இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0539



இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:0539)

பொழிப்பு: தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.

மணக்குடவர் உரை: அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது.
இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.

பரிமேலழகர் உரை: தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.
(காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: தம்முடைய மகிழ்ச்சியினால் வலிமையுடையராய்க் கருதி மயங்கியபோது முற்காலத்தில் மகிழ்ச்சியின் சோர்வால் கெட்டொழிந்தவர்களை நினைக்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்துறும் போழ்து, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக .


இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக:
பதவுரை: இகழ்ச்சியின்-சோர்வால்; கெட்டாரை-அழிந்தவரை; உள்ளுக-நினைக்க.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க;
பரிப்பெருமாள்: குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க;
பரிதி: கர்வத்தின் மிகுதியினாலே முன்னாளில் கெட்டாரை எண்ணுக;
காலிங்கர்: இகழ்ந்து கெட்டாரை எண்ணிக் கொள்க என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இதற்குப் பாரதத்தில் நூற்றுவரையும், இராமாயணத்து இராவணனையும், பிறரையும் எண்ணிக் கொள்க.
பரிமேலழகர்: முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.

'சோர்வால் கெட்டவர்களை நினைக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் இருந்து கெட்டாரை எண்ணிப்பார்', '(அப்படிப்பட்ட மகிழ்ச்சியினால் தம்முடைய கடமைகளை) மறந்து கெட்டுப் போனவர்களுடைய சரித்திரங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்', 'சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க வேண்டும்', 'இதற்கு முன்பு மகிழ்ச்சி மிகுதியால் கடமைகளை மறந்து கெட்டுப் போனவர்களை நினைத்தல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து:
பதவுரை: தாம்தம்-தாங்கள் தமது; மகிழ்ச்சியின்-களிப்பால்; மைந்து-வலிமை; உறும்-எய்தும்; போழ்து-நேரம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.
பரிப்பெருமாள்: தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலிதாயிருக்கும் பொழுது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனால் சொல்லியது வலியாரைப் பகைவரை வெல்லுங்கால் அவரைச் சோர்வு பார்த்துக் களவினால கொல்வார்; ஆதலால் தன் வலியை நினையாது பகை உண்டாகும் என்று நினைத்துக் கோயிலும், அந்தப்புரமும், நீர் விளையாட்டு ஆடும் இடமும், இளமரக்காவும், வேட்டையாடும் காடும், உண்பனவும், பூசுபவையும் இகழாது சோதித்துக் கொள்க.
பரிதி: தாமும் செல்வம் பெற்றோம் என்னும் கர்வத்தினால் ஏதம் பெறும்போழ்து என்றவாறு.[ஏதம் - துன்பம்]
காலிங்கர்: இவ்வுலகத்து வேந்தருள் முற்காலத்துத் தாம் பிறரை இகழ்ந்து வலி செய்யும்பொழுது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மைந்துறூஉம் போழ்து என்பது வலியினைச் செய்யும் பொழுது என்றது.
பரிமேலழகர்: அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது.
பரிமேலழகர் குறிப்புரை: காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.

'தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி தாமும் செல்வம் பெற்றோம் என்னும் கர்வத்தினால் துன்பம் உற்றபோது எனப் பொருள் கூறினார். 'தாம் பிறரை இகழ்ந்து வலி செய்யும்பொழுது' என்றார் காலிங்கர். 'அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது' என்பது பரிமேலழகர் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'நீ மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது', 'ஒருவன் தான் தன்னுடைய சந்தோஷத்தில் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிற சமயத்தில்', 'தம்முடைய மகிழ்ச்சி மிகுதியினாலே இறுமாப்புக் கொள்ளும் பொழுது', 'தாம் தமக்குள்ள மகிழ்ச்சியில் மிகுந்திருக்கும்போது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம்முடைய மகிழ்ச்சி மிகுதியினாலே செருக்குக் கொள்ளும் பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தமது மகிழ்ச்சியால் செருக்கடைந்திருக்கும்போது, கடமையில் நெகிழ்ந்து கெட்டுப் போனவர்களை நினைவாராக.

தம்முடைய மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க என்பது பாடலின் பொருள்.
'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்ற தொடரின் பொருள் என்ன?

இகழ்ச்சியின் என்ற சொல்லுக்கு இங்கு புறக்கணிப்பால் என்பது பொருள்.
கெட்டாரை என்ற சொல் கேடு உற்றவரை என்ற பொருள் தரும்.
உள்ளுக என்ற சொல்லுக்கு நினைத்துப்பார்க்க என்று பொருள்.
தாம்தம் என்றது அவரவர் தம்முடைய என்று பொருள்படும்.

