இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0531



இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:531)

பொழிப்பு (மு வரதராசன்): பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

மணக்குடவர் உரை: மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு.
தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

பரிமேலழகர் உரை: சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
(மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)

தமிழண்ணல் உரை: மிகக் கூடுதலான உவகைக் களிப்பினால் ஏற்படும் கடமைமறதி, அளவுகடந்த வெகுளியைவிடத் தீதாகும்.
அளவு மீறிய கோபம் தன்னையே கொல்லவல்லது. அளவுகடந்த மகிழ்ச்சியில் மிதந்து, கடமைகளை அலட்சியப்படுத்தி மறப்பதும் தனக்கே தீதாய் முடியும். இன்று தேர்தலில் வெற்றிபெற்ற அக்கணமே, அளவு கடந்த மகிழ்ச்சியடைந்து, அனைத்துக் கடமையையும் மறப்போரை நினைவு கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு இறந்த வெகுளியின் தீதே.

பதவுரை: இறந்த-அளவு மீறிய; வெகுளியின்-சினம் கொள்வதினும்; தீதே-கொடிதே, கெடுதியே; சிறந்த-மிகுந்த; உவகை-மகிழ்ச்சி; மகிழ்ச்சியின்-மகிழ்ச்சியினது; சோர்வு-மறவி, கடமையைப் புறக்கணித்தல், அலட்சியப் போக்கு.


இறந்த வெகுளியின் தீதே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்;
பரிப்பெருமாள்: மிக்க வெகுளியுடையனாதலினும் தீது;
பரிதி: அறிவு போன கோபத்திலும் பொல்லாது; [அறிவு போன -அறிவகன்ற]
காலிங்கர்: அரசராய் உள்ளார் தமக்கு அடாதவழிச் சினக்கின்ற மிகுசினம் போல மிகவும் தீது என்பது யாதோ எனின்; [அடாதவழி-பொருந்தாவிடத்து]
பரிமேலழகர்: அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.

'அளவிறந்த வெகுளியினும் தீது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகுந்த சினத்தைக் காட்டிலும் தீது', 'ஒருவனுக்கு அளவு கடந்த சினத்தைக் காட்டிலும் தீமை தரும்', 'அளவிறந்த சினத்தினும் தீயதே', 'அளவிறந்த சினத்தினும் தீதாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அளவுமீறிய சினம் கொள்வதினும் கேடானதே என்பது இப்பகுதியின் பொருள்.

சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு.
மணக்குடவர் குறிப்புரை: தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.
பரிப்பெருமாள்: மிக்க உவகையால் உண்டான மகிழ்ச்சியால் தன்னை மறந்திருத்தல் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காமத்தின் கண்ணும் வெருட்சியின் கண்ணும் கடைப்பிடித்தல் கூறிற்று.
பரிதி: செல்வம் பெற்றோம் என்னும் பிரியத்தினால் உள்ளம் மறப்பது என்றவாறு.
காலிங்கர்: தமது மனச்செருக்கினாலே யாவர்மாட்டும் இன்புற்றிராது மிக்க உவகையைச் சோர விடுக்கின்ற சோர்வு என்றவாறு.
பரிமேலழகர்: மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி. [மிக்க உவகைக் களிப்பு - அளவு கடந்த மகிழ்வாலாய மதி மயக்கம்]
பரிமேலழகர் குறிப்புரை: மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று.

மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் தமது மனச்செருக்கினாலே யாவர்மாட்டும் இன்புற்றிராது மிக்க உவகையைச் சோர விடுக்கின்ற சோர்வு என்றார். இவ்வுரை தெளிவு பயக்கவில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரிய மகிழ்ச்சிக்கிடையே காரியத்தை மறத்தல்', 'மிகுந்த மகிழ்ச்சியின்பத்தால் வரும் மறதி', 'செல்வமிகுதி முதலியவற்றால் ஏற்படும் பெருமிதக்களிப்பால் வரும் மறதி', 'மிகுந்த மகிழ்ச்சிப்பெருக்கால் வரும் மறதி' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பால் உண்டாகும் அலட்சிய மனப்பான்மை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சிறந்த உவகை மகிழ்ச்சியால் வரும் அலட்சிய மனப்பான்மை, அளவுமீறிய சினம் கொள்வதினும் கேடானதே என்பது பாடலின் பொருள்.
'சிறந்த உவகை மகிழ்ச்சி' என்றால் என்ன?

பொங்கும் உவகையில் கடமைகளைத் தளரவிடக்கூடாது.

