இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0576



மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ஓடா தவர்

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:576)

பொழிப்பு (மு வரதராசன்): கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.

மணக்குடவர் உரை: சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர்.
இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.

பரிமேலழகர் உரை: கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.)

சி இலக்குவனார் உரை: பார்வையோடு பொருந்தி (துன்புற்றாரைக் கண்டால்) இரக்கம் காட்டாதவர் மண்ணோடு பொருந்திய மரத்திற்கு ஒப்பாவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணோடு இயைந்து கண்ஓடாதவர், மண்ணோடு இயைந்த மரத்தனையர் .

பதவுரை: மண்ணோடு-மண்ணுடன்; இயைந்த-பொருந்தி நிற்கின்ற; மரத்துஅனையர்-மரம்போன்றவர், மரத்தைஒப்பர்; கண்ணோடு-கண்களோடு, கண்ணுடன்; இயைந்து-பொருந்தி இருந்து; கண்ஓடாதவர்-இரக்கம் காட்டாதவர்.


மண்ணோடு இயைந்த மரத்தனையர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்; [சுதைமண் - சுண்ணாம்புமண்; சுதைமண்ணோடு கூடிச்செய்த மரப்பாவை-சுதை பூசிச் செய்யப்பட்ட மரத்தாலியன்ற பதுமை]
மணக்குடவர் குறிப்புரை: இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.
பரிப்பெருமாள்: சுதைமண்ணோடு கூடிச்செய்த மரப்பாவையோடு ஒப்பர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: கண் காணாமை மரப்பாவைக்கும் ஒக்கும். இது மகன் அல்லன் என்றது.
பரிதி: மண்ணோடு இயைந்த சித்திரத்தில் எழுதிப் பழுத்த மாமரத்துக்கு நிகராவான்; [மண்-ஓவியந்தீட்டும் பலநிறமண்]
காலிங்கர்: வண்ணம் எழுதா வகைத்து உருவாகிய மண் மேல் எழுதிய கற்பகத்தரு முதலிய மரத்தைப் போல்பவர்;
பரிமேலழகர்: இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக. [தொழிலுவமம்-தொழிலடியாகப் பிறந்த உவமம். கண்ணோடாமை தொழிலால் மரக்கண்ணிற்கும் மன்னன் கண்ணிற்கும் ஒப்பு வந்தவாறு; அஃது உரையன்மை-அவ்வாறு கூறுதல் உரையாகாமை; அதனுள்- அக்கண்ணினுள்; ஒருசார் உள்ளீட்டால் - ஒருவகையான இரக்க உணர்வு பற்றி]

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'சுதைமண்ணால் செய்த மரப்பாவையோடு ஒப்பார்' என்றும் 'மண்ணில் வரைந்த மாமரச் சித்திரத்திற்கு நிகர்' என்று பரிதியும் 'மண் மேல் எழுதிய கற்பகத்தரு மரத்தைப் போல்பவர்' என்று காலிங்கரும் 'மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்' என்று பரிமேலழகரும் ஒருவர்க்கொருவர் முற்றிலும் வேறுபட்ட உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மண்ணோடிருந்தும் வளராத மரம் போல்வர்', 'மண்ணோடு பொருந்தியிருந்தும் அதன் பயனைப் பெற்று வளராத மரம் போல்வர்', 'நிலத்தில் (முளைத்த இடத்தைவிட்டு நகர முடியாத) ஜடமாக இருக்கும் மரத்துக்குச் சமானமாவார்கள்', 'மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மண்ணோடு பொருந்திய மரத்தை ஒப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணோடு இயைந்து கண்ஓடா தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர்.
பரிப்பெருமாள்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்த பின்பும் கண்ணோட்டத்தைச் செய்யாதவர்.
பரிதி: கிருபைக்கண் இல்லாத அரசன் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின், செய்ய வாயும் செவ்வரிக் கண்ணும் கரிய குழலும் வெளிய நகையும் பிறவும் ஆகிய வகையமை உறுப்பின் வனப்பு வேற்றுமை தகைபெற உடைய தன்மையரேனும் கண்ணுறுப்புக்கு நுண்ணுறுப்பாகிய கண்ணோட்டம் இல்லாத கடுவினையாளர் என்றவாறு. [கடுவினையாளர் - கொடுந்தொழிலர்]
பரிமேலழகர்: ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; [ஓடுதற்குரிய - கண்ணோட்டம் செய்வதற்குரிய]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. [ஓடாதவர் என்றவிடத்துக் கண்ணாகிய உறுப்பினது (சினை) ஓடாமை என்னும் தொழில் கண்ணோடாதவர் என (முதல்) மேல் நின்றது]

'கண்ணோடு பொருந்திவைத்து கண்ணோட்டத்தைச் செய்யாதவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். கவிதை நடையில் கூறப்பட்ட காலிங்கரது இவ்வுரைப்பகுதி ஆசிரியப்பா நடை விரவ அமைந்துள்ளது உள்ளது என்பர்

இன்றைய ஆசிரியர்கள் 'கண்ணோடிருந்தும் இரக்கம் இல்லாதவர்', 'கண்ணோடு பொருந்தியிருந்தும் உயிர்களிடத்தில் இரக்கம் காட்டாதவர்', 'கண்ணிருந்தும் கண்ணை ஓட்டி ஆராய்ந்தறிய முடியாதவர்கள்', 'இரக்கத்தோடு பார்த்தற்குரிய கண்ணையுடைய ராயிருந்தும் அதற்குரிய கண்ணோட்டம் இல்லாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் மண்ணோடு இயைந்த மரத்தை ஒப்பர் என்பது பாடலின் பொருள்.
'மண்ணோடு இயைந்த மரம்' குறிப்பது என்ன?

