இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0458



மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:458)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.

மணக்குடவர் உரை: மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.
இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது

பரிமேலழகர் உரை: மனநலம் நன்கு உடையராயினும்- மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து- அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து
('நன்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.

இரா இளங்குமரனார் உரை: மனவளம் நல்லதாக அமைந்தவர் எனினும் பண்புமிக்க பெரியோர்க்கு அவர் சேர்ந்த நல்லோர் கூட்டுறவு மிகுந்த பாதுகாப்பானதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து.

பதவுரை: மன-மனத்தது; நலம்-நன்மை; நன்கு-மிக; உடையர்-பெற்றுள்ளவர்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-நற்குணங்கள் நிரம்பியவர்க்கு; இனநலம்-இனத்தினது நன்மை; ஏமாப்பு-உறுதி, வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது.


மனநலம் நன்குடையர் ஆயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மன நன்மை மிக வுடையராயினும்;
பரிப்பெருமாள்: மன நன்மை மிகவும் உடையராயினும்;
பரிதி: மனம் நல்லதாகிலும்;
காலிங்கர்: மனந்தூய்மை மிகவும் உடையராயினும்;
பரிமேலழகர்: மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நன்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது.

'மன நன்மை மிக வுடையராயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மாறுபாடாக 'மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்' என்றுரைத்தார். இவர் நன்கு என்பதற்கு 'முன்னை நல்வினை' எனப் பொருள் கொள்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சான்றோர்க்கு மனம் நல்லதாக இருப்பினும்', 'மன நன்மையை மிகுதியும் உடையரானாலும்', 'மனம் செம்மையைச் செவ்விதாக இயற்கையில் உடையராயினும்.', 'மனநலத்தை நன்கு உடையவர் என்றாலும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மனநலன் மிகவும் உடையராயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது
பரிப்பெருமாள்: இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இனம் நன்று அல்ல ஆயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது
பரிதி: தன்னுடைய இனம் நல்லினமாக வேணும்; அது எல்லாப் புகழும் தரும் என்றவாறு.
காலிங்கர்: சால்புடையோர்க்கு மற்று அதனுடனே இனத்தினது நன்மை உளதானால் தமக்குப் பெரிதும் இம்மை மறுமைக்கு ஏமாப்பு உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து
பரிமேலழகர் குறிப்புரை: 'அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று'.

'இனநன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'இம்மை மறுமைக்கு ஏமாப்பு உடைத்து' என்றார். பரிமேலழகர் 'இனநன்மை மனநன்மைக்கு வலியாதலை உடைத்து'' என்ற பொருளில் உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இனமும் நல்லதாக இருப்பது சிறப்பு', 'சால்புடையார்க்கு மன நன்மையைக் காக்க இன நன்மை பாதுகாவலை உடையது', 'சான்றோர்கள் சேரும் கூட்டத்தாரின் சிறப்பு அவர்கட்கு நல்ல பாதுகாப்பாக அமைவது', 'குணங்களால் நிறைந்த பெரியார்க்கு இனத்தின் நன்மையே வலிமை தருவதாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இனநன்மை சான்றோர்க்குப் பாதுகாவலை உடையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனநலன் மிகவும் உடையராயினும் இனநன்மை சான்றோர்க்குப் பாதுகாவலை உடையது என்பது பாடலின் பொருள்.
'சான்றோர்க்கு' என்று ஏன் விதந்து கூறப்பட்டது?

நல்ல சேர்க்கையும் சான்றோர்க்கு இன்றியமையாதது.