அளவிறந்த சினத்தால் ஒருவனுக்கு விளையும் தீமையைவிட மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பினால் உண்டாகும் மறதி கேடுண்டாக்கும்.
அளவிறந்த வெகுளி அதாவது அளவுகடந்த சினம் என்பது இறந்த வெகுளி எனப்படும். தன் சினம் பலியாத இடத்தில் செலுத்தும் வெகுளியும் அது பலிக்குமிடத்து காட்டும் மிகுந்த சினமும் இறந்த வெகுளியாம். சினம் தன்னையே கொல்லும் என்றும், சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியென்றும், சினத்தின் கொடுமையை வள்ளுவர் வெகுளாமை அதிகாரத்தில் விளக்குவார். அளவு கடந்த சினம் தீயது; மிகுந்த மகிழ்ச்சியால் வரும் பொச்சாப்பு அதனினும் கேட்டை உண்டாக்க வல்லது என்கிறது இப்பாடல். பொச்சாப்பு இங்கு 'சோர்வு' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இச்சொல் கடமையைப் புறக்கணித்தல், அலட்சியத் தன்மை, மெத்தனமான போக்கு, தன்னை மறந்திருத்தல் போன்றவற்றைச் சுட்டும்.
அளவற்ற மகிழ்ச்சியால் இன்றியமையாக் கடமைகளை மறந்து போவது, மிகத் தீயதாகும். ஒருவருக்குப் பெருஞ்செல்வம் சேரும்போதும், தொடர்ந்து கிடைக்கும் வெற்றிகளாலும் வரும் பெருமிதக்களிப்பாலும் பொச்சாப்பு உண்டாகும். பரிப்பெருமாள் காமத்தான் வரும் பேருவகையும் அளவிறந்த வெகுளியும் பொச்சாப்புண்டாக்கும் என்பார்.
பொச்சாப்பு உடையார் மயக்கநிலையில் ஏனோதானோவெனச் செயலாற்றிக் கடமையைப் பொருட்படுத்தாமல் இருப்பர். அளவுகடந்த இன்பத்தால் உண்டாகும் மகிழ்ச்சியில் தன்னை மறந்து செயலற்றுக் கிடப்பர். உவகைக் களிப்பால் விளையும் மறதி அறிவை மயக்கி ஊக்கத்தையும் கெடுக்கும். அதன் விளைவு எதையும் பொருட்படுத்தாத தன்மை. இவை எல்லாம் சேர்ந்து தீமை பல விளவிக்கும். பொச்சாப்பு உடையார்க்குத் தற்காப்பு குன்றும்; பகைவரும் வளர்வர்.
பொச்சாப்பு இல்லார் வெற்றிக் களிப்பில் தடுமாற மாட்டார். சிறு மகிழ்ச்சி காட்டி தான் பெற்ற வெற்றியை மறந்து அடுத்த செயலில் ஆர்வம் காட்டத் தொடங்குவார். அவர் எப்போதும் விழிப்பு உணர்வுடன் இருப்பார்.
மகிழ்ச்சிக் களிப்பில் உண்டாகும் மறவியில், செய்யவேண்டிய முக்கியமான கடமைகளை மறந்துவிடக்கூடாது என்பது அறிவுரை.

'சிறந்த உவகை மகிழ்ச்சி' என்றால் என்ன?

'சிறந்த உவகை மகிழ்ச்சி' என்றதற்கு மிக்க உவகைக்களிப்பு, மிக்க உவகையால் உண்டான மகிழ்ச்சி, மிக்க உவகை, மிகக் கூடுதலான உவகைக் களிப்பு, பெரிய மகிழ்ச்சி, மிகுந்த மகிழ்ச்சி, மிக நல்ல இன்பங்களின் களிப்பு, அளவுகடந்த இன்பத்தால் உண்டாகும் மகிழ்ச்சி, பெருமிதக்களிப்பு, மிகுந்த மகிழ்ச்சிப்பெருக்கு, பொங்கும் உவகை, மிகுந்த உவகைக் களிப்பு என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

சிறந்தவுவகை பெருஞ்செல்வம், இடைவிடா இன்ப நுகர்ச்சி, பெரும்புகழ் முதலியவற்றால் நேர்வது என்றும் சிறந்த உவகை மகிழ்ச்சி என்பது 'அளவு கடந்த மகிழ்வாலாய மதி மயக்கம்' என்றும் விளக்கினர். மு கோவிந்தசாமி 'உவகை என்பது உள்ள நிறைவையும், மகிழ்ச்சி என்பது உடலின் பூரிப்பால் துள்ளிக் குதிப்பதையும் குறிக்கும்' என்பார். நாமக்கல் இராமலிங்கம் இத்தொடர்க்கு 'சிறப்பான வெகு நியாயமான வழியில் அனுபவிக்கிற இன்பங்களால் வரும் மகிழ்ச்சி' எனப்பொருள் கூறி குற்றமற்ற இன்ப மகிழ்ச்சியிலும் தர்மங்களை மறந்துவிடக் கூடாது என்பது கருத்து எனவும் கூறினார்.
பரிமேலழகர் மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது என்று விளக்கம் தந்தார். அவரே மகிழ்ச்சி என்பதற்கு உணர்வு அழிந்த மயக்கம் (களிப்பு-உணர்வு அழியாதது) என்று குறள் 1281-க்கான உரையில் கூறியுள்ளார்.

'சிறந்த உவகை மகிழ்ச்சி' என்பது இன்பத்தின் மிகுதிப்பாடு என்ற பொருள் தரும்.

மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பால் வரும் அலட்சிய மனப்பான்மை, அளவுமீறிய சினம் கொள்வதினும் கேடானதே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெருமகிழ்ச்சியால் பொச்சாவாமை நீங்காமல் காக்கப்படவேண்டும்.

பொழிப்பு

மிகுந்த மகிழ்ச்சிக்கிடையே வரும் கடமைத் தளர்வு ஒருவனுக்கு அளவு கடந்த சினத்தைக் காட்டிலும் கேடு உண்டாக்கும்.