இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0733



பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு

(அதிகாரம்:நாடு குறள் எண்:733)

பொழிப்பு (மு வரதராசன்): (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும்.

மணக்குடவர் உரை: குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு.
குடிமையாவது கடமையொழிய வருவது.

பரிமேலழகர் உரை: பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது.
(பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: வரும் சுமையெல்லாம் தாங்கி அரசனுக்கு வரியெல்லாம் கொடுப்பதுவே நாடு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு.

பதவுரை: பொறை-சுமை; ஒருங்கு-ஒருசேர; மேல்வரும்கால்-தங்கண் வருங்கால்; தாங்கி-பொறுத்து; இறைவற்கு-அரசுக்கு, அரசர்க்கு, ஆட்சிக்கு; இறை-வரிப்பொருள்; ஒருங்கு-முழுவதும்; நேர்வது - தருவது; நாடு-நாடு.


பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து;
மணக்குடவர்: குடிமையாவது கடமையொழிய வருவது.
பரிப்பெருமாள்: குடிமை செய்தல், பல காலத்திலே பல வரினும் அதனைப் பொறுத்து;
பரிப்பெருமாள் குறிப்புரை: தளர்ச்சியைச் செய்தலின் பொறை ஆயிற்று. குடிமையாவது கடமையொழிய வருமவை.
பரிதி: நாட்டாண்மைக்காரர்க்குச் சேதம் வந்தால்;
காலிங்கர்: கோல்கீழ் வாழும் குடிகள் ஆயினார் யாதானும் ஒரு காரணத்தான் முன் இறுக்கும் ஆறு அன்றிப் பெரும்பொருள் பாரம் தங்கள் மேல் வரவேண்டும் காலத்தும் அதனைப் பொறுத்தும்;
பரிமேலழகர்: பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி;
பரிமேலழகர் குறிப்புரை: பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், [இறுத்ததாக- தங்கியதாக; கோல் கோடியதாக - செங்கோல் (நீதி) தவறியதாக]

'பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ‘பொறை’ என்பதற்குக் குற்றம் என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூற, பரிதி சேதம் என்றார். காலிங்கரும் பரிமேலழகரும் பாரம் எனப் பொருள் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறநாட்டு மக்களின் சுமையெல்லாம் ஒருங்கே தன்மேல் வரும்போது பொறுத்து', 'பல பொறுப்புகள் ஒருமிக்கத் திடீரென்று வந்து விட்டாலும் அந்தப் பொறுப்புகளின் பாரத்தைத் தாங்கி', 'பிறநாட்டினர் விரும்பிவந்து கூடியகாலை அவர்கள் பாரத்தைத் தாங்க வல்லதாய்', 'பிற நாட்டு மக்களையும் தாங்க வேண்டிய பாரம் (பொறுப்பு) முழுதும் தன் மேல் சாருங்கால் அதனை ஏற்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் பாரம் ஒருங்கே தங்கள் மேல் வந்த காலத்தும் அதனைப் பொறுத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு.
பரிப்பெருமாள்: நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: தளர்ச்சியைச் செய்தலின் பொறை ஆயிற்று. இதனானே குடிமக்கள் பண்பு உடையராக வேண்டும் என்பது கூறிற்று.
பரிதி: தளராமல் இறைக்கடமை ஒருக்காலே கொடுப்பது நாடு என்றவாறு.
காலிங்கர்: அரசனைப் பாதுகாத்துப் பின்னும் அரசற்கு ஆறில் ஒன்றாக என்றும் இறுத்தற்கு உரிய இறையினையும் ஒன்றும் குறைபடாமல் ஒருங்கு உடன் கொடுத்து இயல்வது யாது; மற்று அதுவே நாடு ஆவது என்றவாறு.
பரிமேலழகர்: அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. [இறைப்பொருள்-வரிப்பொருள்]
பரிமேலழகர் குறிப்புரை: அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார். [இறையைக் குறைபடுத்தாது - வரியைக் குறைக்காமல்]

'தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசனுக்கு வரிப்பொருள் முழுவதும் தருவது நாடு', 'அவற்றைச் சமாளிக்க வேண்டியதற்காக வழக்கமில்லாத புது வரிகளையும் மற்ற உதவிகளையும் ஒருங்கே அரசனுக்குக் கொடுக்கச் சம்மதிக்கிற குடிமக்களை உடைய நாடே நல்ல நாடு', 'தன் அரசனுக்குரிய வரிப்பணம் முழுவதும் உடம்பட்டுக் கொடுக்க வல்லதே செழித்த நாடாகும்', 'தன் அரசனுக்கு வரிப் பொருள் முழுவதும் உடன்பட்டுக் கொடுப்பதே நாட்டின் சிறப்பாகும் ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரசுக்குரிய வரிப்பொருள் முழுவதும் உடம்பட்டுத் தருவது நாடு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொறையொருங்கு தங்கள் மேல் வந்த காலத்தும் அதனைப் பொறுத்தும் அரசுக்குரிய வரிப்பொருள் முழுவதும் உடம்பட்டுத் தருவது நாடு என்பது பாடலின் பொருள்.
'பொறையொருங்கு' குறிப்பது என்ன?

அரசுக்குரிய இறையை(வரியை)த் தவறாது வழங்குக.

