இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0508



தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:508)

பொழிப்பு (மு வரதராசன்): மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.
இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.

பரிமேலழகர் உரை: பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
(இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.)

வ சுப மாணிக்கம் உரை: ஆராயாது எவனோ ஒருவனை நம்பினால் வழிவழித் தீராத துன்பம் வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்

பதவுரை: தேரான்-ஆராயதவனாக; பிறனை-அயலானை, தொடர்பில்லாதவனை, முன்பின் அறியாதவனை; தெளிந்தான்-தேர்ந்தெடுத்தவன், நம்பியவன்; வழிமுறை-தலைமுறை, மரபு, சந்ததி, பரம்பரை; தீரா-நீங்காத; இடும்பை-துன்பம்; தரும்-கொடுக்கும்.


தேரான் பிறனைத் தெளிந்தான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு;
பரிப்பெருமாள்: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு;
பரிதி: ஒருவனிடம் பொல்லாக் குணத்தை விசாரியாமல் நம்புவானாகில்;
காலிங்கர்: தான் பிறன் ஒருவனோடு மருவுதற்கு முன்னமே அவனது குற்றமும் குணமும் தெரிந்து ஆராயாது வறிதே பிறன் ஒருவனை நமக்கு இவன் துணை என்று நம்புதலைச் செய்தால்;
பரிமேலழகர்: தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு;
பரிமேலழகர் குறிப்புரை: இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல்;

'பிறனை ஆராயாதே தெளிந்தவனுக்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'வழிமுறையென்று தெளிந்தவன்' என்றும் பரிதி 'பொல்லாக் குணத்தை ஆராயாமல் நம்பியவன்' என்றும் காலிங்கர் 'வறிதே நமக்கு இவன் துணை நம்புதலைச் செய்தவன்' என்றும் பரிமேலழகர் 'தன் குடியோடு தொடர்ந்த மரபு அல்லாதானைத் தெளிந்தவன்' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னோடு தொடர்பில்லாதவனை ஆராயாமல் நம்பியவனுக்கு', 'ஆலோசிக்காமல் இன்னொருவரை நம்பிவிடுகிறவனுடைய', 'தம்மோடு எவ்வகைத் தொடர்பும் இல்லாத அயலான் ஒருவனை ஆராயாது நம்புகின்றவனுடைய', 'ஆராயாதவனாய்த் தம்மோடு தொடர்பில்லாத பிறனைத் தெளிந்தவனுடைய' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

வழிமுறை தீரா இடும்பை தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.
பரிப்பெருமாள்: அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: வழிமுறை என்றது தன் வழியின் உள்ளார்க்கு அவன் வழியின் உள்ளார், அமாத்தியராய்ப் போந்த முறைமை. குலத்தின் உள்ளார்க்கு அமாத்தியர் ஆயினார் வழியின் உள்ளாரைத் தேறலாம் என்பது வியாதன் மதம். அது குற்றம் என்று இது கூறப்பட்டது.
பரிதி: அதனாலே அவன் தலைமுறைதோறும் துன்பம் வரும் என்றவாறு.
காலிங்கர்: அது மற்று அதன்பின் முறையே வேறு ஒன்றானும் தீராத மரபுக் கேட்டைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.

'அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அந்நம்பிக்கை அவனுக்கு மட்டுமன்றி அவன்பின் வரும் வழிமுறையினர்க்கும் (சந்ததிக்கும்) நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்', 'வாழ்க்கை நெடுகத் தீராத துன்பமுள்ளதாகிவிடும்', 'வழி முறையிலும் நீங்காத துன்பம் ஏற்படும்', 'வழி முறைகள், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வரும் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தால் அது வழிமுறைக்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'வழிமுறை' குறிப்பது என்ன?

ஆராயாமல் தேர்வு செய்யப்பட்டவன் வரும் தலைமுறையினர்க்கும் தீராத ஊறு விளைவித்துவிடுவான்.

புதிதாக வந்த அயலான் ஒருவனைச் சிறுதும் ஆராய்ந்து பாராது துணையாகத் தெளிந்தவனுக்கு அந்நம்பிக்கை அவன் வழிமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
பிறனை ஆராயாது பெரும்பொறுப்புகளைக் கொடுக்கவேண்டாம் என்கிறது பாடல். இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள பிறன் யார்? அவ்வளவாக அறிமுகம் அற்ற ஒருவன் அல்லது தம் மக்களோடு தொடர்ந்த மரபு இல்லாதவன் அதாவது தன் நாட்டில் வாழும் குடிகளுடன் மாறுபட்ட முறைமை கொண்டவன் பிறன் எனக் குறிக்கப் பெறுகிறான். ஏன் அப்படிப்பட்ட ஒருவன் தேறுதல் செய்யப்படுகிறான்? வேறு யாரும் கிடைக்கவில்லை என்பதலோ, ஏதோ சொல்லப்படாத பயன் அல்லது கட்டாயம் கருதியோ, யாருடைய பரிந்துரையின் பேரிலோ, அல்லது வறிதே உள்ளுணர்வாலோ அந்தப் பிறன் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். யாரோ ஒருவனை தகுதி, நடத்தை என்று எதையுமே ஆராயமல் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் பின்வரும் தலைமுறைக்கும் தொடரும்படி பெருங்கேட்டை உண்டாக்கிவிடுவான் என்கிறது பாடல். கேடு செய்கிறான் என அறிந்தவுடன் அவனை நீக்கிவிடலாமே என்றால் அவன் நீக்கத்தான்படுவான். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டதாகிவிடும் என்ற அளவு தீங்குகள் முறைமைக்குள் ஊடுறுவி அவற்றை உடனடியாக நேர்செய்ய இயலாததாகிவிடும் என்பது குறிப்பு,
குடியாட்சி அரசியலிலும் தவறான தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அவன் நிர்வாகக் கட்டமைப்பு, உள்ளமைப்பு போன்றவற்றைச் சிதைத்தல், பொருளாதாரத்தைச் சீர்குலைவு செய்தல், பண்பாட்டுத் தளங்களில் தேவையின்றிக் கால்வைத்து அவற்றின் நிலைத்தன்மையை அழித்தல் - இவை போன்ற பல தீமைகளை வருங்கால சமுதாயத்திற்கும் சேர்த்து விதைத்துவிட்டுச் செல்வான்.