இரக்கம் காட்டாத கண் எப்படி மாந்தருடன் பொருந்தியிருக்க இயலும்?

கண்ணைப் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், மண்ணோடு பொருந்தியிருக்கின்ற மரம் போன்றவர்கள் ஆவர்.
ஒருவன் துன்பமுறுகிறவன் அல்லது செய்த குற்றத்திற்கு வருந்துபவன் போன்று உள்ளான். அவனது கண்ணோடு அவனைப் காண்பவனின் கண் கலக்கும்போது துன்புற்றான்மேல் இயல்பாக இரக்கம் உண்டாகவேண்டும். அவ்விதம் இரக்கம் உண்டாகாவிட்டால் அவன் மண்ணோடு பொருந்திய மரம்போன்று உணர்ச்சியற்றவன் என்கிறார் வள்ளுவர்.
கண்ணுக்கு நுண்ணுறுப்பாக அமைவது கண்ணோட்டம். கண்ணோட்டம் என்ற சொல் இரக்கம் காட்டுதல் எனப்பொருள்படும். கண்ஓடாதவர் என்ற தொடர் இரக்கமில்லாதவர் குறித்தது. கண்ணோடுபவர்கள் இரக்கம் காட்டும் அருள் நெஞ்சினராய் இருப்பர். பிறர் துன்பம் கண்டு இரங்கி அவருக்கு உதவ முன்வருவர். கண்ணுடையவரெல்லாம் கண்ணோடவல்லரே யாயினும் இரக்க உணர்வு இல்லாத மனிதரும் உண்டு. எத்தகைய துன்பமான சூழலிலும் மனம் இளகாத கல் நெஞ்சம் படைத்தவர்கள், கண்ணோட்டதிற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் இரக்கம் இல்லாதிருப்பர். வன்நெஞ்சம் கொண்டு இரக்கம் காட்டாத கண் மனிதராகப் பிறந்தவரின் கண்ணாக இருக்க முடியாது. அது மரக் கண்ணாகத்தான் இருக்க வேண்டும்.
மண்ணோடு இயைந்த மரம் என்றது அதன் இயற்கையான நிலையினைப் புலப்படுத்தி நின்றது. மரம் மண்ணில் முளைத்துக் கிளைகளொடு பரவி உயிர்ப்புடன் தோன்றினாலும், பிற உயிர்களின் துன்பங்களைக் கண்டு இரங்கும் இயல்பு அதற்கு இல்லை. அதுபோல கண்ணோட்டம் இல்லாதவன் உருவத்தால் மனிதனைப் போலக் காட்சியளித்து நடமாடினாலும் அவன் மனிதன் அல்லன்; மண்ணிலே பொருந்தி இருந்து இயங்கமுடியாத மரம் போன்றவனாவான்.

'மண்ணோடு இயைந்த மரம்' குறிப்பது என்ன?

