இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0478



ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:478)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை

மணக்குடவர் உரை: பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின்.
இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின்.
('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: வருவாய் அளவாக இருப்பினும் கேடில்லை; செலவு மட்டும் விரிதல் கூடாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை.போகு ஆறு அகலாக் கடை

பதவுரை: ஆகு ஆறு-ஆகும் வழி, (பொருள்) வருகின்ற வழி, வருவாய்; அளவு-வரையறை; இட்டிது-சிறியது; ஆயினும்-ஆனாலும்; கேடு- அழிவு; இல்லை-இல்லை; போகு-செலவழியும்; ஆறு-நெறி; அகலாக்கடை-பெருகாத இடத்து, (வரவுக்கு மேல்) விரிவுபடாமல் இருந்தால்.


ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்;
பரிப்பெருமாள்: பொருள் வரும்வழி சிறிதாயினும் கேடில்லையாம்;
பரிதி: ஆதாய வகை அற்பமாயினும் நிருவாகம் பண்ணிக்கொள்ளலாம்; [ஆதாய வகை அற்பமாயினும்-ஊதியவகை குறைவாயினும்]
காலிங்கர்: பொருள் தமக்கு உளதாகின்ற வழியினது அளவு பெரிதும் சிறிதேயாயினும் அதனான் வருவதொரு கேடில்லை;
பரிமேலழகர்: அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்; [அதனால் - வருவாயினும்]
பரிமேலழகர் குறிப்புரை: 'இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன.

'பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் வரும் வழி (வருவாய்) அளவு சிறுதானாலும் ஒருவனுக்குக் கெடுதி வாராது', 'ஒருவனுக்கு வரும்படி குறைவாக இருந்தாலும் பாதகமில்லை', 'பொருள் வரும் வழி சிறிதாயிருந்தாலும் அதனால் கெடுதி இல்லை', 'பொருள் உண்டாகும் வழி (வருவாய்) குறைந்த அளவினையுடையதாயிருப்பினும் கெடுதலில்லை', என்ற பொருளில் உரை தந்தனர்.

பொருள் வரும் வழி அளவு சிறிதாயினும் கெடுதி இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

போகாறு அகலாக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது போம்வழி போகாதாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அது போம்வழி பெருகாதாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முதலுக்குச் செலவு குறைய வேண்டும் என்றது.
பரிதி: செலவு மிகுதியில்லாதபோது என்றவாறு.
காலிங்கர்: என்னோ எனின் மற்று அப்பொருள்தான் வினியோகப்படுதலும் பிறர்க்கு உபகரித்தலும் ஆகப்போகிற வழியான் அதனை விட்டு அகலாத இடத்துத் தனக்கு வலியாகியது சிறிதே பொருளாயினும் அதுவே அமையும் என்றவாறு. [உபகரித்தல் - உதவுதல்]
பரிமேலழகர்: போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.

'போகின்ற வழி அளவு அதனின் பெருகாதாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் போகும் வழி (செலவு) பெருகாவிட்டால்', 'செலவுமட்டும் வரவுக்கு அதிகப்படாமல் இருந்தால் கெடுதி வராது', 'அதுபோகிற வழி அளவு விரிந்து பெரிதாகாவிட்டால்', 'பொருளினைச் செலவு செய்கின்ற விதம் வருவாயைக் கடந்து செல்லாமல் இருப்பின்' என்றபடி பொருள் உரைத்தனர்.

செலவு அளவு விரிந்து பெரிதாகாவிட்டால்' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள் வரும் வழி அளவு இட்டிது ஆயினும் கெடுதி இல்லை, செலவு அளவு அகலா இடத்து என்பது பாடலின் பொருள்.
'இட்டிது' 'அகலா' இவை குறிப்பன என்ன?

வருவாய்க்கு அடக்கமாகச் செலவு செய்க.

தனக்கு வரும் ஊதியம் குறைவானாலும் கேடு நேராது, செலவு மிகுந்து ஊதியத்தைவிட பெரிதாகாமல் இருந்தால்.
செலவை வரவுக்குள் கொண்டுவந்துவிட்டால் வருவாய் சிறிதானாலும் கேடு உண்டாகாது. ஒருவர்க்கு உண்டான வருவாயை விட செலவு குறைவாக இருக்கும் வரை கேடில்லை. சென்ற குறள் முதல்பொருள் காக்கப்படவேண்டும் என்றது. இங்கு வருமானத்திற்கு மேல் செலவில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
அரசு ஆனாலும், நிறுவனங்கள் ஆனாலும், குடும்பம் ஆனாலும் பொருள்வலியை நிலைநிறுத்த, நிதித் திட்டங்கள், செலவுக் கட்டுப்பாடுகள், கையிருப்புப் பணம் இம்மூன்றையும் நாளும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் இவை பொருளாதார நிலையைத் அசைக்கக் கூடியனவாதலால் கட்டுக்குள் இல்லை என்றால் கேடு நேரலாம். இக்குறள் இக்கருத்தை வலியுறுத்துகிறது.