புதியதாக தேர்வுக்காக வந்தவன் யாராயிருந்தாலும் அவனது குணம் குற்றம் அறம் பொருளின்ப ஆசைகள் முதலியவற்றை ஆய்ந்து தெளிதல் வேண்டும்; அப்படியில்லாமல் ஒருவகையானும் அறியப்படாதவனை நம்பினால் அதன் வாயிலாக வழிவழிக்கும் கெடுதி தொடர்ந்து வரும் என்பது செய்தி.

'வழிமுறை' குறிப்பது என்ன?

'வழிமுறை' என்ற சொல்லுக்குத் தலைமுறை, மரபு, வழிமுறையில் தோன்றியவர், வம்சபரம்பரை, தன்குலத்திற் பிறந்தார், வழிவரும் பரம்பரை, வழியினர், வழிவழி, வழிமுறையினர், வாழ்க்கை நெடுக, மரபினர், கால்வழியினர், பின்வரும் தலைவர், படிப்படியாகவும், ஒவ்வொரு செயலும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வழிமுறை என்ற சொல் தன் வழியில் உளார்க்கு அதாவது தன்பின்னோர்க்கு என்ற பொருள் தருவது. இச்சொல் வழித்தோன்றல்களைக் குறிப்பது, இது கால்வழி, மரபுவழி, கொடிவழி, வழிவழி, குலவழி எனவும் அறியப்படும். வாழையடி வாழையென வருவது என்று இது வழக்கில் சொல்லப்படுகிறது. வம்சாவழி என்றும் சந்ததி என்றும் கூறப்படுவதும் இதுவே.
'வழிமுறை' என்றதற்குப் 'பின்வரும் தலைமுறை' என்ற பொருளே இங்குப் பொருத்தமானது.
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கான குறள் இது. தவறானவன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவனது ஆளுமைக் காலத்தில் மட்டுமல்ல பின்வரும் சமுதாயத்திற்கும் தீராத கேடுகள் விளைவிப்பான் என்பதைச் சொல்வது. காட்டாகக் கள்ளுண்பது தவறானது என்று கருதப்படும் சமூகத்தில் அரசே கள் தொழில் தொடங்கி நேரடியாக மக்களுக்கு விற்பது அன்றைய மக்களுக்கு மட்டுமல்ல எதிர்காலத் தலைமுறைக்கும் தீங்கு தருவதாகும்.

'வழிமுறை' தொடர்பான உரையாசிரியர் கருத்துக்கள்:
பரிப்பெருமாளின் 'மரபு வழியரசருக்கு மரபு வழி அமைச்சர் இருப்பது வழக்கம். அவன் அமைச்சன் ஆகக் கூடாது. தேர்ந்தே கொள்ளுதல் வேண்டும்' என்ற நல்லுரை.
மற்ற பழைய உரையாசிரியர்கள்:
'யாரையும் தெளிந்தே தெளிக என்பாராயினும் தேர்ந்தெடுக்கப் பெறுபவனுக்கு தெளிந்தானோடு தொடர்ந்தும் மரபுரிமையும் வேண்டும்' என்றும் 'தன்னோடு தொடர்பற்றவனாயின் தேர்ந்து தெளிய வேண்டும்; தன் குலத்தானென்றால் ஆராய வேண்டுவதில்லை' என்றும் 'பிறனைத் தேரான் வழிமுறை தெளிந்தான் எனக் கூட்டிப் பிறனைத் தேராமல் தம் மரபில் வந்தவனையே தெளிந்தவன்' என்றும் பல்வேறு வகையாக உரைகள் செய்தனர்.
இன்றைய உரையாசிரியர்கள்:
வழிமுறை என்றதற்கு 'வாழ்க்கையின் வழிமுறை (வாழ்க்கை நடைமுறை)' என்றும் '(தெளிந்தவனுடைய) வழி முறைகள்' என்றும் 'படிப்படியாகவும், ஒவ்வொரு செயலும் என்று வழிமுறை வந்தடையும்' எனக்கூட்டிப் 'படிப்படியாகத் துன்பம் வரும்' என்றும் 'ஆராய்ந்து செயல்களாற்றாத மற்றவன் ஒருவனை தன்பணிக்கு அமர்த்த முடிவுசெய்தவனின் செயலாற்றும் வழிமுறைகள்' என்றும் உரைப்பொருளாகக் கூறினர்.

வழிமுறை என்பதற்குத் தொடர்ந்துவரும் தலைமுறை என்பது பொருள்.

ஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தால் அது வரும் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறிமுகம் அற்றவனது தேறல் தெரிந்து தெளிதல் ஆகாது.

பொழிப்பு

ஆராயாமல் தொடர்பில்லாதவனை நம்பினால் பின்வரும் தலைமுறைக்கும் நீங்காத துன்பம் வரும்