'மண்ணோடு இயைந்த மரம்' என்ற பகுதிக்குச் சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவை, மண்ணோடு இயைந்த சித்திரத்தில் எழுதிப் பழுத்த மாமரம், மண் மேல் எழுதிய கற்பகத்தரு முதலிய மரம், மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரம், (கண் இருந்தும் காணாத) மரம், மண்ணில் பொருந்தி நிற்கின்ற பார்வையற்ற கண்களையுடைய (கணுக்களையுடைய) மரம், மண்ணோடு கலந்த மரம், மண்ணோடிருந்தும் வளராத மரம், மண்ணோடு பொருந்தியிருந்தும் அதன் பயனைப் பெற்று வளராத மரம், (முளைத்த இடத்தைவிட்டு நகர முடியாத) ஜடமாக இருக்கும் மரம், மண்ணோடு பொருந்தியிருந்தாலும் (இயக்கமில்லாத) மரம், மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரம், மண்ணோடு பொருந்திய மரம், மண்ணோடு பொருந்தியிருக்கும் மரம், நிலைத்திணையைச் சேர்ந்ததும் மண்ணோடு பொருந்தியதுமான மரம், மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம், மண்ணிலே பிறந்து, மண்ணிலே மடியும் மரம், மண்ணில் ஜடமாக நிற்கும் மரம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மண்ணோடி இயைந்த மரத்தனையர்' என்பதற்குச் சுண்ணம், மரம் முதலியவைகளால் செய்யப்பெற்ற, கண்களையுடைய, மரப்பாவை போன்றவர் என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் பொருள் உரைத்தனர். மரப்பாவைகள் செய்வோர், பாவை உறுதியாக நிற்க. உள்ளீடாக மரங்களைச் சீவி இணைத்து, மேல் சுதை அப்பி பாவை செய்வர். மண் பூசிய மரப்பாவையில் கண் தீட்டப்பட்டிருக்கும். அக்கண்ணில் உணர்ச்சி இருக்க முடியாததுபோல, கண்ணுள்ள மனிதருள் கண்ணின் தன்மையான கண்ணோட்டம் இல்லாவிடில் உணர்ச்சியற்ற மரப்பாவையுடன் ஒப்பர் என்பது இவர்கள் கூறும் கருத்து.
'மண்ணோடு இயைந்த சித்திரத்தில் எழுதிப் பழுத்த மாமரத்துக்கு நிகராவான்' என்று பரிதியும் 'வண்ணம் எழுதா வகைத்து உருவாகிய மண் மேல் எழுதிய கற்பகத்தரு முதலிய மரத்தைப் போல்பவர்' அதாவது சுவரில் எழுதிய கற்பக மரம் போன்றவர் என்று காலிங்கரும் இக்குறட்குப் பொருள் உரைத்தனர்.
பரிமேலழகர் 'கண்ணோடாதவர் மண்ணில் நிலைத்த மரம்போல்வர்' என்றார். இது 'கண்ணோடுதலாகிய இயக்கமின்மையால், இயக்கமே இல்லாத மரத்தை ஒப்பாவர் என்ற பொருள் தருவது. அதாவது கண்ணோடாதவர் இயங்கு நிலையாயினும் நிலத்திணைப் பொருளோடு ஒப்பார் என்பதாம்.
'கண்ணோடிருந்தும் இரக்கம் இல்லாதவர் மண்ணோடிருந்தும் வளராத மரம் போல்வர்' என உரை வரைந்தார் வ சுப மாணிக்கம். இவர் 'உயிரோட்டமில்லாத' மரத்தை ஒப்பர் என்கிறார்.
வேறு சிலர் 'மண்ணோடியைந்த மரம்' என்றதற்கு 'மண்ணோடு கலந்த மரம் போன்றவர்கள்', 'மண்ணோடு பொருந்திய மரம் வளரும்; மண்ணோடு கலந்து ஒன்றாகிப் போன மரம் வளராது' என்றவாறு உரைத்தனர்.

இக்குறளில் 'மண்ணோடியைந்த மரம்' என்ற தொடர் இடர் தருகிறது.
பரிமேலழகர் உரை ‘மண்ணோடியைந்த’ என்னும் அடையை, மண்ணோடு இயைதலின் உயிருடையதாய், வளர்ச்சியாய மரம் என, இயைபுபடுத்துவார். மேலும் இவர் 'மரக்கணுவை மரக்கண்' எனக்கண்டு 'மரக்கண்ணோ மண்ணாள்வார்கண்' என மரக்கண் மன்னன் கண்ணுக்கு ஒப்பாகுமோ என்ற முத்தொள்ளாயிரச் செய்யுளை மேற்கோள் காட்டுவார். ஆனால் 'கணு' எல்லா மரங்களுக்கும் இருப்பதில்லை - வாழை போன்ற மரங்களுக்கு கணு இல்லை. மூங்கில் கரும்பு நாணல் போன்றவற்றின் வரையை 'கணு' என்பர்.
மணக்குடவர் உரை 'சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது' என்கிறது. இவ்வுரையில் ‘மண்’ என்பதற்குச் சுதை என்றும் இயைந்த என்பதற்குச் ’செய்த’ என்றும் ‘மரம்’ என்பதற்கு மரப்பாவை என்பன கருத்து வாங்கி எழுதப்பட்டவை என்பதாலும் 'ஆகுபெயராயன்றிச் சொற்கிடக்கைமுறையான் மரத்தனையர் என்பது மரத்தைஒத்தவர்கள் என்ற பொருளைக் காட்டுமேயன்றி மரத்தானியன்ற பாவையனையர் என்பதை உணர்த்தாது' என்பதாலும் சிலர் இவ்வொப்புமையை ஏற்பதில்லை.
வேறுபட்ட பல உரைகளில் பரிமேலழகர் உரை ஓரளவு பொருந்துவதாக உள்ளது.

தம் கண் முன்னர் எவ்வளவு துன்பச் செயல்கள் நடைபெற்றாலும் அதனை உணராது நிற்கும் மண்ணோடுநிலைத்த மரத்துக்கும் கண்ணோடாதவர்களுக்கும் வேறுபாடு இல்லை. எனவே அவர்கள் மரம் போன்றவர்.

கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் மண்ணோடு பொருந்திய மரத்தை ஒப்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கண்ணோட்டம் இல்லா அசையா மனம் கொண்டோர் மரம்தான்.

பொழிப்பு

கண்ணோடிருந்தும் இரக்கம் இல்லாதவர் மண்ணோடு பொருந்திய மரத்தைப் போல்வர்.