திட்டமிட்டு வாழும் வாழ்க்கை அறிவுறுத்தப்படுகிறது. திட்டமிடாது அன்றன்றைக்கு வாழ்க்கை அன்றன்று என்று வாழ்வது பல்வேறு முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் சீரான நிதிநிலை அமைய வரவிற்கேற்ற செலவு என்ற முறையில் வரவு-செலவு திட்டம் அமைதல் வேண்டும். வருமானத்திற்குத் தகுந்தவாறு செலவுகள் செய்தல் வேண்டும். செலவினங்களில் அகலக்கால் கூடாது. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதுபோல் வருமானம் மிகையாக உள்ளோர் செலவு செய்வதைப் பார்த்து, அவரைப் போன்று சிலர் தாமும் செலவு செய்து வாழ முற்படுவது துன்பமே தரும். வருமானத்திற்குத் தக்கவாறு செலவுகளை முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அளவாகவும், தேவைக்கேற்ற வண்ணமும் செலவிட வேண்டும்; எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவ்வருமானத்திலிருந்து சிறிது சேமிப்பதும் பின்னர் பெருநலம் பயக்கும். வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை மேல் இடர் வந்துழி அது நீக்குதற் பொருட்டு வைப்பாக்க வேண்டும் என்று முன்னோர் அறிவுரை கூறியுள்ளனர்.
தவிர்க்கமுடியாது செலவழித்தேயாக வேண்டி வரும்போது வரவும் செலவும் தன்னொத்து இருந்துவிட்டால் கேடில்லை எனச் சொல்லப்பட்டுள்ளதால், வரவு முழுவதையும் எஞ்சாது துய்த்து இன்ப வாழ்வு நடத்துதலை ஆசிரியர் உடன்படுகிறார் எனத்தெரிகிறது. அப்பொழுதுகூட வரவுக்கு உட்பட்டு செலவு இருத்தலே நல்லது என்று வரையறுத்தும் கூறப்பட்டது.
ஒருவரது வருவாயைப் பெருக்குவது உடனடியாக முடியாததாக இருக்கலாம். குறித்த நிலையான வருமானம் உள்ளவரது ஊதியம் கூட்டிப் பெறுவது என்பது அவர் கையில் இல்லை. ஆனால் எவ்வளவு செலவு செய்யவேண்டும் என்பது அவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. வருமானத்திற்கு ஏற்றவாறு அவர் செலவினங்களைக் கூட்டியோ குறைத்தோ மாற்றிக்கொண்டால கெடுதி நேராமல் தடுக்கலாம்.
நிதி நிலையங்கள் எளிய வழியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் எனச் சொல்லி ஒருவர்மேல் அதை வற்புறுத்தித் திணிக்கும் அளவுக்குச் செயல்படுகின்றனர் இன்று. கடன் பெறுவது வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யும் பேதைமைக்குத்தான் வழிகாட்டும். எளிதில் பெறப்பட்டாலும் நாம்தான் அக்கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும். கடன் மேலாண்மையை அறிந்திராவிடில் கடன் என்னும் வலையில் சிக்குண்டு செலவுமேல் செலவு செய்து அழிவர்.
வரவுக்கு மிஞ்சிச் செலவு இருக்கக்கூடாது என்பது செய்தி.

'இட்டிது' 'அகலா' இவை குறிப்பன என்ன?

இட்டிது என்ற சொல்லுக்கு குறுகலானது என்றும் சிறுது என்றும் பொருள் கூறினர். அளவு இட்டிது என்பது சிறிய அளவு அல்லது குறுகலான அளவு என்று பொருள்படும். அகலா என்ற சொல்லுக்கு பெருகா அல்லது அகலமாகா என்பது பொருள். இப்பாடலில் பொருள்வலி சொல்லப்படுவதால் இட்டிது அகலாது என்பன பொருள் மேல் நின்றன. அதாவது பொருள் வரும் வழியின் அளவு சிறிதாக இருந்தாலும் அப்பொருள் போகும் வழி விரியாமல் இருக்கும்வரை கெடுதி இல்லை என்ற பொருள்படும்படி அவை ஆளப்பட்டன.
உரையாளர்கள் இக்கருத்தை ஓடுநீர் கொண்டு விளக்குவர். ஒரு நீர்த்தேக்கத்திற்கு நீர் வரும் வழிகளான (வாய்க்கால், குழாய் போன்றவை) சிறியனவாக இருந்தாலும் நீர் வெளியேறும் வழிகளான (வடிகால், குழாய் போன்றன) அதைவிட அகலமாக இல்லாமல் இருந்தால், நீர் தேக்கமுற்றுத் தேவையான காலத்துப் பயன்படுத்தலாம். நீர்வரவு குறைந்துபோனால் வெளியேறும் வழியைச் சுருக்கிக் கொண்டு நீர் தேக்கலாம்.
வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும். ஒருவரது வருவாய் குறையும் நிலை உண்டாகிறது; குறைந்தால் என்ன! செலவைச் சுருக்கிக்கொள் என்கிறது குறள்.

வருவாய் வரும் வழியின் அளவு சிறிதாயினும் கெடுதி இல்லை, செலவாகும் வழியின் அளவு விரிந்து பெரிதாகாவிட்டால் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வருவாய்க் கோட்டினைத் தாண்டிச் செலவு செல்லாதிருக்கும் பொருள் வலிஅறிதல்.

பொழிப்பு

பொருள் வரும் வழி அளவு சிறிதானாலும் ஒருவனுக்குக் கெடுதி இல்லை,. பொருள் போகும் வழி பெரிதாகாவிட்டால்