இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0450



பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:450)

பொழிப்பு (மு வரதராசன்): நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

மணக்குடவர் உரை: பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.

பரிமேலழகர் உரை: பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.
(பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தமக்குத் துணைவராக உள்ள பெரியவர்களுடைய ஆதரவு விட்டுப் போகும்படி தவறி நடந்து கொள்வது பலபேரைப் பகைத்துக் கொள்வதைவிடப் பலமடங்கு தீமை உண்டாக்கக்கூடியது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லார் தொடர்கை விடல், பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே.

பதவுரை: பல்லார்-பலர், கணக்கற்றவர்; பகை-பகைமை; கொளலின்-கொள்ளுதலைவிட, அடைவதைவிட; பத்து-பதிற்று; அடுத்த-மடங்கான; தீமைத்தே-தீங்குடையதே; நல்லார்-நற்பண்புகள் நிறைந்தவர், பெரியார்; தொடர்-தொடர்பு, நட்பு, உறவு; கைவிடல்-முற்றிலும் நீக்கிவிடல், ஏற்காதொழிதல்.


பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்;
பரிப்பெருமாள்: பலரோடு பகைகொண்டான் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்;
பரிதி: துர்ச்சனர் பதினாயிரம் பேரை பகை கொள்வதிலும் பொல்லாது;
காலிங்கர்: தான் தனியனாயிருந்து அளவிறந்த பலரோடும் பகைகொள்வதினும் நூறு மடங்கு குற்றத்தை உடைத்து;
பரிமேலழகர்: தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; [பதிற்று மடங்கு-பத்துப் பங்கு]

'பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு துன்பமுறும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலரைப் பகைப்பதினும் பெருந்தீமை', 'தான் தனியாயிருந்து பலரோடு பகை கொள்ளுதலினும் பத்து மடங்கு தீமை உடையது', 'பலரோடு பகை கொள்வதைப் பார்க்கிலும்', 'பலருடைய பகைமையக் கொள்ளுதலைவிடப் பத்து மடங்கு தீமைகளை உடையது' என்ற பொருளில் உரை தந்தனர்.

பலரைப் பகைப்பதினும் பத்துமடங்கு தீமை உடைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நல்லார் தொடர்கை விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.
பரிப்பெருமாள்: பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடுக்கண் வரும் என்றது.
பரிதி: நல்லோரைக் கைவிடல் என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் தெரிந்துணரவல்ல பெரியாரைத் துணையாய் பெற்று வைத்தும் அவரது தொடர்ச்சியைத் தாம் கைவிடுதல் என்றவாறு.
பரிமேலழகர்: அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.
பரிமேலழகர் குறிப்புரை: பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது. [இது செய்தல் அதனினும் தீது - நல்லார் தொடர் கைவிடல் பலர் பகை கொள்ளுதலின் தீது என்பது; அது -பெரியாரைத் துணைக் கொள்ளுதல்]

'பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காளிங்கர் 'பெரியாரது தொடர்ச்சியைடத தாம் கைவிடுதல்' என்று பொருள் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லவர் ஒருவர் நட்பை விடுவது', 'ஒருவன் பெரியவர்களுடைய நட்பைக் கொள்ளாதிருத்தல்', 'நல்லவர்களுடைய நட்பை இழத்தல் பதின்மடங்கு கெடுதியானது', 'நல்லவர்களுடைய நட்பை விட்டு விடுதல்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பெரியாரது தொடர்ச்சியைக் கைவிடுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெரியாரது தொடர் கைவிடல் பலரைப் பகைப்பதினும் பத்துமடங்கு தீமை உடைத்து என்பது பாடலின் பொருள்.
'தொடர் கைவிடல்' என்றால் என்ன?

நல்லவர்களின் தொடர்பைத் தொடராமல் விடுவது பெருந்துன்பம் விளைக்கும்.

