இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0451



சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:451)

பொழிப்பு (மு வரதராசன்): பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

மணக்குடவர் உரை: சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்.
இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.

பரிமேலழகர் உரை: பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும், சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.
'(தத்தம் அறிவு திரியுமாறும் , அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பெரியவர் சிறியவரோடு பழக அஞ்சுவர்; சிறியார் சிறியாரையே உறவு கொள்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருமை சிற்றினம் அஞ்சும்; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணம் கொண்டோர்; அஞ்சும்-நடுங்கும், நெருங்காமல் ஒதுங்கும்; பெருமை-பெரியோரியல்பு, பெரியோர்; சிறுமைதான்-சிறியோரியல்புதாம், சிறியோரைத்தாம்; சுற்றமா-உறவாக, கிளைஞராய்; சூழ்ந்துவிடும்- சுற்றிக் கொள்ளும், எண்ணித் துணியும்.


சிற்றினம் அஞ்சும் பெருமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்;
பரிப்பெருமாள்: சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்;
பரிதி: பெரியோர் சிறுமையுடையார்க்குப் பயப்படுவார்;
காலிங்கர்: தமது நீதி நெறிக்குத் தகாதோராகிய சிற்றினத்தை மருவுதற்கு அஞ்சுவர் பெரியோர்; [மருவுதற்கு-சேர்தற்கு]
பரிமேலழகர்: பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும்,

'பெரியோர் சிற்றினத்தை அஞ்சுவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் தவிர்த்த பிற தொல்லாசிரியர்கள் பெருமை, சிறுமை முதலிய பண்புப் பெயர்கள் அப்பண்புடையாரை ஆகுபெயரால் உணர்த்தியதாகக் கொண்டு பெரியோர் சிறியோர் என்றனர். பரிமேலழகர் அவற்றிற்குப் பெரியோரியல்பு-சிறியோரியல்பு எனப் பண்பாகவே கொண்டு உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் '(இனத்தியல்பதாகும் அறிவு ஆதலின்) பெரியார் சிறியார் இனத்தினைச் சேர அஞ்சுவர்', 'பெருமையடைய விரும்புகிறவர்கள் அறிவும் ஒழுக்கமும் இல்லாத அற்பர்களுடன் சேரமாட்டார்கள்', 'பெரியோர்கள் இயல்பாகவே சிற்றினஞ் சேர நடுங்குவர்', 'தீயவர்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சுவது பெரியோர் இயல்பு ஆகும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பெரியோர் சிற்றினத்தாரோடு சேர அஞ்சி விலகுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது
பரிப்பெருமாள்: சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது பெருமை வேண்டுவார் கொள்ளார் என்றது
பரிதி: சிறுமையுடையோர் சிறுமையுடையோரைத் தமக்கு உறவாக்கிக் கொள்ளுவார் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அவரோடு ஒரு தன்மையாகிய சிறியோர் தமது கிளைஞராக விசாரித்துக் கைக்கொண்டு விடுவர் என்றவாறு. [கிளைஞராக-சுற்றத்தாராக; விசாரித்து-ஆய்ந்து]
பரிமேலழகர்: ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.
பரிமேலழகர் குறிப்புரை: தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது.

'சிறுமையுடையோர் சிறுமையுடையோரைத் தமக்கு உறவாக்கிக் கொள்வர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் சிறியார் அவ்வினத்தைச் சுற்றமாக எண்ணிச் சுற்றிக் கொள்வர்'', 'சிறுமையடைய விரும்புகிறவர்கள்தாம் அற்பர்களை உறவாகக் கொண்டாடுவார்கள்', 'சிறியோர்கள் இயல்பாகவே சிற்றினத்தைத் தமக்கு உறவாக எண்ணித் தம்மோடு சேர்த்துக்கொள்வர்', 'அக்கூட்டத்தைச் சுற்றமாகக் கருதிச் சூழ்ந்து கொள்வது சிறியோர் இயல்பு ஆகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

சிறுமைக்குணம் கொண்டோர் சிறியோர் கூட்டத்தைச் சுற்றமாக எண்ணிச் சூழ்ந்து கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெரியோர் சிற்றினத்தாரோடு சேர அஞ்சி விலகுவர்; சிறுமைக்குணம் கொண்டோர் சிறியோர் கூட்டத்தைச் சுற்றமாக எண்ணிச் சூழ்ந்து கொள்வர் என்பது பாடலின் பொருள்.
பெரியோர் ஏன் அஞ்சுவர்?

பெருமை நோக்குடையோர் சிறுமைக்கூட்டத்தை ஏறெடுத்தும் பாரார்.