உள்ளத் தூய்மை மிகக் கொண்டவரே ஆனாலும், சான்றோர்க்கு அவரைச் சேர்ந்தவர்களும் நல்லவர்களாக இருப்பது மன வலிமை கெடாது காக்கும்.
சான்றோர் எனப்படுபவர் நற்குணங்கள் பலவற்றால் நிறையப்பெற்று உறுதியான மனவளம் கொண்டவராவர். அவர் தெளிவான சிந்தனை உடையவராயுமிருப்பார். ஆனால் சிறியோருடனான உறவு அவர் மனத்தைத் தளரச் செய்யும்; அது அவரது சிந்தனை ஓட்டத்தைப் பெரிதும் பாதித்து உள்ளத்தை மாசுபடுத்துவிடும். ஆனால் நல்ல இனத்தாருடனான பழக்கம் அத்தகைய தாக்கம் ஏதும் ஏற்படாத வண்ணம் சான்றோரது மனநலத்துக்கு மிகையான பாதுகாப்பாக அமையும் என்கிறது குறள்.
'ஏமாப்பு உடைத்து' என்பதை மனநலத்துக்குப் பாதுகாப்பு உடையது என்று ஒரு சாராரும் சான்றோர்க்கு பாதுகாப்பு தருவது என்று வேறொரு சாராரும் உரை செய்வர். மனநலம் என்னும் பண்பு அந்நலம் உடைய சான்றோரது பண்பறமே. எனவே மனநலத்து ஏற்றினும் சான்றோர்க்கு ஏற்றிச்சொல்லினும் பயன் ஒன்றுதான். பாடலில் 'சான்றோர்க்கு' என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளதால் அதுவே பொருத்தமான உரை எனக் கொள்ளலாம்.

நன்கு என்ற சொல் நன்கு, தீங்கு என்பது போன்ற பண்பைக் குறித்த சொல். 'செடி நன்கு வளர்ந்தது' என்றாற் போல ‘நன்குடையர்’ என்பது இங்கு மிக உடையர் என்ற பொருள் தருவது.

'சான்றோர்க்கு' என்று ஏன் விதந்து கூறப்பட்டது?

நற்குணங்களால் நிரம்பியவர் சான்றோராவர். இவர் மேற்கொண்டுள்ள பண்புகளின் மேன்மைத் தன்மைக்காகவே மக்கள் இவர்பால் ஈர்க்கப் பெறுகின்றனர். அவரது மனநலம் நன்றாக அமையப் பெற்றதும் அவர் சான்றோர் எனப்பட்டதற்கு ஒரு காரணம். அத்தகையவர் சேரத்தகாதவருடன் கூட்டுறவு வைத்துக்கொண்டால் அதற்காகவே பிறரால் இகழப்படுவர். சிற்றினம் சேர்தல் அவரது சிந்தனையை மாற்றி சான்றோர் எனும் தோற்றத்திற்கும் ஊறு விளைக்கும். மாறாக, சான்றோர் மனத்தூய்மை மிகப் பெற்றிருந்தாலும்கூட நல்லஇனம் துணையாக இருப்பின் அது உள்ள வலிமையைக் கூட்டும்.
சான்றோர் நற்குணங்களிலான பல தூண்களை அரணாகக் கொண்டு நிற்பவர். அவருக்கும் கூட இனநலன் என்ற காப்பு இருப்பது நன்று எனச் சொல்கிறது இப்பாடல்.

ஒரு நாட்டின் சமுதாயம், அரசியல் என்பவற்றின் பெருமை எல்லாம் அங்குள்ள சான்றோரைப் பொறுத்தே பெரிதும் அமையும். சான்றோர் கொள்கைப்பிடிப்பில் தளராதவாராக இருப்பவர்; ஊழி பெயரினும் தாம் பெயரார். ஆனால் சிற்றினம் சேரும்பொழுது அவரது கொள்கை கோட்பாடுகள் ஆட்டம் காணத் தொடங்கும். கொள்கையில் மாற்றமின்றி விளங்கிட அவர் சேர்ந்துள்ள கூட்டத்தின் நன்மை உறுதுணையாய் இருக்கும். எனவே அவர் விதந்து கூறப்பட்டார்.

மனநலன் மிகவும் உடையராயினும் இனநன்மை சான்றோர்க்குப் பாதுகாவலை உடையது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சிற்றினம் சேராமையும் சான்றோர்க்கு ஒரு அரணே.

பொழிப்பு

மனநன்மை மிகவும் உடையரானாலும் சான்றோர்க்கு இனநன்மை பாதுகாவல் கொடுக்கும்.