்.

பொழிப்பு

பகை என்று சொல்லப்படுகின்ற தீக்குணத்தை யாரும் விளையாட்டாகவும் விரும்பத்தக்கதல்ல.