பெரியோர் இழிந்த குணம் வாய்ந்த சிற்றினத்தாரைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியோரோ அதுவே தம் சுற்றமாக எண்ணிச் சூழ்ந்து கொள்வர்.
சிற்றினம் என்பது பண்பு, அறிவு, ஒழுக்கம், சிந்தனை, செயற்பாடுகள் போன்றவற்றால், தாழ்ந்த தன்மை வாய்ந்தவர்களைச் சொல்வது. பெருமை என்ற சொல் இங்கு பெருமைக்குரியவரை அதாவது பெரியோரைக் குறிப்பதாகக் கொள்வர்.
சிறுமைக் குணம் கொண்ட ஒருவன் பெரியோர் ஒருவரிடம் தொடர்பு வேண்டுகிறான். அவனை அடையாளம் கண்ட பண்புடையாளரான அவர், அவனை நெருங்கவிடாமல் ஒதுங்கிக்கொள்கிறார் அதாவது அவன் தம்முடன் சேராமல் பார்த்துக் கொள்கிறார். பின் அச்சிறியோன் சிற்றினத்திடம் நட்பு நாடுகிறான். சிற்றினம் அவனைப்பற்றி ஆராயாமலே தன் உறவினன்போல் எண்ணி இணைத்துக் கொள்கிறது.

தம் உணர்வோடும் சிந்தனையோடும் ஒத்தவர்களோடு பழகுவது பொதுவான மனித குணம். எனவே பெரியோர்கள் சிறுமைக் குணம் கொண்டோரைத் தெரிந்துகொண்டு தம் பெருமைக்கு இழுக்கு நேரும் என்பதால் அவர்களிடமிருந்து விலகி நிற்பர். சிறியோர் கீழ்மக்கள் என்று தெரிந்தாலும் உடன் அவர்களைச் சுற்றமாக்கிக் கொள்வர்.
இனம் இனத்தோடு சேரும் என்பது உலக வழக்கு ஆனாலும் சிறுமைக் குணம் கொண்டோர் எதையும் ஆராயமலே தாழ்ந்த குணம் கொண்டவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்களே என்று வள்ளுவர் வருந்திச் சொல்கிறார் என்று தோன்றுகிறது. இரண்டு எதிர் எதிரான கருத்துக்கள் உரைக்கப்படுகின்றன - பெரியோர் அஞ்சுவர், சுற்றமாகச் சூழ்ந்து கொள்வர் என்னும் முரணான குணங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன.

இக்குறளுக்குச் சிற்றினம் பெருமையை யஞ்சும்; சிற்றினம் சிறுமையைச் சுற்றமாச் சூழ்ந்துவிடும் என்பதுதான் நேரிய உரை. ஆனால் பெரியோர் சிறியோர் இயல்பைக் கூறி அதன்வழி சிற்றினம் சேரவேண்டாம் என்பதை அறுவுறுத்துவதாகவே அனைவரும் பொருள் கூறினர்.
'சூழ்ந்து விடும்' என்ற தொடர்க்கு சுற்றமாகக் கொண்டு விடுவர் என்றும் எண்ணித் துணியும் என்றும் பொருள் உரைக்கப்பட்டது ஒரே குண இயல்பு கொண்டோர் என்ற ஒற்றுமை காரணமாக ஆராயாமல் சுற்றமாகத் துணிவர் என்பதால்.

பெரியோர் ஏன் அஞ்சுவர்?

இன்னார் என்று அறியப்படுவது இனத்தாலும் உண்டு என்பதால், சிறியோருடன் நட்பு பாராட்டினால் தமது அடையாளம் மாறுபட்டு அதனால் பெருமைக்கு இழுக்கு நேரும் என்று பெரியோர் அவர்களிடமிருந்து தள்ளி நிற்பர். மேலும் சிறியோர் சேர்க்கையால் தமது சிந்தனை ஓட்டமும் திரிவுபடும் என்ற பயமும் பெரியோருக்கு உண்டு. சிறுமைக் குணம் கொண்டோனுடன் பழகினால் வேறுபல எதிர்பாராத துன்பங்களும் நேர வாய்ப்புண்டு. சிறியோர் பெருமை கொண்டோரை நெருங்கிவிட்டால் அவர்களைத் தம்வழி ஒழுகவைக்க முனைவர். எனவே சிறியோர் வந்தால் வரட்டுமே, நாம்தாம் உறுதியாக உள்ளோமே அவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டாலும், தன்னால் தன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்று நினைக்க மாட்டார் பெரியோர். சிறியோரிடமிருந்து அஞ்சி ஒதுங்குவது என்பது ஒரு முற்படக் காக்கும் செயல்தான். ஒருகாலகட்டத்தில் பெரியோர் அவர்கள் நட்பை உதறித் தள்ளினாலும் சிறியவர்கள் அவர்களை விடாது பற்றி நின்று பெரியோரின் பெருமை சிதையும்வரை கூடவே இருந்து இன்னல் விளைப்பர். இதனால்தான் பெரியோர் சிறியார் கூட்டுறவை அஞ்சுவர்.

பெரியோர் சிற்றினத்தாரோடு சேர அஞ்சி விலகுவர்; சிறுமைக்குணம் கொண்டோர் சிறியோர் கூட்டத்தைச் சுற்றமாக எண்ணிச் சூழ்ந்து கொள்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெரியோர் அஞ்சி விலக்கும் சிற்றினம் சேராமையை அறிவுறுத்தும் பாடல்.

பொழிப்பு

பெரியோர் சிறுமைக் குணம் கொண்டோரோடு சேர அஞ்சுவர்; சிறியோர் சிறுமையுடையோரையே உறவாக எண்ணிச் சுற்றிக் கொள்வர்.