இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0648



விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:648)

பொழிப்பு (மு வரதராசன்): கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

மணக்குடவர் உரை: இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின் உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர்.
இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: தொழில் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் - சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும் - உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும்.
(தொழில் - சாதியொருமை. நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். 'சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்', என்ற வடமொழி பற்றி, 'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: சொல்ல வேண்டியவற்றை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்லும் ஆற்றல் உடையாரைப் பெற்றால் உலகம் விரைந்து தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்.

பதவுரை:
விரைந்து-நேரம் தாழ்க்காமல்; தொழில்-செயல்; கேட்கும்-ஏற்றுக் கொள்ளும்; ஞாலம்-உலகம்; நிரந்து-ஒழுங்குபடுத்திக் கோத்து; இனிது-நன்றாதானாக; சொல்லுதல்-மொழிதல்; வல்லார்-திறமையுடையவர்; பெறின்-நேர்ந்தால்.


விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர்;
பரிப்பெருமாள்: உலகத்தார் தாமே விரைந்து செய்யுந் தொழில் யாது என்று கேட்பர் என்றவாறு.
பரிதி: மண்டலம் சொல்வழி கேட்கும் என்றவாறு.
காலிங்கர்: அரசர் ஏவாமல், தானே விரைந்து தொழில்கேட்டு ஒழுகுவர் இவ்வையகத்து வாழ்வார் என்றவாறு.
பரிமேலழகர்: உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும்.
பரிமேலழகர் குறிப்புரை: தொழில் - சாதியொருமை.

'இவ்வையகத்து வாழ்வார் தானே விரைந்து தொழில்கேட்டு ஒழுகுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அரசர் ஏவாமல்' என்பதைச் சேர்த்து உரைத்தார்,

இன்றைய ஆசிரியர்கள் 'நம் சொற்படி உலகம் விரைந்து நடக்கும்', 'இவ்வுலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்கும்', 'உலகத்தார் அவர்கள் வேலையை உடனே செய்வார்கள்', 'உலகம் அவர்கள் ஏவிய செய்கையைக் கேட்டு அதனை விரைவாக இயற்றும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகத்திலுள்ளோர் விரைந்து தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: சொற்களைச் சேர்த்து இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராகில்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இனிதாகச் சொல்லவேண்டும் என்றது.
பரிதி: கேட்பார் செவியும் மனமும் புலப்பட வார்த்தை சொல்லும் மந்திரிக்கு.
காலிங்கர்: அரசர்க்கு ஆயினும் பிறர்க்கு ஆயினும் அவரவர்க்குப் பொருந்த உணர்ந்து செவிக்கு இனிதாகச் சொல்லுதல் வல்லராகிய அமைச்சரை அரசர் பெறுவாராயின்,
பரிமேலழகர்: சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். 'சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்', என்ற வடமொழி பற்றி, 'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.

'இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். நிரந்த என்பதற்கு மணக்குடவர் உரையில் ஒன்றும் இல்லை; பரிப்பெருமாள் 'சொற்களைச் சேர்த்து' என்றார்; பரிதி 'புலப்பட' என்றும் காலிங்கர் 'அவரவர்க்குப் பொருந்த உணர்ந்து' என்றும் பரிமேலழகர் 'காரியங்களை நிரல்படக் கோத்து' என்றும் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முறையாக இனிது சொல்லுவோமாயின்', 'சொல்லப்படும் செய்திகளை வரிசைப்படி இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால்', 'எப்போதும் (யாருடன் எதற்காகப் பேசினாலும்) இனிமையாகவே பேசக் கூடியவர்கள் இருந்தால்', 'சொல்லப்படுபவைகளை வரிசைப்படுத்தி இனிமையாகச் சொல்லவல்லவர்களைப் பெற்றால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சொல்வதை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சொல்வதை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால் உலகத்திலுள்ளோர் விரைந்து தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்பர் என்பது பாடலின் பொருள்.
'தொழில்கேட்கும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

சொல்வதை ஒழுங்குபடக் கோத்து இனிமையாகச் சொன்னால் அவரது எழுச்சி உரை கேட்ட எல்லாரும் அவர் சொற்படி செய்வர்.