தமக்கு நன்மையைச் செய்வாராய பெரியோர் ஒருவரின் நட்பை இழத்தல், பலரோடும் பகைத்துக் கொள்வதை விடப் பதின்மடங்கு தீமையை விளைவிப்பது ஆகும்.
பெரியவர்களின் தொடர்பைக் கைவிடுதலால் உண்டாகும் இழப்பைச் சொல்கிறது இப்பாடல். அது பகையைப் பெருக்குவதற்குச் சமம் என்று சொல்லப்படுகிறது. பகைமை என்பதே துன்பம்; அது ஒருநோய்; மன அமைதியைக் கெடுத்து ஆக்கமுள்ள செயல்களில் சிந்தை செல்லாமல் தடுக்கவல்லது. ஒருவரது ஆற்றல்கள் அனைத்தும் பகையை அடக்குவதிலும் அழிப்பதிலுமே செலவிடப்படும் ஆதலால் பகைமைக்கு இடங்கொடுக்காமல் இருக்கவேண்டும். அது மட்டுமல்லாமல் நாமும் மற்றவரிடம் பகைமை பாராட்டாதிருக்கவும் பழகவேண்டும். பிறர் மனத்தில் பகைமை தோன்றாதவாறும் நாம் நடந்து கொள்ளவேண்டும்.
பலருடைய பகை ஒன்று சேர்ந்து விட்டால் மிகப் பெரிய துன்பம் உண்டாம். உயர்ந்த குணங்களைக் கொண்ட ஒருவருடைய தொடர்பை நாம் இழக்க நேர்ந்து விட்டால் அந்த இழப்பு பல பகையைவிட மிகத் துன்பமானது. இன்னொருவகையில் சொல்வதானால். பலர் பகையால் வரும்கேடுகளைக் கூட நல்ல ஒருவருடைய உறவு தடுத்துக் காக்கும். அவர் நல்ல உள்ளத்துடன் பகைதீர அறிவுரை கூறுவராதலால், அவ்வாயில்கள் அடைபட்டுப் போய்விடுகிறது. அத்தகைய நல்லார் தொடர்பு கிடைப்பது எளிதல்ல. நல்லார் தொடர்பு நீங்கினாலும், அவர்கள் நமக்கு யாதொரு தீங்கும் செய்யமாட்டார். அரிதாகக் கிடைத்த அவர் தொடர்பைத் துண்டித்து விட்டால் அதனால் உண்டாகும் கெடுதி மிகுதி. எனவே பெரியோர் தொடர்பை வளர்த்து பேணிக்காத்துக்கொள்ள வேண்டும்.
பெரியார் உடனிருப்பது ஒருவர்க்கு எப்பொழுதும் பெரும் வலிமையாகும். அவரது துணையிழந்தவன் வலிகுன்றுவான். வலிமை யிழந்தவனை வீழ்த்துவது எளிதாகும். பெரியாரது வலியை நீக்கியவர் தீமைகள் தம்மைச் சூழ விரைவில் அழிவர். பெரியாரது தொடர்பை விட்டுவிடாமல் தக்க வைத்துக் கொள்ள அறுவுறுத்துகிறது இப்பாடல்.

நல்லார் என்ற சொல் இங்கு நற்பண்புள்ள பெரியாரைக் குறிக்கிறது.
பத்தடுத்த என்பதற்கு பத்து மடங்கு என்பது நேர் பொருள். அது 'அளவு கடந்த' என்ற பொருளிலே இங்கு ஆளப்படுகிறது.

'தொடர் கைவிடல்' என்றால் என்ன?

'தொடர் கைவிடல்' என்ற தொடர்க்குத் துணையாகக் கொள்ளாதொழிதல், கைவிடல், தொடர்ச்சியைத் தாம் கைவிடுதல், நட்பினைக் கொள்ளாதொழிதல், சினேகிதத்தை விடுகிறது, தொடர்பைக் கைவிடுதல், நட்பைக் கைவிடல், நட்பை விடுவது, நட்பைக் கொள்ளாதிருத்தல், உறவு விட்டுப் போகும்படி நடந்து கொள்வது, கைவிட்டு விடுதல், நட்பை இழத்தல், நட்பை விட்டு விடுதல், உறவைக் கைவிடுவது என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'தொடர் கைவிடல்' என்பது நல்லார் அவர்களாக நம்மை விட்டு விலகுவது, நாமாக மனம் வேறுபட்டு விட்டுவிடுவது, அவர் நம்மை விட்டுவிடும்படி நாம் நடந்து கொள்வது என்பனவற்றால் உண்டாவது.
கைவிடல் என்ற சொற்றொடர் இதுகாறும் இருந்த தொடர்பை விடுதல் அதாவது பெரியாரது துணையின் வலிமை தெரியாமல் அவரை நீங்குதல் என்பதைக் குறிக்கும்.

'தொடர் கைவிடல்' என்றது அவர் தொடர்பை விட்டுவிடுதல் அல்லது அவர் தொடர்ச்சியை நீங்கல் குறித்தது.

பெரியாரது தொடர் கைவிடல் பலரைப் பகைப்பதினும் பத்துமடங்கு தீமை உடைத்து என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெரியாரைத் துணைகோடல் வலிமை மிகுவிக்கும்.

பொழிப்பு

பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு தீமை உடைத்து பெரியாரது தொடர்ச்சியைக் கைவிடுதல்.