இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0441



அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:441)

பொழிப்பு (மு வரதராசன்): அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
(அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.)

சி இலக்குவனார் உரை: அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினையுடையாரது நட்பை அதன் ஆற்றலை அறிந்து, ஆராய்ந்து அடைய வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்.

பதவுரை: பதவுரை: அறன்-நல்வினை; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு, நட்பு; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.


அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை;
பரிப்பெருமாள்: அறத்தின் பாடு அறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை;
பரிதி: கல்வி கேள்வி அறிந்து தன்மத்தின் வழி நிற்பார் உறவை;
காலிங்கர்: இவ்வாறு பெரியோரை இவ்வரசர் தமக்குத் துணை கொள்ளும் இடத்துப் பல அறநூல்களாலேஅறநெறிகளைஅறிந்து;
பரிமேலழகர்: அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை;
பரிமேலழகர் குறிப்புரை: அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். [உய்த்துணர்வானும்- உலக நடையை ஆராய்தலானும்; சீலம் - ஒழுக்கம்]

அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறமும் முதிர்ந்த அறிவும் உடையவரது நட்பை', 'அறத்தின் இயல்பினை நன்கறிந்தவராய்த் தன்னைப் பார்க்கினுஞ் சிறந்த மூதறிவாளர்தம் நட்பினை', 'அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினையுடையாரது நட்பை', 'அறநெறியை அறிந்து தெளிந்த அறிவினை உடையவர் நட்பினை' என்ற பொருளில் உரை தந்தனர்.

அறக்கூறுகளை அறிந்த முதிர்ந்த அறிவாளியினது உறவை என்பது முதலடியின் பொருள்.

திறன்அறிந்து தேர்ந்து கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிதி: எந்த வகையினாலும் பண்ணிக்கொள்வார் என்றவாறு.
காலிங்கர்: மற்று இதற்குக் குறைபடாதவாறு தேர்ந்து கைக்கொள்க என்றவாறு.
பரிமேலழகர்: அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல். [அவர் வரை நிற்றல்- அறிவுடையார் கூறிய எல்லையில் இருத்தல்; பிணிப்புண்ணும் திறன்- கட்டுப்படும் வகை. பிணிப்புண்டலாவது அன்பால் நீங்காமல் இருத்தல்]

அருமையை ஓர்ந்து, ஆராய்ந்து, கொள்க என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெரிந்து பெற்றுக் கொள்க', 'கொள்ளுமுறையை அறிந்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்', 'அதன் ஆற்றலை அறிந்து ஆராய்ந்து அடைய வேண்டும்', 'பெறுகின்ற முறையறிந்து ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதன் ஆற்றலை அறிந்து ஆராய்ந்து பெற வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறக்கூறுகளை அறிந்த முதிர்ந்த அறிவாளியினது உறவை, திறன்அறிந்து தேர்ந்து கொளல் என்பது பாடலின் பொருள்.
'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்றால் என்ன?

நல்லது பொல்லது உரைப்பாரைப் பக்கத்தில் வைத்துக்கொள்ளல் நன்று.

அறநெறிகளை அறிந்த, அனுபவம் மிக்கவரின் நட்பை அவரின் சிறப்புத்தன்மை அறிந்து துணையாகத் தெரிதல் வேண்டும்.
இப்பாடல் அறிவுரை பகரும் பெரியாரைப் (advisor) பற்றியது. இதன் முதலடி அப்பெரியாரின் இயல்பு கூறுகிறது; அறம் அறிந்து என்ற தொடர் அறம், உலகியல் பற்றித் தெரிந்தவர் என்பதைச் சொல்வது. மூத்த அறிவுடையார் என்பது அகவையாலும் அனுபவத்தாலும் நிறைந்த அறிவு கொண்டவரைக் குறிக்கும். அறிவுடையார் என்றது நூலறிவும் உலகியலறிவும் மிக்கவர் எனப்பொருள்படுவது - கல்வியறிவு எவ்வளவு தூரம் நடைமுறைக்குப் பயன்படும் என்பதை அறிந்து செலுத்தும் ஆற்றல் நூலறிவோடு உலகில் ஒத்துப்பழகும் அறிவுடையார்க்கே உளதாம்.
ஈற்றடி அப்படிப்பட்டவரது அருமை அதாவது அவர் தமக்கு எவ்வளவு உதவக்கூடியவராக இருப்பார் என்பதை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அணுக்கத்தில் இருத்திக்கொள்க என்கிறது.
அறத்தின் சிறப்பை உணர்ந்தவர்களாகவும் பட்டறிவு மிக்கவர்களாகவும் உள்ள பெரியவர்களே அறிவுரை கூறத் தகுதியானவர்கள். அறிவும் அறமும் உடைய பெரியோரது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதால் சிறந்த நன்மைகள் உண்டாகும். நாட்டுத்தலைவன் ஓர் பெரும் தொழிலைச் செய்யமுயலும்முன் தன்னைச் சுற்றியுள்ள அறிவுடையாரிடம் அத்தொழில்முறை நூலறிவோடு நுண்ணறிவும் அமையப் பெற்றவர்களுடன் கலந்தெண்ணி அவர்கள் கருத்தைத் தழுவித் தான் எண்ணிய செயல்களைத் திண்ணமாய் முடிப்பான். ஆதலால் அவன் அறிவிலும் அகவையிலும் முதிர்ந்தோர் கேண்மையைப் போற்றி வரவேற்று அவர்களுடன் நல்லுறவை உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.