தன் கருத்துக்களை ஒழுங்குபெறத் தொகுத்து வைத்துக் கொண்டு இனிமையாகச் சொல்லும் வல்லமை வாய்ந்தவர் கிடைக்கப் பெற்றால் இவ்வுலகில் உள்ளோர் தாமே அவரிடம் விரைந்து சென்று அவர் சொல்லும் செயல் கேட்டு அவ்வண்ணமே செய்யவும் முன்வருவர்.
இப்பாடலிலுள்ள ஞாலம் என்ற சொல்லுக்கு உலகில் உள்ள மக்கள் எனப் பொருள் கொள்வர். நிரத்தல் என்பதற்கு வரிசைப்படுத்துதல், ஒழுங்காக்கல் என்பது பொருள். நிர என்னும் பகுதியடியாகப் பிறந்த நிரந்து என்ற சொல்லுக்கு நிரல்படக் கோத்து அதாவது வரிசைப்படுத்தி என்பது பொருள். பெரும்பான்மை உரையாசிரியர்கள் 'சொல்வனவற்றை வரிசைப்படுத்தி' எனப் பொருள் கூற மற்றவர்கள் 'செயல்களை நிரல்படக் கோத்து' என்றனர். 'கேட்கும்' என்ற சொல்லுக்கு ஏற்றுக் கொள்ளும் எனவும் பொருள் கூறுவர்.
இக்குறளுக்கு எல்லோருக்கும் பொருந்த உணர்ந்து, முறைப்படி வரிசைப்படுத்தி, இனிமையாகச் சொல்பவர்களைப் பெற்றால் ஞாலம் விரைந்து தொழில் கேட்கும் எனப் பொருள் காண்பர். இதில் யார் பெற்றார் என்ற விளக்கம் இல்லை. இயல் நோக்கி அவ்வாறு சொல்லவல்ல அமைச்சர்களை அரசு பெற்றால் உலகத்தவர் அரசு ஏவலைக் கேட்டு நடப்பர் என்று உரை கூறுவர். 'நாடு பெற்றால்' எனப் பொருள் கொள்ளலாம்.

சொல்ல விரும்புவதை முதலில் ஒழுங்கு படுத்தி அதனை, இனிமை மிகுமாறு சொல்லவேண்டும். சொல்லக் கருதியவற்றை அனைவர்க்கும் புரியும்படி தொடர்ச்சியாக, முன்னே சொல்ல வேண்டியவற்றை முன்னும் பின்னே சொல்ல வேண்டியவற்றைப் பின்னும் வைத்துக் கூறும், வல்லமையுள்ளவர்களை நாடு பெற்றால் உலகமக்கள் அவர் கூறுவனவற்றை விரைவில் ஏற்றுக்கொண்டு அவற்றினைச் செயலாக்கத் தயங்காது. அவர் வழியிலே ஞாலம் செல்லும். மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை அரசியல் சமூக சீர்திருத்தப் பேச்சாளர்கள் பொது இடங்களிலோ, நாடாளும் அவைகளிலோ ஒழுக்குமுறையில் சுவை மிகுந்த தம் பேச்சால் மாற்றங்கள் கொண்டுவர உதவியுள்ளனர் என்பதை வரலாறு சொல்கிறது. நாட்டை ஆளும் ஆற்றலைப் பெற்றோரில் பெரும்பாலோர் சொல்வன்மை மிக்கவர்களாக இருந்திருக்கின்றனர். சீரான மொழி நடையால் உலக மக்களின் எல்லா நிலையிலுள்ளவர்களுக்கும் ஏற்ற வகையில் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் தமது கருத்தைத் தெளிவாகவும் வரிசைப்படுத்தியும் ஆற்றொழுக்குபோல் எடுத்துரைத்து, சுவையான பேச்சால் அவர்கள் உள்ளத்துள் புதிய எழுச்சியை ஏற்படுத்தி, புதிய சிந்தனைக்களுக்கு வித்திட்டவர்கள் பலர்.

'தொழில்கேட்கும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'தொழில்கேட்கும்' என்ற தொடர்க்கு செய்யுந் தொழில் யாது என்று கேட்பர், சொல்வழி கேட்கும், தொழில்கேட்டு ஒழுகுவர், காரியங்களை ஏற்றுக்கொள்ளும், ஏவலைக் கேட்டு நடக்கும், அவரது பேச்சைக்கேட்டு நடக்கும், ஏவலைக் கேட்கும், வேலையை கேட்பார்கள், ஏவல் கேட்டு நடப்பார், ஏவிய செய்கையைக் கேட்டு அதனை இயற்றும், தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்கும், சொல்லும் தொழில் கேட்டு அவ்வண்ணமே நடக்கவும் முன்வருவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கருத்துரைத்தவர் சொற்கள் கேட்டு 'என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்' எனக் கேட்பர் என்றும் அவர் கூறும் செயல்களை ஏற்றுக் கொள்வர் என்றும் இத்தொடர்க்குப் பொருள் கூறினர். இவற்றுள் முதல்வகையினர் சொல்லும் பொருள் ஏற்கத்தகும்.

சொல்வதை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால் உலகத்திலுள்ளோர் விரைந்து தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விழிப்புணர்வுச் சொல்வன்மையுடையவர் சொல்லும் பணிகளை உலகு உடன் செய்ய முனையும்.

பொழிப்பு

சொல்வனவற்றை முறையாக இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், இவ்வுலகம், விரைந்து, தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று அவரிடம் கேட்கும்