மகிழ்ச்சியில் ஒருவன் மயங்கி இருக்கும் காலத்தில், கரைகடந்த உவகையில் நிலை இழந்தவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மகிழ்ச்சியின் சோர்வு அளவிலா சினத்தைவிடத் தீது என்று முன்னர் கூறப்பட்டது (குறள் 531). அப்படிச் சோர்வுறும் நேரத்தில், முற்காலத்தில், அலட்சியமாக இருந்து இழப்பை எதிர்கொண்டவர்களின் நிலையை எண்ணிக் கொள்க என்று இங்கு சொல்லப்படுகிறது.
பொதுவாகப் பலரும் தம்முடைய செல்வமிகுதியோ ஆற்றலோ வெற்றியோ தரும் களிப்பில் செருக்குற்று தாம் செய்யவேண்டிய இன்றியமையாக் கடமைகளைக்கூடப் புறக்கணித்து விடுவர். பொதுவாழ்க்கையாகிய அரசியலில் இவ்வாறு கடமையைப் புறக்கணித்தோர் பெருவீழ்ச்சி காண்பது உண்மையாகும். வள்ளுவர், அத்தகையோர், கடமைமறதியினால் அழிந்தவர்களின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்து தம்மை நேர் செய்துகொள்ள வேண்டும் என அறிவுரை பகர்கின்றார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து.
போர்/தேர்தல் வெற்றிக்குப் பின்னரோ தம் நாட்டில் வளம் பெருகியிருக்கும் காலத்தோ நாடாள்வோர் தம் வலி குறித்து மகிழ்ந்து பாதுகாப்பில் போதிய கவனம் எடுத்துககொள்ளாது அலட்சியாமாக இருப்பது இயல்பு. அவ்வாறு மகிழ்ச்சியில் சோர்வு பெற்று இழப்புகளுக்குள்ளுள்ளாகாமல் தம்மை ஒருவர் காத்துக்கொள்ளவேண்டும் எனக் கூற வந்த வள்ளுவர், 'இகழ்ந்து கெட்டவர்கள் பலர் உளர்; தம் வலி குறித்து மகிழ்ந்திருப்போர் அவ்வாறு கெட்டவர்களை எண்ணிப்பார்த்துத் தாமும் அத்தவற்றைச் செய்ய்யாமல் இருக்க' என்றார்.

கடமையில் சோர்வுறாமல் செயலாற்ற வழி ஒன்று கூறப்பட்டது. செல்வக்களிப்பால் தமக்குரிய செயல்களை மறந்து கேடுற்றவர்களை எண்ணிப் பார்க்கின்றவகளுகளுக்குத் தமக்கு வருங்கேட்டிற்கு அஞ்சிக் காத்துக்கொள்வர் என்பது கருத்து. கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (கள்ளுண்ணாமை குறள்எண்:930) (பொருள்: ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ) என்ற பாடலின் நடைபோன்றது இக்குறள்.
'இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது' என்ற மணக்குடவர் குறிப்புரையை விரித்துப் பரிப்பெருமாள் 'இதனால் சொல்லியது வலியாரைப் பகைவரை வெல்லுங்கால் அவரைச் சோர்வு பார்த்துக் களவினால கொல்வார்; ஆதலால் தன் வலியை நினையாது பகை உண்டாகும் என்று நினைத்துக் கோயிலும், அந்தப்புரமும், நீர் விளையாட்டு ஆடும் இடமும், இளமரக்காவும், வேட்டையாடும் காடும், உண்பனவும், பூசுபவையும் இகழாது சோதித்துக் கொள்க' என விளக்குவார்.

'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்ற தொடரின் பொருள் என்ன?

மகிழ்ச்சியின் என்ற சொல் மகிழ்ச்சியில் என்ற பொருளது. மைந்துறும் என்ற தொடர் வலியுறும் என்ற பொருள் தரும். போழ்து என்ற சொல்லுக்குப் பொழுது என்பது பொருள். மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து என்ற தொடர்க்கு மகிழ்ச்சியால் வலியுறும் பொழுது என்று பொருள். இது தாம் வலியுற்றுதலை எண்ணி மகிழ்ந்து செருக்கொள்வதைக் குறிக்கும்.
இப்பகுதிக்கு மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது, மகிழ்ச்சியாலே வலிதாயிருக்கும் பொழுது, கர்வத்தினால் ஏதம் பெறும்போழ்து, இகழ்ந்து வலி செய்யும்பொழுது, மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, வெற்றிக் களிப்பினால் வலுவுற்று மகிழ்ச்சியில் மூழ்கி மயங்கி அதில் தம்மை மறக்கும்பொழுது, மகிழ்ச்சியில் மயங்கி இருக்கும்பொழுது, மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது, மகிழ்ச்சியினால் வலிமையுடையராய்க் கருதி மயங்கியபோது, சந்தோஷத்தில் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிற சமயத்தில், மகிழ்ச்சியால் பெருமிதம் கொண்டு கடமை மறக்கும் போது, மகிழ்ச்சி மிகுதியினாலே இறுமாப்புக் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியில் மிகுந்திருக்கும்போது, மகிழ்ச்சியில் மயங்கி இருக்கும் காலத்தில், மகிழ்ச்சியால் தாம் செருக்குறும் போது, மகிழ்ச்சியால் மயங்கும் போது, மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது என உரையாளர்கள் பொருள் கூறினர்.

'மகிழ்ச்சியின் மைந்துறும்போது இகழ்ச்சியிற் கெட்டாரை எண்ணத்தோன்றுவதில்லை. இதனால்தான் பரிதி 'கர்வத்தால் ஏதம் பெறும்போது கெட்டாரை எண்ணுக' என்றார். துன்பந்தலைக்காட்டத் தொடங்கியபோது கெட்டாரை எண்ணத் தோன்றுவதும், தேறுதல் பெறுவதும், திருந்துவதும் இயல்பாதலால் கூறியதாம். ஆதலால் இவர் காட்டும் காரணம் ஏற்புடையதாம்' எனத் தண்டபாணி தேசிகர் விளக்கம் செய்தார்.

'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' மகிழ்ச்சியால் பெருமிதம் கொண்டிருக்கும் பொழுது என்பது பொருள்.

தம்முடைய மகிழ்ச்சி மிகுதியினாலே செருக்குக் கொள்ளும் பொழுது சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொச்சாவாமை கைவரப்பெற ஓர் வழி கூறப்பட்டது

பொழிப்பு

மகிழ்ச்சியிலே திளைத்து மயங்கி இருக்கும் போது, அங்ஙனம் இருந்து சோர்வால் கெட்டாரை எண்ணிப்பார்க்க.