சுமைமேல் சுமை வந்தவிடத்தும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு தம் நாட்டிற்குரிய வரிப்பொருளைக் குறைவின்றித் தரவல்லவர்கள் உள்ளதே நாடாகும்.
ஓர் அரசாட்சியில் வழக்கமான பாதுகாப்பு, கட்டமைப்பு மேம்பாடு போன்ற இன்றியமையாச் செலவினங்களை ஈடுகட்ட முன்பு விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு அதாவது சுமார் 17% அரசுக்கு இறையாகச் செலுத்தினர். இன்றுள்ள வரி அமைப்பில் பலவகையான வரிகளும் வேறுவேறு விகிதங்களில் வசூலிக்கப்படுகின்றன. போர், வறட்சி போன்ற நெருக்கடி காலங்களில் கூடுதலாக அரசு வரிவிதிக்கும். இதுபோன்ற வரி செலுத்துவதால் குடிகள் எதிர்கொள்ளக்கூடிய கூடுதல் சுமைகள் பற்றி இக்குறள் பேசுகிறது.
மக்களுக்காக உண்டானதே அரசு. அரசு உடல்; மக்கள் உயிர். உயிரும் உடலுமாக அரசும் குடிகளும் ஒன்றியிருந்து அமைதல் வேண்டும். அப்படி அமையும் நாட்டில் மக்கள் தம் நாட்டிற்கு எவ்வளவு கூடுதல் பொறுப்புகள் நேர்ந்தாலும் அவற்றைத் தாங்குதற்காக, அரசுக்கு வேண்டும் அனைத்து வகை வரிப்பொருள்களையும் தரத் தயங்க மாட்டார்கள். அவர்கள் அவற்றை உடன்பட்டுக் கொடுப்பர் என்கிறது பாடல். சுமைகளைத் தாங்கி, நேர்மையாய் வரிதருவோரைப் பெற்றுள்ளது நாடாம். நெருக்கடிக்கும் பொருள் கொடுத்து, வரிகளையும் ஒருசேரத் தரக்கூடிய அளவுக்கு வளமிக்க குடிகளைக் கொண்டதே நாடு என்பதும் சொல்லப்பட்டது.
குடிகளது நாட்டுப்பற்றை அவர்கள் நேர்மையாக அரசிறை செலுத்துவது காட்டிவிடும் என்பது இக்குறளின் உட்கருத்து.

குடிமக்கள் உடன்படாமல் வரி வாங்குவதை மற்றோர் இடத்தில் வேறுவகையாகக் குறள் கூறும்: இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின் (கொடுங்கோன்மை 558 பொருள்: முறை செய்யாத அரசின் கொடுங்கோலின் கீழ் வாழ நேர்ந்தால், பொருளின்மையினும் செல்வம்உடைமை துன்பம் தரும். அதாவது கொடுங்கோன்மை ஆட்சியில் அரசாலேயே குடிகளது உடைமைகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உண்டாகிறது.) நல்லரசு இல்லாத நாட்டில் வறுமையைவிடச் செல்வம் துன்பம் தரக்கூடியது என்று அப்பாடல் கூறுகிறது.
முறைகேடான அரசு தகாத வழிகளில் பொருளுடையாரைத் துன்புறுத்திப் பொருளைக் கொள்ளக்கூடாது. குடிமக்களிடத்தில் பொருளை வலிந்து பெறுவதை ஏற்காது, மக்களே அரசுக்குரிய வரியை உடன்பட்டு வழங்கும் பண்புடையராதல் வேண்டும் என்கிறது இக்குறள்.

'பொறையொருங்கு' குறிப்பது என்ன?

'பொறையொருங்கு' என்பதற்குச் சுமைகள் பல ஒருசேர (ஒரே நேரத்தில் வரினும்) என்பது பொருள்.
ஒரு நாட்டுக் குடிகள் என்ன காரணத்திற்காகவும் பெரும் பொருளைப் பல முறை அடுத்தடுத்து அரசுக்குக் கொடுக்க நேரும் காலத்தும் அச்சுமைகளைப் பொறுத்து கொள்வது பற்றிச் சொல்வது இப்பாடல். இது கூறும் சுமைகளாக அறியப்பட்டன:
வேற்று நாட்டுமக்கள் தம் நாட்டின் வளத்தை மிகுவிக்க விரும்பிவந்து குடியேறிய பொழுது அவர்கள் பாரத்தையும் தாங்குவது;
ஏனையநாடுகள் உற்ற கொடிய பஞ்சங் காரணமாகவோ போர் காரணமாகவோ, அவற்றின் மக்கள் தொகுதியையும் கால்நடைகளையும் தாங்குதல்;
பிறநாட்டு அரசின் கொடுமை தாங்கமாட்டாமல் மக்கள் அகதிகளாகத் திரண்டு வருதலால் அந்நாடு சுமந்த பாரமெல்லாம் தன்மேல்வருதல்;
பிறநாட்டாருக்கு பணவகையாலோ பிறவற்றாலோ உதவுவதால் உண்டாகும் சுமை;
போர், பஞ்சம், பிணி, வெள்ளம், புயல் முதலியவற்றால் உண்டாகும் நெருக்கடி நிலைகள் ஆகியன.
சுமைகள் ஏற்பது என்பது நாட்டின் வளங்களையும் குடிமக்களின் செல்வச் செழிப்பையும் பகிர்ந்து கொள்ளவேண்டியதைக் குறிப்பது,

பாரம் ஒருங்கே தங்கள் மேல் வந்த காலத்தும் அதனைப் பொறுத்தும் அரசுக்குரிய வரிப்பொருள் முழுவதும் உடம்பட்டுத் தருவது நாடு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நல்ல குடிமக்கள் தம்நாடு பொருளாதார நிலையில் தடுமாறும்போதெல்லாம் அதைத் தாங்கி நிற்பர்.

பொழிப்பு

வரும் பொருட்சுமையெல்லாம் பொறுத்து அரசுக்குரிய வரியெல்லாம் கொடுப்பதுவே நாடு.