'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்றால் என்ன?

'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்ற பகுதிக்கு அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து. எந்த வகையினாலும் பண்ணிக்கொள்வார், அறநெறிகளை அறிந்து மற்று இதற்குக் குறைபடாதவாறு தெரிந்து கைக்கொள்க, அரசன் அதனது அருமையை ஓர்ந்து கொள்ளும் திறன் அறிந்து கொள்க, கேள்விகளை நன்றாகக் கேட்டறிந்து கொள்ளுதல், அரசன் கொள்ளுந்திறமறிந்து ஆராய்ந்து கொள்க, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும், கொள்ளும் வழியறிந்து ஆராய்ந்து தழுவிக்கொள்ளுதல் வேண்டும், அறிந்து ஆய்வு செய்து தழுவிக் கொள்க, தமக்குப் பயன்படுமாறு அறிந்து கொள்க தெரிந்து பெற்றுக் கொள்க, பெறுதற்குரிய வழியறிந்து ஆராய்ந்து அந் நட்பைக் கொள்ள வேண்டும், தகுதியை அறிந்து தீர்மானித்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும், பெறுகின்ற முறையறிந்து ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும், கொள்ளுமுறையை அறிந்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும், ஆற்றலை அறிந்து, ஆராய்ந்து அடைய வேண்டும், தகுதிக்கு ஏற்றபடி அவரிடம் நடந்து கொள்ள வேண்டியதை ஆராய்ந்து அறிந்து அவரைத் துணையாகக் கொள்ள வேண்டும், தகுதியறிந்து மதித்து மேற்கொள்ள வேண்டும், கொள்ளும் வகையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுக, தரம் அறிந்து ஆய்ந்து பார்த்துத் தழுவிக் கொள்க, பல வழியிலும் ஆராய்ந்து முடிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்பதிலுள்ள திறம் எதைக் குறிப்பிடுகிறது? கொள்ளப்படும் பெரியோர் திறம் அறிந்து கொள்வதைச் சொல்கிறதா அல்லது கேண்மையைக் கொள்ளுந் திறன் அறிந்து கொள்வதைக் கூறுகிறதா?
தனக்கு அறிவுரை கூறுவோராக வர இருக்கிறவரிடம் திறன்கள் எவை என அறிந்து அவை தமக்கு உதவுவனவா என்பதை ஆராய்ந்து தேர்ந்து அடைந்து கொள்வது என்றும், நட்பினைக் கொள்ளுமுறையை அறிந்து பெற்றுக்கொள்ளுதல் என்றும் இருவிதமாக உரைகள் உள.
பெரியோரைப் பிணிக்கும் வழியே 'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்பது பரிமேலழகர் கருத்து. ‘திறனறிந்து’ என்பதற்கு உறவைக் கொள்ளும் திறன் எனக்கொண்டு அதற்கு விளக்கம் கூறுகிறார். அவர் 'திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்' என்கிறார். அதாவது 'பெரியோர் நன்கு மதிக்கப்படவேண்டும், அவர்க்குத் தகுநிலை தரப்படவேண்டும், அவர் கூறும் எல்லையில் தாம் நிற்கவேண்டும், அவர் தொடர்ந்து நம்மிடம் நீடிக்கும்படி அவர்களிடம் ஒத்த அன்புடையராக நடத்தல்' எனச் சில வரையறைகளுடன் தேர்தல் முறைமையை விளக்குவார் பரிமேலழகர். நாட்டுத்தலைவனே என்றாலும் திறனறிந்து நடவாவழி அறிவுடையார் அகலுவர் என்பதும் இவற்றுள் அடங்கியது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து, பொருந்துவராக இருந்தால் அப்பெரியோரை அறிவுரையாளராக ஏற்றுக் கொள்ளலாம் என்பது அவர் உரைக்கருத்து.
மற்றவர்கள் தமக்கு ஆலோசகராக வரப்போகிறவரது செய்திறன் அறிந்து தேர்ச்சி கொள்க என்றனர். அவரிடம் உள்ள திறமைகள் என்னென்ன என ஆராய்ந்து அவரது உறவால் தமக்கு எவ்வகையில் நன்மைகள் உண்டாகும் என்பதையும் தெரிந்து தேர்வு கொள்க என்றனர். அந்த நட்பின் ஆற்றல் அறிந்து தேர்ந்து கொள்க எனச்சொல்லுகின்றனர் இவர்கள்.
இவற்றுள் பின்னவர்கள் அதாவது மற்றவர்கள் உரையே சிறப்பாகவும் இக்குறளுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்றது பெரியோரது அருமை அறிந்து தேர்ந்து கொள்க எனப் பொருள்படும்.

அறக்கூறுகளை அறிந்த முதிர்ந்த அறிவாளியினது உறவை, ஆற்றல் அறிந்து ஆராய்ந்து பெற வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறிவும் அறமும் உடைய பெரியாரைத் துணைக்கோடல்.

பொழிப்பு

அறமும் முதிர்ந்த அறிவும் உடையவரது உறவை அவரது தகுதிசிறப்பு அறிந்து கொள்ள வேண்டும்.