இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0474



அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:474)

பொழிப்பு (மு வரதராசன்): மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

மணக்குடவர் உரை: அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன்.
இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.

பரிமேலழகர் உரை: ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது, அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது, தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரைந்து கெடும் - விரையக் கெடும்.
(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தன் வலிமைக்கு ஏற்பப் பொருந்தி நடவாதான் தன் வலிமையின் அளவினை அறியாதவனாய்த் தன்னைப் பற்றி மிகுதியாக நினைத்துப் பாராட்டிக் கொண்டு விரைவில் அழிவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.

பதவுரை: அமைந்துஆங்கு-பொருந்தியபடி, இயல்பிலே அமைந்துள்ளபடி; ஒழுகான்-நடந்து கொள்ளாதவனாய்; அளவு-எல்லை, அளவை; அறியான்-அறியாதவன்; தன்னை-தன்னை; வியந்தான்-நன்கு மதித்துக் கொண்டவன், தன்னைப்பற்றி பெரிதும் உயர்வாக எண்ணி மகிழ்பவன்; விரைந்து-விரைவில்; கெடும்-அழியும்.


அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே;
பரிப்பெருமாள்: அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே;
பரிதி: மந்திரிகள் புத்திக்குள்ளே அடங்கி ஒழுங்காத அரசன் தன் சத்துவமறியாமல்;
காலிங்கர்: யாதானும் ஒரு பொருள் முற்றுப்பெற்றது யாங்கு; மற்று ஆங்கு அதற்கு ஏறக் கடவானுமாய் மற்றுத் தன்விதி வரம்பினை உணராதானுமாய்;
பரிமேலழகர்: அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது தன் வலியளவு அறிவதும் செய்யாது;

'அமைந்தாங்கு ஒழுகான்' என்றதற்கு 'அமைதியாய் ஒழுகாமல்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற பரிதி 'மந்திரிகள் கருத்தின்படி அடங்கி நடக்காத அரசன்' என்றுரைக்கிறார். காலிங்கர் 'ஒருசெயல் முடிவுற நடந்து விடுமானால், அந்த அளவில் எல்லை கடவாமல் அடங்கி யிருப்பவனுமாய்' என்று உரை வரைந்தார். பரிமேலழகர் 'அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது' என்றார். 'அளவறியான்' என்றதற்குத் 'தன் வலியை அறியாதவனாய்' என்று அனைத்துத் தொல்லாசிரியர்களும் ஒத்த பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அமைந்தபடி நடவாதவன் அளவறியாதவன்', 'அடக்கத்தோடு நடந்து கொள்ளானாய்த் தன் ஆற்றல் அளவையும் அறியானாய்', 'தனக்கு அமைந்துள்ள சக்திகளுக்குத் தகுந்த மட்டில் காரியத்தின் பலத்தை அளந்து கொள்ளாமல்', 'ஏனையாரோடு ஒத்து நடவாது தன்னுடைய வலிமையின் எல்லையையும் அறியாது', என்ற பொருளில் உரை தந்தனர்.

தன் வலிமைக்கேற்ப அமைந்து நடவாதானாய் தன் ஆற்றலின் அளவையும் அறியாதவனாய் என்பது இப்பகுதியின் பொருள்.

தன்னை வியந்தான் விரைந்து கெடும்.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.
பரிப்பெருமாள்: தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.
பரிதி: தன்னை வியந்து கொள்வானாகில் சடுதியிலே கெடுவன் என்றவாறு.
காலிங்கர்: வறிதே தன்னைப் பெரிதும் மேலாகத் தன்னை மதிக்கின்றான் யாவன் மற்று அம்மதிப்புக்குத் தக்காங்கு நடக்க வேண்டினதால் விரைந்து கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரையக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

'தன்னை மதிக்கின்றான் விரைந்து கெடுவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னைப் புகழ்ந்தவன் சடுதியிற் கெடுவான்', 'தன்னை மதித்து வியந்து கொள்பவன் விரைந்து கெடுவான்', 'தன்னுடைய பலத்தை அதிகாமாக மதிப்பிட்டுக் கொண்டு தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுகிறவன் விரைவில் கெட்டுப்போவான்', 'தன்னைப் பெரிதும் புகழ்ந்தவன் விரைவாகக் கெட்டுப் போவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

தன்னைப் பெரிதும் மேலாக மதித்தவன் விரைவில் கெட்டுப்போவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அமைந்தாங்கு ஒழுகான் தன் ஆற்றலின் அளவையும் அறியாதவனாய் தன்னைப் பெரிதும் மேலாக மதித்தவன் விரைவில் கெட்டுப்போவான் என்பது பாடலின் பொருள்.
'அமைந்தாங்கு ஒழுகான்' யார்?

தன்னிலும் மேல் யாரும் இல்லை எனத் தன்னை மதிப்பீடு செய்து கொண்டவன் கெடுவான்.

தமக்கு இயல்பாக அமைந்துள்ள வலிமைக்கு பொருந்தும்படி நடவாமல், தன் ஆற்றலின் அளவை உள்ளபடி உணர்ந்துகொள்ளாமால். தன்னைத்தானே மிகைபட எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
அளவறியான் - இது தன் ஆற்றலை அளந்தறிந்து அதற்குத்தக பிறருடன் அளவளாவத் தெரியாதவனைச் சொல்வது. ஒருவருக்குத் தன் வலிமையின் அளவை ஒப்பிடத் தெரிந்திருக்க வேண்டும். அளவறியான் என்ற தொடர் வலியறியாமையைக் கூறுகிறது.
தன்னை வியந்தான் - இது தன்னைப் பற்றி மிகப் பெரிதாக எண்ணி- எல்லாரினும் தன்னைச் சிறந்தவனாக மதித்து- தன் முதுகைத் தானே தட்டிப் பாராட்டிக் கொள்பவர் குறித்தது, இவர் தன் இயல்பை அறியாமல், ஏற்றமாகத் தன்னை நினைத்துக்கொண்டு மற்றவர்களை மதிக்காமல் செருக்குடன் திரிபவர்.
அமைந்தாங்கு ஒழுகாது இவ்விரண்டு பண்புகளையும் உடையவர் விரைவில் கெட்டழிவார் என்கிறது இப்பாடல். அமைந்தாங்கு ஒழுகாமையும் தன்னை வியத்தலும் வலியறியாமைக்கு ஏதுவாகின்றன. அதுவே ஒருவனை விரைந்து கெடச் செய்யும்.

'அமைந்தாங்கு ஒழுகான்' யார்?

அமைந்தாங்கு ஒழுகான்' என்றதற்கு அமைவுடையனாய் ஒழுகாதவன், அமைச்சர்கள் கருத்துப்படி அடங்கி ஒழுகாதவன், எல்லை கடவாமல் அடங்கி யிருக்காதவன், அயல் வேந்தரோடு கலந்து பழகுதல் செய்யாதவன், மற்றவர்களோடு ஒத்து நடவாதவன், தனக்குரிய ஆற்றலுக்குள் அடங்கி மற்றவர்களோடு பொருந்திக்கூடி வாழாதவன், மற்றவர்களுடன் பொருந்தி அந்த நட்பமைதிக்கு ஏற்ப நடந்து கொள்ளாதவன், அமைந்தபடி நடவாதவன், அடக்கத்தோடு நடந்து கொள்ளான், தனக்கு அமர்ந்துள்ள சக்திக்குத் தகுந்த மட்டில் செய்யாதவன், தனக்கமைந்துள்ள அளவோடு செய்யாதவன், பலரோடு ஒத்து நடவாதவன், ஏனையாரோடு ஒத்து நடவாதவன், தமக்கு இயல்பாக அமைந்துள்ள வலிமைக்கு ஏற்றபடி நடவாதவன், தன் வலிமைக்கு ஏற்பப் பொருந்தி நடவாதான், அமைதியோடு ஒரு செயலைச் செய்யாதவன், அயலாரோடு ஒத்து நடவாதவன், துணையுடனும் மாற்றருடனும் அமைந்தொழுகாதவன், வேற்றரசரோடு பொருந்திப் பழகாதவன் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அமைந்தாங்கு ஒழுகுதல் அமைவு உடையனாய் ஒழுகுதலைக் குறிக்கும். நட்பாக உள்ளவர்களோடு பொருந்தியமுறையில் நடக்கவேண்டும் அதாவது ஒத்துப்போக முயலவேண்டும்; எதிரியாந்தன்மை கொண்டவரின் வலியறிந்து பகைத்துக் கொள்ளவேண்டும்; அவ்விதம் நடவாதவன் அமைந்தாங்கு ஒழுகானாம்.
காலிங்கர் விளக்கம் புதுமையாக உள்ளது. இவருரை அமைந்தாங்கு என்பது ஒரு செயல் நல்ல முறையில் நிறைவேறி முடிந்தால் மற்றச் செயல்களும் அவ்விதமே நிறைவேறும் என மிகுநம்பிக்கை கொண்டு அதனால் செருக்குற்று நடக்கக்கூடாது என்கிறது. மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் அதனதற்குப் பொருந்துமாறு செயல்பட வேண்டும் என்கிறார் இவர்.

'அமைந்தாங்கு ஒழுகான்' என்றதற்கு அடக்கத்தோடு அல்லது ஆரவாரமின்றி செயல்படுபவனாக இல்லாதவன் என்பது பொருள்.

தன் வலிமைக்கேற்ப அமைந்து நடவாதானாய் தன் ஆற்றலின் அளவையும் அறியாதவனாய் தன்னைப் பெரிதும் மேலாக மதித்தவன் விரைவில் கெட்டுப்போவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தான்தோன்றித்தனமாக செயல்படுபவன் வலிஅறிதல் செய்யான்.

பொழிப்பு

அடக்கத்தோடு நடவாதவனாய்த் தன் ஆற்றல் அளவையும் அறியானாய்த் தன்னைத்தானே மிகையாக மதிப்பீடு செய்து வியத்து கொள்பவன் விரைவில் கெடுவான்.